உலகச் செய்திகள்

பிரிட்டனின் புதிய கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காது பரவல் 

அரசியல் இழுபறிக்கு மத்தியில் நேபாள பாராளுமன்றம் கலைப்பு

அமெரிக்காவில் 9 மில்லியன் தடுப்பு மருந்துகள் விநியோகம்

தஞ்சக் கோரிக்கையாளர் படகு மூழ்கி 20 பேர் பலி

புதிய வகை கொரோனா ஜேர்மனியிலும் அடையாளம்


பிரிட்டனின் புதிய கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காது பரவல் 

ஐரோப்பாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகைக் கொவிட்–19 நோய் நாடு முழுவதும் கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக சுகாதார அமைச்சர் மாட் ஹான்கொக் எச்சரித்துள்ளார்.

தடுப்பு மருந்து செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கும் வரை நேற்று விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும் என்றார் அவர்.

புதிய விதிமுறைகளால், விடுமுறைக்காலத் திட்டங்கள் பாழானதாக மக்கள் கவலை தெரிவித்தனர். இருப்பினும் கடுமையான முடக்கக் கட்டுப்பாடுகள் விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியது.

புதிய வகை வைரஸ் 70 வீதம் அதிகமாகப் பரவக்கூடியது என்று ஆய்வாளர்கள் கூறுவதை அது சுட்டிக்காட்டியது.

முந்தைய வைரஸை விட புதிய ரக கொரோனா தொற்று உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்கோ, நோய் பாதிப்பை அதிகரிக்கும் என்பதற்கோ ஆதாரங்கள் இல்லை.

புதிய வகை வைரஸ் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக, பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கும்படி ஐரோப்பிய நாடுகளை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அந்த வகை வைரஸ் பிரிட்டனுக்கு அப்பாலும் பரவிவருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

நெதர்லாந்து, இத்தாலி, டென்மார்க், அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகியவற்றில் ஏற்கனவே புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. சில நாடுகள் எல்லை கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.

ஜெர்மனி, இத்தாலி, நெதர்லந்து ஆகியவை பிரிட்டனிலிருந்து செல்லும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. பெல்ஜிய அரசாங்கம் அனைத்து விமான, ரயில் சேவைகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

புதிய போக்குவரத்துத் தடைகளால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்துக் கலந்தாலோசிக்க பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.

அத்தியாவசியப் பொருள் விநியோகம் தடைபடாமல் இருப்பதை உறுதிசெய்வது அதன் நோக்கமாகும். இந்த புதிய ரக கொரோனா தொற்று அச்சம் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்துகளுக்கு ஒரு வாரத்திற்கு தடை விதிப்பதாக சவூதி அரேபியா மற்றும் துருக்கி நாடுகளும் அறிவித்துள்ளன. பொதுவாகவே வைரஸ்கள் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப அதிகம் பரவுவதும், அது தனது வீரியத்தை அவ்வப்போது மாற்றியமைத்துக் கொள்வதும் வழக்கம்.

பழைய கொரோனா வைரஸைக் காட்டிலும் இந்த புதிய அதிதீவிர கொரோனா வைரஸில் சுமார் 12க்கும் மேற்பட்ட மாறுபாடுகள் காணப்படுகின்றன. சில வைரஸ்கள் மனித உடலில் இருக்கும் புரதத்துடன் ஒட்டிக் கொண்டு செல்களை பாதிக்கும் அபாயம் உள்ளது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புதிதாக உருவாகும் வைரஸ்கள் அவ்வப்போது தங்களது உட்கட்டமைப்பில் ஒரு சில மாற்றங்களை செய்து கொண்டே இருக்கும். இது வழக்கமான மாறுபாடுதான். சில வைரஸ்கள் ஒவ்வொரு நாடு அல்லது கண்டத்துக்கு ஏற்ற வகையில் தகவமைத்துக் கொண்டு வேகமாகப் பரவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளும்.

ஆனால், இந்த வைரஸ் அதன் மேற்புறத்திலிருக்கும் புரதத்தை மாற்றிக் கொண்டிருப்பது கவலை தரும் விடயமாக விஞ்ஞானிகள் பார்க்கின்றனர். இதனால், தற்போதிருக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்று அஞ்சப்படுகிறது.    நன்றி தினகரன் 







அரசியல் இழுபறிக்கு மத்தியில் நேபாள பாராளுமன்றம் கலைப்பு

நேபாள பாராளுமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலைக்கப்பட்ட நிலையில் அந்நாட்டில் அடுத்தஆண்டு பொதுத் தேர்தல் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவை கோரியதை அடுத்து குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் கே.பி.ஷர்மா ஒலிக்கும், ஆளும் நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே அண்மையில் கருத்து வேறுபாடு தீவிரமடைந்துள்ளது. வைரஸ் பரவலைச் சரியாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டையும் பிரதமர் எதிர்நோக்கியுள்ளார்.நே பாளத்தில் 250,000 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. 1,700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நேபாளத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக வழக்குகளுக்கு முகம்கொடுக்க வாய்ப்பு இருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.    நன்றி தினகரன் 







அமெரிக்காவில் 9 மில்லியன் தடுப்பு மருந்துகள் விநியோகம்

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 9.5 மில்லியன் முறை செலுத்தக்கூடிய கொரோனா தொற்றுத் தடுப்பு மருந்து விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் தெரிவித்தது.

மொடர்னா, பைசர் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரம் 4.67 மில்லியன் முறை செலுத்தக்கூடிய வைரஸ் தொற்றுத் தடுப்பு மருந்து விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியுள்ளனர்.

அதையும் சேர்த்து, அமெரிக்காவுக்கு இம்மாத இறுதிக்குள் கிட்டத்தட்ட 20 மில்லியன் முறை செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து தருவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதுவரை கிடைத்த தகவலின்படி, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் பைசர்–பயோஎன்டெக் நிறுவனங்களின் கொவிட்–19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

இம்மாத இறுதிக்குள் 20 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இருப்பினும் அதை எட்டுவதற்கான சாத்தியம் குறைவு என்றும், தடுப்பு மருந்து விநியோகிக்கப்படுவதிலும் மக்களுக்குத் தடுப்பூசி போடப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுவருகிறது என்றும் அதிகாரிகள் கூறினர். இந்நிலையில், அமெரிக்காவில் மேலும் 18 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர்.   நன்றி தினகரன் 





தஞ்சக் கோரிக்கையாளர் படகு மூழ்கி 20 பேர் பலி

துனீசிய கடற்கரைக்கு அப்பால் மத்தியதரைக் கடலில் படகு மூழ்கியதில் குறைந்தது 20 தஞ்சக்கோரிக்கையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

துனீசிய கடலோரக் காவல் படையினரால் உடல்கள் மீட்கப்பட்டு கரையோர நகரான ஸ்பெக்ஸ் நகருக்கு எடுத்து வரப்பட்டுள்ளன. மேலும் 20 பேர் தொடர்ந்தும் காணாமல்போன நிலையில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

இத்தாலியை அடைய முயற்சித்த இந்தப் படகில் துணை சஹாரா ஆபிரிக்க பிராந்தியத்தைச் சேர்ந்த 45 பேர் வரை இருந்துள்ளனர். இவர்களில் ஐவர் மத்திரம் உயிருடன் காப்பற்றப்பட்டுள்ளனர்.

அதிகம் பேரை ஏற்றி மோசமான நிலையில் இருந்த இந்தப் படகு கடும் காற்றில் சிக்கி மூழ்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய தரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவை அடைவதற்கு ஆயிரக்கணக்கான தஞ்சக்கோரிக்கையாளர்கள் முயல்கின்றனர்.    நன்றி தினகரன் 





புதிய வகை கொரோனா ஜேர்மனியிலும் அடையாளம்

பிரிட்டனில் வெகுவேகமாகப் பரவி வரும் புதிய வகைக் கொரோனா வைரஸ் தொற்று முதல்முறையாக ஜேர்மனியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இம்மாதம் 20ஆம் திகதி லண்டனிலிருந்து பிராங்பர்ட் சென்ற விமானப் பயணிக்கு விமான நிலையத்தில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

பெர்லினில் உள்ள ஆய்வுக் கூடத்தில் அவரது உடல் திரவ மாதிரி சோதிக்கப்பட்டதில் புதிய வகைக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக அதிகாரிகள் கூறினர். பாதிக்கப்பட்ட நபர் ஜேர்மனி சென்றதிலிருந்து தமது இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.    நன்றி தினகரன் 






No comments: