இது போலத் தானே அன்றும் தேவாலயத்துக் குழந்தைகள் இருந்திருக்கும்? கானா பிரபா

.
கடந்த சனிக்கிழமை ஏழு மணி தாண்டிய இரவில் யாழ் நகருக்கு ஆட்டோவில் பயணிக்கிறேன். பண்ணைப் பகுதியில் தரித்து நிற்கும் தனியார் பேரூந்துச் சேவை வழியாக கொழும்பு பயணமாகத் திட்டம். மணி என்னமோ எட்டு மணியைத் தொட்டாலும் யாழ்ப்பாண நகரப் பகுதி நல்லூர்த் திருவிழாக்கூட்டத்துக்கு நிகராகக் களை கட்டுகிறது. தொண்ணூறு வீதமான வியாபார நிறுவனங்கள், சிறு பெட்டிக் கடைகள் ஈறாக பர பர வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
“அட இந்த நேரத்திலும்
இப்பிடி ஒரு சனக் கூட்டம்”
என்று என் வியப்பை வாய் வழியே கூறி விட்டேன்.
“ஓமண்ணை கடையள் எல்லாம் பூட்ட
இரவு பத்து மணி ஆகி விடும்”
எங்கள் இணுவிலூர் ஆட்டோக்காரரின் குரலில் புளுகம் தொனித்தது.
ஒரு காலம் இருந்தது.
எப்போது விமானம் குண்டு போடுமோ?
எப்போது இராணுவ முகாமிலிருந்து ஷெல்லடி வருமோ?
எப்போது இந்த இடத்தை விட்டு இடம் பெயரக் கூடுமோ?
என்றெல்லாம் நிச்சயமற்றதொரு வாழ்வியலைக் கொடையாகக் கொண்டது எங்கள் சனம்.
கடைக்கு முன்னால் வெடித்த குண்டு காவெடுத்த இரத்த வாடை காயுமுன்பே கழுவித் துடைத்து விட்டுக் கடையைத் திறந்து யாவாரத்தைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இன்ன நேரம் தான் வேலை நேரம் என்றில்லை காலை ஒன்பது மணிக்குத் திறக்கும் கடை காலை ஒன்பதரையோடே மூடிய காலம் தான் அதிகம்.
என்னுடைய ஒவ்வொரு தாயகப் பயணத்திலும் விருந்துண்டு கொண்டாடி மகிழ்வதை விட, நான் ஓடியாடித் திரிந்த நிலங்கள் எல்லாம் அளந்தளந்து உலாத்தி விட்டு வருவது வழக்கம். பெரும்பாலும் தனியாகத் தான். அதுவும் பெரும்பாலும் சைக்கிளில் தான். நான் எப்படி இந்த நிலத்தில் இருந்து அகன்றேனோ அப்படியானதொரு பழைய நிலையில் இருந்து நிகழ்த்தும் இந்த யாத்திரை தான் எனக்கு ஆத்ம திருப்தி கொள்ள வைக்கும். அதையே தான் இந்தப் பயணத்திலும் செய்தேன். கண்டதைக் கேட்டதை நண்பர்களுக்கும் பகிர்ந்து கொண்டேன்.
இம்முறை வழக்கத்துக்கு மாறாக வெளிநாட்டவர் வருகை, அதுவும் யாழ்ப்பாணமெங்கும் ஓடித் திரிந்ததைக் காண முடிந்தது. ஏதோவொரு புதிய உலகை அதிசயமாகப் பார்க்கும் வெள்ளைக்காரக் குழந்தைகளின் வியப்பில் நானும் பங்கு போட்டேன்.



இப்படியொரு அசாதாரண வாழ்க்கையையே சாதாரணமாகக் கொண்டு வாழ்ந்த சமூகம் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்குக் கூடியும் குறையாமலும் ஒரு பெரிய அனர்த்தத்துக்கு முகம் கொடுத்து விட்டுச் சொல்ல முடியா உயிர் இழப்புகளோடும், பொருளாதார நலிவோடும் மீண்டும் தன்னைக் கட்டியெழுப்பும். அம்மாதிரியானதொரு அதிசயத்தைக் கண்ட மனத் திருப்தியில் தான் என் தாய் நிலத்தில் இருந்து விடை கொடுத்து விட்டுக் கொழும்பு பயணமானேன். அந்த இரவுப் பயணம் தான் கடந்த பத்தாண்டுகள் தம் இயல்பை மீளக் கட்டியெழுப்பிய எம் சனத்தின் மணல் வீடுகள் போலக் குலைந்து போகும் கடைசி இரவு என்று நம்மில் யார்தான் கணக்குப் போட்டிருக்க முடியும்?
இயேசு பிரானின் உயிர்த்த ஞாயிறு காலை நாலரை மணிக்கெல்லாம் கொழும்பு வந்த பஸ்ஸால் இறங்கித் தங்கியிருந்த ஹோட்டலில் கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டுக் கும்பத்தோடு கொச்சிக்கடை புனித அந்தோனியார் கோயிலுக்குப் போய் அன்றைய காலைப் பிரார்த்தனையில் பங்கெடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். பயணக் களைப்பில் கொஞ்சம் தூங்கி எழுந்து மூவரும் அந்த ஆலயத்துக்குக் கிளம்பும் நேரம் வந்த தொலைபேசி அழைப்பு அந்தத் தேவாலயத்தில் சற்று முன் நிகழ்ந்த அனர்த்தத்தைச் சொல்லி விட்டுப் போனது.
சட்டென்று எல்லாமே மாயமானதாகிப் போனது போல.
ஹோட்டலில் சிரித்துப் பேசிய முகங்கள் எல்லாம் இருட்டைப் பூசி நிற்க, வெளி விறாந்தை எங்கும் பரபரப்போடு போலிசார்.
மூன்று நாட்களாக வீட்டுக்குள் அடைபட்டிருப்பது பல்லாண்டுக்குப் பின் நான் சந்திக்கும் அனுபவம். அண்ணன் கூடச் சொன்னார் “காலில் சில்லுப் பூட்டின மாதிரி ஒரு இடத்தில் நிற்கமாட்டியே” என்று. தேவையில்லாமல் வீதியில் இறங்கவே கால் கூசியது.
அவ்வப்போது அத்தியாவசியங்களுக்காகக் கடைத் தெருவை அண்டினாலும் முக்கால்வாசிக் கடைகள் மூடப்பட்டும், எஞ்சியதில் எப்படா பொருளை வாங்கலாம் வாங்கி விட்டு ஓடலாம் என்ற மனோநிலையில் மக்கள்.
பத்து பதினைந்து நிமிடத்துக்குள் நூறு நூற்றைம்பது வாகனங்கள் கடக்கும் வீதியில் பத்தோ பதினொன்றோ என்று ஊர்ந்து பயணிக்கும் சாலையாக ஒரு மரண பீதியைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. மீண்டும் அந்த இயல்பு எப்போது வரும்? சன நெரிசலோடு இன்னும் ஆட்களை அள்ளிப் போடக் கத்திக் கொண்டு போகும் பெற்றா பஸ்ஸும், இண்டு இடுக்கில் சதிராட்டம் போட்டு ஓடிப் பாயும் ஆட்டோக்கள் என்று அந்த யதார்த்த உலகம் மூன்று நாள் கடந்தும் திரும்பவில்லை.
எந்தப் புற்றில் எந்தப் பாம்போ என்று அச்ச்த்தோடு நகரும் இயல்பு (!) வாழ்க்கையாகி விட்டது இப்போது.
இதற்குள் அவ்வப்போது எழும் வதந்திகள் வேறு. தண்ணீரில் விஷமாம், அங்கே இத்தனை குண்டு எடுத்ததாம் என்று கை கால் முளைத்துப் பரவத் தொடங்கி விட்டன.
ஆறு மணிக்கு ஊரடங்கு என்றால் நாலு மணிக்கே கடையைப் பூட்டுவதும், எட்டு மணிக்கு ஊரடங்கு என்றால் ஆறு மணிக்கே அடங்கி ஒடுங்குவதுமாக மாறி விட்டது வாழ்க்கை. இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பதை விட முன்னூறைக் கடந்த உயிரிழப்புகள், ஐநூறைக் கடந்த காயப்பட்டோர் என்று இந்த மாங்காய்த் தீவைக் கத்தியால் கீறிய வடு ஆற எத்தனை ஆண்டுகள் கடக்குமோ என்ற தீராத் துயர் தான் எல்லோர் மனதிலும்.
அது நாள் வரை கடும் வெய்யில், வீதி விபத்துகள் என்று உச்சரித்தவர் வாயெல்லாம் இறந்து போனவர்களுக்காக உச்சுக் கொண்டி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நேற்றிரவு அடித்த பெருமழையும், இடி மின்னல் அகோரமும் கூட அதிகம் சீண்டவில்லை.
போன கிழமை யாழ்ப்பாணம் பாஷையூர் புனித அந்தோனியார் கோயிலுக்கு ஒரு விடிகாலை வேளையில் போயிருந்தேன். அங்கு தவக்கால ஆராதனை முடித்து ஆலயத்தின் பெரும் படிகளில் துள்ளிக் குதித்து ஓடி விளையாடிய அந்தக் குழந்தைகளின் அச்சான முகங்களைத் தான் கொச்சிக்கடையிலும், நீர்கொழும்பிலும், மட்டக்களப்பிலுமாகக் காவு கொண்ட குழந்தைகளில் கண்டேன். கடந்த இரவுகள் மிகுந்த மன உழைச்சலோடே கழிந்தன.
ஒரு அழகான வாழைத்தோப்பு புயல் கண்டது போலக் கிழித்துப் போடப்பட்டிருக்கிறது. குருத்துகள் அழிந்தது தான் இன்னும் மரண வேதனை.
மக்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டுக் கீழ்ப்படிந்து நிற்கிறார்கள். வெறுங்கையால் மலத்தை அள்ளுவது போல வெடிகுண்டுகளைத் தேடித் தேடிப் பொறுக்கிச் செயலிழக்க வைக்கிறார்கள் பாதுகாப்புப் படையினர்.
ஆனால்.....
“பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கை எனக்குக் கிடைக்கவில்லை”
“மற்ற நாடுகளிலும் இது போல் நடந்தது தானே எங்களால் இயன்றவரை கட்டுப்படுத்தப் பார்க்கிறோம்”
“இந்தத் தாக்குதலுக்கு அதிபரே பொறுப்பு இல்லையில்லை பிரதமரே பொறுப்பு”
என்று ஆளையாள் குற்றம் சாட்டிக் கொண்டு பொறுப்பைத் தலையில் சுமக்க விரும்பாத, கையாலாகாத தலைவர்களைத் தேர்ந்தெடுத்த துர்பாக்கிய சமூகம் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள மீண்டும் ஓடிக் கொண்ண்டிருக்கிறது. இவர்களின் அரசியல் சூதாட்டங்களில் இன்னும் என்னென்னவெல்லாம் நடக்குமோ என்ற அச்சம் ஒரு பக்கம்.
வழக்கத்துக்கு மாறாக ஆறு மணி நேரம் முன்பதாகவே
விமான நிலையம் நோக்கிப் பயணப்பட்டு, சோதனைத் தடைகளைத் தாண்டி, பாதி வழியிலேயே கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி விட்டு, விமான நிலையத்துக்குள் வரும் முகங்களுக்குள் சந்தோசம் இம்மியளவும் இல்லை.
இது எதுவும் அறியாது குதித்து விளையாடிக் கொண்டிருக்கிறார் இலக்கியா.
இது போலத் தானே அன்றும் தேவாலயத்துக் குழந்தைகள் இருந்திருக்கும்?
கானா பிரபா
24.04.2019

No comments: