உலகச் செய்திகள்


ஐ.எஸ். தலைவர் உணவில் விஷம் ;  இரகசிய இடத்தில் வைத்திய சிகிச்சை

ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் ; மருத்துவமனை அறிக்கையால் பரபரப்பு

 ‘ஜனாதிபதி தான் என் அப்பா’ : பாலியல் தொழிலாளியின் மகன் சமூகவலைத்தளத்தில் உதவி கோரல்

ஜெயலலிதா உடல் நிலை : உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

ஐ.நா வின் புதிய பொதுச் செயலாளர் நாயகம் தெரிவு

ரோமன் கத்தோலிக்க திருச்சபையும் ,அங்கிலிகன் திருச்சபையும் இணைகின்றனர்













ஐ.எஸ். தலைவர் உணவில் விஷம் ;  இரகசிய இடத்தில் வைத்திய சிகிச்சை

04/10/2016 ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கல் அல் பாக்தாதியின் உணவில் விஷம் வைத்து கொலை செய்வதற்கான சதிச்செயலொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அபுபக்கல் அல் பாக்தாதியின் பகல் உணவில் விஷம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இரகசிய இடமொன்றில் வைத்து  வைத்திய சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த விஷமூட்டப்பட்ட உணவு ஐ.எஸ். அமைப்பின் முக்கிய மூன்று படைத்தளபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதெனவும், அவர்களுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்  உணவில் விஷம் கலந்தவர்களை ஐ.எஸ். அமைப்பினர் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  நன்றி வீரகேசரி 













ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் ; மருத்துவமனை அறிக்கையால் பரபரப்பு

04/10/2016 தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள இறுதி மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ குறிப்புகள் அடங்கிய நான்காவது மருத்துவ அறிக்கை நேற்று இரவு வெளியிட்டப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து, அவருக்கு சிகிச்சையளித்துவரும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுவரும் அறிக்கைகள் தற்போது குழப்பத்தை அதிகரித்துள்ளன. 
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம், 22 ஆம்  திகதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு நீர்ச்சத்து இழப்பு, சளித்தொல்லை என்று காரணம் கூறி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தனது மருத்துவ அறிக்கையை வெளியிட்டது. 
இரண்டாவது அறிக்கையில், தமிழக முதல்வர் நல்ல உணவு உட்கொள்கிறார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்று அறிக்கையளிக்கப்பட்டது. 

அதேநேரம், முதல்வர் ஜெயலலிதா சில தினங்களில் வீட்டுக்கு அனுப்பப்படுவார். அதன்பிறகு அவருடைய அலுவல்களை பார்க்க முடியும் என்று அப்பல்லோ தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அப்பல்லோ அளித்த மூன்றாவது மருத்துவ அறிக்கையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல் மருத்துவ சிகிச்சை அளிக்கிறார். ஜெயலலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றுக்கு மருத்துவர் ரிச்சர்ட் தெரிவித்ததன் பிரகாரம் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சினைக்கு எதற்காக, லண்டன் வைத்தியர் இங்கு வந்துள்ளார் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும், பொதுமக்களுக்கு பல்வேறு ஐயங்கள் எழத் தொடங்கின.
அப்பல்லோவின் இரண்டாவது, மூன்றாவது மருத்துவ அறிக்கையில் ஜெயலலிதா அப்பல்லோவில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் எனவும், அதிலும் குறிப்பாக மூன்றாவது அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு நோய்த்தொற்று என குறிப்பிட்டுள்ளது. 
இது கூடுதல் தகவலாகும். நோய்த்தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தாலும், எந்த மாதிரியான நோய்த் தொற்று, அதன் தீவிரம் என்ன என்பதை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில்தான், மூன்றாவது அறிக்கையைவிட,  அதிக மருத்துவ குறிப்புகள் அடங்கிய நான்காவது அறிக்கையை அப்பல்லோ மருத்துவமனை நேற்று இரவு வெளியிட்டுள்ளது. அதில் ஜெயலலிதா, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக முதல் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவாசப் பிரச்சினை இருப்பதால்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. மெல்லமெல்ல, ஜெயலலிதா பெறும் சிகிச்சைகளை அப்பல்லோ மருத்துவமனை தற்போது வெளியிட தொடங்கியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா உடல் நிலை மோசமாக இருப்பதால்தான், அப்பல்லோ மருத்துவமனை இதுகுறித்த கூடுதல் தகவல்களை வெளியிட ஆரம்பித்துவிட்டது என்கின்றனர் ஒரு பிரிவினர்.
மற்றொரு பிரிவினர் இதை ஆரோக்கியமான நடவடிக்கையாக பார்க்கிறார்கள். ஜெயலலிதாவின் உடல் நிலை முன்பைவிட தேறிவருகிறது. எனவேதான் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், இவ்வளவு தைரியமாக அவர் செயற்கை சுவாச சிகிச்சையில் இருக்கிறார் என்பதை வெளியிட்டுள்ளது. எனவே ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று வாதிடுகிறது ஒரு தரப்பு.
ஆனால், அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுவரும் அறிக்கைகளை கவனிப்போருக்கு ஒரு விடயம் புரியும். முதல் இரு அறிக்கைகளிலுமே, ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என குறிப்பிட்டு வந்த அப்பல்லோ மருத்துவமனை, கடந்த இரு அறிக்கைகளில், அவர் மருத்துவமனையில் மேலும் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார் என்றுதான் தெரிவித்துள்ளது. 
எனவே ஜெயலலிதா எப்போது வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார் என்பதில் அப்பல்லோ மருத்துவமனை குழம்பியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும். அடுத்த அறிக்கையில் அடுத்த சில நாட்களிலேயே ஜெயலலிதா வீடு திரும்ப வேண்டும் என்று அப்பல்லோ குறிப்பிட வேண்டும் என்பதே அனைவரது வேண்டுதலும் ஆகும்.    நன்றி வீரகேசரி 










 ‘ஜனாதிபதி தான் என் அப்பா’ : பாலியல் தொழிலாளியின் மகன் சமூகவலைத்தளத்தில் உதவி கோரல்

04/10/2016 அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பில் கிளிண்டன் தனது தந்தை என பாலியல் தொழிலாளி ஒருவரின் மகன் தகவல் வெளியிட்டுள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பரபரப்பு தகவலை டேன்னி வில்லியம்ஸ் என்ற 30 வயதான நபர் தான் வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ள அவர், ‘பில் கிளிண்டன் கடந்த 1984 ஆம் ஆண்டு ஆர்கன்சாஸ் மாகாண ஆளுநராக பதவி வகித்து வந்தார். அப்போது, பாலியல் தொழில் செய்து வந்த எனது தாய் பில் கிளிண்டனை சந்தித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் பழக்கம் அதிகரிக்க பில் கிளிண்டனுடன் எனது தாய் உடல் உறவு வைத்துக்கொண்டார். இதற்காக பில் கிளிண்டன் எனது தாயாருக்கு 200 டொலர் கட்டணமாக கொடுத்தார்.இதன் பிறகு ஒரு வருடமாக இருவரும் பழக்கத்தில் இருந்தபோது எனது தாய் கர்ப்பமடைந்தார். இதனை பில் கிளிண்டனிடம் தெரிவித்தபோது ‘வயிற்றில் இருப்பது எனது குழந்தையில்லை’ என மறுத்து விட்டார்.
ஆனால், பில் கிளிண்டன் தான் எனது தந்தை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.கடந்த 1992 ஆம் ஆண்டு பில் கிளிண்டனின் டி.என்.ஏ இணை செய்தி நிறுவனமொன்று பரிசோதனை செய்தபோது அவர் எனது தந்தையில்லை என என்னிடம் கூறினார்கள்.
பில் கிளிண்டனை காப்பாற்ற இதுபோன்ற போலியான பரிசோதனையை அவர்கள் செய்துள்ளனர்.பில் கிளிண்டன் தான் எனது தந்தை. இதனை நிரூபிக்க அவரது டி.என்.ஏ இணை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டுமென டேன்னி வில்லியம்ஸ் தற்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
பில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளிண்டன் தற்போது அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் மீண்டும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நன்றி வீரகேசரி 














ஜெயலலிதா உடல் நிலை : உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை



05/10/2016 தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து உரிய விவரங்களை, தமிழக அரசு 6 ஆம் திகதிக்குள் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் “முதலமைச்சர் ஜெயலலிதா திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 22 ஆம் திகதி சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க இலண்டனில் இருந்து வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 
அவருக்கு என்ன நோய்? என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகம் அவ்வப்போது, முதலமைச்சர் நன்றாக இருக்கிறார் என்று செய்திக் குறிப்பை மட்டும் வெளியிட்டு வருகிறது. புகைப்படம், வீடியோ ஆதாரங்களை வெளியிடுவதில்லை. இதனால் வதந்திகள் பரவி பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்படுகிறது. 
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, முதலமைச்சரின் உடல் நலம் குறித்த உண்மை நிலையை அறிக்கையாக வெளியிடவேண்டும் என்று கூறியிருந்தேன். இந்த மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும். 
முதலமைச்சர் வைத்தியசாலையில் உள்ளதால், அவர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் எல்லாம் முடங்கி விட்டன. அவர் உடல் நலம் சரியாகும் வரை, இடைக்கால முதலமைச்சர் ஒருவரை நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள், முதலமைச்சரின் உடல் நிலைபற்றி வருகிற 6 ஆம் திகதிக்குள் தமிழக அரசு உரிய விவரங்களை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர்.    நன்றி வீரகேசரி 
















ஐ.நா வின் புதிய பொதுச் செயலாளர் நாயகம் தெரிவு

06/10/2016 ஐக்கிய நாடுகளின் செயலாளராக போர்த்துக்கலின் முன்னாள் பிரதமர் அந்தோனியோகுட்டெர்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இவர் ஐக்கிய நாடுகளின் அகதிகளின் தூதராக  10 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 நன்றி வீரகேசரி 














ரோமன் கத்தோலிக்க திருச்சபையும் ,அங்கிலிகன் திருச்சபையும் இணைகின்றனர்

06/10/2016 உலகில் நிலவுகின்ற வறுமையினை ஒழிக்கவும், சுற்றுச்சூழலைக் பாதுகாக்கவும் இணைந்து பாடுபடப்போவதாகப் திருதந்தை  பிரான்ஸ் மற்றும் அங்கிலிகன் திருச்சபைத் தலைவர் ஜஸ்டின் வெல்பியும் (Justin Welby) அறிவித்துள்ளனர்.
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ், அங்கிலிகன் திருச்சபைத் தலைவர் ஜஸ்டின் வெல்பி ஆகியோர் இத்தாலி தலைநகர் ரோமில் சந்தித்துப் பேசியுள்ளனர். அதன்பின் கூட்டறிக்கை வெளியிட்ட அவர்கள் ஏழைகளுக்கு உதவுவதிலும், சுற்றுச்சூழலைக் பாதுகாப்பதிலும் இரு திருச்சபைகளும் இணைந்து செயல்படத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தனர். 
1534ஆம் ஆண்டுக்குப் பின் இரு சபைகளுக்கிடையிலும் தொடர்பின்றி இருந்த நிலையில் 1966ஆம் ஆண்டு அங்கிலிகன் திருச்சபைத் தலைவர் மைக்கேல் ராம்சே, அப்போதைய திருத்தந்தையான 6 ஆம் போலைச் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. 
உலகம் முழுவதும் அங்கிலிகன் திருச்சபையின் கீழ் எட்டரைக் கோடிப் பேரும், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் கீழ் 120 கோடிப் பேரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 


















No comments: