ஆதரவாளர்களின் கூட்டத்தில் முகக்கவசத்தை எறிந்த டிரம்ப்
பிரச்சினைக்குரிய பகுதிக்கு கப்பலை அனுப்பும் துருக்கி
பங்களாதேஷில் கற்பழிப்புக்கு மரண தண்டனை அறிமுகம்
நியூஸிலாந்து பாராளுமன்றுக்கு தெரிவான முதல் இலங்கையர் வனுஷி வோல்டர்ஸ்
ஆதரவாளர்களின் கூட்டத்தில் முகக்கவசத்தை எறிந்த டிரம்ப்
கொரோனாவிலிருந்து மீண்ட பின்னர் முதன்முறையாக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களை முத்தமிடத் தயார் எனக் கூறி முகக்கவசத்தை தூக்கி எறிந்துள்ளார்.
வைரஸ் தொற்று உறுதியான நிலையில் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரம்ப், நான்கு நாள் சிகிச்சைக்குப் பின்னர் வெள்ளை மாளிகை திரும்பியிருந்தார். அவர் கடந்த திங்கட்கிழமை மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தைத் ஆரம்பித்துள்ளார்.
புளோரிடாவின் சான்போர்டில் நடந்த பேரணியில் டிரம்ப் பங்கேற்றார். சமூக இடைவெளி இல்லாமல் நடைபெற்ற இந்தப் பேரணியில் பெரும்பான்மையானோர் முகக்கவசமின்றி பங்கேற்றனர். இதில் பேசிய டிரம்ப்், “நான் இப்போது கொரோனாவைக் கடந்துவிட்டேன். நான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவன் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நான் மிகவும் சக்திவாய்ந்தவனாக உணர்கிறேன்” எனத் தெரிவித்தார்.மேலும் ”உங்கள் அனைவரையும் நான் முத்தமிடுவேன். ஆண்களையும், அழகான பெண்களையும் முத்தமிடுவேன்” எனக்கூறி தனது முகக்கவசத்தை ஆதரவாளர்களை நோக்கி வீசி எறிந்தார்.
கொரோனா தொற்று விவகாரத்தில் டிரம்ப் தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை 8 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,20000 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். நன்றி தினகரன்
பிரச்சினைக்குரிய பகுதிக்கு கப்பலை அனுப்பும் துருக்கி
மத்தியதரைக் கடலில் கிரேக்கத்துடன் முறுகளில் உள்ள கடல் பகுதிக்கு துருக்கி மீண்டும் தனது ஆய்வுக் கப்பலை அனுப்பவுள்ளது.
கிரேக்கம், துருக்கி மற்றும் சைப்ரஸ் நாடுகள் உரிமை கோரும் பகுதிக்கு துருக்கி இந்தக் கப்பலை அனுப்பியது கடந்த ஓகஸ்டில் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் இராஜதந்திர முயற்சிக்காக துருக்கி கடந்த செப்டெம்பரில் ஓருக் ரெயிஸ் என்ற அந்தக் கப்பலை வாபஸ் பெற்றது.
இந்நிலையில் கிழக்கு மத்தியதரைக் கடலில் 10 நாட்கள் நில அதிர்வு ஆராச்சியில் ஈடுபடும் என்று துருக்கி குறிப்பிட்டுள்ளது. இந்தக் கப்பலுடன் மேலும் இரண்டு கப்பல்கள் இணைந்துள்ளன.
துருக்கி மற்றும் கிரேக்கம் நேட்டோ அங்கத்துவ நாடாக இருந்தபோதும் கடல்சார் ஊரிமையை கோரி இந்த இரு நாடுகளும் நீண்ட காலமாக முறுகலில் உள்ளன. நன்றி தினகரன்
பங்களாதேஷில் கற்பழிப்புக்கு மரண தண்டனை அறிமுகம்
பாலியல் வன்முறைக்கு எதிராக பங்களாதேஷில் மரண தண்டனை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதனை சட்டமாக அங்கீகரிக்கும் உத்தரவை ஜனாதிபதி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடுவார் என்று பங்களாதேஷ் நீதி அமைச்சர் அனிசுல் ஹக் தெரிவித்துள்ளார்.
பெண் ஒருவருக்கு எதிராக கூட்டு பாலியல் வன்முறை வீடியோ காட்சி ஒன்று வெளியானது பங்களாதேஷில் கடும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டில் சுமார் 5,400 கற்பழிப்புச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக செயற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் பெண்கள் முறையிட முன்வராத நிலையில் மிகக் குறைவான சம்பவங்களே சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதாக செயற்பாட்டளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் சமூகதளத்தில் பரவி இருக்கும் வீடியோவில் உள்ள பெண் எட்டு ஆண்களால் பல தடவைகள் கற்பழிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் அந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் பங்களாதேஷ் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நன்றி தினகரன்
நியூஸிலாந்து பாராளுமன்றுக்கு தெரிவான முதல் இலங்கையர் வனுஷி வோல்டர்ஸ்
இலங்கையில் பிறந்த சேர்ந்த வனுஷி வோல்டர்ஸ் நியூஸிலாந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
3 ஆண் பிள்ளைகளின் தாயான 39 வயதான வனுஷி வோல்டர்ஸ், வடமேற்கு ஒக்லாந்தில் உள்ள அப்பர் ஹாபர் (Upper Harbour) தொகுதியில், அந்நாட்டு தொழிற்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.
அந்த வகையில் நியூஸிலாந்து பாராளுமன்றத்தில் உறுப்பினராகும் இலங்கையில் பிறந்த முதல் நபராக வனுஷி தெரிவாகியுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட,
ஜேக் பெசன்ட் எனும் தொழில்நுட்ப நிறுவனமொன்றின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரியும், ஹமில்டன் கழகத்தின் கிரிக்கெட் வீரர், 12,727 வாக்குகளை பெற்ற நிலையில், வனுஷி வோல்டர்ஸ் 14,142 வாக்குகளை பெற்று, குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளார்.
நியூசிலாந்து பொதுத் தேர்தல் நேற்று (17) இடம்பெற்றது.
தொழில் ரீதியாக மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும், அந்நாட்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முகாமையாளராக செயற்பட்டு வரும் வனுஷியின் குடும்பம், மேற்கு ஒக்லாந்தில் கடந்த 3 தலைமுறையாக வாழ்ந்து வருகின்றது.
ஆயினும் வனுஷி தனது 5 வயதில் நியூஸிலாந்து சென்று அங்கேயே வாழ்ந்து வந்துள்ளார்.
வனுஷியின் குடும்பம், யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாகக் கொண்டதுடன், இவரது தந்தை வழிவந்த பாட்டி லூசியா சரவணமுத்து இலங்கையின் அரசு பேரவையின் உறுப்பினராக கொழும்பு வடக்கு தொகுதியிலிருந்து 1931 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவரது கணவரான சேர் ரட்ணசோதி சரவணமுத்து, கொழும்பு மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது மேயர் என்பதோடு, சரவணமுத்து விளையாட்டரங்கு (பி சரா ஓவல்) அவரது பெயரிலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தினகரன்
No comments:
Post a Comment