புதுமாற்றம் ! ( எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )



        புத்தாண்டில் புதுமாற்றம் வருதல்வேண்டும்
            புத்தூக்கம் மனமெழுந்து நிலைக்கவேண்டும்
        இத்தரையில் எல்லோரும் இன்பமாக
              இருப்பதற்கு நல்லவழி பிறக்கவேண்டும்
        தப்பான வழிதன்னை தடுக்கவேண்டும்
                 தாராள குணத்துடனே வழங்கவேண்டும்
         எப்பவுமே இரக்கமுடன் இருத்தல்வேண்டும்
                இதுபோன்று புதுமாற்றம் வருதல்நன்றே  !

        ஆட்சியுள்ளார் மனநிலைகள் மாறவேண்டும்
               ஆன்மீகம் அகமெல்லாம் நிறையவேண்டும்
         போட்டிநிலை மனமிருந்து அகலவேண்டும்
                 பொறுமைக்குணம் மனமெங்கும் பூக்கவேண்டும் 


          சாத்வீகம் சன்மார்க்கம் நிலைக்கவேண்டும்
                   சஞ்சலங்கள் சலனங்கள் போதல்வேண்டும் 
          ஈத்துவக்கும் உணர்வுநிலை எழுதல்வேண்டும்
                  இதுபோன்ற புதுமாற்றம் வருதல்நன்றே ! 


          ஊடகங்கள் உண்மைவழி நடக்கவேண்டும்
               ஊழிலினை யாவருமே ஒதுக்கல்வேண்டும் 
          பாவமென நினைப்பதனை விடுதல்வேண்டும்
                பரிதவிப்பார்க் குதவிதனை செய்தல்வேண்டும் 
           கோபமெனும் குணமதனைக் குறைக்கவேண்டும் 
                 குறிப்பறிந்து நடபதற்கு முயலல்வேண்டும் 
           பூவுலகில் இவையாவும்  நடக்குமாயின்
                    புதுமாற்றம் வருவதற்கு  தடையுமுண்டோ ! 

           புனிதமுடன் கோவிலெல்லாம் இருக்கவேண்டும் 
                  புகழுக்காய் கோவில்நாடல் தவிர்த்தல்வேண்டும் 
           அகமதனில் நல்லொழுக்கம் ஊறவேண்டும்
                   அன்புகொண்டு அனைவரையும் அணைத்தல்வேண்டும் 
           இகவாழ்வில் இறைநாட்டம் மிகுதல்வேண்டும் 
                      இன்னலுற்றார் துயர்போக்க துணிதல்வேண்டும் 
           இவையாவும் புவிமீதில் நடக்குமாயின் 
                   எப்படியும்  புதுமாற்றம் வருமேயன்றோ !





No comments: