உலகச் செய்திகள்

 ஜனாதிபதி வேட்பாளர்: ட்ரம்ப் மீண்டும் வெற்றி

காசாவில் ஒரே நாளில் 24 இஸ்ரேலிய படையினர் பலி: மோதல்கள் உக்கிரம்

கான் யூனிஸை சுற்றிவளைத்து இஸ்ரேல் படை கடும் தாக்குதல்: புதிய வெளியேற்ற உத்தரவு

இந்தியா – ரஷ்யா உறவில் புதிய திருப்பம்: சவால்களுக்கு மத்தியில் ஒத்துழைப்புடன் செயற்பாடு

இனப்படுகொலை நடவடிக்கையை தடுப்பதற்கு இஸ்ரேலுக்கு உத்தரவு


ஜனாதிபதி வேட்பாளர்: ட்ரம்ப் மீண்டும் வெற்றி

January 25, 2024 9:14 am 0 comment

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான தீர்க்கமான நியூ ஹம்ப்ஷயர் வாக்கெடுப்பில் வெற்றியீட்டிய டொனால்ட் டிரம்ப், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனுடன் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பை நெருங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் டிரம்புடன் தொடர்ந்து போட்டியில் உள்ள நிக்கி ஹேலியை அவர் தோற்கடித்தார். அமெரிக்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதுவரான ஹேலி வேட்பாளர் போட்டியில் தொடர்ந்து நீடிக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அயோவா மாநிலத்தின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் வெற்றியீட்டி இருந்தார்.

எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதோடு அதில் ஜனநாயகக் கட்சி சார்பில் பதவியில் உள்ள ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடவுள்ளார்.   நன்றி தினகரன் 





காசாவில் ஒரே நாளில் 24 இஸ்ரேலிய படையினர் பலி: மோதல்கள் உக்கிரம்

24 மணி நேரத்தில் மேலும் 195 பலஸ்தீனர்கள் பலி

January 24, 2024 9:04 am 

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருதற்கான இஸ்ரேல் மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வரும் சூழலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் இஸ்ரேலிய தரைப்படையின் 24 வீரர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர்.  

அதிக பணயக்கைதிகளை விடுவிக்கும் நோக்குடனான பேச்சுவார்த்தைக்காக வெள்ளை மாளியை அதிகாரி ஒருவர் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் நிலையிலேயே காசாவில் மோதல் தீவிரம் அடைந்துள்ளது. மறுபுறம் இரண்டு மாத போர் நிறுத்தம் ஒன்றுடன் தொடர்புபட்ட உடன்படிக்கை ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்திருப்பதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த திங்கட்கிழமை மொத்தம் 24 படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் டானியல் ஹகரி நேற்று தெரிவித்தார். இதில் மத்திய காசாவில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் 21 படை வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மற்றைய மோதல்களில் மேலும் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவ பேச்சாளரின் கூற்றுப்படி, கடந்த திங்கட்கிழமை மாலை காசாவில் உள்ள இரு மாடிகள் கொண்ட இரு கட்டடங்களுக்கு இஸ்ரேல் படையினர் நுழைந்துள்ளனர். அந்தக் கட்டங்களை இடித்துத் தகர்க்க அந்தப் படையினர் கண்ணி வெடிகளை அங்கு புதைக்க ஆரம்பித்துள்ளனர்.

அப்போது பலஸ்தீன போராளிகள் நடத்திய ஆர்.பீ.ஜி. குண்டு தாக்குதலில் அந்த இரு கட்டடங்களுக்கு அருகில் இருந்த டாங்கி ஒன்று இலக்காகி உள்ளது. அதே நேரத்தில் இரு கட்டடங்களிலும் வெடிப்பு ஏற்பட்டு இடிபாடுகள் உள்ளே இருந்த வீரர்கள் மீது விழுந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் இஸ்ரேலிய வீரர்கள் புதைத்த கண்ணி வெடிகளே வெடித்திருக்கக் கூடும் என்று இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் ஹகரி குறிப்பிட்டார்.

“கடைசி நேரம் வரை பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்க நாம் போராடினோம்” என்று தொலைக்காட்சியில் வெளியிட்ட அறிவிப்பில் ஹகரி குறிப்பிட்டார். எனினும் இடிபாடுகளுக்குள் புதையுண்ட உடல்களை மீட்பது கடினமாக இருந்தது என்றும் அவர் சுட்டிப்பாட்டினார்.

காசாவின் பிரதான தெற்கு நகரான கான் யூனிஸில் தரைவழி நடவடிக்கைகள், மோதல் மற்றும் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருப்பதாக ஐ.நா மனிதாபிமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கான் யூனிஸில் இருக்கும் தமது தலைமையகங்கள் இஸ்ரேலிய படைகளால் தாக்கப்பட்டதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதில் இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் கடுமையாக சூடு நடத்திய அதே நேரம் நான்காவது மாடி மீது ஷெல் குண்டு விழுந்துள்ளது. இதனால் அந்த செம்பிறை சங்க வளாகத்தில் அடைக்கலம் பெற்றிருந்த பலரும் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக நடத்தி வரும் உக்கிர தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 195 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 354 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி நான்கு மாதங்களாக நீடிக்கும் இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை குறைந்தது 25,490 ஆக உயர்ந்துள்ளது. இதில் 70 வீதத்திற்கு அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர். தவிர 63,354 பேர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் பஞ்சம் மற்றும் நோய்களின் பரவல் தொடர்பில் ஐ.நா நிறுவனங்கள் எச்சரித்து வரும் சூழலில் அங்குள்ள 2.4 மில்லியன் மக்கள்தொகையில் 90 வீதத்தும் அதிகமானவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கழுதை வண்டியில் தனது உடைமைகளை ஏற்றியபடி பயணித்த அபூ இயாத் என்பவர், தாம் ஏழாவது முறையாக இடம்பெயர்வதாக குறிப்பிட்டுள்ளார். அவர் தற்போது கான் யூனிஸில் இருந்து எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரை நோக்கி பயணித்துள்ளார். காசாவில் சன நெரிசல் மிக்க பகுதியாக மாறி இருக்கும் ரபாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருப்பதாக கணிக்கப்படுகிறது.

“நான் தெரியாத இடத்தை நோக்கி பயணிக்கிறேன். ரபாவுக்கு செல்லும்படி அவர்கள் கூறுகிறார்கள். எப்படி ரபாவுக்குச் செல்வது? அங்கே இன்னும் இடம் இருக்கிறதா?” என்று ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு பேசிய அவர் குறிப்பிட்டார்.

பணயக்கைதிகள் விவகாரம் 

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 1,140 பேர் கொல்லப்பட்டு 240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்தே இந்தப் போர் வெடித்தது. இதில் 132 பணயக்கைதிகள் தொடர்ந்தும் காசாவில் இருப்பதாக நம்பப்படுகிறது. எனினும் இதில் உயிரிழந்ததாக நம்பப்படும் 28 பணயக்கைதிகளும் அடங்கும்.

கடந்த நவம்பரில் எட்டப்பட்ட ஒரு வார போர் நிறுத்தத்தின்போது சுமார் 100 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதோடு அதற்கு பகரமாக இஸ்ரேலிய நிலையில் இருந்து பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

பணயக்கைதிகளின் உறவினர்கள் கடந்த திங்களன்று இஸ்ரேலிய பாராளுமன்ற குழுக் கூட்டம் ஒன்றுக்கு இடையூறு செய்து அவசர நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

“நீங்கள் இங்கே அமர்ந்து கொண்டிருக்குறீர்கள், அங்கே எமது பிள்ளைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள்” என்று பணயக்கைதியான டல் ஷொஹானின் தந்தையான கிளாட் கொர்ன்கோல்ட் கூச்சலிட்டதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கான புதிய உடன்படிக்ைக ஒன்றை கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் ஊடாக ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் பரிந்துரைத்திருப்பதாக அமெரிக்காவின் எக்சியொஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பெயர் வெளியிடப்படாத இஸ்ரேலிய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி வெளியாகி இருக்கும் இந்த செய்தியில், முன்மொழியப்பட்டிருக்கும் இந்த உடன்படிக்கை பல கட்டங்களில் முன்னெடுக்கப்படுவதோடு, இதில் விடுவிக்கப்படும் பலஸ்தீன கைதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் பூர்த்தியாவதற்கு இரண்டு மாதங்கள் எடுத்துக்கொள்ளும்.

எனினும் இந்த முன்மொழிவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் வாக்குறுதி அளிக்கப்படவில்லை என்பதோடு காசாவின் பிரதான நகரங்களில் இருந்து இஸ்ரேலிய துருப்புகளை குறைப்பது மற்றும் படிப்படியாக அங்கு குடியிருப்பாளர்கள் திரும்புவதற்கு அனுமதிப்பது பற்றி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் புதிய பணயக்கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்றை எதிர்பார்த்து மத்திய கிழக்குக்கான வெள்ளை மாளிகை இணைப்பாளர் பிரெட் மக்கர்க், எகிப்து மற்றும் கட்டார் செல்லவிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் பலஸ்தீன நாடு ஒன்றை உருவாக்கும் இரு நாட்டுத் தீர்வையே அமெரிக்கா தொடர்ந்து நம்புவதாகவும் இந்த வன்முறையின் முடிவுறாத சுழற்சியில் இருந்து வெளியேற வழியாக அது இருப்பதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் வெடான்ட் பமேல் குறிப்பிட்டார்.

இரு நாட்டுத் தீர்வு 

பலஸ்தீன நாடு ஒன்றை உருவாக்குவதை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக மறுப்பதோடு ஜேர்தான் நதியில் மேற்கு நிலப்பகுதி அனைத்தினதும் பாதுகாப்பு கட்டுப்பட்டை இஸ்ரேல் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்தப் பகுதிக்குள் அனைத்து பலஸ்தீன நிலப் பகுதியும் உள்ளடங்கும்.

இரு போர் தரப்புகள் மற்றும் முக்கிய அரபு நாடுகளின் முன்னணி இராஜதந்திரிகளை பிரசல்ஸில் திங்கட்கிழமை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள், இஸ்ரேல் தனது நிலைப்பாட்டை மாற்றுவதற்கு அழுத்தம் கொடுத்தனர்.

“இரு நாட்டுத் தீர்வே ஒரே தீர்வாக இருப்பதோடு அதனை விரும்பாதவர்கள் கூட அதற்கு எந்த ஒரு மாற்றையும் முன்வைக்கவில்லை” என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலேனா பெர்போக் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் காட்ஸ், எதிர்கால இரு நாட்டு தீர்வுத் திட்டம் பற்றி செய்தியாளர்களின் கேள்விகளை தவிர்த்துக் கொண்டதோடு, இஸ்ரேல் தற்போது பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதிலேயே கவனம் செலுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜோர்தான் வெளியுறவு அமைச்சர் ஐமன் சபாதி, இரு நாட்டுத் தீர்வை இஸ்ரேல் நிராகரிப்பது எதிர்காலத்தில் பிராந்தியத்தில் மேலும் மோதல்களையே உருவாக்கும் என்றார்.

ஹுத்திக்கள் மீது மீண்டும் தாக்குதல் 

காசா போர் பிராந்தியம் எங்கும் பரவும் அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் சூழலில் செங்கடலில் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் புதிய சுற்று தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஹூத்தி நிலத்தடி களஞ்சிம் ஒன்று அதேபோன்று ஏவுகணை மற்றும் கண்காணிப்பு திறன்களை இலக்கு வைத்து திங்கட்கிழமை இரவு எட்டு தாக்குதல்களை மேற்கொண்டதாக இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்தத் தாக்குதல்களுக்கு பதிலளிக்காது மற்றும் தண்டிக்காது விட மாட்டோம் என்று ஹூத்திக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காசாவில் இஸ்ரேலின் போருக்கு பதில் நடவடிக்கையாகவும் பலஸ்தீனர்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்துவதற்காகவுமே செங்கடலில் இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஹூத்திக்கள் கூறுகின்றனர்.

யெமனின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரான் ஆதரவு ஹூத்திக்கள் கடந்த நவம்பர் தொடக்கம் பிரதான கடல் பாதையான செங்கடல் வழியாகச் செல்லும் பல கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் சர்வதேச வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் படுகொலைகள் மற்றும் பொது மக்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று இஸ்ரேலிய கட்டளை மையம் ஒன்றின் மீது ஏவுகணைகளை வீசியதாக குறிப்பிட்டது.   நன்றி தினகரன் 





கான் யூனிஸை சுற்றிவளைத்து இஸ்ரேல் படை கடும் தாக்குதல்: புதிய வெளியேற்ற உத்தரவு

ஒரு மாத போர் நிறுத்தத்திற்கு தீவிர பேச்சு

January 25, 2024 10:36 am

காசாவில் கடும் இழப்பையும் எதிர்ப்பையும் சந்தித்து வரும் இஸ்ரேலியப் படை தெற்கின் மிகப்பெரிய நகரான கான் யூனிஸை சுற்றிவளைத்து உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.  

அரை மில்லியன் குடியிருப்பாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கான் யூஸின் ஒரு பகுதியில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டிருப்பதாக ஐ.நா மனிதாபிமான அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

காசா மக்கள் பெரும் உணவு பாதுகாப்பற்ற நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்து, பாதுகாப்புச் சபையில் ஐ.நா தலைவர் புதிய எச்சரிக்கையை விடுத்திருக்கும் நிலையிலேயே காசா மக்களை மேலும் வெளியேற்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கான் யூனிஸ் நகரை சுற்றிவளைத்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ள நிலையில் அங்கு தரைவழி மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

இதில் ஆல் நாசர் மற்றும் அல் அமல் ஆகிய பிரதான மருத்துவமனைகள் உள்ள சுமார் 513,000 மக்கள் வசிக்கும் கான் யூனிஸின் நான்கு சதுர கிலோமீற்றர் பகுதியில் உள்ள மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டதாக ஐ.நா மனிதாபிமான அலுவலகம் கூறியது.

இஸ்ரேலின் இந்த உத்தரவு அபாயகரமானது என்று குறிப்பிட்டிருக்கும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் அலுவலகம், பலஸ்தீன மக்களை தமது சொந்த வீடுகளில் இருந்து வெளியேற்றும் இஸ்ரேலின் நோக்கம் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.

ஏற்கனவே காசா மக்கள்தொகையில் 90 வீதமானவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதோடு பலரும் பல இடங்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்தப் போர் முற்றுகையில் உள்ள காசாவில் உணவு, நீர், எரிபொருள் மற்றும் மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

“இஸ்ரேலிய நடவடிக்கையில் வான், தரை மற்றும் டாங்கிகளில் இருந்து எம்மீது குண்டுகள் வீசப்படும் அதேநேரம் எமக்கு உண்ணவோ அல்லது குடிக்கவோ ஒன்றுமில்லாமல் செய்யப்பட்டிருக்கிறது” என்று அழிவைச் சந்தித்திருக்கும் காசா நகரில் இருந்து இடம்பெயர்ந்த உம் தஹுத் அல் கபர்னா குறிப்பிட்டுள்ளார்.

“எனது மருமகள் பலத்த காயத்திற்கு உள்ளாகி இருக்கிறாள்” என்று கூறிய அந்தப் பெண், “இது பெரும் அவலமாகும்.. அவர்களின் இதயத்தில் இரக்கத்தை கொண்டு தர வேண்டும்” என்றார்.

காசாவின் நிலைமை மோசமாக இருப்பதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

“காசாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பெரும் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டிருப்பதோடு பஞ்சத்திற்கான அச்சுறுத்தல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது” என்று உலக உணவுத் திட்டத்தின் மத்திய கிழக்கிற்கான மூத்த பேச்சாளர் அபீர் எடபா எச்சரித்தார்.

மறுபுறம் ஐ.நா பாதுகாப்புச் சபையில் நேற்று முன்தினம் பேசிய ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், பலஸ்தீன நாட்டை உருவாக்கும் அழைப்பை இஸ்ரேல் தொடர்ந்து நிராகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அது மோதலை காலவரையின்றி நீடிக்கச்செய்யும் என்றும் எச்சரித்தார்.

“பலஸ்தீன மக்கள் தமக்கு சொந்தமான முழுமையான சுதந்திர நாட்டை உருவாக்கும் உரிமை அனைவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதோடு இரு நாட்டு தீர்வை மறுக்கும்் எந்த ஒரு தரப்பும் உறுதியாக நிராகரிக்கப்பட வேண்டும்.

மாறாக எந்த ஓர் உண்மையான சுதந்திரம், உரிமைகள் மற்றும் கெளரவம் இன்றி இத்தனை பெரும் எண்ணிக்கையான பலஸ்தீனர்களுடன் ஒரு நாட்டு தீர்வானது நினைத்துப்பார்க்க முடியாதது” என்று குட்டரஸ் கூறினார்.

பிராந்திய மோதல் ஒன்றுக்கான அச்சுறுத்தல் தற்போது உண்மையாகி வருவதாகவும்் ஒரு பரந்த போரின் இழப்புகளை கருத்தில்கொண்டு அனைத்துத் தரப்புகளும் பின்வாங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடரும் எதிர்ப்பு  

எனினும் காசாவில் குறிப்பாக கான் யூனிஸில் இடம்பெறும் தொடர் தாக்குதல்களால் மேலும் பல பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கான் யூனிஸில் உள்ள செம்பிறை சங்க தலைமையகத்தின் வடக்கு வாயிலை இலக்கு வைத்து இஸ்ரேலிய ஜெட்கள் நேற்று வீசிய குண்டுகளில் இடம்பெயர்ந்த மூவர் கொல்லப்பட்டு மேலும் இருவர் காயமடைந்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் கான் யூனிஸின் மேற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பமாக போரில் இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 25,500ஐ தாண்டியுள்ளது. இதில் சிறுவர்கள் மற்றும் பெண்களே அதிகமாக உள்ளனர்.

இஸ்ரேலிய துருப்புகள் தனது போர் நடவடிக்கையை தெற்கை மையப்படுத்தி முன்னெடுத்திருந்தபோதும் வடக்கு காசாவில் அது தொடர்ந்து பலஸ்தீன போராளிகளின் எதிர்ப்பை சந்தித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை இதுவரை இல்லாத அளவு 24 துருப்புகளை இஸ்ரேல் இழந்தது.

இது தொடர்பில் அமெரிக்க போர் கண்காணிப்பு நிறுவனம் ஒன்று வெயிட்டிருக்கு அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “காசா நகரில் வடமேற்கில் இஸ்ரேலிய படைகளை இலக்கு வைத்து ஹமாஸ் ஆயுதப் பிரிவினர் தெர்மோபரிக் ரொக்கெட்டுகள், ஸ்னைப்பர் துப்பாக்கிகள் மற்றும் மோட்டார் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர். செய்தூனின் தெற்கில் மூன்று ஆளில்லா விமானங்களை தமது போராளிகள் கைப்பற்றியதாக ஹமாஸ் கூறியிருப்பதோடு ஜூஹோர் அல்திக் பகுதியில் இஸ்ரேலிய வாகனங்களை இலக்கு வைத்து குண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.”

பலஸ்தீன போராளிகள் கான் யூனிஸ் நகரிலும் இஸ்ரேலிய தரைப்படைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் அங்கு கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.

போர் நிறுத்தம் 

இதேவேளை பலஸ்தீன கைதிகளுக்கான இஸ்ரேலிய பணயக்கைதிகளை பரிமாற்றும் ஒரு மாதம் நீடிக்கும் போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பரந்த அளவில் இணக்கம் எட்டப்பட்டிருப்பதாகவும், ஆனால் காசாவில் போரை நிரந்தரமாக நிறுத்துவது தொடர்பில் இரு தரப்புக்கும் இடையே முரண்பாடு நீடிப்பதாகவும் இது தொடர்பில் தெரிந்த வட்டாரத்தை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்காக கட்டார், எகிப்துடன் அமெரிக்காவும் அண்மைய வாரங்களில் தீவிரம் மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் புதிய சுற்று இராஜதந்திர முயற்சிகள் கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு ஹமாஸ் முதலில் பல மாத போர் நிறுத்தத்திற்கு பரிந்துரைத்த பின், ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து ஆரம்ப போர் நிறுத்த காலம் 30 நாட்களுக்கு குறைந்திருப்பதாக இந்த பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கான எதிர்கால நிபந்தனைகளை முன்வைக்கும் வரை ஹமாஸ் இந்தத் திட்டத்திற்கு மறுப்பை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கெய்ரோவை சென்றடைந்த ஹமாஸ் தூதுக்குழு ஒன்று புதிய போர் நிறுத்தம் குறித்து எகிப்து உளவுப் பிரிவு தலைவரை சந்தித்து பேசி இருப்பதாக பலஸ்தீன வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்தத் திட்டத்திற்கான பேச்சுவார்த்தை திறந்தே இருப்பதாகவும் இன்னும் உடன்பாடு ஒன்றுக்கு வரவில்லை என்றும் ஹமாஸ் மூத்த அதிகாரியான சமி அபூ சுஹ்ரி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதில் போரை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸின் ஆறு மூத்த தலைவர்களை காசாவில் இருந்து வெளியேற்ற இஸ்ரேல் நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்பட்டபோதும் அதனை ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளது.

எவ்வாறாயினும் மூன்று மாதங்களை தாண்டி நீடிக்கும் இந்தப் போரினால் காசாவில் மனிதாபிமான நெருக்கடி அதிகரித்து, தொடர்ந்தும் பணயக்கைதிகள் ஹமாஸ் பிடியில் இருக்கும் சூழலில் இஸ்ரேல் அரசு இஸ்ரேலுக்குள்ளும் சர்வதேச அளவிலும் பெரும் அழுத்தத்தை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிராந்திய மோதல் 

இந்தப் போர் பிராந்தியம் எங்கும் பரவும் அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் சூழலில் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகளை இலக்கு வைத்து அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியது. ஈராக்கில் உள்ள அமெரிக்க துருப்புகள் மீது பலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ரொக்கெட் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டு சில நாட்களிலேயே இந்த தாக்குதல் இடபெற்றுள்ளது.

மறுபுறம் தெற்கு செங்கடலை குறிவைத்து எறிவதற்கு தயாராக இருந்த கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை இலக்கு வைத்து யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் கூறியது.   நன்றி தினகரன் 





இந்தியா – ரஷ்யா உறவில் புதிய திருப்பம்: சவால்களுக்கு மத்தியில் ஒத்துழைப்புடன் செயற்பாடு

- இரு நாடுகளுக்கிடையிலான புதிய நகர்வு ஆரம்பம்

January 22, 2024 6:26 pm 

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கடந்த 2023 டிசம்பர் 25ஆம் திகதி ரஷ்யவிற்கு ஐந்து நாள் ப விஜயம் மேற்கொண்டார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனித்தனியான சந்திப்புகளை நடத்தினார். வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவு போன்ற முக்கிய துறைகளில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இருதரப்பு உறவையும் வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கு இடையே அடிக்கடி உயர்மட்ட பரிமாற்றங்களை முன்னெடப்பதற்கான கட்டமைப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் முதல் எரிசக்தி மற்றும் பாதுகாப்பு வரை பல்வேறு தளங்களில் நடந்து வரும் ஒத்துழைப்புகளை மதிப்பாய்வு செய்வதற்கான முக்கிய தளத்தை இந்த விஜயம் வழங்கியதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் “சலுகை மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மை” குறித்து க ஜனாதிபதி புடின், பிரதமர் மந்துரோவ் மற்றும் வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் உள்ளிட்ட முக்கிய நபர்களுடன் அமைச்சர் ஜெயசங்கர் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார். பொருளாதார மற்றும் மூலோபாய அம்சங்களை மட்டுமன்றி, கலாச்சார மற்றும் மக்கள் தொடர்புகளையும் உள்ளடக்கியதாக இந்த பரிமாற்றம் அமையும்.

மூலோபாய கூட்டாண்மையின் பிரதான அம்சமாக வருடாந்தம் நடைபெறும் இந்தியா-ரஷ்யா தலைவர்களின் மாநாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெறவில்லை. இந்த உயர்மட்ட கலந்துரையாடல், இந்தியப் பிரதமர் மற்றும் ரஷ்ய ஜனாதிபதியை ஒன்றிணைத்து, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை உறுதிப்படுத்துகிறது.
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே 21 வருடாங்களான இந்த மாநாடு நடைபெற்று வந்ததோடு இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த உறவுகளுக்கு ஒரு சான்றாக அமைகிறது. உக்ரைனில் நடந்து வரும் மோதலால் மேற்கத்திய உலகில் ரஷ்யா தற்போதைய தனிமைப்படுத்தப்பட்ட போதிலும், இந்தியாவும் ரஷ்யாவும் தொடர்ந்து வலுவான உறவை வளர்த்து வருகின்றன.

இரண்டு சக்திவாய்ந்த ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் ஆழமான வரலாற்று, மூலோபாய மற்றும் பொருளாதார பிணைப்புகளை உலகிற்கு நினைவூட்டுகிறது.

உக்ரைன் நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்மானம் மற்றும் போர்நிறுத்தத்திற்கு இந்தியா பகிரங்கமாக குரல் கொடுக்கும் அதே வேளையில், ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்க அமெரிக்காவிடமிருந்து இந்தியா அழுத்தத்தை எதிர்கொண்டது. ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்வது என்பது ஒரு முக்கிய விடயமாகும்.

உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இடையேயான வருடாந்த உச்சிமாநாட்டின் இடைநிறுத்தம் என்பவற்றுக்கு மத்தியில், வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கரின் வருகை ரஷ்ய தலைமையுடன் உயர்மட்ட அரசியல் ஈடுபாட்டின் வீரியத்தைப் பேணுவதன் மூலம் இடைவெளியைக் குறைக்கும் நோக்கம் கொண்டது.ரஷ்யாவுடன் உரையாடல் மற்றும் ஈடுபாட்டிற்கான இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்த விஜயம் குறிக்கிறது.

ரஷ்யாவுடனும் அதற்கு முன்னர் சோவியத் யூனியனுடனும் இந்தியாவின் உறவு அதன் வரலாற்றில் மிகவும் நீடித்த புவிசார் அரசியல் கூட்டாண்மையாகும். இந்த ஆழமான வேரூன்றிய கூட்டணி இராஜதந்திர உறவுகளுக்கு அப்பால் நீண்டுள்ளது. அர்ப்பணிப்புள்ள வழிமுறைகளின் வலைப்பின்னல் மூலம் பொருளாதார ஒத்துழைப்பு தீவிரமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 






இனப்படுகொலை நடவடிக்கையை தடுப்பதற்கு இஸ்ரேலுக்கு உத்தரவு

சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

January 27, 2024 8:00 am 

காசாவில் ஹமாஸுக்கு எதிராக போரிடும் இஸ்ரேல் இனப்படுகொலை நடவடிக்கைகளை தவிர்ப்பதற்கு தனது அதிகாரத்திற்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் நேற்று (26) உத்தரவிட்டது.

இஸ்ரேல் தனது படைகள் இனப்படுகொலையில் ஈடுபடாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் காசாவில் மனிதாபிமான நிலைமையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

இது தொடர்கில் ஒரு மாதத்திற்குள் இஸ்ரேலுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக தென்னாபிரிக்கா தொடுத்த பிரதான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை. இதில் 26,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை உடன் நிறுத்தும்படியான தென்னாபிரிக்காவின் கோரிக்கையின்படி போர் நிறுத்தம் ஒன்றுக்கான உத்தரவை பிறப்பிப்பதை ஐ.நா நீதிமன்றம் தவிர்த்துள்ளது.இந்த வழக்கை முற்றாக நிராகரிக்குமாறு நீதிமன்றத்தை கோரி இருந்த இஸ்ரேல், சர்வதேச சட்டத்தை மதிப்பதாகவும், தம்மை தற்காத்துக்கொள்ளும் உரிமை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.

முன்னதாக தென்னாபிரிக்கா தொடுத்த இந்த வழக்கு தொடர்பில் இந்த மாத ஆரம்பத்தில் இரு நாள் விவாதம் நடந்தது. எனினும் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக கூறப்படும் இஸ்ரேல் மீதான பிரதான குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மேன்முறையீடு இன்றி செயற்படுத்துவதற்கு கடப்பாடு இருந்தபோதும், அதனை செயற்படுத்துவதற்கு நீதிமன்றத்திடம் வழிமுறைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன்


No comments: