மாசி மகத்தை மனதில் நினைப்போம் !















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்……அவுஸ்திரேலியா 





நதி நீராடுதல் நலனே நல்கும்
அதனை முன்னோர் அவசிய மாக்கினார்
ஒவ்வொரு தினமும் உன்னத மென்று
உள்ள மெண்ணி இணைத்தார் வாழ்வில்

உள்ளத் தூய்மை உடலிற் றூய்மை
தெள்ளத் தெளிவுடன் தேர்ந்தார் முன்னோர்
நீரால் உடலில் தூய்மை நிறையும்
நேர்மையால் உளத்தில் தூய்மை நிலைக்கும்

உடலில் தூய்மை உளத்தில் தூய்மை
தருவதே சமயத்தின் நோக்கே ஆகும்
இரண்டுந் தூய்மை எய்திடும் நிலையில்
இறையின் நினைப்பு இதயத்தி லமரும் 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும்
ஒவ்வொரு பொழுதும் உன்னத மாகும்
உன்னதக் கருவை உட்கரு வாக்கி
உயர்பரம் பொருளை உணர்ந்திடச் செய்தார்

இறையினைத் தேடி ஓடவே வேண்டாம்
இயற்கையை இறையாய் இருப்பதே தத்துவம்
நீரும் இயற்கை நெருப்பும் இயற்கை
இரண்டு மாகி இருக்கிறான் இறைவன் 

இருளிலு மிருப்பான் ஒளியிலு மிருப்பான்
இறுதியும் தொடக்கமும் இல்லான் இறைவன்
இறைவனைக் கண்டிட ஏங்கியே நிற்கிறோம்
ஏக்கத்தைப் போக்கிட வழிகளைத் தேர்கிறோம்

திருநாள் பெருநாள் தேடிடும் மார்க்கமாய்
பக்குவம் பேணிக் கைக்கொண்டு வருகிறோம்
மாசியில் மகமாய் வருகின்ற திருநாள்
மாண்புடை மகத்துவம் கொண்ட நன்னாளே

சைவம் வைணவம் இணையும் வகையில்
மாசி மகமும் ஆகியே இருக்கு
சிவனும் இருப்பார் முருகனும் இருப்பார்
திருமால் இருப்பார் சிவசக்தியும் இருப்பார்

இட்ட  பெயர்கள் பற்பல வாகினும்
எல்லாம் இறையே எல்லாம் உயர்வே
உயர்வாம் இறையை மனமதில் எண்ணி
நதிநீராடல் மாசி மகத்தின் மகத்துவமாகும் 

மகத்துட  னிணையும் மாசிப் பெளர்ணமி
மகத்துவம் மிக்கது என்பது தத்துவம்
புனித நீராடுதல் மகத்துவம் என்பதால்
மாசி மகத்துடன் இணைத்ததை வியப்போம் !

No comments: