என் கடவுள் - வா மணிகண்டன்

.



கவிதைகளிலிருந்து நாம் எதை எடுத்துக் கொள்வது என்று கேட்டால் என்ன பதிலைச் சொல்வது என்று குழப்பமாகத்தான் இருக்கிறது. ‘இதுதான்’ என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒரு குழந்தை அழுவதைப் பார்ப்பதைப் போல, ஓர் இலை உதிர்தலை கவனிப்பதைப் போல, சலனமில்லாத குளத்து நீரை உற்று நோக்குவதைப் போல, யாருமற்ற கடற்கரையில் கால்களை வந்து தொட்டுச் செல்லும் அலைகளை பார்த்துக் கொண்டிருப்பது போல- ‘இது மட்டும்தான்’ என்று சொல்ல முடியாத- ஆனால் மனதுக்கு நெருக்கமான உணர்ச்சி அது.

கவிதைகள் புரியவில்லை என்பதுதான் அடிப்படையான குற்றச்சாட்டு. கவிதை என்ற சொல் இருந்தாலே அடுத்தப் பக்கத்துக்குத் தாவிவிடுவேன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறவர்கள் அதிகம். அப்படி தவிர்த்துவிடுவதால் கவிதைக்கு எந்த நஷ்டமுமில்லை. தன்னுடைய கவிதையை யாராவது முப்பது பேர் வாசித்தாலே அது பெரிய விஷயம் என்பது பெரும்பாலான கவிஞர்களுக்கும் தெரியும். கவிஞர்களே கூட அடுத்த கவிஞர்களின் கவிதைகளை வாசிப்பதில்லை. தமிழ்நாட்டில் தன்னுடைய கவிதைகளைத் தவிர பிறருடைய கவிதைகளை வாசிக்காத கவிஞர்கள்தான் அதிகம். நம்பிக்கையில்லையென்றால் ஆராய்ச்சி செய்து பார்த்து முடிவுக்கு வந்துவிடலாம். ஆக, நாம் வாசிக்காமல் விடுவதால் கவிதை மூலையில் அமர்ந்து முக்காடிட்டு அழப் போவதில்லை.

கவிதையை வாசிக்க விரும்புகிறவர்கள் எளிமையான கவிதைகளிலிருந்து ஆரம்பிக்கலாம். சுகுமாரனிடம் முதன் முதலில் பேசிய போது இந்த அறிவுரையைத்தான் சொன்னார். ‘அட, இவ்வளவுதானா?’ என்று நினைக்க வைக்கிற கவிதைகளாகத் தேர்ந்தெடுத்து வாசிக்க வேண்டும் என்றார்.  அத்தகையை கவிதைகளை வாசித்துப் பழகிவிட்டால் அடுத்தடுத்த எட்டு வைப்பதற்கு எளிமையாக இருக்கும். எடுத்த உடனேயே பிரம்மராஜனின் கவிதைகளை வாசித்துவிட்டு ‘சோலி சுத்தம்’ என்று மூடி வைத்தால் ஒன்றும் செய்வதற்கில்லை. 

எளிமையான கவிதைகளை எப்படிப் பிடிப்பது? ரொம்பச் சுலபம். முதல் மூன்று வரிகளில் பிடிபட்டுவிடும். மூன்றாவது வரியிலேயே கவிதை புரியத் தொடங்கிவிட்டால் தைரியமாகத் தொடர்ந்து வாசிக்கலாம். இல்லையென்றால் தாண்டி ஓடி விடுவது உசிதம். தபசியின் இந்தக் கவிதை அப்படியானதுதான்.



கடவுள்
எந்த ரூபத்தில்
காட்சி தருவார் என்பது
யாருக்குமே தெரியாது.

நேற்றுப் பாருங்கள்
கடவுள்
ஒரு Eureka Forbes நிறுவன
விற்பனைப் பிரதிநிதியாய்
வீட்டிற்கு வந்திருந்தார்.

வீடு பெருக்கித் துடைக்கும்
ஒரு இயந்திரத்தைக் காட்டி
அதன் செயல் நுணுக்கங்களை
விளக்கினார்.
எப்படியோ
கடவுளின் புண்ணியத்தில்
ஒரு பத்தாயிரம் ரூபாய்
கடனாளியானேன்.

கடவுளை
ஒரு லிமிசி ஏஜெண்டாக
நினைத்துப் பார்ப்பது
கொஞ்சம் துரதிஷ்டவசமானதுதான்
என்றாலும்,
வாழ்வையும், சாவையும் பற்றிப் பேச
அவரை விடப் பொருத்தமான ஆள்
வேறு யார் இருக்க முடியும்?

கடவுள்
பெண்கள் ரூபத்திலும் வரலாம்.
சில நேரம்
என் மனைவி குளித்துவிட்டு
மஞ்சள் பூசி
என் முன் வரும் போது,
கை எடுத்து வணங்கத் தோன்றும்.

இப்போதெல்லாம்
கடவுள்
செல்போன் திருடனாக வருகிறார்.

வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி
மோசடி செய்யும்
'டிப்டாப்' ஆசாமியாக வருகிறார்.

பல வருடங்களாக
ஊர்ப் பக்கமே திரும்பாத கடவுளை
ஓட்டுக் கேட்க வந்தபோது
எங்கள் ஊர் மக்கள்
மரத்தில் கட்டி வைத்து உதைத்தது
தனி ஒரு கதை.

எனக்கொரு சிறு சந்தேகம்
கடவுளுக்கு ஏதும்
உணர்ச்சி இருக்குமா என்று?
இருக்கத்தான் வேண்டும்
இல்லையென்றால்
மேலதிகாரி திட்டும் போது
எனக்கேன் கோபம் வர வேண்டும்?

தபசி

புரிந்து கொள்ள எந்தச் சிக்கலும் இல்லாத கவிதை. வாசித்து முடித்தவுடன் உதட்டருகில் மென் புன்னகையை வரவழைக்கிறது அல்லவா? இப்படியான கவிதைகள்தான் கவிதை உலகத்திற்குள்ளான படிக்கட்டு. வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். பேசலாம்.

Nantri http://www.nisaptham.com/