எமைப்பார்த்து நகைத்துவிடும் ! - ( எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

.
      இலக்கியங்கள் இலக்கணங்கள் எவ்வளவு படித்தாலும்
      தலைக்கனங்கள் போகாமல் தடுமாறி நிற்கும்பலர்
      இருக்கின்றார் எம்மிடத்தில் எனநினைக்கும் வேளையிலே
      இலக்கியமும் இலக்கணமும் எமைப்பார்த்து நகைத்துவிடும் !

      பட்டங்கள் பலபெற்றும் பண்புதனைப் பறக்கவிட்டு
      துட்டகுணம் மிக்கோராய் தூய்மையற்று நிற்குமவர்
      பட்டங்கள் அத்தனையும் வட்டமிட்டு வானில்செல்லும்
      காகிதப் பட்டங்களாகவன்றோ கண்ணுக்குத் தெரிகிறது !

     பாடுபட்டுப் படிக்கின்றார் பலபதவி வகிக்கின்றார்
     கூடுவிட்டுப் பாய்வதுபோல் குணம்மாறி நின்கின்றார்
     கேடுகெட்ட செயலாற்றி கிராதகராய் மாறுமவர்
     பாடுபட்டுப் படித்ததெல்லாம் பயனற்றே போகிறதே !

    படிப்பறியார் பலபேர்கள் பண்புணர்ந்து வாழ்கின்றார்
    பட்டம்பெற்ற படித்தவர்க்கோ பண்புபற்றிக் கவலையில்லை
    மனம்போன போக்கிலவர் வாழவெண்ணி நிற்பதனால்
    நயமான கல்வியினை நாசம்பண்ணி நிற்கின்றார் !

    கீதையொடு குறள்படித்தும் பாதை தடுமாறுகின்றார்
    போதையிலே நாளுமவர் புரண்டுமே உழலுகின்றார்
    காதிலெவர் சொன்னாலும் கவனமதில் கொள்ளாமல்
    மோதியே மிதிப்பதையே முழுமையாய் நம்புகின்றார் !

    கற்றதனால் பயனென்ன எனக்கேட்ட வள்ளுவனார்
    கண்திறந்து பார்த்தவர்க்கு கருத்துரைக்க வந்ததாலும்
    கற்றகல்வி பட்டங்கள் காற்றிலவர் பறக்கவிட்டு
    காசையே அணைத்தபடி கண்ணியத்தை பாரார்கள் !