உலகச் செய்திகள்


இந்தியாவுடனான மோதலை பரஸ்பர ரீதியில் கையாள வேண்டும் - இம்ரானிடம் ஷிஜின்பிங்

இலங்கை தற்கொலை தாக்குதலில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக வெளிநாட்டில் நிதி திரட்டும் மாணவி

போலாந்தில் வாழைப்பழ ஓவியத்துக்கு தடை

சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்து பயங்கரவாதிகள் தற்கொலை

 136 பயணிகளுடன் ஆற்றில் விழுந்த விமானம்



இந்தியாவுடனான மோதலை பரஸ்பர ரீதியில் கையாள வேண்டும் - இம்ரானிடம் ஷிஜின்பிங்

29/04/2019 சீனாவின் இரண்டாவது பொருளாதார வழித்தடம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றுள்ள பாகிஸ்தான் இம்ரான் கான் சீன ஜனாதிபதி ஷிஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தயுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, தெற்காசிய நாடுகளுக்கிடையே நிலவிவரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இதன்போது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு குறித்தும், இருநாடுகளும் பரஸ்பர நட்புணர்வை பேணிக் காக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.  நன்றி வீரகேசரி 









இலங்கை தற்கொலை தாக்குதலில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக வெளிநாட்டில் நிதி திரட்டும் மாணவி

30/04/2019 இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கனடாவில் வாழும் மாணவி இணையத்தில் நிதி திரட்டி வருகிறார். 
இலங்கையில் ஏப்ரல் 21-ம் திகதி உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.
இதில் 250 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 300 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் சிறுமி ஒருவர் நிதி திரட்டி வருவது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையைச் சேர்ந்த பிரசாந்தி ரஜனிகாந்த் என்பவர், 2008-ல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து சென்றவராவார். 17 வயதான இவர் ஆல்பெர்ட்டாவில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். கோஃபண்ட்மீ (gofundme) என்னும் இணையதளம் மூலம் நிதி திரட்டி வருகிறார்.
இதுகுறித்து, அவர்  கருத்து தெரிவிக்கையில் ’’இலங்கை என்னுடைய தாய்நாடு என்பதால் மட்டும் நான் நிதி உதவி செய்ய நினைக்கவில்லை. இந்த வெடிகுண்டு தாக்குதல் உலகளாவிய அளவில் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை. இத்தனை உயிர்களை இழந்த பின்னும் இந்தப் பிரச்சினை தீரவில்லை.
30 ஆண்டுகளாக நடைபெற்ற மக்கள் போராட்டமும் படுகொலையின் சோகமும் இன்னும் இருக்கிறது. ஆனாலும் யாரும் உதவவில்லை. இந்நிலையில் இப்போது நடந்த தாக்குதலை அடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன்மூலம் இலங்கையைக் காப்பாற்றுங்கள்.
இங்கு திரட்டப்படும் தொகை அனைத்தும் ஆசிரி மருத்துவமனை மற்றும் கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் சிகிச்சைக்காகவும் அவர்களின் தேவைக்காகவும் பயன்படுத்தப்படும்’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மேலும், இவர் 1000 டொலர்கள் என்ற இலக்குடன் நிதி திரட்டலை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.  நன்றி வீரகேசரி 











போலாந்தில் வாழைப்பழ ஓவியத்துக்கு தடை

01/05/2019 போலாந்து தேசிய அருங்காட்சியகத்தில் புதிய இயக்குனரான பதவியேற்றுள்ள ஜெர்சி மிசியோலெக் அங்குள்ள வாழைப்பழ ஓவியத்தை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போலாந்தின் தலைநகர் வார்சாவில் தேசிய அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 1973ஆம் ஆண்டு நடாலியா எல்.எல்.என்கிற பெண் ஓவியரால் வரையப்பட்ட ஓவியம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஓவியம், பெண் ஒருவர் 12 விதமாக வாழைப்பழத்தை  உட்கொள்வது போன்று அமைந்திருக்கும். இந்த நிலையில், அண்மையில் இந்த அருங்காட்சியகத்தின் புதிய இயக்குனராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஜெர்சி மிசியோலெக் என்பவர், அருங்காட்சியகத்தை மறுசீரமைக்க நடவடிக்கை எடுத்தார்.
அப்போது, வாழைப்பழ ஓவியம், இளைஞர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் இருப்பதாக கூறி அதனை அருங்காட்சியகத்தில் இருந்து அகற்றினார்.இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டை சேர்ந்த பிரபல ஓவியர்கள், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அருங்காட்சியக இயக்குனரின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக வாழைப் பழம் உட்கொள்வது போன்று ‘செல்பி’ எடுத்து ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் அருங்காட்சியகத்தின் முன்பாக திரண்டு வாழைப்பழம் உட்கொள்ளும் போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 









சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்து பயங்கரவாதிகள் தற்கொலை

01/05/2019 பங்காளதேச தலைநகர் டாக்காவில் பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த சண்டையில், இரு பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
டாக்காவிற்கு அருகே முகமத்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக அந்நாட்டு உளவு பிரிவின் தகவலுக்கு அமைய பயங்கரவாத தடுப்பு பிரிவு படை அங்கு சோதனை மேற்கொண்டனர். 
அப்போது ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதை அறிந்து, உடனடியாக அப்பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றி, அவ்வீட்டை சுற்றி வளைத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியில், பயங்கரவாதிகள் தாங்கள் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். 
இதில் அவர்கள் உடல் சிதறி பலியாகினர். பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவருடைய மனைவியை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.
 இதுகுறித்து, சிறப்பு படைப்பிரிவு அதிகாரி தெரிவித்ததாவது, 
அவர்கள் எந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர். 
இதனால் சுற்றியிருந்த பகுதிகளும் சேதம் அடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம், என்றார். 
ஜூலை, 2016-ல் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்ற அதிரடி சோதனையில் ஐ.எஸ்., பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் பலர் கைது செய்யப்பட்டனர். 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 











 136 பயணிகளுடன் ஆற்றில் விழுந்த விமானம்


04/05/2019 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம் ஆற்றில்  நிலை தடுமாறி விழுந்துள்ளது.
கியூபாவில் இருந்து 136 பயணிகள், 7 ஊழியர்களுடன் புறப்பட்டது போயிங் 737 விமானம். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில் என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கும் போது ஓடுபாதையின் இறுதியில் இருந்த செயிண்ட் ஜான் ஆற்றில் நிலை தடுமாறி விழுந்துள்ளது.
அமெரிக்க நேரப்படி நேற்றிரவு 9:40 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து ஜாக்சன்வில் மேயர் தனது ட்விட்டர் பக்கத்தில், விமானம் தண்ணீரில் மூழ்கவில்லை. பயணிகள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள்.இந்த விபத்தில் 21 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வைத்தியவாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 





No comments: