" 'தெளிவுபெற அறிந்திடுதல்', 'தெளிவுதர மொழிந்திடுதல்' இரண்டுமே கழகத்திடருந்து, யான் கற்றதும் பெற்றதும் " -திருமதி மைத்திரேஜி சிவசுப்பிரமணியம்-

 லகம் யாவையும் பயன்பெற காகுத்தன் காதையை, கவினுறப்


பாடிவைத்தார் கவிச்சக்கரவர்த்தி கம்பன். அவர் வாழ்ந்து சில நூற்றாண்டுகள் உருண்டோடி விட்டன. 

காலத்தோணி என்னைக் கங்காரு நாட்டில் கரைசேர்த்தது. புலம் பெயர் நாட்டில் தாய்நாட்டின் சாயல் தேடித் தவித்த இளங்கொடி எனக்குக் கிடைத்த கொழுகொம்பே அவுஸ்திரேலியக் கம்பன் கழகம். 2007ம் ஆண்டு, கம்பன் கழகம் - சிட்னி முருகன் ஆலயத்தில் நடாத்திய குற்றவாளிக் கூண்டில் இராமன் எனும் அவுஸ்திரேலியாவின் முதல்த் தமிழ் வழக்காடு மன்றத்தைப் பார்வையாளராகக் கலந்துகொண்டு இரசித்த நான், விழாவின் நேர்த்தியும், தரமும் கண்டு வியந்து என்னையும் கழகத்தில் இணைத்துக்கொள்ளுமாறு அமைப்பாளர் ஜெய்ராம் அண்ணனிடம் விண்ணப்பித்தேன்.

அவுஸ்திரேலியக்கம்பன் கழகம் 15ஆவது வருட நிறைவைக்

கொண்டாடும் இந்த வேளையில், கம்பன் குடும்பத்தில் ஒருத்தியாக இந்தப் பதிவை எழுதுவதை நினைந்து என் உள்ளம் மகிழ்கிறது. நாம் கடந்து வந்த இவ்வருடங்களில்  கழகம் எட்டிய உயரங்களை மீட்டிப் பார்க்கிறேன். அவுஸ்திரேலிய மண்ணில் இயல், இசை, நாடகம் எனும் தமிழின் முக்கூறுகளை செழிக்க வைக்கவும்,  எம் எதிர்கால சந்ததியினரிடம் தமிழையும், கலாச்சாரத்தையும் வேரூன்றச் செய்தலுமே முக்கிய நோக்காகக் கொண்டு கழகம் முன்னேறி வருகிறது.


அந்த வகையில் இயல்க்கூறாக ஞான வேள்விவெல்லும் சொல்நாநலம்முந்து தமிழ் போன்ற நிகழ்வுகளையும், இசைக்கூறாக இசை வேள்விகளையும், நாடத்திற்காக  ஆடல் வேள்வி மற்றும் கலைதெரி அரங்கம் போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.
இளையவர் மத்தியில் தமிழை விதைக்கத் தமிழ்ப் பாடசாலைகளிருக்க, பள்ளி கடந்தும் தமிழைத் தொடர நானறிந்தது அவுஸ்திரேலியாவில் ஒரு களம் இருக்கவில்லை. இளையோரிடம் தமிழ் நிலைக்க விவாத பயிற்சிப் பட்டறைகள், வாரம்தோறும் கம்பன் வகுப்புக்கள் எனக் கழகம் வழி சமைக்கிறது. தாயும் பிள்ளைகளும், தந்தையும் மகளும், சகோதரனும் சோதரியுமெனப் பல்வேறு வயதினர், அவுஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து ஒன்றாகத் தமிழ் சுவைக்கும் அரிய காட்சியை எம் கம்பன் வகுப்பில் தான் காண முடியும்.


கசடறக் கற்றவற்றை, கற்றபடி ஒழுக வேண்டும் என்பதை

இளையோரிடம் நிலைநாட்ட  நாம் வாழும் நாட்டின் சமூகசேவையிலும் கழகம்  ஈடுபட்டிருக்கிறது. வருடந்தோறும் சூழலைச் சுத்தம் செய்யும் 'clean-up Australia Day' யில் பங்குபற்றுவதோடு, காட்டுத்தீயால் அவதியுற்றவர்களிற்கு 
உதவிசெய்ய 'அமிர்த வர்க்ஷினி' என்ற நிதிதிரட்டும் நிகழ்வையும் நடாத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.


அனைவற்றிற்கும் முத்தாய்ப்பாக 2012ம் ஆண்டிலிருந்து  வருடந்தோறும் கம்பன் விழாக்களைக் கழகம் மிகச்சிறப்பாக அரங்கேற்றி வருகிறது. வருடந்தோறும் உலகெங்குமிருந்து புகழ் பூத்த பேச்சாளர்களை அழைத்து வந்து, இலவசமாக இலக்கியமும், இன்சுவை உணவும் பரிமாறும் விழாவாகக் கம்பன் விழா தனித்துத் துலங்குகிறது.
2020இல் கொரோனா நுண்கிருமியால் உலகமே முடங்கிக் கிடக்க, தடைகளைத் தாண்டிச் சாதனை புரியும் நம் கழகம் கம்பன் விழாவைக் கணணியில் ஏற்றி நிகழ் நிலையாக  (online) அரங்கேற்றியது.
இவ்வருடமும் நிகழ்நிலை கம்பன்விழா ஒக்ரோபர் 29, 30, 31ஆம் திகதிகளில் முகநூல் மற்றும் யூரியூப்  வாயிலாகவும் அரங்கேறவுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

கடந்த 15 வருடங்களில் கழகத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய

உதவியாளர்கள், ஆர்வலர்கள், நலன் விரும்பிகள் அனைவறிற்கும் இந்த இனிய வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.  உருண்டோடிய சில வருடங்களில் கழகத்தின் செயலாளராகவும், தலைவியாகவும் இச்சிறியேளையும் செயற்பட உதவிய அனைத்து கழக சொந்தங்களிற்கும் என் உளங்கனிந்த நன்றிகள்.  தெளிவுபெற அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல் இவ்விரண்டுமே கழகத்திமிருந்து நான் கற்றதும், பெற்றதும் 🙏.
'கம்பன் புகழ்பாடிக்  கன்னித்தமிழ் வளர்ப்போம்'.


No comments: