பாட்டியின் கவலை பாட்டிக்கு! (ஒரு பக்க கதை)…..சங்கர சுப்பிரமணியன்.

நந்தகுமாரின் பாட்டி ஞானாம்பாளுக்கு வயது எழுபத்தைந்து இன்னும் ஒருவாரத்தில் வருகிறது. பாட்டியும் தாத்தாவும் மிகவும் மனதொத்த கணவன் மனைவியாக வாழ்ந்தார்களாம். ஆனால் தாத்தா என்னவோ இருபது ஆண்டுகளுக்கு முன்னதாகவே பாட்டியை தனியாக விட்டுச் சென்றுவிட்டார்.


தாத்தா விட்டுச் சென்றாலும் பாட்டி எப்படியோ இருபது ஆண்டுகளை ஓட்டிவிட்டாள். ஆனால் சமீபகாலமாக உலக வாழ்க்கையை வெறுத்துவிட்ட மாதிரி நடந்து கொண்டிருந்தாள். அடிக்கடி தாத்தாவிடம் போய்ச்சேர வேண்டும் என்றும் சொல்ல ஆரம்பித்தாள்.

அப்படி பேசிக்கொண்டிருந்த பாட்டியிடம்,

“பாட்டிக்கு ஏதாவது ஆசையிருக்கா?” என்றான் நந்தகுமார்.

“தாத்தாவும் நானும் சேர்ந்தமாதிரி புகைப்படமில்லை. அந்த காலத்தில் புகைப்படம் எடுக்கும் பழக்கமும் இல்லை. மேலே சென்றவர்களில் ஒருவராவது புகைப்படக்காரர் இல்லாமலா இருப்பார். அங்கு சென்றதும் பார்த்துக் கொள்ளலாம்.”

“இப்படி எல்லாம் வேறு உனக்கு ஆசை இருக்கா?”

“இரு, இரு உனக்கு தெரிந்த வயதான போட்டோகிராபர் இருந்தாரே. அவர் இருக்காரா?”

பாட்டி இப்படிக் கேட்டதும் நந்தகுமாருக்கு என்னவோபோல் ஆனது. இருக்காரு பாட்டி. அவர் மேலே போயிருந்தால் மேலே சென்றதும் தேடிப்பார்கலாம் என்று கேட்கிறாயா? அல்லது போகும்போது அவரையும் கூட்டிப் போகலாம் என்று எண்ணமா என்று கேட்டதும் பாட்டி அந்த வயதிலும் முகவாய்க் கட்டையை தோள்பட்டையில் இடித்தபடி வெடுக்கென்று எழுந்து சென்றாள்.

-சங்கர சுப்பிரமணியன்.

No comments: