.
வீரமொடு கல்விசெல்வம் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை
பார்மீது வாழுதற்கு பலருக்கும் தேவையிவை
ஊரெல்லாம் யாவருமே கொண்டாடி மகிழுமிந்த
உயர்ந்த நவராத்திரியை உணர்வுடனே கடைப்பிடிப்போம் !
வீரமொடு கல்விசெல்வம் வீணாகிப் போவதனை
பாரினிலே பார்க்கையிலே பதைபதைப்பே வருகிறது
ஊருக்கும் உதவாமல் உழைத்தவர்க்கும் சேராமல்
சேராதவிடம் சேர்ந்து செயலொடுந்து போகிறதே !
முச்செல்வம் பெறுவதற்கு முத்தேவிதனைத் துதிக்க
இத்தரையில் நவராத்ரி இப்போது நடக்கிறது
அத்தேவி அனைவரையும் அகமார வேண்டிநாம்
சித்தமுடன் துதித்துநின்று சிந்தனையைத் திருத்திடுவோம் !
உயர்ந்தசெல்வம் எதுவென்று உரத்தகுரல் எழுப்பிநின்று
பட்டிமன்றம் போடுவதில் பலனெதுவும் இல்லையப்பா
துட்டகுணம் உள்ளோரின் கைசேர்ந்த செல்வமெலாம்
தூய்மைபெற வேண்டுமென்று துதித்திடுவோம் தேவியிடம் !
கல்வியில்லார் கரயேறக் காட்டிடுவோம் நல்லவழி
காசில்லார் வாழ்வதற்குக் கண்டிடுவோம் புதியவழி
வீரமதை விவேகமுடன் விதைத்திடுவோம் மனமெல்லாம்
மலைமகளும் அலைமகளும் கலைமகளும் மகிழ்ந்திடுவார் !
No comments:
Post a Comment