பக்கம் புரண்ட பட்டறிவுப்  புத்தகம் "தீட்சண்யம் "

நாங்கள் பேசுவதில்லை
அதனால்
நாங்கள் ஊமைகளென்பதல்ல
நாங்கள் பேசுவதில்லை
ஏனெனில்
நீங்கள் ஊமையாகி விடுவீர்களென்பதால்
“தீட்சண்யன்” என்னும் எஸ்.ரி.பிறேமராஜன்

இன்னும் மனதில் ஆறாக்காயமாக இருக்கின்றது, போன வருசம் இதே நாட்களில் மெல்ல மெல்ல ஒவ்வொன்றாய்த் தொலைந்து போனதுவும், எல்லாம் தொலந்து இன்று வெறும் சூன்ய வெளியில் வெறித்து நிற்பது போல. போராட்டத்தைப் போஸ்ட்மாட்டம் பண்ணி ஆளாளுக்கு ஆய்வுகளும், நுண்ணிய ஆராய்ச்சிகளும்

 செய்தவர்களும், சாத்வீகம் பேசிச் சாகடித்த புனித புருஷர்களும் (!) அவரவர் வழியே போய் விட்டார்கள். கண்ணுக்கு முன்னால் ஒவ்வொன்றாகத் தொலைகின்றது மெல்ல மெல்ல குருதி குளித்துத் திரும்ப எடுத்துக் கொண்ட தேசமும் அதில் தொங்கியிருந்த வரலாற்றுச் சுவடுகளும்.பிராந்திர வல்லுறவால் சிதைக்கப்பட்டுச் சின்னாபின்னமாய் ஒடிந்து போயிருப்பது நம் தேசம் மட்டுமல்ல நம்மவர் மனங்களும் தான். எங்களை நாங “தீட்சண்யம்” கவிதைத் தொகுதியை மெல்லப் பிரித்துப் படிக்க ஆரம்பிக்கின்றேன்.

“எங்கோ ஓர் ஆற்றுப் படுக்கையில்
சரிந்த
ஏதோ ஒரு மரத்தினால்
திசை மாறியது
அந்த ஆறு மட்டுமல்ல
வெறும் சில
பேராறுகளும்!

ஈழத்தின் போர்க்காலக் கவிஞர்கள் என்ற வரிசையில் மட்டுமல்லாது களப்பணியிலும் தம்மை ஈடுபடுத்தி வந்தோர் பலர். அவர்களில் ஒருவர் தான் தீட்சண்யன் என்ற புனைப்பெயரில் எழுதி வந்த எஸ்.ரி.பிறேமராஜன். தான் வாழ்ந்த காலத்தின் கடைசிச் சொட்டு நாளையும் விடுதலை என்னும் பெரு நெருப்புக்குக் கொடுத்த அந்த முனைப்பின் சாட்சியமாக விளங்குகின்றது “தீட்சணம்” என்ற இவரது கவிதைத் தொகுப்பு.
தாயகத்தில் நான் இருந்த காலத்தில் சகபாடி ஒருவன் நன்றாகக் கவிதை சமைப்பான். தாயகக்கவி புதுவை இரத்தினதுரையிடம் சென்று அவரிடம் தன் கவிதைகளைச் செம்மைப்படுத்துமாறு ஒரு நாள் அவன் கேட்டிருக்கின்றான்.

“தம்பி! உன் எழுத்துக்களில் இருக்கும் வீரியத்தை இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டத்துக்குத் திருப்பு, காதல் காத்திருக்கும்” என்றாராம்.

தீட்சண்யன் கவிதைகளைப் படிக்கும் போது இந்தச் சம்பவம் திடீரென்று என் ஞாபகக் கூட்டிலிருந்து வந்தது. தான் வாழ்ந்த காலப்பகுதியில் தன்னைச் சுற்றிய போர்ச்சூழலே “தீட்சண்யன்” என்ற பிறேமராஜனின் கவிதைகளின் கருவியாக அமைந்திருக்கின்றது.

பிறேமராஜன் மட்டுமல்ல இவரை ஒத்த பாணியில் போராளிக்கவிஞர்கள் பலர் இதே வகையான பாதையில் தம் கவிப்பகிர்வைச் செய்திருக்கின்றார்கள். தமிழ்த்தாய் பதிப்பகம் போன்ற தாயகத்தில் ஒருகாலத்தில் நிலைகொண்டிருந்த அச்சூடகம் அதற்குத் துணை நின்றிருக்கின்றது. தவிரவும் புலிகளின் குரல், வெளிச்சம், ஈழமுரசு போன்ற ஊடகங்களில் உடனடி அரங்கேற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன. இவை வெறுமனே பிரச்சாரக்கண்ணோடு பதியப்பட்டவை என்றால் குறித்த படைப்புக்களை எவ்வளவு தூரம் உள்வாங்கியிருக்கின்றோம் என்ற கேள்வியும் தானாக எழும். தன் கண்ணுக்கு முன்னே கனன்று கொண்டிருக்கும் விடுதலை என்னும் ஆகுதியின் சமையலாய் அமைந்து விட்ட யதார்த்தமே பிறேமராஜனின் கவிதைகளில் இருக்கின்றன. வெறும் சொற்கட்டுக் குவியலாக அமைத்துச் சேர்த்த கவிதை ஜாலமாக அமையாமல் தன்னைச் சுற்றிய விடுதலை வேட்கையை நேர்மையோடு பதிவு செய்திருக்கின்றார் இந்தக் கவிஞன்.

“மாற்றான் எறிகணையால் கால் ஒன்று துண்டு பட, மறுகாலும் கையும் ஊனமுற ஆற்றல் போச்சே என்று அந்தரித்து அமர்ந்திருந்த ஆசான். அந்த நிலையிலும் கன்னித்தமிழில் கவிப்புனல் சுரந்த ஊருணி.
புத்தி வாத்தி என்ற பெருமையினை மறந்து, தன்னைத்தான் சொத்தி வாத்தி என்று சொல்லிக் கொண்டு தாழ்வுச்சிக்கலில் தவித்துக் கொண்டிருந்தவன். பின்னர் தன் வாழ்வுச் சிக்கலுக்கு விடை தேடி விழி மூடிக் கொண்டான்” இப்படியாக “தீண்டிச் சென்ற தீட்சண்யன்” என்று தன் மனப்பதிவைச் சொல்லியிருக்கின்றார் ஈழத்தின் இன்னொரு ஆளுமை நாவண்ணன் அவர்கள்.

பிறேமராஜன் , 1958 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 2000 ஆண்டு வரை வாழ்ந்தவர். ஈழத்தில் பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வற்றாப்பளை, முள்ளியவளையில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை கொண்ட இவர், தனது ஆரம்பக் கல்வியைப் பருத்தித்துறை, ஹாட்லிக் கல்லூரியிலும், பட்டப்படிப்பை கண்டி, பேராதனையிலும் கற்று ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றினார்.

1990 இலிருந்து, தீட்சண்யன் என்ற புனைபெயருடன் , உலகெலாம் பரந்திருந்த போராட்டம் சம்பந்தமான ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்து தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் பணிபுரிந்தார். தன் தம்பியர் இருவரை மட்டுமல்ல, மகன் பரதனையும் தேசவிடுதலைக்காய் காணிக்கையாக்கியவர் இவர். சிங்களத்தின் எறிகணை வீச்சினால் தன் காலை இழந்தாலும் தொடர்ந்தும் தேசப்பணி ஆற்றியவர் தன் இறுதி மூச்சு வரை.
“தீட்சணயம்” என்ற பெயரில் எஸ்.ரி.பிறேமராஜனின் கவிதைகள் திரட்டப்பட்டு மன ஓசை வெளியீடாக கடந்த மே 2009 இல் வெளியாகியிருக்கின்றது. மொத்தம் 92 கவிதைகள் 174 பக்களில் பதிவாகியிருப்பதோடு ஒவ்வொரு கவிதைகளுக்கும் பொருத்தமான கீற்றல் சித்திரங்கள் அமைந்திருக்கின்றன. கூடவே தீட்சண்யன் என்ற பிறேமராஜனின் வாழ்வியல் பதிவாக புகைப்படங்களும் அமைந்து காணப்படுகின்றன. ஓவியர் மூனாவின் ஆளுமை மிக்க சித்திரக்கீற்றல்களோடு பதிப்பாசிரியர் திருமதி சந்திரவதனா செல்வகுமாரனின் நேர்த்தியான தொகுப்பாக நூலகப் பிரதியாக கனத்த அட்டையோடு இருப்பது வெகு சிறப்பு.

“அண்ணனா ..தீட்சண்யனா..?
எனக்குள் என்றும் உயிர்ப்புடன்
கிளைவிடும் பெரு விரூட்சம் போல…!
அவ்வப்போது ஆறுதலுக்காய்…
அதன் கீழ் நான்…!
தன் அண்ணனின் இந்தக் கவிதைகளைத் தொகுதியாக இழைத்துப் பண்ணும் பேற்றை நிறைவாகச் செய்திருக்கின்றார் சந்திரவதனா என்பதை இந்த நூலைப் படித்து முடிக்கும் போது உணர முடிகின்றது.

“தீட்சண்யம்” என்ற இந்த நூல் வடலி இணையமூடாக விற்பனையிலும் இருக்கின்றது இங்கே

கவியரங்களில் பேசப்படுகின்ற கவிதை மொழிகளும், அச்சூடகத்துக்கு உண்டான சொற்கட்டுக்களும் என வகையான கவிதைகள் இருந்தாலும், இங்கே அதிகம் திரட்டியிருப்பது புலிகளின் குரல் வானொலியில் பகிர்வான கவிதைகளே. தியாகி திலீபன் அடங்கலாக மாவீரர் திறன் பாடும் கவிதைகளும், சமுதாய எழுச்சி நோக்கிய கவிதைகளும், பொருளாதாரத் தடையைச் சந்தித்த காலகட்டத்தின் அவலக் கவிதைகளும், போர்க்காலகட்டத்தின் தேவையை நோக்கிய அறைகூவலுமாகத் தீட்சண்யனின் இந்தக் கவிதைகள் விளங்கி நிற்கின்றன.

வாழ்ந்தீர்

வாழும் காலம் வரை வீரத்திலேயே வளர்ந்தீர்
தேசத்தின் விடிவுக்காய் தீ சுமந்தீர்
தீராத வேட்கையிலே தின வெடுத்தீர்
களங்களிலே கதை படித்தீர்
கடைசியிலே வீழ்ந்தீர் - ஆயினும்
வித்தாகவே புனிதப் புதைகுழியில்
புலிக்கொடி உடல் போர்த்திச் சாய்ந்தீர் தீட்சண்யன் (பிறேமராஜன்)
இந்த நூலுக்கு அணிந்துரை பகிர்ந்த இலக்கியப்படைப்பாளி, கல்வியாளர் முல்லைமணி வே.சுப்ரமணியத்தின் பதிவாக ஈழ விடுதலைப் போராட்டத்தில் முருகையன் முதல் இளையதலைமுறைக் கவிஞர்களின் இலக்கியப்பதிவுகளும் அந்த வகையில் தீட்சண்யன் சென்ற பாதையையும் பொருத்தமான அவர்தம் கவிதைகளை எடுத்தாண்டு விளக்கியிருக்கின்றார்.
“கவிஞர் பிறேமராஜன் மரபுக்கவிதையிலும், புதுக்கவிதையிலும், பரிச்சயமுடையவர் என்பதை “தீட்சண்யம்” கவிதைத் தொகுதி காட்டுகின்றது. சாதாரண கிராமிய வழக்குச் சொற்களை மரபுக் கவிதையில் பயன்படுத்தி கவிதையை மிகவும் எளிமையாக்கியுள்ளார். இக்கவிதைத் தொகுதீல் சமகால நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சமாகும்” இவ்வாறு சொல்கின்றார் முல்லைமணி வே.சுப்ரமணியம்.
….சொந்த மண்ணிலே வீதியிலே
எங்கள் காணிகள் மனைகளில்
மனைவிகளில் கூடவா
மாற்றானின் விரல்கள்…? தீட்சண்யன் (பிறேமராஜன்)

“வன்னியிலே கவிபடித்த வானம்பாடி வற்றாது நீர் சுரந்து நின்ற தமிழின் ஊற்று” என்றதோர் பகிர்வாக பிறேமராஜன் அவர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கின்ற “தூரிகை”யின் பகிர்வும் நூலின் ஒரு பகுதியாக இருக்கின்றது.

தீட்சண்யன் ஒரு யதார்த்தவாதி என்று சொல்லியவாறே முன்னுரை பகிர்ந்த திரு க.ஜெயவீரசிங்கம் ஆசிரியர், பிறேம் மாஸ்டர் என்ற தன் நண்பர் “தீட்சண்யன்” என்ற இனிய மனிதரின் உள்ளக்கிடக்கைகளின் சில பக்கங்களை அறிந்தவன் என்ற தகுதியில் இந்த நூலுக்கு முன்னுரை எழுதிருப்பதாகக் குறிப்பிடும் அவர் குறித்த கவிதைத் தொகுயில் தென்படும் பல்வேறு கவிதைக் கூறுகளைத் தன்பாணியில் சிலாகித்துப் சிறப்பிக்கின்றார்.
தீட்சண்யன் கவிதைகளைப் படித்து முடித்தால் எத்தனை வகையான மன உணர்வுகள் கலவையாக….
போரியல் வரலாற்றின் சுவடுகளாக, பொருளாதார நெருக்கடிகளின் பதிவுகளாக, அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகத்தில் நிரந்த விடிவை நோக்கிய வேண்டுதலாக தம் மனப்பதிவுகளை நேர்மையோடு பதிவு செய்திருக்கின்றார். ஈழப்போராட்டத்தில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இருந்து இரண்டாயிரம் மிதக்கும் வரையான காலப்பகுதி மிக முக்கியமான தடைகளை, நெருக்கடிகளை, சவால்களைச் சந்தித்தது என்பதை மீண்டும் மீண்டும் கிளறி எடுத்துத் தருமாற் போல ஒவ்வொரு கவிதைகளும்.
புரிந்து கொள்ளுங்கள்! இது சிதையல்ல!
பட்டறிவுப் புத்தகம் பக்கம் புரண்டு கிடக்கிறது

வேண்டுமென்றா செத்தேன்? இல்லை!
நாண்டு நின்று நல்லவரை நாசமாக்கும்
கொடுமைக்கு நானும் பலியானேன்!
தன் சாவு நெருங்குவதைத் தான் உணர்ந்து தீர்க்கதரிசியாய் தீட்சண்யன் எழுதி வைத்த மேற் சொன்ன கவிதை வரிகள் அவருக்கு மட்டுமல்ல இன்றைய நம் தேசத்துக்கும் பொருந்தும்.
(நன்றி மடத்துவாசல் பிள்ளையாரடி)

No comments: