கலாரசிகப் பெருமக்களின் மனம் உருகி, நெகிழ, மகிழ, உணர்ச்சிவசப்பட வைத்த கர்னாடக இசைக் கச்சேரி.



டிசம்பர் 31ம் திகதி இரவு 8 மணிமுதல் 10.30 வரை செல்வி சந்திரிகா மாணிக்கவேல் அவர்களின் கச்சேரி சிட்னி முருகன் ஆலயத்தில் சைவமன்றத்தின் ஆதரவுடன் நடந்தேறியது. இந்நிகழ்ச்சியை ஜெயராம் ஜெகதீசன் தொகுத்து வழங்கினார். டாக்டர் சிவரதி கேதீஸ்வரன் அவர்களின் கணீரென்ற குரலில் திருமுறையோடு விழா ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து உலக சமானத்திற்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது. அதன்பின் ஜெயேந்திரன் தம்பதிகள் குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். சிட்னி முருகன் ஆலய தலைவர் திரு தில்லை நடேசன் வரவேற்புரையை ஆற்றினார். தொடர்ந்து அறிமுக உரையை திரு கணிகை ஸ்கந்தகுமார் ஆற்றினார். அதைத் தொடர்ந்து எனது ஆசியுரை இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து செல்வி சந்திரிகாவின் இன்னிசைக் கச்சேரி ஆரம்பமாகியது.

வால்குடி ஜெயராமன் அவர்கள் முருகன் பேரில் இயற்றிய வலஜி ராக வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பமாகியது. அதைத்தொடர்ந்து நீதிமதி,  தோடி இராகங்களில் அமைந்த முருகனின் கீர்த்தனைகள் மிகவும் ரசிக்கும்படியாக அமைந்திருந்தது. நீதிமதி இராகத்தில் அமைந்த “மோகனகர முத்துக்குமர”, சாவேரி இராகத்தில் அமைந்த “முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்” என்ற கீர்த்தனைகள் ரசிகப் பெருமக்களை பக்தியில் ஆழ்த்தியிருந்தது. குறிப்பாக சாவேரி,  தோடி இராக ஆலாபனைகள் மிகவும் போற்றத்தக்கதாக இருந்தது. நிரவல்,  கற்பனாஸ்வரங்கள்,  ஸ்வர கோர்வைகள் மிகவும் மெச்சத்தக்கதாக இருந்தது. என் மனதில் ஏற்பட்ட தாக்கம்,  எல்லா உருப்படிகளும் சௌக்க காலா உருப்படிகளாக அமைந்தது. காரணம்,  கச்சேரியில் இடையிடையே ஓரிரு கீர்த்தனைகளை மத்திம காலத்தில் பாடியிருந்தால் கச்சேரி மென்மேலும் களைகட்டியிருந்திருக்கும். இறுதியாக ராகேபர் ராக தில்லானாவுடனும் திருவெம்பா பாடலுடனும் கச்சேரி இனிதே நிறைவு பெற்றது. 

 இக்கச்சேரிக்கு அணிசேர் கலைஞர்களாக திருமதி தேவகி விக்னேஷ் புல்லாங்கழலும் திரு சிவசங்கர் மிருதங்கமும் மிகவும் அருமையாக ஒத்துழைத்தனர். வயலின் இல்லாத குறையை திருமதி தேவகி நிவர்த்தி செய்த நன்றாக வாசித்தார். திரு சிவசங்கர் உருப்படிகள், நிரவல், கல்பனாஸ்வரம் என்பனவற்றிற்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து வாசித்தார். தனி ஆவர்த்தனம் ரத்தின சுருக்கமாக வாசித்து சபையோரிடமிருந்து அமோக வரவேற்பையும் கரகோஷத்தையும் பெற்றிருந்தார்.
இறுதியாக கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். சிட்னி முருகன் ஆலய தலைவரின் துணைவியார் திருமதி லீலா தில்லை நடேசன், செல்வி சந்திரிகாவிற்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி சன்மானம் செய்து ஆசீர்வதித்தார். இதேபோல மற்றைய சைவமன்ற அங்கத்தவர்களால் திருமதி தேவகியும் திரு சிவசங்கரும் கௌரவிக்கப்ட்டனர். அன்று கச்சேரியில் தம்பூரா மீட்டி செல்வி சம்யுதா வசந்தனுக்கம் கௌரவம் வழங்கப்பட்டது. இறுதியில் திரு தணிகை ஸ்கந்தகுமார் நன்றியுரை ஆற்றினார். எல்லோரினது பாராட்டுதல்களையும் செல்வி சந்திரிகா இக்கச்சேரி மூலம் பெற்றிருந்தார்.
 கலாபூஷணம்  A சந்தானகிருஷ்ணன்

No comments: