கொரிய தீபகற்பத்தில் முழுமையான அணுவாயுத ஒழிப்பு நிகழ வேண்டும் - புட்டின்
சமூக வலைத்தளங்கள் மூலமான தீவிரவாதத்தை முறியடிக்கும் திட்டம்
குண்டுவெடிப்பில் பலியானோருக்கு சென்னையில் அஞ்சலி
இலங்கை குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்துவிட்டேன் - டென்மார்க் தொழிலதிபர்
விலகுவதாக முடிவெடுத்தார் ட்ரம்ப்!
கொரிய தீபகற்பத்தில் முழுமையான அணுவாயுத ஒழிப்பு நிகழ வேண்டும் - புட்டின்
26/04/2019 கொரிய தீபகற்பத்தில் முழுமையான அணு ஆயுத ஒழிப்பு நிகழ வேண்டும் என தான் விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின், கிம்யொங் உன்னிடம் எடுத்துரைத்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி கிம் யொங் உன்னும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் ரஷ்ய துறைமுக நகரான விளாடிவொஸ்டொக்கிற்கு அருகிலுள்ள ரஸ்கி தீவில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதன்போதே புட்டின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனது அணு ஆயுதங்களைக் கைவிட தயாராக இருப்பதாக கிம் ஜொங்-உன் கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவித்த பிறகு, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை 4 முறையும், தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னை 3 முறையும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை 2 முறையும் அவர் சந்தித்துப் பேசினார்.

இந் நிலையிலேயே ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் கிம்யொங் உன்னுக்குமிடையில் முதல் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மேற்படி சந்திப்பின்போது வடகொரிய அணுசக்தி நிகழ்ச்சித் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பில் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக வடகொரிய தலைவரும் ரஷ்ய ஜனாதிபதியும் தெரிவித்தனர்.
அவர்கள் நேற்று வியாழக்கிழமை மேற்கொண்ட சந்திப்பின்போது இரு நாட்டு உயர் மட்ட அதிகாரிகளுக்கும் மத்தியில் அமர்ந்திருந்து பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இதன்போது தற்போதுள்ள நிலைமையில் முன்னேற்றத்தை எட்டுவது குறித்து கிம் யொங் உன்னும் தானும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துடன் தாம் அமைதியான தீர்வுக்கான வழிமுறைகள் சம்பந்தமாக கலந்துரையாடியதாக கிம் யொங் உன் கூறினார்.

அணு ஆயுத திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன்னுக்கு சர்வதேச பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவைப்படுவதாகவும், சர்வதேச கட்டமைப்புக்குள் இந்த உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது புட்டின் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
சமூக வலைத்தளங்கள் மூலமான தீவிரவாதத்தை முறியடிக்கும் திட்டம்
25/04/2019 நியூஸிலாந்தின் கிறைஸட்சேர்ச் பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதல்களின் எழுச்சியாக தீவிரவாதத்தை முன்னெடுப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளுக்கு நியூஸிலாந்தும் அமெரிக்காவும் தலைமை தாங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறைஸ்ட்சேர்ச் பிராந்தியத்தில் இரு பள்ளிவாசல்களில் கடந்த மார்ச் மாதம் துப்பாக்கிதாரியொருவரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு சமூக வலைத்தளங்கள் மூலம் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை தடுப்பது தொடர்பில் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கு தானும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் தலைமை தாங்கவுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா அர்டேர்ன் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்களை நீக்க நாடுகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்வதை நோக்காகக் கொண்டே அந்தக் கூட்டம் நடத்தப்படுவதாக பிரதமர் ஜசிந்தா நியூஸிலாந்து வானொலிச் சேவைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
தான் இது தொடர்பில் ஏற்கனவே தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த ஒரு தொகை லைமை நிறைவேற்றதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 15 ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் சமூக வலைத்தளங்களில் முன்னொருபோதும் இல்லாதவாறு தீவிரவாத செயற்பாடுகளையும் வெறுப்புணர்வையும் தூண்டும் கருவிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளதை காணமுடிவதாக அவர் மேலும் கூறினார்.
"சமூக வலைத்தளங்கள் மக்களை பல்வேறு ஆக்கபூர்வமான வழிமுறைகளில் ஒன்றிணைக்க முடியும். ஆனால் அவற்றின் மூலம் கிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்களின் போது இடம்பெற்றதையொத்த வன்முறை காட்சிகளை வெளியிட்டு தீவிரவாத வன்முறைகளை தூண்டுவதற்கும் சாத்தியமுள்ளதால் அது தொடர்பில் மாற்றம் தேவையாகவுள்ளது" என அவர் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி
குண்டுவெடிப்பில் பலியானோருக்கு சென்னையில் அஞ்சலி
24/04/2019 இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு, சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் சில பகுதிகளில் கடந்த 21 ஆம் திகதி, தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களில், 359 பேர் உயிரிழந்த நிலையில்; 500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அதில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
இதுகுறித்து அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கையில், “இலங்கையில் நடந்த சம்பவம் போன்று இனி எங்கும் நடக்கக்கூடாது. அதற்காக நாம் பிரார்த்திக்க வேண்டும். குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.

இதில் கலந்துகொண்ட கலிபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த மோனா என்ற பெண் கூறுகையில், “என்னுடைய 11வது வயதில் அமெரிக்காவில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவத்தை பார்த்துள்ளேன். அந்த சம்பவம் இன்றும் என் மனதில் இருக்கிறது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் கொடூரமானது. பலியானவர்களுக்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். நன்றி வீரகேசரி
இலங்கை குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்துவிட்டேன் - டென்மார்க் தொழிலதிபர்
23/04/2019 இலங்கையில் உயிர்த்த ஞாயிறு விடுமுறையை கழிக்க தன் குழந்தைகளுடன் கொழும்பு வந்த டென்மார்க் நாட்டின் தொழிலதிபர் ஒருவர் குண்டுவெடிப்பில் தன் 3 குழந்தைகளை இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டென்மார்க் நாட்டின் தொழிலதிபர் ஆன்ட்ரசன் ஹாவல்க் பாவல்சன் (வயது 46). இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர் போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலின்படி டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரர் ஆவார். பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ள அவரின் சொத்து மதிப்பு சுமார் 50 ஆயிரம் கோடிகளாகும்
இவர் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்து இருந்த போது இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் ஆன்ட்ரசனின் நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தகவலை ஆண்ட்ரசனுக்கு சொந்தமான பாவன்சன்’ஸ் பேஷன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார். குடும்பத்தினர் தனிப்பட்ட சுதந்திரம் கருதி வேறு எந்தத் தகவலும் தெரிவிக்க முடியாது. அவர்களின் உணர்வுகளுக்கு ஊடகங்கள் மரியாதை கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். குழந்தைகளின் பெயர் விவரம் அளிக்கப்படவில்லை.

‘இலங்கை ஓர் அழகான நாடு. இந்த ஈஸ்டர் விடுமுறையை அங்கு கழிக்கலாம்’ என்று தன் குழந்தைகளிடம் கூறி கொழும்புக்கு சுற்றுலா அழைத்து வந்துள்ளார். வந்த இடத்தில் குழந்தைகளை பறி கொடுத்துவிட்டு கண்ணீர் மல்க நிற்கிறார்.
குண்டு வெடிப்புக்கு 3 குழந்தைகளை பறி கொடுத்த ஆன்ட்ரசனுக்கு ஸ்காட்லாந்து நாட்டில் 2 இலட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1 சதவிகிதம் நிலம் அவருக்கு சொந்தமாக உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் அதிக அளவில் நிலம் சொந்தமாக வைத்திருப்பவர்களில் இவருக்கு இரண்டாவது இடம். இது தவிர 12 பெரிய தோட்டங்களும் உள்ளன. பெண்கள் உடையான வேரோ மோடா, ஜேக் போன்றவை ஆன்டர்சனுக்குச் சொந்தமான ‘பெஸ்ட் செல்லர்’ நிறுவனத்தின் தயாரிப்புகளில் முக்கியமானவை. நன்றி வீரகேசரி
விலகுவதாக முடிவெடுத்தார் ட்ரம்ப்!
28/04/2019 சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இண்டியானாபொலிஸ் நகரில் இடம்பெற்ற தேசிய துப்பாக்கி சங்கத்தின் ஆண்டு விழா கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் நாம் போட்ட கையெழுத்தை திரும்பப்பெறுகிறோம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை அமெரிக்காவிடம் இருந்து ஐ.நா. சபை பெற்றுக்கொள்ளும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது கடந்த 2013 ஆம் ஆண்டு சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்து போட்டது. அதன்படி இது 24 ஆம் திகதி அமுலுக்கு வந்தது.
இந்த ஒப்பந்தமானது, சர்வதேச அளவில் மரபு ரீதியிலான ஆயுத வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும். குறிப்பாக சிறிய ரக ஆயுதங்கள் தொடங்கி போர் விமானம் வரை இதன் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment