தைத்திருநாள்! தமிழரின் புத்தாண்டு!! சட்டத்தரணி, பாடும்மீன் - சு.சிறீகந்தராசா


-->

தைபிறந்துவிட்டால் தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்துவிடும்.
தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப்பொங்கல் என்று கொண்டாடப்படும் தைப்பிறப்பா அல்லது சித்திரை வருடப்பிறப்பு என்று சொல்கிறோமே அதுவா என்கின்ற மயக்கம் இன்னும் தமிழ்மக்களிடையே இருக்கிறது. சரிவரத் தெரியாத மக்களிடம் இருப்பது மயக்கம். சரியெதுவெனத் தெரிந்த தமிழர்கள்கூட சரியானதைப் பின்பற்றாமல் விடுவதற்குக் காரணம் வழக்கம். அதனை மாற்றுவதா என்கின்ற தயக்கம்.
இத்தனைக்கும் சித்திரையைப் புத்தாண்டாகக் கொள்ளுகின்ற வழக்கம் தமிழர்களிடையே தொன்றுதொட்டு இருந்துவந்த தொன்றல்ல.  பண்டைத் தமிழகத்திலே இருந்த பண்பாடுமல்ல. தொன்மைமிகு சைவசமயத்தோடு தோன்றியதும் அல்ல. ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இடைக்காலத்தில் நம்மை இறுகப் பற்றிக்கொண்ட எண்ணற்ற மூடநம்பிக்கைகளைப் போலவே, ஏற்பட்டுவிட்ட ஒரு பழக்கம் இது.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே, சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டிருந்த செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்களாயிருந்தார்கள். அவர்கள், அறிவியல் முதிர்ச்சியால் அகிலத்திற்கே  வழிகாட்டியவர்கள், விண்ணையும், மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை ஆக்கியவர்கள், வானிலைக்கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். நட்சத்திரங்களையும் அவற்றின் நடமாட்டங்களையும் அவற்றின் பலாபலன்களையும் மிகத் துல்லியமாக ஆராய்ந்து கணித்தவர்கள். உலகுக்குப் பயன்தரும் முடிவுகளை அளித்தவர்கள். அவர்கள்தான், கதிரவனின் ஒளியினால்தான் பயிர்கள் வளர்கின்றன என்றும், காய்க்கின்றன என்றும் கண்டுபிடித்தவர்கள்.
அதனால்தான் களனி விளைந்து கதிரைப் பறித்ததும் தமது புத்தாண்டுப் பிறப்பன்றே முதன் முதலில் அந்தக் கதிரவனுக்கு நன்றி செலுத்தினார்கள். புதுப்பானையில் பொங்கலிட்டுப் படைத்து வணங்கினார்கள். சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறில் பொங்கல் பற்றிய குறிப்பொன்று காணப்படுகின்றது.
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்


என்று புறநானூற்றில் 168 ஆவதாக இடம்பெறுகின்ற பாடலிலே கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் என்ற புலவர் புதிர் உண்ணுகின்ற செய்தியைப் பதிவுசெய்துள்ளார். புதிதாகக் கறந்து நுரையெழும்பும் தீம் பாலிலே புத்தரிசியையிட்டு, சந்தனக்கட்டைகளை விறகாகக் கொண்டு அடுப்பெரித்து ஆக்கிய பொங்கலைப் பலரோடு பகிர்ந்து உண்ணுகின்ற வழக்கத்தை அழகாகச் சொல்கின்றார் புலவர்.
அத்தகைய தொன்மைச் சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகை உழவர்களுக்கு மட்டும் உரியதல்ல. உழுவார் உலகத்தார்க்கு அச்சாணியானவன் என்கின்றார் வள்ளுவர். எனவே, கதிரவனுக்கு நன்றிசெலுத்தும் பொங்கல் உலகத்திற்கே பொதுவானது. அதை உணர்ந்து தான் பண்டைத் தமிழர்கள் ஆண்டுத் தொடக்கத்திலேயே அதனை ஒரு பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
சிந்துவெளி நாகரிகக் காலத்திற்கு முந்தியிருந்தே இந்தப் புத்தாண்டும், பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட்டு வந்தமையை அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. சிந்துவெளி மக்கள் தைமுதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதங்களையே தமிழ் மாதங்களாகப் பின்பற்றிவந்துள்ளனரென்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சான்று பகர்ந்துள்ளனர். தை முதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதப் பெயர்களும் சுத்தமான தமிழ்ப் பெயர்கள் என்பதுடன், தொல்காப்பியர் காலத்திலேயே அவை வழக்கத்திலிருந்தன என்று கூறுகின்றார் மொழியறிஞர் சி. இலக்குவனார் அவர்கள். யேசு கிறீஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கி.மு என்றும் கி.பி. என்றும் உலக வரலாறு வரையறுக்கப்பட்டு வருகின்றது. அதேபோலப் புத்தரின் வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு புத்த சமயத்தினர் புத்த ஆண்டு என்று கணித்துப் பின்பற்றுகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்ப் புத்தாண்டு வழக்கத்தை இடையிலே கைவிட்டுவிட்டு எதையெதையோவெல்லாம் தமிழர்கள் பின்பற்றுவது எவ்வளவு துர்ப்பாக்கியமானது.
தைமுதல்நாள் தமிழர் திருநாள் மட்டுமல்ல, அதுவே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாளுமாகும். அதனால்தான், தமிழ்ப் புத்தாண்டுபற்றிய உண்மைநிலையைத் அறிவுபூர்வமாகவும், ஆராய்ச்சியின் அடிப்படையிலும் தமிழ்மக்களுக்கு உணர்த்துவதற்காக, 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியிலே தமிழ் அறிஞர்கள், செந்தமிழ்ப் புலவர்கள் கூடி ஆராய்ந்திருக்கிறார்கள்.  தமிழ்க்கடல், நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகள் அவர்களது தலைமையிலே அந்த ஆராய்ச்சி நடைபெற்றிருக்கின்றது.
மாபெரும் தமிழறிஞர்களும் கல்விமான்களுமான தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியம்பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் அந்த அறிஞர் குழவிலே இருந்திருக்கிறார்கள்.
அத்தனை அறிஞர் பெருமக்களும் ஒன்றாகக்கூடி தமிழ்ப் புத்தாண்டு பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். முடிவுகண்டிருக்கிறார்கள். 500 இற்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் அந்த முடிவிற்குத் தமது ஏற்பிசைவை வழங்கியிருக்கின்றார்கள். அவர்களது முடிவின்படி இயேசுகிறீஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர் திருவள்ளுவர் என்றும், அவரது பெயரில் தொடர்ஆண்டுக் கணக்கீட்டைப் பின்பற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
அந்த முடிவுகளின்படி, திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல்நாள் ஆகும். கிழமை நாட்கள் ஏழு. அவை, ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி என்பனவாகும். புதனும், சனியும் தமிழ்ப்பெயர்கள் அல்லவென்பதால் அவற்றுக்கான பண்டைய தமிழ்ப்பெயர்களான அறிவன், காரி என்பன முறையே வழங்கப்படவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆங்கில ஆண்டுடன் 31ஐக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. அதுவே தமிழ் ஆண்டுக் கணக்கு.
அறிஞர்களது தீர்மானத்தை அன்றைய தமிழக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது. அதன்படி திருவள்ளுவர் ஆண்டு முறையை 1971 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு நாட்குறிப்பிலும், பின்னர் 1972 இலிருந்து தமிழக அரசின் அதிகாரபூர்வமான இதழிலும், 1981 இலிருந்து தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. 2009 இல் தமிழக அரசு தைப்பிறப்பையே தமிழ்ப்புத்தாண்டு என்றும் சித்திரைமாதத்தில்  தமிழ்ப்புத்தாண்டு இல்லை என்றும் சட்டபூர்வமாக ஆணை பிறப்பித்தது. தமிழ் மக்களின் புத்தாண்டு விடயத்திற்குச் சட்டரீதியான அந்தஸ்துக் கொடுக்கப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமே.
தைமாதத்தைத் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடினால் கிரக மாற்றங்களில் குளறுபடி ஏற்படுமாம் பஞ்சாங்கக் கணிப்புத் தவறாகிவிடுமாம் என்றெல்லாம் சிலர் மக்களைக் குழப்புகின்றார்கள். இது என்ன பேதைமை! சித்திரையை அடிப்படையாக வைத்துத்தான் கிரக சஞ்சாரங்கள் நடைபெறுகின்றன என்றால் அவை அப்படியே நடக்கட்டும். அவற்றுக்கு அமைவாக எழுதப்பட்ட பஞ்சாங்கங்கள் அப்படியே இருக்கட்டும். சித்திரை மாதக் கிரக நிலையைத் தைமாதத்திற்கு நகர்த்தும்படி யாரும் கூறவில்லை. பஞ்சாங்கங்களைத் திருத்தும்படி யாரும் சொல்லவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஆனால் சித்திரை மாதம் என்பது தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் அல்ல. தைமாதமே தமிழ்ப்பத்தாண்டின்முதல் மாதம் என்றும்,  தைமுதல் திகதியே தமிழ்ப் புத்தாண்டின் முதல்திகதி என்றும் கொண்டாடுவோம். அவ்வாறு நாம் கொண்டாடுவதால் கிரகமாற்றங்களில் கோளாறு ஏற்படும் என்பதும், பஞ்சாங்கம் பொய்த்துவிடும் என்பதும் மூடநம்பிக்கைகள். மடத்தனமான விதண்டா வாதங்கள். மக்களைக் குழப்பும் முயற்சிகள்.
தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்
பத்தன்று, நூறன்று, பன்னூறன்று
பல்லாயிரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்

என்று தைத்திங்கள் திருநாளை, தமிழினத்தின் திருநாளாக, தமிழ் வருடத்தின் முதல்நாளாக, தமிழ்ப பண்பாட்டின் பெருநாளாக போற்றிப் பாடுகின்றார் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் அம்மொழியே பொன் மொழியாகட்டும். அனைத்துலகத் தமிழர்களுக்கும் ஒரே வழியாகட்டும்.
எனவே தைமுதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டெனக்கொண்டாடும் நமது பண்டைய வழக்கத்தினை உலகத் தமிழ்மக்கள் அனைவரும் வழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டும்.
பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் கடந்து விட்ட வருடத்தின் கடைசிநாள்.
வீட்டிலுள்ள வேண்டத்தகாத பொருட்களையெல்லாம் வீசி எறியும் நாள்.
வீட்டிலும், வீட்டைச்சுற்றவரவும், காணிகளிலும் உள்ள அழுக்குக்களை,
குப்பை கூழங்களையெல்லாம் கூட்டிப்பெருக்கித் தீயிட்டுக்கொழுத்தி
துப்பரவுசெய்யும் நாள்.
புலரும் பொழுதில், மலரும் பொங்கல்பண்டிகையை, புத்தாண்டுப் பிறப்பை வரவேற்க வீடுகள்தோறும் விடியவிடிய மகிந்திருக்கும் நாள்.
வீட்டுச்சுவர்களுக்கு வெள்ளையடிப்பதும், வர்ணச்சாயம் தீட்டுவதுமாக
அன்றைய நாள் முழுவதும் ஊரே மகிழ்ச்சியில் அமர்க்களப்படும்.
அந்த நாளைப் போகி நாள் என்று சொல்வார்கள்.
கடந்த வருடத்தைப் போக்குதல், கடங்களைப் போக்குதல்,
உறவினர்களுக்கிடையே இருந்த உரசல்களைப் போக்குதல்,
அகத்திலும் புறத்திலும் உள்ள அழுக்குக்களைப் போக்குதல் என்றெல்லாம் பொருளமைந்ததுதான் போகி நாள், போகிப் பண்டிகை!

திருமணமாகித் தனிக்குடும்பம் நடாத்தும் தங்கள் பெண்களுக்கும், சகோதரிகளுக்கும் பெற்றோரும், சகோதரர்களும் சீர்வரிசை செய்வதும் அன்றைய நாளில்தான்.
நெல்லு, அரிசி, குரக்கன், சோளம் முதலிய தானியங்கள், முக்கனிகள், இனிப்புப் பலகாரங்கள், புத்தாடைகள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றையெல்லாம்
இல்லறம் நடத்தும் தம் பிள்ளைகளின் வீடுகளுக்கு எடுத்துச்சென்று கொடுத்து மகிழ்வார்கள். இல்லத்தையும், சுற்றுப்பறத்தையும் எல்லோருமாகச் சேர்ந்து துப்பரவுசெய்து, புதுப்பொலிவு ஊட்டுவார்கள்.
அது பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள். புத்தாண்டுக்கு முதல்நாள்.
கடக்கும் வருடத்தின் கடைசிநாள். அதுதான் போகிநாள்!

தைத் திங்கள் முதல்நாளே தமிழர் நமது புதுவருடப் பெருநாள். தங்கத் தமிழினத்தின் தைப்பொங்கல் திருநாள். எனவே, பொங்கல் திருநாளிலேயே நமக்குப் புதுவருடம் பிறக்கிறது என்பதை,
பொங்கல் திருநாளிலேயே நமக்குப் புதுவருடம் பிறக்கிறது என்பதை, பொங்கல் திருநாளே நமது புத்தாண்டு என்பதை, எங்கும் பறைசாற்ற வேண்டும். எப்போதும் அதனைப் பின்பற்ற வேண்டும். தப்பாமல் நம் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டும்.
வாசலில் கோலமிட்டு, மாவிலையிலும், மஞ்சள் குருத்தோலையிலும் தோரணங்கட்டி, புத்தரிசி கொண்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, தலைவாழையிலையில் பொங்கலும், பழங்களும், கரும்பும் படைத்து, கதிரவனை நோக்கிக் கைகூப்பித்தொழுது நன்றிதெரிவிக்கும் நந்நாளே பொங்கல் திருநாள்.
காலையில் வழிபாடு. பகலில் உறவினர்களோடு மகிழ்ந்து உறவாடல். உணவு பரிமாறல். உண்டு களைப்பாறல். மாலையில் களியாடல். கலைகள் அரங்கேறல். ஊரே திரண்டு ஒன்றாய் மகிழ்ந்து கொண்டாடல். இதுதான் தமிழரின் தாயகங்களின் தைத்திருநாள். அது வருடத்தில் ஒருநாள். புத்தாண்டின் முதல் நாள்.  தமிழருக்கு அது பெருநாள்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நமது தாயகங்களிலே நாம் கொண்டாடி மகிழ்ந்த அந்த நாட்களை நினைவுகூரவேண்டும்.
வாழுகின்ற இடத்தால் வேறுபட்டாலும், வணங்குகின்ற மதத்தால் வேறுபட்டாலும், சார்ந்துள்ள அரசியல் கருத்தால் வேறுபட்டாலும், தனிப்பட்ட குணத்தால் வெறுபட்டாலும் தமிழர் என்ற இனத்தால் ஒன்றுபடுவோம். தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம். தைமுதல்நாளே புத்தாண்டு என்று உறுதி பூணுவோம். எங்கு வாழ்ந்தாலும் அந்த வழக்கத்தைப் பேணுவோம்.
தைபிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். கல்வியைத் தொடங்கும் பிள்ளைகளுக்கு வழிபிறக்கும். புதுவகுப்பிற்குச் செல்லும் மாணவர்க்கு வழிபிறக்கும். பல்கலைக்கழகம் செல்லும் இளையோர்க்கு வழிபிறக்கும். திருமணத்திற்குக் காத்து நிற்கும் காதலர்க்கு வழிபிறக்கும், பிள்ளைப் பாக்கியத்திற்குக் காத்திருக்கும் தம்பதிகளுக்கு வழிபிறக்கும். பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகின்ற பெற்றோருக்கு வழிபிறக்கும். இவ்வாறு சிறியோர்க்கும், பெரியோர்க்கும் எல்லோர்க்கும் தைபிறந்துவிட்டால் வழிபிறக்கும்.
கடந்த வருடம் அடைந்த துயரெல்லாம் கனவாக மறப்போம்
நடந்த வாழ்வில் மகிழ்ந்ததை யெல்லாம் நினைவோடு சுமப்போம்
புலர்ந்து வருகின்ற தைமுதல் நாளிலே புத்தூக்கமடைவோம்.
காலையில் எழுந்து, கதிரவனை வணங்குவோம்.
புத்தாடை அணிந்து புத்தாண்டை வரவேற்போம். 
இனிக்கும் பொங்கலிட்டு எல்லோர்க்கும் பகிர்ந்துண்போம்.
அதுவே பண்டைத் தமிழர் பண்பாடு. அதைக் கடைப்பிடிப்பது நம் கடப்பாடு.

தைத்திருநாள் தமிழரின் திருநாள்
தைப்பொங்கல் பண்டிகை தமிழரின் பண்டிகை
தைப்பிறப்பே தமிழ்ப் புத்தாண்டின் பிறப்பு
தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டின் முதல் நாள்

வாழ்க தமிழ் வணக்கம்





No comments: