வாய்த்திடட்டும் தைப்பொங்கல் ! ( எம் .ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )


      


image1.JPG      பொங்கலென்று நினைத்துவிடின்
            பூரிப்பே வந்துநிற்கும்
       மங்கலங்கள் நிகழ்வதற்கு 
           பங்களிப்பை நல்கிநிற்கும் 
       எங்களது வாழ்வினிலே
           என்றுமே இன்பம்வர
      எல்லோரும் பொங்கலிட்டு
           இறைவனயே எண்ணிடுவோம் !

       தைபிறந்தால் வழிபிறக்கும்
          தரமான வார்த்தையிது 
      எதிர்காலக் கனவுகளை 
            எங்கள்தையும் ஈய்ந்திடட்டும்
      வருடத்தின் தொடக்கமதை
            வாழ்த்திநின்று வரவேற்போம்
      வையகமே விடிவுபெற
           வாய்த்திடட்டும் தைப்பொங்கல் !


      புத்துடுப்பு  உடுத்திடுவோம்
         புத்துணர்வு பெற்றிடுவோம்
     மத்தாப்புப் பட்டாசு
         வகைவகையாய் வெடித்திடுவோம்
     சொந்தபந்தம் சூழ்ந்துநிற்க
          சுவைபயக்கப் பொங்கல்பொங்கி
     சூரியனை வணங்கிநின்று
          சுகம்பெறவே வேண்டிடுவோம் !

    வளம்பெருக வேண்டுமென்று
       மனமார வேண்டிடுவோம்
   வானவரும் வாழ்த்துரைக்க
         வாழ்ந்துமே காட்டிடுவோம்
   வையகத்தில் அமைதிவர
       வடிவாகப் பொங்கல்பொங்கி
   வாழ்ந்திடுக தமிழென்று
     வாயார வாழ்த்திநிற்போம் !

    பால்பொங்கி வருவதுபோல் 
       பலநலனும் பெருகவென
   பச்சரிசி தனையெடுத்து 
       பானையிலே இட்டிடுவோம் 
   இச்சையுடன் சர்க்கரையை 
       எங்கள்கையில் எடுத்துவைத்து 
   உச்சமுடன்  வாழவெண்ணி
        உள்ளுக்குள் சேர்த்திடுவோம் ! 

    மாவிலை தோரணங்கள்
         வாசலிலே கட்டிவைத்து 
    மனம்முழுக்க மகிழ்வுடனே
          பொங்கிடுவோம் வாருங்கள்
    ஊணுறக்கம் தனைமறந்து
        உழைத்துநிற்கும் யாவரையும்
    உள்ளமதில் நினைத்தபடி 
          உணர்வுடனே பொங்கிடுவோம் !

   உலகெங்கும் அமைதிவர
      உழைப்புயர மனமெண்ணி 
   நிலமெங்கும் நீதிவர
        நிம்மதியும் நிறைந்துவர 
   நலமில்லா அத்தனையும்
        நாட்டைவிட்டே அகன்றோட
   நாம்பொங்கல் பொங்கிநின்று 
       நாடிடுவோம் இறையருளை !
      
       
     




No comments: