இலங்கையில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு


எஸ்.கிருஷ்ணமூர்த்தி – அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் இயங்கும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகின்றன.

இரண்டு தமிழ்நாவல்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியாவதுடன் தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட சில சிறுகதைகளைக்கொண்ட தொகுப்பு நூலும் வெளியிடப்படவிருக்கின்றன.

அவுஸ்திரேலியாவில் நீண்டகாலமாக வதியும் இலங்கையர்களான டொக்டர் நொயல் நடேசன் மற்றும் லெ.முருகபூபதி ஆகியோரின் புத்தம் புதிய மொழிபெயர்ப்பு படைப்புகளே இந்த வெளியீட்டு நிகழ்வில் அறிமுகமாகின்றன. ஜனவரி 8 ஆம் திகதி கொழும்பில் பணடாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாலை 5 மணிக்கு செயற்குழுக்கூட்ட அறை F இல் வெளியிடப்படும் குறிப்பிட்ட மூன்று நூல்களின் விபரம் வருமாறு:

டொக்டர் நொயல் நடேசனின் உனையே மயல்கொண்டு என்னும் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு Lost In You . இதனை சென்னையைச்சேர்ந்த கலாநிதி ……வாசுதேவ் மொழிபெயர்த்துள்ளார். இலங்கையின் பிரபல நூல் வெளியீட்டாளர்கள் விஜிதயாப்பா பதிப்பகத்தினர் இதனை பதிப்பித்துள்ளனர்.



நடேசனின் ஏற்கனவே தமிழில் வெளியான வண்ணாத்திக்குளம் நாவலை சமணலவெவ என்னும் பெயரில் சிங்களத்தில் இலங்கையின் பிரபல மொழிபெயர்ப்பாளரும் படைப்பிலக்கியவாதியுமான திரு. மடுளுகிரியே விஜேரத்தின மொழபெயர்த்துள்ளார். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் வதியும் மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான திரு. ‘நல்லைக்குமரன்’ குமாரசாமி Butterfly Lake  என்னும் பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். குறிப்பிட்ட ஆங்கில நூலையும் விஜித்தயாப்பா பதிப்பகமே வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாருமான லெ.முருகபூபதியின் தேர்ந்தெடுத்த சில சிறுகதைகளை இலங்கையில் மொழிபெயர்ப்பு வெளியீட்டு முயற்சிகளில் அக்கறையுடன் இயங்கும் பிரபல் எழுத்தாளர் திக்குவல்லைகமால் சிங்களத்தில் வெளியிட முயன்றதன் பயனாக குறிப்பிட்ட கதைகள் மதக செவனெலி (Shadows Of Memories)  என்ற பெயரில் ஒரு தொகுப்பாக வெளியாகிறது. இதில் இடம்பெறும் கதைகளை பிரபல மொழிபெயர்ப்பாளரும் கல்விமானுமான ஏ.ஸி.எம். கராமத் மொழிபெயர்த்துள்ளார்.

இந்நூலை தோதன்ன பதிப்பகத்தின் சார்பில் திரு. சிட்னி மார்க்கஸ் டயஸ் வெளியிடுகிறார். தமிழ் இலக்கிய அபிமானியும்  கம்பஹா மாவட்டத்தில் முன்னர் பல பௌத்த பிக்குகளுக்கும் சிங்கள்ஆசிரியர்கள்ää மாணவர்களுக்கும் தமிழ்மொழியை பயிற்றுவித்தவரும் உடுகம்பொல கொரஸ ஸ்ரீ சுதர்மானந்த விகாராதிபதியுமான அமரர் வண. ரத்னவண்ஸ தேரோ அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இம் மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றிய மேலதிக தகவல்கள்:


Lost In You



தமிழில் உனையே மயல்கொண்டு என்ற பெயரில் வெளியான இந்நாவலை சென்னை மித்ரா பதிப்பகம் வெளியிட்டது. நடேசன் ஒரு மிருக வைத்தியர். ஏற்கனவே வாழும்சுவடுகள் என்ற பெயரில் தனது தொழில்சார்ந்த அனுபவங்களை இரண்டு பாகங்களில் எழுதியிருக்கிறார். உனையே மயல்கொண்டு நாவலும் பைபோலர் நோய்தொடர்பாக அந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்பாத்திரம் பற்றி எழுதப்பட்ட தமிழ் இலக்கிய நாவல் வரிசையில் சற்று வித்தியாசமான படைப்பு. இந்நாவல் குறித்து தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனும் எழுதியிருக்கிறார். டுழளவ ஐn லுழர ஆங்கில வாசகர்களுக்கும் ஆங்கிலத்தில் படிக்கும் தமிழ்ää சிங்கள் வாசகர்களுக்கும் புதிய அனுபவத்தை வழங்கும்.

சமணலவெவ

மதவாச்சியில் பதவியா என்னும் இடத்தை பின்னணியாகக்கொண்டு நடேசன் எழுதிய நாவல் வண்ணாத்திக்குளம். இதனையும் சென்னை மித்ர பதிப்பகமே வெளியிட்டது. யாழ்பாணத்திலிருந்து குறிப்பிட்ட பதிவியா பிரதேசத்திற்கு தொழில் நிமித்தம் சென்ற ஒரு தமிழ் மருத்துவர் அங்கு ஒரு அழகிய சிங்கள ஆசிரியை மீது காதல்கொண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்கிறார். 1983 கலவரம் வருகிறது. அதனால் அந்த தம்பதியர் எதிர்நோக்கும் நெருக்கடிகளும் இறுதியில் அவர்களின் எதிர்பாராத புலப்பெயர்வுமே இந்த நாவலின் கதை. இதனைப்படித்த தமிழ்நாட்டின் பிரபல திரைப்பட இயக்குநரும் கதைவசன கர்த்தாவுமான ‘முள்ளும் மலரும்’ மகேந்திரன் திரைப்படமாக்க முயன்று அதற்கான திரைக்கதை வசன சுவடியும் எழுதினார். எனினும் இலங்கையில் இருந்த சூழ்நிலையினால் அந்த முயற்சி கைகூடவில்லை.

வண்ணாத்திக்குளம் நாவல் ஆங்கில வாசகர்களுக்கு Butterfly Lake என்னும் பெயரில் அறிமுகமாகி அவுஸ்திரேலியா அமெரிக்கா  உட்பட ஐரோப்பிய நாடுகளில் பொதுநூலகங்களில் இடம்பெற்றுள்ளது.

மதகசெவனெலி

மனிதநேயம் , மனித உரிமை, இனநல்லிணக்கம் முதலான சிந்தனைகளின் அடிப்படையில் முருகபூபதி ஏற்கனவே பல சிறுகதைகளை படைத்துள்ளார். அவற்றுள் தேர்ந்தெடுத்த பத்துச்சிறுகதைகள் சிங்கள வாசகர்களுக்கு மதகசெவனெலி என்னும் பெயரில் அறிமுகமாகின்றது. முருகபூபதி எழுதிய சொல்லமறந்த கதைகள் என்ற தொடரில் பதிவுசெய்த ஒரு அத்தியாயம் காவி உடைக்குள் ஒரு காவியம். முற்றிலும் சிங்கள மக்கள் செறிந்துவாழும் ஒரு கிராமத்தில் தமிழை அறிமுகப்படுத்தியவாறு வாழ்ந்த பௌத்த துறவியின் (அமரர் வண.ரத்ன வண்ஸ தேரோ) முன்னுதாரணமான செயற்பாடுகளை பதிவு செய்த அந்த ஆக்கமும் இந்நூலில் .இடம்பெறுகிறது.

குறிப்பிட்ட ஆக்கம் பல இதழ்கள்ää இணையத்தளங்களிலும் ஏற்கனவே வெளியானது. தற்போது சிங்கள வாசகர்களுக்கும் இந்நூல் ஊடாக அறிமுகமாகின்றது.

கொழும்பில் வெளியீட்டு நிகழ்வைத்தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி சனிக்கிழமை தேரோ அவர்கள் வாழ்ந்து மறைந்த உடுகம்பொலை கொரஸ கிராமத்தில் அறிமுகமாகின்றது. அவ்வூர் மக்கள் தேரோ அவர்களை நினைவுகூறும் வகையில் இந்நிகழ்வை ஒழுங்குசெய்துள்ளனர்.
கொழும்பில் நடைபெறவுள்ள குறிப்பிட்ட மூன்று மொழிபெயர்ப்பு நூல்களினதும் வெளியீட்டு நிகழ்வில் (08-01-2013 செவ்வாய்கிழமை மாலை 5 மணி) படைப்பிலக்கியவாதிகளையும் மொழிபெயர்ப்பு மற்றும் ஊடகத்துறை சார்ந்தவர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அவுஸ்திரேலியா – சர்வதேச தமிழ் எழுத்தளார் ஒன்றியம் அன்புடன் அழைக்கின்றது.

                   ஐவெநசயெவழையெட.வறகநள@லயாழழ.உழஅ.யர

No comments: