பற்றாதே என்கிறது ஞானம் பற்றுவேன் என்கிறது மோகம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

 

வெட்டாதே என்கிறது மரம்
 வெட்டுங்கள் என்கிறது குளம்
 தட்டாதே என்கிறது மனம்
 தட்டுவேன் என்கிறது குணம் 
 முட்டாதே என்கிறது மூப்பு
 முட்டுவேன் என்கிறது கொழுப்பு
 பற்றாதே என்கிறது ஞானம்
 பற்றுவேன் என்கிறது  மோகம்  !

 கெடுக்காதே என்கிறது தருமம்
  கெடுத்திடு என்கிறது அதர்மம்
  நடிக்காதே என்கிறது நட்பு
  நடித்திடு என்கிறது துரோகம்
  குடிக்காதே என்கிறது சிறப்பு
  குடித்திடு என்பது வெறுப்பு
  படிக்காதே என்பது இழப்பு
  படித்திடு என்பது மதிப்பு  !

  சொல்லாதே என்கிறது மனது
  சொல்லுவேன் என்கிறது நா
  கொல்லாதே என்கிறது கருணை
  கொல்லுவேன் என்கிறது கயமை
  நில்லாதே என்கிறது மதி
  நின்றிடு என்கிறது விதி
  தள்ளாதே என்கிறது பாசம்
  தள்ளிடு என்கிறது மோசம்  !

  பார்க்காதே என்கிறது உள்ளம்
  பார்த்திடு என்கிறது கள்ளம்
  கேட்காதே என்கிறது புத்தி
  கேட்டிடு என்கிறது  கெடுதி
  உண்ணாதே என்கிறது உணர்வு
  உண்டிடு என்கிறது ஆசை
  எண்ணாதே என்கிறது சித்தம்
   எண்ணிடு என்கிறது பித்தம்  !

   


No comments: