பண்பாடும் பண்பாளர் – எம். ஜெயராமசர்மா (மெல்பேண்)

.

photo_2
நெற்றியில் திருநீறும் முகத்தில் சாந்தமும் வாயில் புன் முறுவலும் கொண்டவர்தான் பண்ணிசையோடு தன்னை பிணைத்துக் கொண்ட பழனி ஓதுவார் மூர்த்திகள்- கணபதிப்பிள்ளை வெங்கடேசன் அவர்கள்.
தற்பொழுது மெல்பேண் — கரம் டவுண்ஸ் ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெறும் சிவனின் மஹோற்சவத்தில் திருமுறை பாட வந்துள்ளார்.அவரைச் சந்தித்த பொழுது — பண்ணிசை பற்றியும், அவரது திருத்தொண்டு பற்றியும் , அவரைப்பற்றியும், அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.அவருடன் நான் கேட்டதும் அதற்கு அவர் தந்ததும் சுவையான விஷயங்கள்.அவற்றை பகிர்ந்து கொண்டால் யாவருக்கும் பயனுடையதாக இருக்கும் என்று கருதியதால் அவற்றை உங்கள் முன் வைக்கின்றேன்.
தந்தையார் கணபதிப்பிள்ளை கிராமத்தலைமை அதிகாரியாக இருந்தவர்.தாயார் ரஞ்சிதம் அம்மாள் சிறந்த இல்லத்தரசியாக விளங்கியவர். இவர்களது பூர்வீகம் விருத்தாசலமாகும்.இந்த ஊரில்த்தான் பண்பாடும் வெங்கடேசன் பிறந்தார்.இவர்கள் குடும்பமே இறைபக்தி மிக்கதாகும்.இதனால் தங்கள் பிள்ளையை எப்படியும் இறை பணிக்கே விடுவது என எண்ணிவிட்டனர் பெற்றோர்கள். நாம் நினைத்தது நடக்க திருவருளும் துணை செய்யவேண்டும்.திருவருளும் துணை நின்றதால் ஆரம்ப கல்வி கற்ற பின்னர் வெங்கடேசனை தருமபுர ஆதீன தேவாரப் பாடசாலையில் பெற்றோர்கள் சேர்த்து விட்டார்கள்.



photo_1
கருவிலே திருவுடைய பிள்ளையாக வெங்கடேசன் விளங்கியதால் இவருக்கு இயற்கையாகவே கணீர் என்ற வெங்கலக் குரல் அமைந்து இருந்தது.1980 ல் தொடங்கிய இவரது தேவார பண்ணிசைப்படிப்பு 1984ல் நிறைவு பெற்றது. ” தேவார இசைமணி ” என்னும் பட்டம் பெற்றபின்னர் தருமபுர ஆதீன தேவாரப் பாடசாலையில் குறுகிய காலம் பணிசெய்கின்றார்.
1984தொடக்கம் 1985 வரை ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவிலில் ஓதுவாராக பணி ஆரம்பிக்கின்றார். பின்னர் 1985ல் கோயம்புத்தூர் ஸ்ரீ அன்னபூர்ண உணவகத்தில்தினம் நடக்கும் அன்னபூர்ணா பூஜையின் பொழுது திருமுறை பாடும் பணியில் தன்னை ஈடுபடுத்தினார்.
அதே வேளை – பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் விழாக்களிலும், இசை விழாக்களிலும், பிரபல பகவத்கீதை சொற்பொழிவாளர் திரு கிரிதாரிப்பிரசாத்தின் – சொற்பொழிவுகளின் பொழுதும் – பண் இசை பாடி உள்ளார்.இப்பணிகளை 1994 வரை செய்கின்றார் வெங்கடேச ஓதுவார் அவர்கள்.
இவரிடம் காணப்பட்ட பக்தியும் சிரத்தையும் பழனி முருகப் பெருமானிடம் சேர்த்து விடுகின்றது. பழநி ஆண்டவர் சன்னிதியின் ஆஸ்த்தான ஓதுவாராக 1995ல் நியமனம் பெறுகின்றார் இன்றுவரை அங்கேயே ஆஸ்த்தான் ஓதுவாராக விளங்கி நிற்கின்றார்.
வெளி நாடுகளுக்கு சென்றதுண்டா எனக் கேட்டபொழுது புன்முறுவலோடு இலங்கை, மலேசியா, தென் ஆபிரிக்கா லண்டன், மொரிசியஸ், ஆகிய இடங்களுக்கு சென்றதாகச் சொன்னார். உலக சைவ மாநாட்டுக்காக 2007ல் லண்டன் சென்றுள்ளார்.அதற்கு முன்னர் தென் ஆபிரிக்காவில் உள்ள அருட்பாக் கழகத்தின் அழைப்பினால் அங்கு சென்று பண்ணிசை பாடியதோடு , பண்ணிசை சம்பந்தமாக விரிவுரைகளும் ஆற்றி- அங்குள்ள வானொலிகளிலும் பக்தியை பரவச் செய்ததாகக் கூறினார்.இரண்டு மாதங்கள் தங்கி இருந்து இறை புகழ் பாடியமை திருப்தியாக இருந்தது என்றார்.வரும் வழியில் மொரிசியசிஸில் பத்து நாடகள் தங்கி பண்ணிசை பாடினேன். மனத்துக்கு சாந்தியாக இருந்தது என்றும் சொன்னார்.
photo
பத்துத்தடவைக்கு மேல் இலங்கை சென்று திருமுறை பாடியதை பெருமைப் பட்டுக்கொண்டார்.வருடந்தோறும் இலங்கை செல்லும் பாக்கியத்தை இறைவன் தந்துள்ளதாகவும் கூறி மகிழ்ந்தார்.
அவுஸ்த்திரேலியாவை மறந்து விட்டீர்களா என்று கேட்டவுடன் என்ன! இப்படிக்கேட்டு விட்டீர்கள்? ஒருமுறை அல்ல இருமுறை என்னை அழைத்து- என்னைக் கெளரவப்படுத்திய அவுஸ்த்திரேலியாவை எப்படி என்னால் மறக்கமுடியும் !
சிட்னி நகரில் உள்ள ஹெலன்ஸ்பேக் ஸ்ரீ சிவாவிஷ்ணு ஆலயத்தார் முதன் முதலாக இம்மண்ணுக்கு என்னை அழைத்தவர்கள்.தொடர்ந்து இம்முறையும் அவர்களே அழைத்தார்கள். சென்ற முறை கரம்டவுன்ஸ் ஸ்ரீ சிவாவிஷ்ணு ஆலய கலாசார மண்டபத்தில் பண்ணிசை பாடி அதற்கு விளக்கங்களும் சொன்னேன்.நான் எதிர்பாரமலே இங்கு வந்து உற்சவத்தில் பண்ணிசை பாடுகின்றேன்.யாவுமே இறைவனது அனுக்கிரகம் என்றே எண்ணுகின்றேன் என மீண்டும் தனது பணிவான குரலில் சொல்லி நின்றார் ஓதுவார் அவர்கள்.
பண்ணிசையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு— அதே புன்முறுவலுடன் அப்படியே இருக்கும்.பண்ணிசை என்பது இசைகளுக்கு மூலமானது.அதை யாரும் அழித்து விட முடியாது.பண்ணிசை இப்பொழுது பல்கலைக்கழம் வரை சென்றுவிட்டது.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்ணிசைக்கே பட்டப்படிப்பு இருக்கிறது. அதுமட்டுமல்ல ஆதீனங்களில் தேவாரப்படிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால் தமிழ்நாட்டு அரசாங்கம் 15 வருடங்களுக்கு மேலாக மாவட்டம் தோறும் இசைப்பள்ளிகளைத் தொடங்கி சங்கீதம், பண்ணிசை, நாதஸ்வரம், தேவாரம், ஆகியவற்றைப் பயிற்று வித்து வருகின்றது.ஆனபடியால் பண்ணிசையின் எதிர்காலம் நல்லாகவே இருக்கு என்று மூச்சு விடாமல் ஒரு விரிவுரையையே எனக்கு தந்து நின்றார்.
பண்ணிசைபற்றியும் தற்போது நடைமுறையில் உள்ள மாற்றங்கள் பற்றியும் என்ன நினைக்கின்றீர்கள் எனக்கேட்டேன்.அதற்கும் நல்ல விளக்கங்களை புன்சிரிப்புடன் தந்து நின்றார்.
பழைய பாணியிலிருந்து பண்ணிசை சற்று இலகு ஆக்கப்பட்டு – ரசனையைத் தன்னகத்தே கொண்டதாக பாடப்பட்டு வருகின்றது. அதாவது துரிதகதியில் பாடப்படுவது முக்கிய அம்சம் என்றார்.மடாலயங்களுலும், கோவில்களிலும் மட்டுமே பாடப்பட்டு வந்த பண்ணிசையானது தற்போது விழா மேடைகளிலும், திருமண விஷேடங்களிலும், மற்றும் பலதரப்பட்ட விஷேடங்களிலும் ஓதுவாரைக் கொண்டு பாடப்பட்டு வருவது முக்கிய விஷயம் எனக் குறிப்பிட்டார்.அது மட்டுமல்ல கோவில்கள் தோறும் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு பண்ணிசை பாடிவருவதும் நல்ல மாற்றம் எனத்தான் கருதுவதாகக் கூறினார்.
தங்களின் மேலதிக பணிகளைக் கூறுவீர்களா எனக் கேட்டேன்.நிச்சயமாக
என்று சொன்னதோடு — பலதகவல்களையும் தந்து நின்றார்.
திருப்பூரில் ” ஸ்வரவாணி கலாலயா ” பள்ளி மூலம் கடந்த ஐந்து வருடங்களாக தேவாரப் பண்ணிசை வகுப்பினை நடத்தி வருவதாகச் சொன்னார்.அந்தவகுப்பில் வயது வந்தவர்களே விருப்புடன் வந்து கற்பதாகவும் கூறினார்.
பொதிகை இந்தியத் தொலைக்காட்சியின் தமிழ்ச் சேவையில் ” அருளே
ஆனந்தம் ” என்னும் தலைப்பில் பன்னிரு திருமுறைகளைப் பாடும் பணியில்
ஈடுபட்டார். ஓதுவார் வெங்கடேசன் பாட- டாக்டர். இரா. செல்வகணபதி அவர்கள்
அந்த நிகச்சியில் விளக்கம் சொல்லி இருக்கின்றார் .ஐந்து வருடங்களாகப்
பொதிகையில் பண்ணிசை பாடிவருகின்றேன் என்று கூறினார்.தினமும் காலை
6.45 க்கு இந்த நிகழ்ச்சி இடம் பெறுவதாகவும் சொன்னார்.தற்போது திருவிளையாடற் புராணம் தொடங்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உங்கள் மனத்தில் நிலை பெற்றிருக்கும் ஓதுவார்கள் பற்றிச் சொல்ல முடியுமா
எனக் கேட்டேன்.தாராளமாகச் சொல்கின்றேன் என்று …. முதலில் தருமபுரம்
திரு சுவாமிநாதன் அவர்களைப்பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவர் எங்களுக்கெல்லாம் முன்னோடியானவர்.அவரின் வருகையினால் பண்ணிசை ஊர்கள்
தோறும் பரவியது. தேவாரமும் யாவருடைய மனங்களிலும்.பதிந்தது. அந்த அளவுக்கு அவரின் பண்ணிசைப் பணி சிறப்பாக அமைந்து விட்டது. அவரை நான் மனமார
வணங்கு கின்றேன் என்றார்,
எனது ஆசிரியர் ஓதுவார் மூர்த்திகள் திரு ஆர்.வேலாயுத ஓதுவார்.நான் இன்று இப்படிப்பாடுவதற்கு அவரின் ஆசியே காரணம் என்றார்.முத்துக்கந்தசாமி தேசிகர் திருத்தணி சுவாமிநாதன் அவர்கள் — இவர்களை எல்லாம் என் மனத்துள் இருத்திவைத்துள்ளேன் என்றார்.
தங்களுக்கு கிடைத்த கெளரவங்கள் பற்றிச் சொல்லுங்களேன் என்றேன். எனக்கு பட்டங்களோ , பாராட்டுக்களோ ,பெரியதல்ல. இறைபணியில் இருப்பதே பெருமை என்றார்.தன்னை கெளரவித்து ஈரோட்டில் ” பண்ணிசைமாமணி ” என்னும் பட்டத்தையும்- சிட்னி ஹெலன்ஸ் பேக் ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் “திருமுறைத் தேனமுதன்” என்னும் பட்டத்தினை தந்தார்கள் என்பதை நீங்கள் கேட்ட படியால் சொல்லுகின்றேன் — என மிக அடக்கத்தோடு கூறி நின்றார்.
பண்ணிசை பாடிப் பாடி சிறந்த பண்பாளராக மாறிவிட்ட ஓதுவார் திருகணபதிப்பிள்ளை வெங்கடேசனை நினைக்கின்ற போழுது மனமெல்லாம் பூரிப்படைகிறது.

No comments: