உலகச் செய்திகள்


உலகின் மிகப்பெரிய கடைத்தொகுதி விரைவில் டுபாயில்!

சிரியாவில் கார் குண்டுத் தாக்குதல்: 34 பேர் பலி

சவூதியில் இருவருக்கு தலையை வெட்டி மரணதண்டனை

இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்: 7 பேருக்கு எகிப்தில் மரண தண்டனை

ஈரான் அறிமுகப்படுத்திய நீர்மூழ்கிகள் மற்றும் போர்க்கப்பல்



உலகின் மிகப்பெரிய கடைத்தொகுதி விரைவில் டுபாயில்!

By General
2012-11-25 14:57:35

உலகின் மிகப்பெரிய கடைத்தொகுதியையும், லண்டனில் உள்ள ஹைட் பூங்காவை விட பெரிய பூங்காவையும் கட்டப்போவதாக டுபாய் அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே பல கடைத் தொகுதிகள் உள்ள டுபாயில் விரைவில் உலகின் மிகப்பெரிய கடைத்தொகுதி கட்டப்படும் என்று மன்னர் ஷேக் மொஹமட் பின் ராஷித் அல் மக்தூம் அறிவித்துள்ளார். டுபாய் நகரில் முகமது பின் ராஷித் சிட்டியை உருவாக்கவிருக்கின்றனர். மேலும் புதிய குடியிருப்புகளும் கட்டப்படவிருக்கின்றன.

இது தவிர லண்டனில் உள்ள ஹைட் பூங்காவை விட 30 சதவீதம் பெரிய பூங்காவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்படும் கடைத்தொகுதிக்கு ஆண்டுக்கு 80 மில்லியன் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள டுபாய் மால் உள்ளிட்ட கடைத்தொகுதிகள், ஹோட்டல்களுக்கு இந்த ஆண்டு 62 மில்லியன் மக்கள் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டுபாய் சுற்றுலாத்துறை ஆண்டுக்கு 13 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டு அங்குள்ள ஹோட்டல்களின் வருவாய் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. டுபாயின் வளர்ச்சிக்கு புதிய வசதிகள் ஏற்படுத்துவது அவசியம் என்று மன்னர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி 
  

 

 

 

சிரியாவில் கார் குண்டுத் தாக்குதல்: 34 பேர் பலி

By General
2012-11-28

சிரியாவில் இன்று இடம்பெற்ற இரண்டு கார் குண்டுத் தாக்குதல்களில் 34 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 83 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தலைநகர் டமஸ்கசில் உள்ள ஜரமானா நகரிலேயே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டில் ஜனாதிபதி ஆசாத்துக்கு எதிராக புரட்சிப் படையினர் கடுமையாக மோதி வருகின்றனர்.

இன்று காலை போராளிகளுக்கும் அரச ஆதரவுப் படைக்கும் இடையே நடைபெற்ற தீவிர சண்டைக்குப் பிறகே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஜனாதிபதி அசாத்திற்கு எதிராக புரட்சியாளர்களின் பேராடி வருகின்றனர்.

இம்மோதல்களில் இதுவரை சுமார் 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.    நன்றி வீரகேசரி 

 

 

 

 

 

சவூதியில் இருவருக்கு தலையை வெட்டி மரணதண்டனை

By General
2012-11-28 09:47:49

சவூதி அரேபியாவில் இருவருக்கு வாளால் தலையை வெட்டி செவ்வாய்க்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனது மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் அலி மொஹமட் மக்ராஸி என்பவருக்கும் நபரொருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் அஹ்மட் மஹ்மூத் அல் யஸிடி என்பவருக்கும் மரணதண்டனை நிறை@வற்றப்பட்டுள்ளது.

மஹ்ராஸி தனது மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற பின் அவரது சடலத்தை எரித்துள்ளார்.

மஹ்ராஸிக்கு ஜிஸான் நகரிலுள்ள சிறைச்சாலையிலும் அஹ்மட்டுக்கு மக்காவிலுள்ள சிறைச்சலையிலும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.      
நன்றி வீரகேசரி

 

 

 

 

  இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்: 7 பேருக்கு எகிப்தில் மரண தண்டனை

By General
2012-11-29

இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ் திரைப்படத்தின் இயக்குனருக்கும், அதனை இணையத்தில் தரவேற்றம் செய்து பரவச்செய்த 6 பேருக்கும் மரணதண்டனை வழங்கி எகிப்திய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்ட குறும்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த குறும்படத்தை தயாரித்தவரை அமெரிக்க அரசு கைது செய்து தண்டனை விதிக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வற்புறுத்தினர். அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள், இந்த குறும்படத்தை தயாரித்த எகிப்து - அமெரிக்கரான நகோலா பேஸலே நகோலாவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முஸ்லிம் நாடுகளில் உள்ள மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இதையொட்டி, குறும்பட தயாரிப்பாளரான நகோலா பேஸலே நகோலாவை, லாஸ் ஏஞ்செல்ஸ் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து லொஸ் ஏஞ்செல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது லொஸ் ஏஞ்செல்ஸ் சிறைச்சாலையில் நகோலா, தண்டனை அனுபவித்து வருகின்றார். குறித்த குறும்படத்தை தயாரித்த நகோலா, மற்றும் அந்தப் படத்தை இணையத்தில் தரவேற்றம் செய்து பரவச்செய்த எகிப்து நாட்டினர் 6 பேர், என மொத்தம் 7 நபர்கள் மீது எகிப்து நாட்டின் கெய்ரோ நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது.



லொஸ் ஏஞ்செல்ஸ் சிறையில் நகோலா, தற்போது தண்டனை அனுபவித்து வரும் நிலையில், இணையத்தில் மூலம் குறும்படத்தை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் தலைமறைவாகி விட்டனர். கெய்ரோ நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை இன்று நடந்தது. உடனடியாக தீர்ப்பும் வழங்கப்பட்டது.

இஸ்லாம் மதத்தையும், அந்த மதத்தில் தூதரையும் இழிவுபடுத்தும் வகையில் திரைப்படம் தயாரித்து வெளியிட்ட 7 பேருக்கும் மரண தண்டனை விதித்து, நீதிபதி சய்ப் அல்-நஸ்ர் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கின் அணைத்து கட்ட விசாரணையின் போதும் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில், யாரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை.

எனினும், ஆளில்லா நிலையில் (absentia) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தண்டனை குறித்து எகிப்தில் உள்ள கொப்டிக் ஓர்த்தடொக்ஸ் தேவாலயம், எந்த கருத்தையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. தனது பெயர் வெளியிடப்படுவதை விரும்பாத தேவாலயத்தின் அலுவலர் ஒருவர், 'அந்த குறும்படத்திற்கு எங்கள் தேவாலயம் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்திருந்தது.

ஆனால், இந்த தீர்ப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் முடிவுகளின் மீது எங்கள் தேவாலயம் கருத்து கூறுவதில்லை' என்று கூறியுள்ளார். இதையொட்டி, லொஸ் ஏஞ்செல்ஸ் சிறையிலிருந்து நகோலா விடுதலையாகி வெளியே வரும் போது, அவரை எகிப்து அரசு கைது செய்து மரண தண்டனையை நிறைவேற்றும் என எதிர்பாக்கப்படுகின்றது. தலைமறைவாக இருக்கும் 6 பேர்களுக்கும் பிடிப்பட்ட பின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் எனவும் தெரிகிறது.     
நன்றி வீரகேசரி

 

 

 

 

ஈரான் அறிமுகப்படுத்திய நீர்மூழ்கிகள் மற்றும் போர்க்கப்பல்

By Kavinthan Shanmugarajah
2012-11-29

ஈரான் தனது சொந்த தயாரிப்பான நீர்மூழ்கிகள் மற்றும் போர்க்கப்பல் ஆகியவற்றை வெளியுலகிற்கு காட்டியுள்ளது.

இவற்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஓர்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள பந்தர் அபாஸில் நடைபெற்றுள்ளது.



இதன்போது 2 'காதிர்' ரக நீர்மூழ்கிகள் மற்றும் சினா-7 போர்க்கப்பல் ஆகிய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த 'காதிர்' ரக நீர்மூழ்கிகள் மூலம் ஒரே நேரத்தில் ஏவுகணைகளையும், டொபிடோக்களையும் பயன்படுத்தி தாக்கமுடியும் என ஈரான் தெரிவிக்கின்றது

மேலும் காற்றுமெத்தை ஊர்தி (Hovercraft) ஒன்றையும் ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது.


ஈரானானது ஜப்பானின் ஹிரோஷிமாவில் போடப்பட்டதை விட பன்மடங்கு சக்தி வாய்ந்த அணு குண்டை தயாரித்து வருகின்றமையை நிரூபிக்கும் ஆதாரமொன்றும் வெளியாகியுள்ளது.

இச்செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே ஈரான் தனது உள்ளூர் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது அமெரிக்க , இஸ்ரேல் உட்பட மேலைத்தேய நாடுகளுடனான உறவை மேலும் சீர்கெடச் செய்யுமென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஈரானின் அணுச் செறிவாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா ஏற்கனவே பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

 

No comments: