அவுஸ்திரேலியா மெல்பேணில் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவான ”தமிழர் விளையாட்டு விழா 2018” பற்றிய செய்தியறிக்கை





இந்தியச்சதியால் வங்கக்கடலில் 16 - 01 - 1993 இல் வீரகாவியமாகிய மூத்ததளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடாத்தப்படுகின்ற மாபெரும் தமிழர் விளையாட்டுவிழா இந்த ஆண்டும் மெல்பேர்ணில் மிகவும் சிறப்பாக நடந்தேறியுள்ளது. 
07-01-2018 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 8.30 மணிக்கு மெல்பேர்ண் கிழக்கு பேர்வூட் றிஸேவ் (East Burwood Reserve) மைதானத்தில் ஆரம்பமான இவ்விளையாட்டுவிழா நிகழ்வில் அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை இளைய தமிழ்த் தேசியச் செயற்-பாட்டாளர் செல்வன் பவித்திரன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை தமிழ் ஏதிலிகள் கழகத்தின் நிர்வாக உறுப்பினர் திரு கரிதாஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். 

அதனைத்தொடர்ந்து மூத்ததளபதி கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு கிறிஸ்ரி அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார். 

தொடர்ந்து தமிழீழ மண்மீட்புப்போரில் களமாடி வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரர்களுக்காகவும் இலங்கை இந்தியப்படைகளாலும் இரண்டகக் குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவும் மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அடுத்து விளையாட்டு போட்டிகளுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதோடு மைதான விளையாட்டுக்கள் ஆரம்பமாகின.


ஒருபுறத்தில் துடுப்பெடுத்தாட்டம் உதைபந்தாட்டம் கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்க, சமநேரத்தில் மறுபுறத்தில் சிறுவர்களுக்கான ஓட்டப்போட்டி தவளைப்பாய்ச்சல், தடைதாண்டி ஓடுதல், தேசிக்காய் கரண்டியில் வைத்து ஓடுதல், பலூன் ஊதி உடைத்தல் முதலான மெய்வல்லுநர் போட்டிகள் நடைபெற்றன. மேலும் கயிறுஇழுத்தல், சங்கீதக்கதிரை, சாக்குஓட்டம்  போன்ற போட்டிகளும் தாயகத்து பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கிளித்தட்டுப்போட்டியும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

மெய்வல்லுனர் போட்டியில் பங்கெடுத்திருந்த அனைத்து சிறார்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அத்தோடு கங்கீதக்கதிரை சாக்குஓட்டம் முதலான விளையாட்டுக்களில் பங்கெடுத்து வெற்றிபெற்றவர்களுக்கும் விளையாட்டு விழாவிற்கு வருகை தந்த அதீதிகளினாலும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், போட்டிகளின் நடுவர்களினால் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். 

மேலும் இவ்விளையாட்டு விழாவில் தாயகத்து உணவுவகைகளான தோசை  அப்பம் பூரி ஒடியற்கூழ் மற்றும் கொத்துரொட்டி முதலான உணவுகளும், வடை றோள் மற்றும் பாபிகியூ போன்ற சிற்றுண்டிகளும் அத்தோடு வலூடா, இளநீர் உள்ளிட்ட குளிர்பானங்களும் விற்பனை செய்யப்பட்டன.  ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்  வருகைதந்து இவ்விளையாட்டுக்களில் பங்கெடுத்தும் பார்வையாளர்களாகவும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

கிளித்தட்டுப்போட்டியில் ஜெய அணியினருக்கும் எல்லாளன் அணியினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிச்சுற்றுப்போட்டியில் 1இற்கு1என்ற அடிப்படையில் சமமான வெற்றி கிடைத்ததால் குலுக்கல் முறை மூலம் எல்லாள அணி தேர்வு செய்யப்பட்டு வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டனர். கயிறு இழுத்தல்போட்டியில் பல அணிகள் பங்கெடுத்திருந்த நிலையில், இப்போட்டியில் இறுதியாக வடமராட்சிக்கிழக்கின் உதயம் அணியினர் வெற்றிபெற்றிருந்தனர். 

துடுப்பெடுத்தாட்டம் இறுதிச்சுற்றுப்போட்டியிலே தண்டஸ் அணியினருக்கும் சிவாஸ் அணியினருக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் சிவாஸ் அணியினர் வெற்றியீட்டி 2018 ஆம் ஆண்டிற்கான வெற்றிக்கேடயத்தை பெற்றுக்கொண்டனர். உதைபந்தாட்டம் இறுதிச்சுற்றுப்போட்டியில் மில்லர்-B அணியினருக்கும் கரிகாலன் அணியினருக்குமிடையிலாக நடைபெற்ற இப்போட்டியில் மில்லர்-B அணியினர் 1 இற்கு 0 என்ற அடிப்படையில் வெற்றியீட்டி 2018 ஆம் ஆண்டிற்கான வெற்றிக்கேடயத்தினைப் பெற்றுக்கொண்டனர்.

கரப்பந்தாட்டம் ஓவர்கேம் மிக்ஸ்கேம் என இரண்டு சுற்றுக்களாக நடைபெற்றன. கரப்பந்தாட்டம் ஓவர்கேம்போட்டியில் தமிழ்போய்ஸ் அணியினருக்கும் வடமராட்சிக் கிழக்கு உதயம் அணியினருக்குமிடையில் நடைபெற்ற இறுதிச்சுற்றுப்போட்டியில் தமிழ்போய்ஸ் அணியினர் வெற்றியீட்டி 2018-ம்ஆண்டிற்கான  வெற்றிக்கேடயத்தை பெற்றுக்கொண்டனர். கரப்பந்தாட்டம் மிக்ஸ்கேம் போட்டியில் டெனிஸ் அணியினருக்கும் ஈழம்போய்ஸ் அணியினருக்குமிடையில் நடைபெற்ற இறுதிச்சுற்றுப்போட்டியில் டெனிஸ் அணியினர் வெற்றியீட்டி 2018-ம்ஆண்டிற்கான வெற்றிக்கேடயத்தைப்பெற்றுக்கொண்டனர்.

விளையாட்டுவிழாவின் இறுதிநிகழ்வாக வெற்றியீட்டிய அணிகளுக்கான வெற்றிக் கேடயங்கள் வழங்கப்பட்டு விளையாட்டுவீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டதையடுத்து தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு இரவு 9.00மணியளவில் தமிழர் விளையாட்டுவிழா 2018 நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவேறியது.





























No comments: