இலங்கைச் செய்திகள்


தாதிய உத்தியோகத்தர்கள் இன்று கவனவீர்ப்பு போராட்டம்

ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேர் கைது

வைத்திய சாலை ஊழியர்களின் கவனயீனம் காரணமாக பெண் உயிரிழப்பு


இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

4 கிலோ கேரளா கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது

நாட்டில் 100 ற்கும் அதிகமான காட்டு தீ சம்பவங்கள்

தேவாலயம் மீதான தாக்குதல்: ஞானசார தேரர் உள்ளிட்ட 12 பேர் விடுதலை

=================================================================

தாதிய உத்தியோகத்தர்கள் இன்று கவனவீர்ப்பு போராட்டம்

31/03/2014   யாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள்இன்று கவனவீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
தாதிய உத்தியோகத்தர்களுக்கு மனநோயியல் மற்றும் மகப்பேற்று மருத்துவம் ஆகிய இரு பயிற்சிகள் சுகாதார அமைச்சினால் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இதற்கான சுற்றுநிரூபத்தை வெளியிட விடாமல் அரசாங்க வைத்திய சங்கத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனைக் கண்டித்தே தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதாக யாழ். போதனா  வைத்தியசாலையின் தாதிய சங்கத் தலைவர் நல்லையா நற்குணராஜா தெரிவித்தார்.
இன்று காலை 7 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை பணிப்புறக்கிணப்பு போராட்டத்தை முன்னெடுத்த அரச தாதிய உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 3 ஆம் திகதி முழுநாள் சுகயீன விடுப்பு போராட்டத்தை  முன்னெடுக்கவுள்ளதாகவும் எச்சிரிக்கை விடுத்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்ற அரச தாதிய உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு யாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்களும் ஆதரவு தெரிவித்து இன்று  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 









ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேர் கைது

31/03/2014    ஜயவர்தனபுர பல்கலைக்கழக விடுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற மோதல்  சம்பவத்துடன் தொடர்புடைய 14 மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர். 
ஜயவர்தனபுர பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கும், அந்த விடுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் கடந்த மாதம் 24 ஆம் திகதி மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது 
இந்த மோதலின் போது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே குறித்த 14 மாணவர்களும் சந்தேகத்தின் பேரில் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி 









வைத்திய சாலை ஊழியர்களின் கவனயீனம் காரணமாக பெண் உயிரிழப்பு

01/04/2014   பிரசவத்திற்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் வைத்திய சாலை ஊழியர்களின் கவனயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக குறித்த பெண்ணின் கணவர் பதுளை பொலிஸாரிடமும்  வைத்தியசாலை பணிப்பாளருக்கும் முறைப்பாடு செய்துள்ளார்.
உடகோஹோவில, லந்தேவேல தோட்டத்தைச் சேர்ந்த பிரதீபிகா நிலந்த என்ற 32 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார்.
இச்சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி வீரகேசரி








இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

01/04/2014    கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய இலங்கை கடல் எல்லையில்  5 படகுகளில் 21 மீனவர்கள் மீன்பிடித்துகொண்டிந்த போது இலங்கை கடற்படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 இதில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் 3 மாதத்தில் 551 மீனவர்களை கடல் எல்லையில் தாக்குதல் நடத்தி விரட்டி அடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி







4 கிலோ கேரளா கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது

02/04/2014   யாழ்ப்பாணத்தில் 4 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவரை நேற்று  பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு கஞ்சா கடத்த முற்பட்ட வேளையில் குறித்த நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   
இதே வேளை கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.  நன்றி வீரகேசரி













நாட்டில் 100 ற்கும் அதிகமான காட்டு தீ சம்பவங்கள்

01/04/2014    கடந்த மூன்று மாதகாலத்தில் மட்டும் மத்திய மாகாணத்தில் 100 ற்கும் அதிகமான காட்டுத் தீ சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி, நுவரெலியா, குருணாகல், மொனராகலை மற்றும் மாத்தளை ஆகிய பிரதேசங்களில் அதிகமாக காட்டு தீ சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரியந்த கொடிபிலி தெரிவித்தார்.
மக்கள் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்காக காடுகளை தீ வைத்தல் மற்றும் கடும் வரட்சி போன்ற காரணிகளால் இந்த காட்டுத் தீஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.    நன்றி வீரகேசரி







தேவாலயம் மீதான தாக்குதல்: ஞானசார தேரர் உள்ளிட்ட 12 பேர் விடுதலை

02/04/2014    மாலபே கல்வாரி மலை தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பிரதிவாதிகள் பன்னிரண்டு பேரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி காலையில் கலபொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட சிலர் மாலபே கல்வாரி மலை தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து தேவாலயத்திலுள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேல் நீதிமன்ற நீதவான் பத்மினி என் ரணவன குறித்த சந்தேகநபர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.  நன்றி வீரகேசரி














No comments: