யாழ்ப்பாண யாத்திரை - கானா பிரபா

.


"என்னண்ணை அவுஸ்திரேலியாவில இருந்து வந்ததாச் சொல்லுறியள் ஆனால் உங்களைப் பார்க்க அப்பிடித் தெரியேல்லையே" வெள்ளவத்தை, கொழும்பில் இருக்கும் ஒரு கடைக்கார இளைஞன் பேசினார்.
எனக்கு இதைக் கேட்டதும் உள்ளூரப் புழகாங்கிதம், அதை வெளியில் காட்டாமல் சிரித்துக் கொண்டே அவருடன் சம்பாஷணையைத் தொடர்ந்தேன். 

இருபது வருடங்கள் என் தாயகத்தை விட்டுப் புலம் பெயர்வாழ்வில் குடி கொண்டு விட்டேன். அதில் முதல் ஒன்பது ஆண்டுகள் தாய் நாட்டுக்கே போக முடியாத சூழலிலும் அகப்பட்டு, அதன் பின் என்னுடைய ஒவ்வொரு தாயகப் பயணமும் மீண்டும் அந்தப் பழைய உலகத்து மனிதனைப் போல பிறப்பெடுத்துத் தான் ஊருக்குப் போவேன், அலைவேன், நான் சந்தித்துப் பழகிய மனிதர்களை மட்டுமல்ல, கொண்டாடித் தீர்த்த இடங்களையும் கூடப் பார்த்து வருவேன்.
எனக்கான இந்த ஊர் வலத்துக்குச் சவாரி கொள்ள என் சைக்கிள் காத்திருக்கும்.
நான் வாழ்ந்து பழகிய இடங்களில் சரிக்குச் சரியாக சந்தோஷமும், இழப்புகளும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும்.  





இணுவில் கிராமத்தில் இருந்து யாழ்ப்பாண நகரப் பகுதிக்குப் படிக்கப் போன அந்த வசந்த காலத்துக் காதல் நினைவுகளைக் காட்டிக் கதை சொல்லி எனக்குள் சிரிக்க வைத்துக் கதை சொல்லும் வீதிகள் தான், இதற்குப் பக்கத்தில் நான் இருந்து விட்டுப் போன சில கணத்தில் தானே இன்னொரு குடும்பம் ஷெல் அடியில் அகப்பட்டு மாண்டு போனது. 
இந்தக் கால்வாய் மதகுக்குள் தானே சுற்றி வட்டமிட்ட விமானம் வீசப் போகும் குண்டு வீச்சுக்குப் பயந்து சைக்கிளைப் போட்டு விட்டு பொத்தென்று விழுந்து உருண்டு படுத்தது என்று இருண்ட நாட்களையும் காட்டிக் கொண்டே வரும்.
இதெல்லாம் ஒவ்வொரு தாயகப் பயணத்திலும் நடக்கும் கதை என்றாலும் அது ஏனோ எனக்கு ஒவ்வொரு தடவையும் புதிதாய்த் தோன்றும்.

இந்தத் தடவை எனது தாயகப் பயணம் திடீர் திட்டமிடல் மட்டுமல்ல, மிகக் குறுகிய காலப் பயணம். ஆனாலும் என்னுடைய வழக்கமான ஊர் வலத்திலும் சமரசம் செய்து கொள்ளாத பயணமாக அமைந்து விட்டது.
இருபது வருடங்களுக்கு முன்னர் நண்பர்களோடு சென்று பார்த்த கண்டி நகருக்கு இம்முறை தனியனாக எக்ஸ்போ சொகுசு ரயிலில் பயணிக்கிறேன்.  தலதா மாளிகைக்கு முன்னால் நின்று அடுத்து எங்கே போவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது கண்டிக்கு நான் வந்த செய்தி கண்டு ஃபேஸ் புக் வழியாக அறிமுகமான கண்டி வாழ் நண்பர் தயாபரன் தொடர்பு கொண்டு உடனேயே வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு வந்து விட்டார். 
தலதா மாளிகைக்குப் பக்கத்தில் இருந்த தேநீர்ச் சாலை சென்று ஊர்க்கதைகள் பேசினோம். சிட்னியில் இருந்து வந்த களைப்பு எட்டிப் பார்க்க, இதற்கு மேல் ஊர் சுற்ற முடியாது என்று மனம் சொல்லியது.
பின்னர் கொழும்பு போகும் பஸ்ஸில் என்னைப் பத்திரமாக அனுப்பி விட்டார்.

பூபாலசிங்கம் புத்தகசாலை வெள்ளவத்தைக் கிளைக்கு ஒருக்கால் போய் எட்டிப் பார்த்துத் திரும்பினேன். இன்னொரு தமிழ்ப் புத்தகக் கடைக்குப் போய் என் பால்ய காலத்தில் ஆட்கொண்ட சித்திரக் கதைப் புத்தகங்களின் நினைவில், இப்போதும் தமிழகத்தில் இருந்து வரும்  முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் கிடைக்குமா என்று கேட்டேன். "அப்படியெண்டா என்ன" என்று கேட்டார் கடையில் பணி புரிந்த பெண்மணி.

ஒரு காலத்தில் LP Records இன் இசை சாம்ராஜியமாக வெள்ளவத்தையில் ஃபைனாஸ் மியூசிக் மற்றும் இன்னொரு கடை கொஞ்சம் தள்ளி எதிர்ப்புறமிருந்த அடுக்குமாடி வளாகத்தில் இருந்தது (பெயர் மறந்து விட்டது). அங்கு இல்லாத பாடல்களே இல்லை எனும் அளவுக்கு நிறைந்த இசைக் களஞ்சியங்கள் அவை. ஒலி நாடாக்களில் பாடல்களைப் பதிவு பண்ணிக் கேட்ட காலம் அது.
இம்முறை கொழும்பில் நான் சுற்றிய இடங்களில் தமிழில் ஒரிஜினல் CD இசைத்தட்டுகளை விற்கும் கடைகளைக் காண்பது குதிரைக் கொம்பு. பொலித்தீனில் நிரப்பிய பிரதி பண்ணப்பட்ட இசை வட்டுகளும், படங்களுமே அதிகம். இந்த நிலை யாழ்ப்பாணத்திலும் தான்.
வெள்ளவத்தை CD World இற்குப் போன தடவை சென்ற போது சில பொக்கிஷங்களைக் கண்டேன். 
இசைத்தட்டுகளுக்கும், புத்தகங்களுக்கும் விநியோக முறையில் சவாலான சூழல் நிலவுகிறது.

இந்தத் தடவை என் தாயகப் பயணத்தில் எண்பதுகளில் நாம் ஆண்டு அனுபவித்த தமிழ்ப் பட இசை LP Records இன் தேடுதல் வேட்டை இருந்தது. "கைலாசப் பிள்ளையார் கோயிலடியில் ஒருத்தரின் கடையில் இருக்காம்" நாவலர் றோட்டில் இருந்த சீடி கடை இளைஞன் சொன்னார். 
"சீச்சீ அங்கை இல்லை பாஷையூர் அந்தோனியார் கோயில் பக்கம் ஒருத்தர் கொண்டு வந்து விக்கிறாராம்" பக்கத்தில் நின்ற ஆட்டோக்காரர் சொன்னார்.
அடுத்த நாள் சைக்கிளை மிதித்துக் கொண்டு யாழ்ப்பாணம் நோக்கிப் பயணம்.


வழியெல்லாம் என்னை ஒரு காலத்தில் ஆட்கொண்ட இடங்களில் சில நிமிடங்கள் நின்று மெளனித்தேன். பூட்டப்பட்டிருக்கும் மனோகரா தியேட்டரில் இருந்து வெட்ட வெளியாகியிருக்கும் வெலிங்டன் தியேட்டர் வரை பயணம் தொடர்ந்தது.  இந்த வின்சர் தியேட்டரை யாராவது கைப்பற்றி பழைய காலத்தில் இருந்த அந்தப் பவுசைக் கொடுத்துத் தியேட்டர் ஆக்குவார்களா என்ற நப்பாசையை மனது அந்த நேரம் வெளிப்படுத்தியது.
ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்துச் சினிமா உலகின் சொர்க்கபுரி இந்த வின்சர் பின்னர் களஞ்சிய அறை ஆக்கப்பட்டு இன்று தன் அடையாளத்தைத் தேடல் கூட இடமில்லாது.

ராஜா தியேட்டர்

 
வின்சர் தியேட்ட இருந்த கட்டடம்
வெலிங்டன் தியேட்டர் இருந்த இடம்

"தம்பி நியூ விக்டேர்ஸ் இந்தப் பக்கம் தானே" என்னைக் கடந்து சென்ற முப்பது வயது மதிக்கத் தக்க உருவமுள்ள பையன்களைக் கேட்டேன். 
"அப்பிடியெண்டா என்னெண்டு தெரியாது அண்ணை" என்று கை விரித்துக் கொண்டே கடந்து போயினர். 
நானே தேடிக் கண்டு பிடித்தேன். 
எண்பதுகளிலே கட்டிய மூன்று மாடி நவீன ஒலிப்பதிவு கூடம் அது. ஸ்ரான்லி வீதியில் நின்றாலே தன்னிடத்துக்கு வழி காட்டும் அந்தக் கூடத்தில் இருந்து பெருகி வரும் பாடல்கள்.
அந்தக் காலத்தில் எனக்கு இசை வரமளித்த அந்தப் பென்னம் பெரிய வெள்ளைக் கூடம் தனிமைச் சிறையில் நின்று அழுது கொண்டிருக்குமாற் போலப் பட்டது.
முன்னால் உடைந்த சீமெந்துச் சிதிலங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. 

"நியூ விக்டேர்ஸ்" மேல் படத்தில்

சைக்கிளை உருட்டி ஏறிக் கொண்டு குருநகர் எல்லாம் கண்டு பாஷையூர் நோக்கிப் போனேன். 
பல வருடங்களுக்குப் பின் கடலோரக் கிராமங்களைக் கண்டு கொண்டே பாஷையூர் வந்தேன். முதன் முதலாக பாஷையார் புனித அந்தோனியார் கோயில் உள் சென்று தரிசனம் முடித்து விட்டுத் திரும்பினால் ஆலயத்தின் உட் பிரகாரத்தில் ஒரு ஒன்பது மாதக் குழந்தை என்னைப் பார்த்துப் பல் இல்லாத முரசு தெரியச் சிரித்தது. தன் பாட்டியோடு வந்திருந்தது அந்தக் குட்டி.

அந்தோனியார் கோயிலுக்கு வெளியில் இருந்த கடைகளில் LP Records விற்பவர் குறித்து விசாரித்தேன். பூச்சியம் தான் பதிலாகக் கிட்டியது. 
"சண்டை நடக்கேக்கை சனம் இதையெல்லாம் உடைச்சுப் போட்டுட்டு ஓடியிருக்கும்" என்றார் ஒருவர். அதற்குப் பிறகு LP Record தேடலிலும் நாட்டமில்லாமல் போனது.

 பாஷையூர் புனித அந்தோனியார்
பாஷையூரில் எம்.ஜி.ஆர் சிலை




மேலே உள்ள படங்கள் குருநகர் பகுதியில் எடுக்கப்பட்டவை

நயினை நாகபூஷணி அம்மன் கோயிலுக்குப் போய் வரவும் ஒரு வெள்ளிக்கிழமை வாய்த்தது. 
இலக்கியாவின் முதல் கடல் பயணம் தாயகத்தில் வாய்த்திருக்கிறது. ஆனால் கடலைப் பார்த்து ரசிக்கும் வயது இன்னும் வரவில்லை. படகில் ஏறிய சக பயணிகளுக்குத் தேர்தல் சமயம் முகம் கொள்ளாச் சிரிப்புடன் கை காட்டும் அரசியல்வாதி போல இலக்கியா.






யாழ்ப்பாணம் பண்ணைப் பாலம் வழியே வேலணை, சரவணை, புங்குடுதீவு கண்டு குறிகாட்டுவான் வழியே படகு மூலம் நயினாதீவு போனோம். காலை 10 மணிப் பூசை கண்டு திரும்பும் போது என் மனைவியின் தாய் வீடு இருக்கும் கரம்பொன்னுக்குப்  போனோம்.  ஊர்காவல்துறை நகரப் பகுதி அந்தக் காலத்துச் சாயம் போகாத பழைமையைப் பறை சாற்றினாலும் முக்கால் வாசி இடிந்ததும் மீதி பூட்டுப் போட்டு ஆளரவம் அற்ற குடியிருப்புகள். 
என் மனைவியின் வீட்டுக்கு முன்னர் போன போது கண்ட கோலம் தான். அதைப் பற்றி முன்னர் இங்கே எழுதியிருக்கிறேன்.

Yarl Entertainment ஷாலினி சார்ள்ஸ் & ப்ரியன் ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாணத்துத் திரைப் படைப்பாளிகளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது இந்தப் பயணத்தின் முக்கியமானதொரு செயற்பாடு. இவர்களோடு மூத்த படைப்பாளி, இயக்குநர் கேசவராஜன், பேஸ்புக் வழியாக அறிமுகமான சகோதரன் மதீசன், கிருத்திகன் உள்ளிட்ட நண்பர்களோடு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இடம்பெற்ற சந்திப்பில் நடப்பு ஈழத்துக் குறும்பட உலகம் சந்திக்கும் அனுபவங்களோடு நம் கடந்த தலைமுறை சாதித்துக் காட்டிய வெற்றிகளையும் பேசிய களமாக அமைந்திருந்தது. வந்திருந்த இளம் கலைஞர்கள் நடிப்பு, இயக்கம், இசை, படத்தொகுப்பு என்று பன்முக ஆளுமை கொண்டவர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். இவர்களுக்குள் தாம் எந்தப் பாதையில் பயணிக்கிறோம் என்ற தெளிவு இருப்பது ஒற்றுமை.
பாலுமகேந்திரா "கதை நேரம்" செய்தது போன்று தேர்ந்த ஈழத்து எழுத்தாளர்களது குறும்படத்துக்கேற்ப பொருந்தும் சிறுகதைகளை எடுத்துக் குறும்படம் ஆக்க வேண்டினேன்.
ஈழத்து மொழி வழக்கைச் சமரசம் இல்லாது நமது படைப்புகளில் புழங்க விட வேண்டும் என்றும் பேசினோம்.
ஈழத்துக் கலை இலக்கியகர்த்தாக்கள் நாட்டுக்கூத்து தனி நடிப்பு, வானொலி, திரைப்படம் போன்றவற்றில் எவ்வாறு தனித்துவமாக விளங்கினார்கள் என்றும், புறக்காரணிகள் ஒரு போதும் நமது படைப்புகளை நுகரும் ரசிகர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்றும், சமரசமில்ல்த நேர்மையான படைப்புகளை நாம் உலக அரங்கு வரை கொண்டு சேர்க்கலாம் என்றும் தக்க உதாரணங்கள் வாயிலாக என் பகிர்வில் குறிப்பிட்டேன்.

மூத்த படைப்பாளி இயக்குநர் கேசவராஜனை எதிர்பாராத விதமாக இந்த நிகழ்வில் சந்தித்தது மறக்க முடியாதது. 
ஒரு படைப்புக்கு முற் தயாரிப்பு வேலைகள் எவ்வளவு தூரம் கச்சிதமாக அமைய வேண்டும் என்பதை திரு.கேசவராஜன் விபரித்தது வெகு சிறப்பு.
சந்திப்பை ஒருங்கிணைத்த படைப்பாளி ஷாலினி சார்ள்ஸ் மற்றும் ப்ரியனுக்கும் வந்து சிறப்பித்த சக படைப்பாளிகளுக்கும் என் நன்றிகள்.

தினக்குரல் வாரமலரில் (24/01/16) எனது பாலித் தீவு நூல் குறித்த ரசனைப் பகிர்வை "சூரன்" கொடுத்திருந்தார். என்னை முந்திக் கொண்டு அப்பா தான் அந்தக் கட்டுரையைப் படித்து விட்டு "பத்திரமா இந்தக் கட்டுரையைப் புத்தகத்துக்குள்ள வச்சிருங்கோ நல்லா எழுதியிருக்கிறார்" என்றார்.

எனது பாலித் தீவு பயணக் கட்டுரைகளை ஈழத்தின் சுடர் ஒளி பத்திரிகையில் வெளியிட்டு முதன் முதலில் தாயகத்தின் பத்திரிகை ஒன்றில் தொடராக எழுத வைத்த நண்பர் ரவி வர்மாவைக் குறுகிய நேரச் சந்திப்பிலாவது கண்டது மகிழ்வைத் தருகிறது. அவரது "வடக்கே போகும் மெயில்" சிறுகதைத் தொகுதியோடு ஒரு தொகுதி நூல்களையும் எனக்குப் பரிசளித்தார்.

சகோதரன் மதீசனின் அழைப்பின் பேரில் "புங்குடுதீவு - சிதைவுறும் நிலம்" ஆவணப்பட வெளியீடு காண யாழ்ப்பாண அரங்கக் கலைகள் கழகம் சென்றேன். ஆனால் அந்த நிகழ்வு தாமதப்பட்டதால் இன்னொரு சந்திப்பின் நிமித்தம் வெளியேற வேண்டியதாயிற்று. இருக்கும் ஒரு நாளில் செய்ய வேண்டியது, பார்க்க வேண்டியது, சந்திக்க வேண்டியவர்கள் என்ற பட்டியல் நீளம். இந்த ஆவணப் படத்தைக் காண வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறேன்.



எங்கள் இணுவில் கந்தன் ஆலயத்தில் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தைப்பூச நிகழ்வில் கந்து கொண்டேன். உலகத்திலேயே பெரியதும் மரச்செதுக்கு வேலைகளாலும் ஆன திரு மஞ்சம் (48 அடி) தைப்பூச வீதியுலாவில் பயணித்த போது கண்டு மகிழ்ந்தது வாழ் நாள் வரம்.

என் ஆதர்ச எழுத்தாளர் செங்கை ஆழியானைக் காண வேண்டும் என்ற வேட்கை இந்தப் பயணத்தில் இருந்தாலும் குறுகிய பயண நாட்கள் என்ற நெருக்கடியால் இது சாத்தியப்படுமா என்று மனது சொல்லிக் கொண்டிருந்தது. 
ஜனவரி 25 ஆம் திகதி மாலை ஒரு உத்வேகம் கிளம்ப ஆட்டோ ஒன்றில் பிறவுண் வீதி காணப் போனேன். 
கமலம் பதிப்பகம் என்ற அடையாளத்தோடு பிறவுண் வீதியில் இருக்கும் செங்கை ஆழியான் வீடு, 
அந்தக் காலத்தில் யாழ் நகரத்துக்கு டியூஷன் போகும் போதும் வரும் போதும் அடிக்கடி பார்ப்பதே உச்ச நட்சத்திரத்தின் மாளிகையைக் காணும் ரசிகனின் ஆவல் பொங்கப் பார்த்துக் கொண்டு போவேன். 
இந்தத் தடவை அதே வீட்டுக்குப் போகும் போது அங்கே தங்கியிருந்த பெண்மணி ஒருவர், தாங்கள் வாடகைக்கு இந்த வீடு வந்திருப்பதாகவும் குணராசா சேர் (செங்கை ஆழியான்) குடும்பம் கொஞ்சம் தள்ளியிருக்கும் குச்சொழுங்கையில் இருக்கும் வீட்டுக்கு மாறியிருப்பதாகவும் சொன்னார்.
ஒருவழியாக அந்தக் குச்சொழுங்கையில் இறங்கி வீட்டைத் தேடிப் பிடிச்சாச்சு. வீட்டுக் கதவு திறந்திருந்தது. தட்டினால் செங்கை ஆழியான் என்ற குணராசா சேர் இன் மனைவி கமலா குணராசா தான் வந்து வரவேற்றார்.
"நான் சேர் இன் எழுத்துகளின் தீவிர வாசகன்" என்றவாறே கையில் இருந்த என் "பாலித் தீவு" நூலைக் கொடுத்து விட்டுத் திரும்பினால் 
75 என்று பொறித்த பென்னம் பெரிய கேக் இன் முன்னால் வீற்றிருந்த ஒடுங்கிப் போன அந்த உருவத்தைக் கண்டு அந்த நேரம் எனக்கு ஏற்பட்ட வேதனை சொல்லில் அடங்காது.

ஈழத்துப் படைப்பாளிகளில் கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணரும், செங்கை ஆழியானும் அவர்களின் படைப்புகள் போலவே வசீகரம் மிக்க ஆணழகர்கள்.
செங்கை ஆழியானின் கம்பீரமான உடற்கட்டும், உயரமும், சுருள் முடியும் ஒரு கதாநாயக அந்தஸ்தில் வைத்திருக்கும் அளவில் இருக்கும்.
செங்கை ஆழியான் குறித்து முன்னர் நான் எழுதிய இடுகை http://www.madathuvaasal.com/2006/05/blog-post_18.html

செங்கை ஆழியான் நோயுற்றிருக்கிறார் என்ற ஒற்றைச் செய்தி மட்டுமே தெரியும். ஆனால் பக்க வாதம் வந்து எழுதுகோலைத் தாங்கும் வலது கை முடங்கிப் போய் மெலிந்து ஒடுங்கிப் போன அந்தக் காட்சியைக் கண்டு நொந்து போனேன்.
பெரிதாக ஒன்றும் பேசாமலேயே ஒற்றை வார்த்தைகளோடு அவர் மனைவில் கமலா குணராசாவுடன் பேசி விட்டு செங்கை ஆழியானைப் பார்த்தேன்.
சங்கடப்பட்டுச் சிரித்துக் கொண்டே ஏதோ பேச எத்தனிப்பது போல் மட்டும் வாய் துடிப்பதை உணர முடிந்தது.

என்னுடைய 2016 யாழ்ப்பாண யாத்திரையில் நிறைவில் அபிமான எழுத்தாளர் செங்கை ஆழியான் எழுதி அவரின் பிறந்த நாள் வெளியீடாக வந்த "யாழ்ப்பாணம் பாரீர்" நூலைச் சுமந்து கொண்டு வெளியேறுகிறேன்.