கருத்துக்கள் சங்கமித்த 'ரஸஞானி' ஆவணப்படக்காட்சியும் பெண்கள் மாத்திரமே உரையாற்றிய சொல்லவேண்டிய கதைகள் நூல் வெளியீட்டு விழாவும்


-->
                  

           
எழுத்தாளர்  முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டு விழாவும்  முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடலும் கடந்த   30 ஆம் திகதி  சனிக்கிழமை மாலை மெல்பனில்,   பிரஸ்டன் நகர மண்டபத்தில்,  இலங்கையின் மூத்த எழுத்தாளர் (அமரர்) மருதூர்க்கனியின்  மகள் மருத்துவக்கலாநிதி  திருமதி வஜ்னா ரஃபீக் தலைமையில் நடைபெற்றது.
திருமதிகள் ஜெஸி ரவீந்திரன், சாந்தநாயகி  கிருஷ்ணமூர்த்தி, பவானி கிருஷ்ணமூர்த்தி,  சித்ரா லயனல் போப்பகே,  கமிலா ஹனிஃபா, யாழ். இந்துக்கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் விக்ரோரியா கிளையின் தலைவர்  திரு.' லயன்'  சக்தி கிருஷ்ணபிள்ளை,   மூத்த கல்விமான்  யூசுப் முஸ்தபா,  கலாநிதி மு. ஶ்ரீ கௌரிசங்கர் ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவை தொடக்கிவைத்தனர்.
செல்வி மோஷிகா பிரேமதாசவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இவ்விழா, செல்வி ஹரினி ஶ்ரீதரனின் தமிழ்வாழ்த்துப்பாடலுடன் தொடங்கியது.
திருமதிகள் அரீஸா நஜிமுன்னிஸா , ரேணுகா தனஸ்கந்தா, சாந்தி சிவக்குமார்,  கலாநிதி  கௌசல்யா அந்தனிப்பிள்ளை ஆகியோர் நூல் விமர்சனவுரை நிகழ்த்தினர்.

நூலின் முதல் பிரதிகளை முருகபூபதியின்  பேத்தி ஆண்யா முகுந்தன், பிரதம விருந்தினர்களுக்கு வழங்கினார்.
நூலாசிரியர் லெ. முருகபூபதியின்  ஏற்புரை நிகழ்த்தினார்.  ரஸஞானி ஆவணப்படத்தின் இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் குறிப்புகளையடுத்து, படம் காணபிக்கப்பட்டது.
மெல்பனைச்சேர்ந்த எழுத்தாளர்கள் ஜே.கே., ஆவூரான் சந்திரன், மாவை நித்தியானந்தன், நடேசன், இலங்கையைச்சேர்ந்த படைப்பாளிகள் கருணாகரன், 'ஞானம்' ஆசிரியர் ஞானசேகரன், அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி செ. ரவீந்திரன்,  தமிழ் அகதிகள் கழகத்தின் முன்னாள் தலைவர் எஸ்.கொர்ணேலியஸ், இலங்கை மாணவர் கல்வி நிதியத்தைச்சேர்ந்த வித்தியா ஶ்ரீஸ்கந்தராஜா, விமல் அரவிந்தன், இராஜரட்ணம் சிவநாதன், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பொதுச்செயலாளரும் மனித உரிமை ஆர்வலருமான லயனல் போப்பகே, அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தைச்சேர்ந்த கௌசல்யா அந்தனிப்பிள்ளை ஆகியோர் ரஸஞானி ஆவணப்படத்தில் முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் பற்றிய தத்தமது பார்வைகளை பகிர்ந்துள்ளனர்.
முருகபூபதி மேற்குறிப்பிட்ட அமைப்புகளில் அங்கம் வகித்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஒலி, ஒளிப்பதிவுடன்  இதனைத் தயாரித்து வெளியிட்டவர்  மெல்பன் மயூர் வீடியோ மூர்த்தி.
---0---






No comments: