தைப்பொங்கல் - தமிழர் திருநாள்

 

சிவஞானச் சுடர்

பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

(வாழ்நாள் சாதனையாளர்)

சிட்னி -அவுஸ்திரேலியா

 






























தேனிறைந்த  புதுமொட்டு  முகையவிழந்து  விரியத்
     தேடிவண்டு  இரீங்காரம்  இடுங்காலை  நேரம்
ஆனமட்டும்  தம்குரலில்  திருப்பள்ளி  எழுச்சி
    ஆர்ப்பரித்துச்  சிறகடித்துச்   சேவல்கள்  பாடக்
கானமெனக்  கிஞ்சுகங்கள்   துணையுடனே  கூடிக்
    காதலொடு  திருமுறையை  ஓதிநின்று  வாழ்த்த
வானிலெழும்  வாழ்வுதரும்  கதிரவனை  நினைந்து
    வணங்கிநன்றிக்  கடன்செயுநாள்  தைப்பொங்கல்  அன்றோ?

 

 












புதுப்பானை  அடுப்பேற்றிப்  புனல்பாலால்  நிரப்பிப்

    பொங்கிவரும்  வேளைநாமும்  "பொங்கலோபொங்  கல்'என
வதுவையரும் புத்தரிசி யுடன்பயறும் இட்டு
    வேகிவரச்  சர்க்கரையை  முந்திரி தி ராட்சையொடு
மதுரமிகு  தேன்சேர்த்து  நெய்யுமிட்டுப்  பதமாய்
    மங்களமாய்ப்  பொங்கியதைத்  தலைவாழை  இலையில்
கதுமைமிகு  கதிரவனை  நினைந்துருகிப்  படைத்துக்
     கால்நடைக்கும்  விருந்துவைக்கும்  நாளே தைப் பொங்கல்!













உற்றாரை  அழைத்தினிய  விருந்தோம்பல்  செய்வோம்!
    உளமகிழ  நண்பருடன்  வாழ்த்துக்கள்  பகிர்வோம்!
கற்றாரைக்  கலந்தவர்நல்  லுரைகளையுங்  கேட்போம்!
    காதல்மிகு  வார்த்தைபேசித்  துணைவியரைக்  கூட்டிப்
பெற்றோரை  நினைந்தவரின்  நல்லாசி  பெறுவோம்!
    பெரும்பேறு  தரவல்ல  பரம்பொருளைப்     பாடி
வற்றாத  நலமருளும்  வெய்யோனின்  கருணை
    மறக்காது  நினைந்துபொங்கிப்  படைப்பதன்றோ  பொங்கல்!

No comments: