நற்செயல்கள் செய்து வாழ்வாய்! --- அன்பு ஜெயா, சிட்னி (எண்சீர் கழி நெடிலடி ஆசிரிய மண்டிலம்)

 

இன்றுநீயும் புரிகின்ற வினைதனுக்கே ஓர்நாள்

    இருவினைக்கும் ஏற்றதொரு எதிர்வினையும் உண்டே!

தொன்றுதொட்டு முன்னோர்கள் உணர்த்திவரும் உண்மை,

    தொய்வதில்லை; தவிர்த்திடுவாய் தீச்செயல்கள் தன்னை;

நன்றுநன்று நீசெய்யும் நற்செயல்கள் என்றும்

    நல்வினையைக் கூட்டியுன்னை வாழ்விக்கும், உறுதி!

என்றுமுன்றன் ஊழ்வினைதான் உருத்துவந்தே ஊட்டும்

    என்றுணர்ந்து நற்செயலே செய்திடுவாய் நீயே!    (1)

 

நற்செயலைப் பெருக்கித்தீச் செயல்தவிர்த்தே வாழ

    நலம்பெறுவாய் நீயுமிந்த நானிலத்தில் என்றும்;

பெற்றசெல்வம் பகிர்ந்தளித்து வாழ்ந்திட்டால் இந்தப்

    பெருநிலத்தில் உன்வாழ்வும் சிறப்புடனே அமையும்;

பற்றுதனைப் பொருள்மீதில் வைக்காது வாழ்ந்தால்

    பயனடைவாய்ப் பேரின்பப் பெருவாழ்வால் நீயும்;

பெற்றிட்ட பிறப்பெல்லாம் பேரின்பம் தனையே

    பெற்றுவாழப் பிறைசூடன் அளித்திட்ட கொடையே!      (2)

 

No comments: