படித்தோம் சொல்கின்றோம்:


17 ஆம் நூற்றாண்டில்  நீதி மறுக்கப்பட்டவர்களின் வரலாற்றை  சமகால வரலாற்றுடன் ஒப்பீடு செய்யத்தக்க புதினம்
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இடக்கை ( நாவல்)
                                                                                      முருகபூபதி

சமகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருடைய கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் படித்திருப்பதுடன், உலக இலக்கியப்பேருரைகளும் காணொளிக்காட்சியாக பார்த்து ரசித்து வியந்துமிருக்கின்றேன்.
எனக்குப்பிடித்தமான எழுத்தாளர்களை நேரில் சென்று பார்த்துப்பேசுவதும் எனது இயல்பு. அந்தவகையில் எஸ்.ரா. அவர்களை இரண்டு தடவைகள் சென்னையில் அவர் வசிக்கும் சாலிக்கிராமத்திற்கே சென்று பார்த்திருக்கின்றேன். அவரது அன்பான உபசரிப்பில் திளைத்திருக்கின்றேன்.
அவ்வப்போது அவரது படைப்புகள் குறித்தும் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றேன். எஸ்.ரா. படைப்பிலக்கியவாதி மாத்திரமில்லை. அவர் திரைக்கதை ஆசிரியர். வசனகர்த்தா. சூப்பர்ஸ்டாரின் பாபா படம் உட்பட சில படங்களுக்கும் கதை, வசனம் எழுதியவர்.
அவுஸ்திரேலியா மெல்பனுக்கும் அவர் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்புவேளையில் வந்து சுமார் ஒரு மாதகாலம் தங்கியிருந்தார் என்பதும் பின்னர்தான் தெரியவந்தது.
அவ்வேளையில் எங்களையெல்லாம் சந்திக்கமுடியாமல் போனமை குறித்தும் அவர் வருந்தியிருக்கிறார்.
இடக்கை என்னும் இந்த நாவல், இந்தியாவின் கடைசி மொகாலய சக்கரவர்த்தியின் அந்திமகாலத்தைப்பேசும் கதை. ஆலம்கீர்  ஔரங்கசீப் பாதுஷா 1707 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தனது 91 ஆவது வயதில் மறைந்திருக்கிறார் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய குறிப்புகளிலிருந்து பார்க்கின்றோம்.
இவ்வாறு துல்லியமாக அதற்கு முன்னர் இந்தியாவில் தென்னாட்டில் ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் பற்றிய காலம் பதிவுசெய்யப்படவில்லை. வடக்கே பல மொகாலய சக்கரவர்த்திகள் பற்றிய வரலாறுகளுக்கு சான்றுகள் இருப்பதனால் அவற்றை உசாத்துணையாகக்கொண்டு எஸ்.ரா.வும் இந்த நாவலை எழுதியிருக்கிறார்.
எஸ்.ரா. எழுத்தாளர் மட்டுமல்ல  ஒரு யாத்ரீகனும்தான். நாடோடியாக அலைந்து தகவல்கள் திரட்டி எழுதும் அவரது படைப்புகளின் வரிசையில் இந்த இடக்கை எமது கரத்திற்கு வந்துள்ளது.
இதனைப்படித்துக்கொண்டே மதன் எழுதியிருக்கும் வந்தார்கள் வென்றார்கள் என்ற அரிய தொகுப்பு நூலையும் சமகாலத்தில் படித்தேன்.
வந்தார்கள் வென்றார்கள் விகடனில் தொடர்ந்து வெளியாகி வாசகரின் அமோக ஆதரவினால் தனிநூலாகவும் பதிப்பிக்கப்பட்டு ஒரு இலட்சத்திற்கு மேல் விற்பனையாகியிருக்கிறது.
அதனை விகடன்குழுமம், தமது  விற்பனையில் ஏறு முகம் எனச்சொல்லியிருக்கிறது.
ஆனால், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஆனந்தவிகடன் மதன், அங்கிருந்து வெளியேறும் துர்ப்பாக்கியமான சூழல் தோன்றியது. அதுபோன்று சமூக நாவல்களும் சரித்திர நாவல்களும் ஏராளமான கதைகள், கட்டுரைகளும் எழுதியிருக்கும் எஸ்.ரா.வும் இதுவரைகாலமும் எந்த பதிப்பகத்தின் ஊடாக தமது நூல்களை வெளிக்கொணர்ந்தாரோ அந்த உயிர்மைப்பதிப்பகத்திலிருந்து வெளியேறும் சூழ்நிலை தோன்றியிருக்கிறது.

எஸ்.ரா. சிறந்த கதை சொல்லி. அவரது நாவல்கள், சிறுகதைகள் அனைத்திலும் இந்தத்தன்மையை காணமுடியும். நான் படித்தவற்றில், அவரது உறுபசி, யாமம், சஞ்சாரம் முதலான நாவல்களிலும் விழித்திருப்பவனின் இரவு என்னும் கட்டுரைத்தொகுப்பிலும்  அவருடை தேடல் மனப்பான்மையை பார்த்து வியந்திருக்கின்றேன்.
அவர் இந்த நாவலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையில் இருந்து சில வரிகள்:-
"இந்நாவல் வரலாற்றில் வாழ்ந்த சாமானியர்களின் கதையைச்சொல்ல முயலுகிறது. அதிலும் குறிப்பாக வரலாற்றின் இருண்ட பக்கங்களை, நிழல்களைப்போல குரலற்றுப்போன மனிதர்களை அடையாளப்படுத்துகிறது.
நீதிக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிப்போன இன்றைய சூழலில் காலம் காலமாக இந்திய மக்கள் நீதிக்காக போராடிய அவலத்தை, நீதி மறுக்கப்பட்ட நிரபராதிகளின் வேதனைக்குரல்களை நினவுபடுத்துகிறது இந்நாவல்."
இந்நாவலில் 45 அங்கங்கள். ஒவ்வொன்றிலும் பல கதைகள், உப கதைகள். அவற்றில் சில வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒன்றிணைகின்றன. சில முடிச்சவிழாத புதிர்களாகிவிடுகின்றன.
அந்தக் கதைகள்,  உபகதைகளின் ஊடாக வாழ்க்கைத்தத்துவமும் மிளிர்கிறது.
சில வரிகளைப்பாருங்கள்:   " சாவின் காலடிகள் தனது அறைக்கு வெளியே கேட்டுக்கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். ஆனால், கதவைத்தட்டி உள்ளே வரவில்லை. காத்திருக்கிறது. ஒரு வேளை தன்னிடம்  அனுமதிகேட்டு காத்திருக்கிறதா? அதுதான் நிஜம் என்றால் வெளியே காத்திருக்கட்டும்.  சாவைக்கண்டு அவர் பயப்படவில்லை. ஆனால், அவரது மரணத்தின் பின்பு ஏற்படப்போகும் அரியணைச்சண்டைகள் நினைத்து அவர் மிகவும் வேதனைகொண்டார். தேசத்தை ஆளமுடிந்த தன்னால் வீட்டை நிர்வகிக்க முடியவில்லை." (பக்கம் 9)
இந்தவரிகளுடன் சமகால தமிழர்  அரசியலையும் நாம் ஒப்பீடு செய்யமுடியும்.
ஒளரங்கசீப்பின் வாழ்வின் இறுதிக்கட்டத்திலிருந்து நாவல் தொடங்கியிருந்தாலும், Flash back  காட்சிப்படுத்தலின் ஊடாக அவரது இயல்புகள் வாசகர்களுக்கு சொல்லப்படுகிறது.
இந்நாவல் ஒரு சக்கரவர்த்தி பற்றியது மட்டுமல்ல அவர்கள் காலத்தில் அடிமைச்சேவகர்களாக வாழ்ந்த அடிநிலை மக்களைப்பற்றியதாகவும் அமைந்திருக்கிறது.
இது நீதி வழங்கவேண்டிய மன்னனின் கதை மட்டுமல்ல,  நீதி மறுக்கப்பட்ட மக்களின் கதையாகவும் விரிகிறது.
ஔரங்கசீப்பின் படைகளைப்பற்றிய காட்சி 227 - 228 ஆம் பக்கங்களில் சித்திரிக்கப்படுகிறது.
அவரது படை புறப்படுவதற்கு  ஆறுநாட்களுக்கு முன்பு படை கிளம்ப இருப்பதற்காக எக்காளம் ஊதப்படுகிறது. அன்றிலிருந்து ஒவ்வொரு படைப்பிரிவும் புறப்படுகிறது. நாற்பதாயிரம் காலாட் படை.  எட்டாயிரம் குதிரை வீரர்கள், முந்நூறு யானைகள், பீரங்கிகள். ஆறுகள் குறுக்கே வந்தால் மன்னரும் படைகளும்  அவற்றை கடந்துசெல்ல படகுகள் தயார் நிலையில், மன்னருக்கான மருத்துவர்கள், எழுத்தர்கள், சமையற்கலைஞர்கள், இவர்கள் தவிர இருநூறு ஒட்டகங்களில்  கூடாரம் அடிக்கத்தேவையான பொருட்களும் ஏற்றிச்செல்லப்படும். ஆயிரம் கூலியாட்களும் உடன் அழைத்துவரப்படுவர். 
இவ்வாறு மன்னர் முன்னே செல்ல,  அவரது பரிவாரங்கள் ஆயிரக்கணக்கில் பின்தொடர வாழ்ந்த சக்கரவர்த்தியின் அந்திமகாலம் எத்தகைய தனிமையில் இருந்திருக்கிறது என்ற செய்தி இந்நாவலில் அழுத்தமாக பதிவாகியிருக்கிறது.  
இத்தகைய மன்னன் வாழ்ந்த தேசத்தில் காலா என்ற சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் ஆயிரக்கணக்கான அடிமைகள். அவர்கள் தீண்டத்தகாதவர்களாகவும் வாழத்தலைப்பட்டவர்கள்.
அவர்களின்  ஒருவன்  தூமகேது. அவனது வாழ்வில் விதி கோரமாக விளையாடுகிறது. அவன் ஒரு பாமரன். அவனுடன் சக்ரதார் என்ற பண்டிதரும் சிறைப்பட்டு சித்திரவதைகளை அனுபவிக்கிறார்.
இந்த நாவலில் இரண்டு பக்கங்களை  எஸ்.ரா சித்திரிக்கிறார். அதாவது மன்னர் பரம்பரைக்குள் நிகழும் காட்சிகள், சதிகள், ஆணவம், அதிகார மமதை, சந்தேகப்படும் இயல்பு.
மறு புறத்தில் அடிநிலை மக்களின் இயல்புகள், அவர்களின் அறியாமை, இயலாமை, தனிமை, ஏழ்மை, ஏமாற்றம், துயரம்.  
இந்நாவலில் நூற்றுக்கணக்கான பாத்திரங்களை எஸ்.ரா. படைத்துள்ளார். அவற்றில் மன்னருக்கு சேவகம் செய்யும் அஜ்யா பேகம் என்ற அரவாணியும், கைதியாக தண்டனை அனுபவித்து தப்பிஓடும் தூமகேதுவும், அந்நிய தேசத்திலிருந்து வரும் ரெமியஸ் முதலான பாத்திரங்களுடன் பாதுஷா ஔரங்கசீப்பும் முழுமையான பாத்திரங்களாகியிருக்கிறார்கள்.
பல காட்சிகள் படிம உத்தியிலும் மாயாவாத சித்திரிப்பிலும் வருகின்றன. மன்னர் ஒரு ஆட்டுத்தோலில்  எழுதிவைத்த உயிலும் இந்நாவலில் முக்கியமான பாத்திரமாகிறது. ஆனால், அந்த உயிலுக்கு உயிரில்லை. அதனால் அது பேசவில்லை. மற்றவர்கள் பேசுகிறார்கள். அவர்களின் உரையாடல்களினூடே அந்த உயிலும் நாவல் முழுவதும் பேசப்படுகிறது.
அரவாணியாக வரும் அஜ்யாபேகம், எவ்வாறு பெண்ணாக உருமாறினாள்  என்பதும் தனிக்கதை. அவள், அவனாக இருந்த காலத்தில்  பெண்களின் ஆடைகளை அணிந்த காரணத்திற்காக பலதடவை தாயால் தண்டிக்கப்பட்டவள். மன்னரின் பணிப்பெண்ணாகியதும் மன்னரால் எழுதப்படும் உயிலில்  அவளது பெயரும்  இடம்பெறுகிறது. தன்னை விட அவளிடத்தில்  மன்னருக்கிருக்கும் பாசமும் நம்பிக்கையும்தான் இளவரசன் முகம்மது ஆஜம்மிற்கு அவள்மீதான வெறுப்பின் ஊற்றுக்கண்கள். சிறைக்கூடத்திலும் சித்திரவதை செய்யப்பட்டு இறுதியில் தூக்குத்தண்டனையில் மரணிக்கிறாள்.
நாவலின் 34 ஆம் அங்கம் அவளது இறுதிநாட்களை மிகவும் உருக்கமுடன் சித்திரிக்கிறது.
தனக்குத்தண்டனை தரும் அந்தக்காவலர்களிடம் அவள் பேசும் வார்த்தை:" நன்றி சகோதரர்களே" அதுவே அவளது வாழ்வின் இறுதிவார்த்தை. காலைப்பொழுது விடியும்போது அவளது உடலை பொட்டலமாகக்கட்டி ஆற்றில் வீசுவதற்கு எடுத்துச்செல்கிறார்கள் இரண்டு காவலர்கள்.
ஒரு அதிகாரத்தின் கீழ் இருக்கும் வரையில் அந்த அதிகாரத்தின்  பொலிஸாரின் தயவிருக்கும்.  பாதகமில்லை. ஆனால், அதிகாரம் மாறும்போது அந்தத்தயவு  ஆபத்தில் கொண்டுபோய் தள்ளும் என்பது சமகால அரசியல். ஔரங்கசீப்பின் தயவில் வாழ்ந்த அஜ்யா பேகம், அதிகாரம் மாறும்போது ஆபத்தில் சிக்கி சித்திரவதைகளை அனுபவித்து இறுதியில் தூக்குக்கயிற்றை முத்தமிடநேருகிறது.
இடக்கையை கூர்ந்து படிக்கும்போது, சமகால உலக அரசியலும் நினைவுக்கு வந்து செல்வது தவிர்க்கமுடியாதது.
சௌகான் என்ற கிராமம் மழையின்றி வரட்சியால் வாடுகிறது. அங்கிருக்கும் ஆட்டு  இடையர்களினால் மன்னருக்கு வரிசெலுத்தமுடியவில்லை. வரி வசூலிக்கவரும் பட்வாரி என்பவன் இவ்வாறு சித்திரிக்கப்படுகிறான்:
அழுக்குப்படிந்த சட்டை. தலையில் சிறிய துணித்தொப்பி. தோல் செருப்பு. ஏழைப்பராரியாக வரும் அவனும் அந்த ஆட்சியில் ஒரு சுரண்டல் பேர்வழி என்பது சுவாரஸ்யமாக சித்திரிக்கப்படுகிறது.
வரிகட்டாமலிருக்க அந்த விவசாயிகளுக்கும் இடையர்களுக்கும் ஒரு ஆலோசனை சொல்கிறான். அங்கிருக்கும் மோட்டு என்பவனிடத்திலிருக்கும் பால் தரும் பசுவை லஞ்சமாகக்கேட்கிறான். அவர்களிடமிருக்கும் நிலங்களை கோவிலுக்கு எழுதிக்கொடுத்துவிட்டால், மன்னருக்கு வரி கட்டத்தேவையில்லை எனச்சொல்லும் அவன் பேச்சை நம்பி, நிலங்களை கோவிலுக்கு எழுதுகின்றனர். அவனோ தந்திரமாக ஆவணங்களை தன்பெயருக்கு  மாற்றிவிடுகின்றான்.
இத்தகைய பல காட்சிகள் சமகால எமது அரசியல் வாழ்வையும் நினைவூட்டுகின்றன.
துவாபர யுகத்தில் ஒரு பெண் மண்புழு, தனது கணவனான  ஆண்புழு தேரின் சக்கரத்தில் நசிந்து கொல்லப்பட்டதற்கு நீதி கேட்க வானுலகம் சென்ற கதை.... மண்ணாலான லகியா என்ற பெண்ணை மணம்முடித்தவன்,  போதை தேவைப்பட்டபோதெல்லாம் மனைவியை கண்ணீர் விடச்செய்து அதில் கரையும் அவள் உடலை சுவைத்து போதையேற்றிக்கொள்ளும் கதை....  இவ்வாறு பல்வேறு உபகதைகளுடன் இடக்கை நகருகின்றது.
நாவல் முழுவதும் வரும் பிரதான பாத்திரங்களில் ஒன்றான தூமகேது 356 ஆம் பக்கத்தில் (45 ஆவது இறுதி அங்கத்தில்  எவ்வாறு சாமகேதுவாக மாறினான்? அச்சில் நேர்ந்த தவறோ தெரியவில்லை.
" எறும்புகள் வெல்லக்கட்டியை இழுத்துக்கொண்டு தனது இருப்பிடத்துக்கு வருவதுபோல் தான் பார்த்த உலகை தனது இருப்பிடத்திற்கு இழுத்துக்கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சியின் விளைவுதான் தனது எழுத்துலகம்" என்று சொல்பவர் எஸ். ராமகிருஷ்ணன்.
அந்த உலகை எங்களுடன் பகிர்ந்துகொள்வதனால் இந்திய வரலாற்றில் ஔரங்கசீப்பின் காலத்தையும் அக்கால மாந்தர்களையும் சமகாலத்துடனும் இக்கால மாந்தர்களுடனும் ஒப்பீடுசெய்துகொள்கின்றோம்.
( அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வாசிப்பு அனுபவப்பகிர்வில் சமர்ப்பிக்கப்பட்ட  உரை)
letchumananm@gmail.com







No comments: