இலங்கை செய்திகள்

.
தனமல்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி 

மக்கள் நலனை கருத்தல் கொள்ளாத கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக பெருந்தோட்ட மக்கள் பாத யாத்திரை

தேசிய அரசாங்கத்தை ஆதரிக்கும் செயற்பாட்டில் இருந்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் விலகல் 


13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு : கிழக்கு ஆளுநர்


மக்கள் நலனை கருத்தல் கொள்ளாத கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக பெருந்தோட்ட மக்கள் பாத யாத்திரை

மக்கள் நலனை கருத்தல் கொள்ளாத கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக பெருந்தோட்ட மக்கள் பாத யாத்திரையொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். புதிதாக கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்கிழமை இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கயை குறித்த பாதயாத்திரை நுவரெலியா முதல் ஹட்டன் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வு விடயத்தில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை கண்டித்தும், கடந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வருகைக்கேற்ற திறன் விருத்தி கொடுப்பனவு 140 ரூபாயை புதிய கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்குமாறு வலியுறுத்தியுமே, இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, கூட்டு ஒப்பந்தத்தின் மூலம், பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றது. 

அத்துடன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமது தரப்பு போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது. 


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
     
                                                                                                     

தனமல்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி 

இன்று மதியம் 12.20 மணியளவில் தனமல்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். இதன்போது 42 வயதுடைய சுதுஹகுரு சுமித் எனும் வசந்த என்பவர் உயிரிழந்துள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத நபர்களினால், இருவர் மீதுதுப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. 

அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவன் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் சம்பவத்தில் உயிரிழந்த நபர் 4 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

தேசிய அரசாங்கத்தை ஆதரிக்கும் செயற்பாட்டில் இருந்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் விலகல் 

கட்சியில் இருந்து கிடைத்த அழுத்தம் காரணமாக, தேசிய அரசாங்கத்தை ஆதரிக்கும் செயற்பாட்டில் இருந்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பின்வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். ஆனால் அவர்கள் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியால் உருவாக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தால், அவர்களுக்கு எதிராக ஒழுக்கயீன நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டதை அடுத்தே அவர்களில் பெரும்பாலோர், இந்த நடவடிக்கையில் இருந்து பின்வாங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு ஆர்வமாக உள்ளனர். ஆனால் நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாத அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க, அவர்கள் தயாரில்லை.

தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கப்படவுள்ளது. இருப்பினும் ஏற்கனவே இந்த தீர்மானம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், சபாநாயகருக்கு தீர்மானத்தை சமர்ப்பித்த பின்னர், நாடாளுமன்றில் சமர்ப்பிக்க ஐந்து நாட்கள் காலஅவகாசம் தேவை என, அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல கூறியுள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸுடன் கைகோர்த்து, ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்க ஐக்கிய தேசிய முன்னணி முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார். 

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு : கிழக்கு ஆளுநர்

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -
கிழக்கு மாகாணத்தை கல்வியிலும் சுகாதாரத் துறையிலும் அவற்றை முன்னேற்றுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு எனக்கு பணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நான் பல தீர்மானங்களை எடுத்துள்ளேன். அந்தவகையில், ஒவ்வொரு பாடசாலை அதிபர்களுக்கும் அதிகாரங்களை வழங்கி, பிரதேச கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரங்களை வழங்கி ஒவ்வொரு பிரதேசத்தினுடைய கல்வித் திட்டங்களை அவர்ளுக்கு நாம் ஒப்படைக்கவுள்ளோம்.
இவ்வாறு கிழக்கு மாகாணத்தினுடைய ஒவ்வொரு பிரச்சினையையும் அடையாளங்கண்டு அந்தப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதிலும் முழுமையா கவனத்தை நாம் செலுத்துகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

No comments: