பிரபஞ்ச சித்தத்தில் லயம்

 

ஒவ்வொருவரும் வெளிப்பாடாக உள்ள பரம்பொருள் பிரம்மத்தில் (பிரபஞ்ச சித்தத்தில்) லயமாகுவது என்பது முயற்சியால் புதிதாகப் பெறப்படும் சாதனை அல்ல. அது ஏற்கனவே உள்ள ஒரு உண்மையை திடீரென உணரும் விழிப்புணர்வே ஆகும். மனிதன் இயல்பாகவே பிரம்மமே; பிரிக்க முடியாத ஒன்றாய் அதனுடன் எப்போதும் ஒன்றியவனே.

கடலின் இயல்பின் வெளிப்பாடான உப்பு, பல நாடுகளில், பல காலங்களில், பல வடிவங்களிலும் பல சேர்மங்களிலும் காணப்படலாம். ஆனால் அதன் உண்மை தன்மை அதன் சுவையால் அறியப்படுகிறது. கடலிலிருந்து தோன்றிய உப்பு, அது சேரும் பொருள்களுக்கு—பால் ஆகட்டும், பானகம் ஆகட்டும், அல்லது சுவையற்றத் தெளிந்த நீராகட்டும்—கடலின் தன்மையை அளிக்கிறது.

அதேபோல், தனிப்பட்ட சித்தத்தின் சிறு தீப்பொறி தன்னைச் சுற்றி ஒரு கூடு பின்னி, ஒரு உருவத்தையும் பெயரையும் எடுத்திருந்தாலும், அது—அதாவது மனிதன்—தன் ஆத்ம ஸ்வரூபத்தை ஒருபோதும் இழக்க முடியாது.

எவ்வாறு கடல், “இந்த உப்பு படிகம் என்னுடையதே; நானே அதுவாக இருக்கிறேன்” என்று அறிவிக்கிறதோ, அதுபோலவே இறைவன் கீதையில் அறிவிக்கிறார்: “மமைவாம்ஶோ ஜீவலோகே ஜீவபூதஸ் ஸநாதன:” — “என் நித்திய அம்சமே இந்த ஜீவலோகத்தில் ஜீவனாகியுள்ளது.”

ஆகவேதான் வேதம் உயிர்களை “அமரத்துவத்தின் பிள்ளைகள்” என்றும் “அமர ஆனந்தத்தின் வாரிசுகள்” என்றும் அழைக்கிறது.

No comments: