உலகச் செய்திகள்

  ஈரானை இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்கலாம்?: அமெரிக்க, பிரித்தானிய படைகளும் வளைகுடா நோக்கிப் படையெடுப்பு!


மெக்சிகோ சிறையிலிருந்து 132 பேர் சுரங்கம் தோண்டி தப்பியோட்டம்


உகாண்டா பாராளுமன்றத் தேர்தலில் 19 வயது மாணவி வெற்றி




ஈரானை இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்கலாம்?: அமெரிக்க, பிரித்தானிய படைகளும் வளைகுடா நோக்கிப் படையெடுப்பு!
By Kavinthan Shanmugarajah
2012-09-17

 ஈரானின் அணு உலைகளை இலக்குவைத்து இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை வளைகுடாவில் தோன்றியுள்ளதுடன் அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகள் வளைகுடாப் பகுதியை நோக்கிப் படையெடுத்துள்ளன.

 இருபத்தைந்து நாடுகளின் போர்க்கப்பல்கள், விமானந் தாங்கிக் கப்பல்கள், நீர்மூழ்கிகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணைப்  (Strait of Hormuz) பகுதியில் இதுவரை இல்லாத அளவில் அவை  மிகப்பெரிய போர் ஒத்திகையை அங்கு நடத்தவுள்ளன.



கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணையின் ஊடாக தினசரி 18 மில்லியன் மசகெண்ணெய் பெரல்களைக் கப்பல்கள் கொண்டுசெல்கின்றன.

இந்த வழியைத் தடைசெய்யப்போவதாக  ஈரான் பல மாதங்களாக எச்சரித்து வருகின்றது. இதன்மூலம் உலக நாடுகள் பலவற்றினை ஸ்தம்பிக்க வைக்கமுடியுமென ஈரான் கருதுகின்றது.
இந்நீரிணையூடான வழியை மூடுமானால் ஈரான் மீது தாக்குதல் நடத்த உலகநாடுகள் பல தயாராகவுள்ளன.
ஈரான் மீது இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுவதால் இப்பாதையை ஈரான் தடைசெய்யலாம என்ற அச்சம் உலகநாடுகள் பலவற்றுக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாகவே உலகநாடுகள் பலவற்றின் படைகள் அப்பகுதியில் நிலைகொள்ளத்தொடங்கியுள்ளன. அவை அங்கு கூட்டாகப் போர் ஒத்திகைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிகின்றது.


 ஈரானிடம் அதிநவீன தொழில்நுட்பங்கள் இல்லாதபோதிலும் சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல்கள், அதிவேக தாக்குதல் படகுகள் போன்றவற்றின் மூலம் அமெரிக்க மற்றும் பிரித்தானிய கப்பல்களை அது தாக்கலாம் என நம்பப்படுகின்றது.


இதேவேளை ஈரான் அடுத்தமாதம் வரலாறு காணாத மிகப்பெரிய போர் ஒத்திகை நடவடிக்கையொன்றை நடத்தவுள்ளதாகத் தெரியவருகின்றது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுமானால் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சாது என அந்நாட்டின் புரட்சிகரப் படையின் கட்டளைத் தளபதி  ஜெனரல் மொஹமட் அல் ஜபாரி எச்சரித்துள்ளார்.


 
நன்றி வீரகேசரி



 
மெக்சிகோ சிறையிலிருந்து 132 பேர் சுரங்கம் தோண்டி தப்பியோட்டம்
By General
2012-09-19
அமெரிக்கா-மெக்சிகோ எல்லைப் பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த 132 கைதிகள், சுரங்கம் தோண்டி தப்பியோடியது தெரியவந்துள்ளது. தப்பியோடிய கைதிகளை பொலிஸாரும், இராணுவத்தினரும் தேடி வருகின்றனர்.


மெக்சிகோ-அமெரிக்கா நாடுகளின் எல்லை பகுதியில் உள்ள நகரம் பீட்ராஸ் நெக்ராஸ். இங்கு உள்ள மெக்சிகோ நாட்டு சிறையில், கொள்ளை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய 730 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் சிறையில் உள்ள கைதிகளை கணக்கு எடுத்தனர்.


அப்போது சிறையில் இருந்த 132 கைதிகள் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறை முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சிறையில் இருந்த கைதிகளில் 132 பேர் சுரங்கம் தோண்டி தப்பியோடியது தெரியவந்தது.
கைதிகள் தப்பியோடி சுரங்கம் 21 அடி நீளமும், 4 அடி சுற்றளவும், 9.5 அடி ஆழமும் கொண்டதாக இருந்தது. சிறையில் இருந்து சுரங்கம் வழியாக வெளியே வந்த சிறை கைதிகள், சுரங்கம் முடியும் இடத்தில் இருந்த வேலியை வெட்டி எறிந்துவிட்டு தப்பியோடி உள்ளனர்.

கைதிகள் தப்பியோடிய சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து சிறைத் துறை அதிகாரி உட்பட 3 முக்கிய சிறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து சிறை துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,
சிறையில் உள்ள சுரங்கம் ஒரே நாளில் தோண்டப்பட்டது அல்ல.பல மாதங்களாக இந்த பணி நடைபெற்று வந்துள்ளது. சிறையில் அதிகளவிலான கைதிகளும் அடைக்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5ல் ஒரு பங்கு கைதிகள் தப்பியோடி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
சுரங்கத்தில் பல இடங்களிலும் மின் வயர்கள், கயிறுகள் ஆகிய கிடைத்துள்ளது. எனவே தப்பியோடிய கைதிகள் பல நாட்களாக திட்டமிட்டு, சுரங்கம் தோண்டி தப்பியோடி உள்ளனர் என்றார்.
தப்பியோடிய சிறை கைதிகளை கைது செய்யும் பணியில் போலீசாரும், இராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். மெக்சிகோவில் உள்ள சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோடுவது இது முதல் சம்பவம் அல்ல.
ஏனெனில் கடந்த 2010 டிசம்பர் மாதம் மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள டெக்சஸ் நகரில் இருந்த ஒரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 153 கைதிகள் தப்பியோடியுள்ளனர். ஆனால் அதற்கு சிறைத்துறை பணியாளர்களில் 41 பேர் உதவியது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 நன்றி வீரகேசரி 


  உகாண்டா பாராளுமன்றத் தேர்தலில் 19 வயது மாணவி வெற்றி
By General
2012-09-20
உகாண்டாவில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத் தேர்தலில் 19 வயதான இளம் பெண் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு அங்கு இதுவரை 8 முறை பாராளுமன்ற இடைத் தேர்தல்கள் நடந்து விட்டன. அதில் ஒரு தொகுதியில் மட்டுமே அந்நாட்டு ஜனாதிபதியின் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

இதனால் நாடாளுமன்றத்திலும் ஆளுங்கட்சிக்கு செல்வாக்குக் குறைந்து வருகிறது.

இந்த இக்கட்டான நிலையில் யூசுக் என்ற தொகுதியில் உறுப்பினராக இருந்த ஆளுங்கட்சி எம்.பி திடீரென மரணமடைந்தார். இதனால் அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதிலும் ஆளுங்கட்சி தோல்வி அடைந்தது.

இதையடுத்து எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன், மரணமடைந்த எம்.பியின் மகளான 19 வயதான பிரஸ்கோவியாவை வேட்பாளராக அறிவித்தது ஆளுங்கட்சி. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

எப்படி இளம் பெண்ணொருவரை வேட்பாளராக்கலாம் என்று எதிர்ப்புகளும் எழுந்தன. பாராளுமன்றத்தை ஜனாதிபதி அவமதித்து விட்டார் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.

ஆனால் அதை ஆளுங்கட்சி பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில் பிரஸ்கோவியாவுக்கு மக்களிடையே அனுதாப வாக்குகள் கிடைத்ததால் அவர் எளிதாக வெற்றி பெற்று விட்டார். இதையடுத்து ஆளுங்கட்சியினர் அங்கு நாடு முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

தற்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கப் போகிறார் இந்த இளம் எம்.பி. பிரஸ்கோவியா என்பது குறிப்பிடத்தக்கது. 
நன்றி வீரகேசரி

No comments: