ஈழத்தின்' உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண்ணீரின் வதை.. (வித்யாசாகர்) கவிதை!


நாங்கள் அன்றும் இப்படித் தான்
கொதித்துப் போயிருந்தோம்..
சதை கிழிய
தாலி அற
உயிர் பலி கொடுத்துக் கொண்டிருந்த
எங்களுறவுகளை
கண்ணில் ரத்தம் வடியத்தான்
பார்த்துக் கொண்டிருந்தோம்
உலகின்
நியாயம் மறைந்த கண்களில்
வார்த்தைகளைத் துளைத்து
அழுகையில் தகிக்கும் சொல்லெடுத்து
அவர்களின் செவிட்டில் அரையத் தான்
எங்களுக்கு
இத்தனை நாளாகிப் போனது.,
காடும் மலையும்
மின்னல் வெட்டிய வெளியெங்கும்
தமிழனின் அதிகாரம் பாய்ச்சிய ரத்தமின்னும்
அடங்கிவிடவில்லை;


அறியாமையில்
சதியாடிப் போனது வேறு, ஆயின் அதையும்
இப்போதறிந்து
உரிமைப்போருக்கு
உறவுக் கொடியேந்திவிட்டோம்.,
ஐயோ ஐயோ என
என் மக்கள்
அலறியபோது
வலித்த இடமின்னும் காயமாறவில்லை
ரத்த ஆறாகி நனைந்த மண்சுட்ட
விழிகளின் சிவப்பின்னும்
தீரவில்லை
ஓடி ஓடி ஒளிந்த எம்
குழந்தைகளின்
தலையில் விழுந்த விஷக் குண்டுகளின்
வெறி -
ஒருத் துளியும் அடங்கவில்லை
உடம்பெறித்து
உயிர்விளக்கேற்றி
உலகப் பிச்சையேந்தி
எம் நியாயத்தைக் கேட்கக் கோரி
நெருப்புத் துண்டுகளில்
உயிர்விதைத்தோம்,
உடல்கட்டை எரித்தோம்,
பெண் ஆணென தீக்கு இறையாக்கினோம்.,
அதையும்
கேளி பேசி கொன்றுபோட்ட
எவரையுமினி
மன்னிக்கத் தயாரில்லாததொரு பெருங்கூட்டம்
இன்று புடைசூழ்ந்து நிற்கிறது,
புத்தகத்தின் படிக்காப் பக்கங்களுக்கிடையே
எமது தட்டிக்கேட்டிடா நியாயத்தைப் பதுக்கி
எட்டிச் சட்டைபிடித்துக் கேட்க
துணிந்துநிற்கிறது,
பெரியவர் சொன்னார்
பயில்வோர் படித்தார் அது வேறு
இனி பயில்வோர் முன்செல்வார்,
பட்டம் பகலில்
எம் தமிழச்சியை நிர்வாணமாய்ப் பார்த்து
நகைத்தவனின் மூச்சடக்கிவிட - அவளின்
பிள்ளைகள் போவோமினி,
மானத்தியவளின் முளைமீது கால்வைத்து
நசுக்கியவனின் மார்மீது மிதித்து
மீட்க எம் ஈழத்தை
ஒவ்வொருத் தமிழரும் செல்வோமினி,
பார்வியந்து பார்க்கப் பார்க்க
வெடித்து வீழ்ந்த எம் தலைகளின் ஈடாக
இனி துடித்து எழுமெம் ஈழம்..,
மீண்டும் அதே வெற்றிமுரசு கொட்டி
வீரநடைப் போடுமெம்மினம்..
---------------------------------------------------------------------
வித்யாசாகர்

No comments: