அம்மாவின் பார்வை அப்பாவுக் கிருக்காது
அக்காவின் பார்வை அண்ணாவுக் கிருக்காது
ஆசிரியர் பார்வை மாணவர்க் கிருக்காது
ஆனாலும் பார்வைகள் அர்த்தத்தை அளித்துவிடும் !
கற்றறிந்தார் பார்வை கருத்தாக அமைந்துவிடும்
கசடர்களின் பார்வை கண்ணியத்தைக் குலைத்துவிடும்
நற்றவத்தார் பார்வை நானிலத்தைக் காத்துவிடும்
நம்பார்வை ஒன்றே நமையறியச் செய்துவிடும் !
ஆணவத்தார் பார்வை அனைத்தையுமே அழித்துவிடும்
அலைபாயும் பார்வை நிலைகுலைய வைத்துவிடும்
ஞானமுள்ளார் பார்வை நற்கருணை ஆகிவிடும்
ஈனமுடை பார்வை எல்லோர்க்கும் இடைஞ்சலன்றோ !
காளையரின் பார்வை காதல்கதை பேசிநிற்கும்
கன்னியரின் பார்வை நாணமதைக் காட்டிநிற்கும்
கணவர்களின் பார்வை மனைவிமீது பதிந்திருக்கும்
மனைவியரின் பார்வை மாங்கல்யம் தனைநோக்கும் !
வள்ளுவரின் பார்வை வாழ்வியலாய் ஆகிருக்கு
வள்ளலாரின் பார்வை மனுக்குலத்தை பார்க்கிறது
கள்ளமிலா விவேகானந்தர் பார்த்துநின்ற பார்வை
உள்ளமதில் ஆன்மீக உணர்வுதனை ஊட்டியது !
நபிபார்வை யேசுபார்வை நாட்டுக்கே உதவியது
நால்வரது பார்வையினால் நற்கருத்தே பரவியது
புத்தர்பார்வை காந்திபார்வை புத்தியினை மாற்றியது
சத்தியத்தைப் பார்த்துவிடின் சகலதுமே மாறிவிடும் !
நீதிக்கும் பார்வையுண்டு நேர்மைக்கும் பார்வையுண்டு
வாதிக்கும் மனிதருக்கு வகைவகையாய் பார்வையுண்டு
சாதிக்கும் பார்வையுண்டு சண்டைக்கும் பார்வையுண்டு
சன்மார்க்கப் பார்வையினால் சகலருக்கும் நன்மையன்றோ !
எப்பார்வை பார்த்தாலும் தப்பிதமாய் ஆகாமல்
செப்பமாய் யாவருமே பார்ப்பதுதான் சிறப்பன்றோ
முப்போதும் இப்படியே முழுப்பேரும் பார்த்துவிடின்
முழுமுதலாம் இறைவனது முழுப்பார்வை கிடைக்குமன்றோ !
No comments:
Post a Comment