தாயகத்தில் விடுபட்ட படைப்பிலக்கியத்தை புலம்பெயர் வாழ்வில் மீண்டும் தொடங்கிய அ. முத்துலிங்கம் ! ஜனவரி 19 பிறந்த தினம் முருகபூபதி

“ ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனையானது


கதை முடிந்த பின்னும் சிறிது தூரம் ஓடவேண்டும். சிறுகதையின் முழுமை அவன் சிந்தனை ஓட்டத்தில்தான் நிறைவேற வேண்டும். ஒரு உண்மையான சிறுகதை அது முடிந்த பிற்பாடுதான் தொடங்குகிறது.  “ இப்படிச்சொல்லியிருப்பவர் தன்னை ஒரு இலக்கிய விமர்சகராகவோ அல்லது இலக்கியப் பேராசிரியராகவோ அறிமுகப்படுத்திக்கொண்டவர் அல்ல!

 ஒரு குடும்பத்தில் திடீரெனக் காணாமல் போன ஒருவர் திடுதிப்பென இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப்பிறகு  விந்தையான இயல்புகளுடன்  திரும்பிவந்து ,   இதோ நான் இன்னமும் இருக்கின்றேன்!  எனச்சொல்லும்போது அந்தக்குடும்பத்தினரிடம் தோன்றும் பரவசம் இருக்கிறதே,  அது போன்றதுதான் எழுத்தாளர்  .முத்துலிங்கம் அவர்களின் இலக்கிய மறுபிரவேசம்.  

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1973 காலப்பகுதியில்


கொள்ளுப்பிட்டி தேயிலைப்பிரசார சபை மண்டபத்தில் நடந்த ஒரு இலக்கியநிகழ்வில் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவரைச்சுட்டிக்காட்டி  அவர்தான் அக்கா கதைத்தொகுதி எழுதிய .முத்துலிங்கம் ”  என்று ஒரு இலக்கிய நண்பர் சொன்னார்.

 அன்று அவருடன் பேசும் வாய்ப்புக்கிடைக்கவில்லை.

 அக்கா தொகுதியும் படிக்கக் கிடைக்கவில்லை.

 அதன் பின்னர் முத்துலிங்கம் பற்றிய எந்தத்தகவலும் இல்லை. அவரையும் அவரது அக்காவையும் தேடினேன்.  கண்களுக்குத்தென்படாமல் மறைந்து விட்டார்கள்.

 நானும் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்ட பின்னர் ஒருநாள்  எனது வீட்டு முகவரிக்கு பாகிஸ்தானிலிருந்து ஒரு புத்தகப்பார்சல் வந்தது. அனுப்பியிருந்தவர். முத்துலிங்கம். புத்தகம் திகடசக்கரம் கதைத்தொகுதி. திகைத்துவிட்டேன்.

 உடனே பதில் எழுதினேன். அவரிடமிருந்து பதில் இல்லை. திகடசக்கரத்தை வைத்துக்கொண்டு, மீண்டும் தேடுதல் படலம். .நா. அதிகாரியாக அவர் உலகம் சுற்றிக்கொண்டிருப்பதாக நான் விசாரிப்பவர்களெல்லாம் சொன்னார்களே தவிர, சரியான தகவலைத் தரவில்லை. என்னாலும் அவரது சரியான இருப்பிடத்தையோ முகவரியையோ கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.

 அவர் தமது உத்தியோகத்திலிருந்து நிரந்தரமாக ஓய்வுபெறும் வரையில் காத்திருக்கவேண்டியிருந்தது. எனினும், என்னைப்போன்ற வாசகர்களை காத்திருக்கச்செய்யாமல் தமது கதைகள், கட்டுரைகள் மூலம் இலக்கிய மறுபிரவேசத்துடன் அறிமுகமாகிக்கொண்டிருந்தார்.

 கனடாவிலிருக்கிறார் என்பதை அறிந்து தொடர்புகொள்வதற்கு 2007 ஆம் ஆண்டு வரையில் காத்திருந்தேன் எனச்சொன்னால் நம்பமாட்டீர்கள். அந்த ஆண்டு கனடாவுக்குச்சென்றும் அவரைச்சந்திக்கமுடியாமல் போய்விட்டது. அமெரிக்காவிலிருந்து எனக்கு 2008 ஆம் ஆண்டு புதுவருடம் பிறந்ததும் முதல் வாழ்த்தும் நீண்ட உரையாடலையும் தந்தவர் முத்துலிங்கம்.

 தமிழகத்தில் தீராநதி, ஆனந்தவிகடன்,உயிர்மை, வார்த்தை உட்பட


பல இணைய இதழ்களிலெல்லாம் எழுதுகிறார்.  ஆனால்,  ஈழத்து இதழ்களில் எழுதுகிறார் இல்லையே என்ற கவலையை சிலர் தெரிவிக்கத்தொடங்கியிருந்த சூழலில்,  மல்லிகை ஜீவா கேட்டதன் பிரகாரம்   2009 மார்ச் மல்லிகை இதழின் அட்டைப்பட அதிதிக்கட்டுரையில் அவர் பற்றி  எழுதினேன்.

 1937 இல் கொக்குவில் கிராமத்தில் ஏழு பிள்ளைகளைக்கொண்ட பெரிய குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையாக பிறந்த முத்துலிங்கம் அவர்களுக்கு  இந்த மாதம் 87 வயது பிறந்திருக்கிறது.  அவரை  தொலைபேசி ஊடாக வாழ்த்திக்கொண்டே இந்த முதல் சந்திப்பினை பதிவுசெய்கின்றேன்.

மின்னஞ்சல், தொலைபேசி ஊடாக தொடர்பிலிருந்தவரை நேருக்கு


நேர் முதல் முதலில் சந்திக்கும் வாய்ப்பு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 04 ஆம் திகதிதான் எனக்கு கிட்டியது.

அவரால்  இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தொடக்கிவைக்கப்பட்ட கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தினால் எனக்கு வழங்கப்பட்ட இயல்விருதை பெற்றுக்கொள்வதற்காக சென்றிருந்தபோதுதான், அந்த விருது விழா மண்டபத்தில் அவரை முதல் முதலில் நேருக்கு நேர் சந்தித்தேன்.

என்னை ஆரத்தழுவி வரவேற்றார்.

1960 களில்  அவர் இலங்கையிலிருந்த  காலப்பகுதியில் இலக்கியப்பிரவேசம் செய்தார். நன்கு ஆண்டுகளில் (1964) முதலாவது கதைத்தொகுதி அக்காவை தந்தவர், மீண்டும் 1995 இல்தான், இருபத்தியொரு வருடங்களின் பின்னர்  திகடசக்கரம் கதைத்தொகுதியை தருகிறார்.

 


மீண்டும் எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்த காரணி என்ன? என்று ஒரு தடவை தொலைபேசியில் அவரிடம் கேட்டபோது,  

 ஒரு நாள் தற்செயலாக ஒரு சஞ்சிகையை புரட்டியபோது நான் எங்கே விட்டேனோ அங்கேயே தமிழ்ச் சிறுகதை நின்றது. ஆகவே திரும்பவும் நுழைவது சுலபமாக அமைந்தது என்றார்.

 அவரது மீள்பிரவேசம் பயன்மிக்கது. தமிழ் வாசகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கியது.

தமிழ் இலக்கிய உலகிற்கு புதிய வரவுகளைத்தந்தது.

 திகடசக்கரத்தைத் தொடர்ந்து, வம்சவிருத்தி , வடக்கு வீதி,  மகாராஜாவின் ரயில் வண்டி,  .முத்துலிங்கம் கதைகள்,  அங்கே இப்ப என்ன நேரம்?    கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது , வியத்தலும் இலமே , பூமியின் பாதி வயது,  உண்மை கலந்த நாட்குறிப்புகள், உட்பட பல நூல்களைத்தந்திருப்பதுடன்  தனது அமுதவிழாவையும் கடந்து அயராமல் எழுதிக்கொண்டிருக்கின்றார்.

 ஊடகங்கள் உருவாக்கிய எழுத்தாளர்களும் வாசகர்களும்


இருக்கிறார்கள். அதேபோன்று  புதிதாக வாசகர்கள் பலரை உருவாக்கிய பெருமையைக் கொண்டவர் முத்துலிங்கம்.

தமிழ்ச் சூழலில் திரைகடலோடி திரவியம் தேடியவர்களுக்கு மத்தியில், தேசம் விட்டுத் தேசம் ஓடி இலக்கியப்படைப்புகளைத்தந்தவர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் முத்துலிங்கம்.

 சியாரா லியோன், சூடான், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், கென்யா, சோமாலியா முதலான  நாடுகளில் உலக வங்கிக்காகவும் ஐக்கிய நாடுகள் சபைக்காகவும் வாழ்ந்தவர், தமது அலைந்துழன்ற  வாழ்வை இலக்கியமாக சித்திரித்து தமிழுக்கு வளமும் புதிய பார்வையும் தந்தவர்.

 பழந்தமிழ் இலக்கியங்கள் உட்பட ஆங்கில இலக்கியங்களிலும் மிகுந்த பரிச்சியம் இவருக்கிருப்பது சிறந்த மூலதனம். அதனை  வாசகர்களுக்கு சுவாரசியத்துடன் பகிர்ந்தளிப்பதில் வெற்றி கண்டவர்.

 கனடாவிலிருந்துகொண்டு அவ்வப்போது அமெரிக்காவுக்கு பயணித்தவாறு,  அதிகாலை எழுந்து கணினியில் படித்தும் எழுதியும், தனது சிந்தனைகளுக்கோ எழுத்துக்கோ ஓய்வு கொடுக்காமல் அயர்வின்றி இயங்கும், அவரது எழுத்துக்களைப்படிக்கும் தருணங்களில் வாய்விட்டுச் சிரிக்கலாம். சிலிர்ப்புடன் சிந்திக்கலாம்.

 


வாசகனை கவர்ந்திழுக்கும் மந்திரசக்தி இவரிடம் எப்படி வந்தது?  என்று நான் நினைப்பதுண்டு.

 இலக்கியத்தில் மட்டுமன்றி சர்வதேச ரீதியாக சிறுபான்மை இனங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்,  போராட்டங்கள் தொடர்பாகவும் விசாலமான பார்வையைக்கொண்டவர்.  

  முத்துலிங்கத்தை பற்றி எழுதுவதற்கு சில பக்கங்கள் போதாது. அவரது வாழ்வையும் இலக்கியப்பணிகளையும் விரிவாக நூலாகவே எழுத முடியும்.

 இந்த ஆக்கத்தின் ஆரம்பத்தில் முத்துலிங்கம் அவர்களின் கூற்றாக பதிவுசெய்யப்பட்டிருப்பது போன்று, அவரது ஒரு படைப்பை படித்த பின்பும் அந்தப்படைப்பு சில கணங்களுக்கு சில நாட்களுக்கு சில வருடங்களுக்கு எம்மைப்  பின்தொடரும்.

 அவ்வாறு  எங்களுடன் வந்துகொண்டேயிருப்பவர்தான் முத்துலிங்கம்!

---00--

No comments: