.
அண்மையில் சிட்னியில் நடைபெற்ற தமிழர்களின் குரல்(Voice of Tamils) என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'உங்களின் கதையைச் சொல்லுங்கள்' (Tell Your Story) என்ற நிகழ்வுக்கு சென்றிருந்தேன். பொதுவாக சிட்னியில் ஈழத்தமிழர்களினால் நடாத்தப்படும் நிகழ்ச்சி என்றால் தென்னிந்தியா தமிழ் திரைப்படப் பாடல்கள், வட இந்திய திரைப்படப்பாடல்களுக்கு கவர்ச்சியான உடைகள் அணிந்து ஆடும் குத்தாட்டங்கள், இதிகாச நாடகங்கள், இராமர்,காந்தி என்று தான் இருக்கும். ஈழத்தமிழர்களின் அவலங்கள் இருக்காது. சென்ற வருடமும் தமிழர்களின் குரல் அமைப்பினால் நடாத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு நுளைவுச்சீட்டினை வாங்கியும், தவிர்க்கமுடியாத காரணங்களினால் நிகழ்ச்சிக்கு நான் செல்லவில்லை. அந்நிகழ்வுக்கு சென்ற நண்பன் ஒருவரை அந்நிகழ்வு பற்றி அபிப்பிராயம் கேட்டேன். ஈழத்தமிழர்களும், வேற்று நாட்டவர்களும் தங்களது நாட்டின் பிரச்சனைகளை நடன வடிவில் கொண்டுவந்தார்கள். பல வெளினாட்டவர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டார்கள். நடுவர்களாக அவுஸ்திரெலியர்கள் கலந்து கொண்டார்கள். சேகரிக்கப்பட்ட பணம் உலகத்தமிழர் பேரவை உட்பட சில அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டதாக நண்பன் எனக்கு சொன்னார். இம்முறை, சென்றமாதம் 8ம்திகதி சிட்னியில் உள்ள சில்வர்வோட்டர் என்ற இடத்தில் இருக்கும் சி3 அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியினை ஈழத்தமிழர் ஒருவரும், மேற்கிந்தியா தீவுகளில் ஒன்றான ஐமேக்கா நாட்டினைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரும் தொகுத்து வழங்கினார்கள்.
முதலில் உலகில் இன விடுதலைக்காக போரிட்டு வீரமரணம் அடைந்த மாவீர்ர்களுக்கும், போரினால் இறந்த பொதுமக்களுக்கும் ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. மங்கள விளக்கேற்றலின்பின்பு கரிசன் இளங்கோவன் அவர்களின் புஸ்பாஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
தமிழர்களின் குரல் அமைப்பின் தலைவர் இந்நிகழ்வு நடைபெறுவதன் நோக்கம் பற்றி சிறப்பாக உரையாற்றினார். பிரதம விருந்தினர் "இனத்தினால் வேறுபட்டாலும் நாங்கள் அனைவரும் அவுஸ்திரெலியர்கள். ஆனால் எமது மொழி அடையாளத்தினை மறக்கக்கூடாது" என்று உரையாற்றினார். இந்நிகழ்வில் ஈழம், பர்மா, தென்சூடான் போன்ற நாட்டவர்களின் கலாச்சாரம், அவலங்கள் நடனப் போட்டியாக நடைபெற்றது. பர்மா நாட்டினைச் சேர்ந்த ஒரு கிராமமக்கள் தாங்கள் வாழும் கிராமத்தில் உள்ள பெண்கள் தண்ணீர் பிரச்சனைக்காக பல தூரம் சென்று தண்ணீரை குடங்களில் பெற்று வருவதினை நடனத்தில் வெளிப்படுத்தினார்கள். தண்ணீர் எடுக்கப்போகும் போது ஏற்படும் பிரச்சனைகளை அழகாக 8, 9 வயது சிறுமிகள் நடனம் ஆடி வெளிப்படுத்தினார்கள். நடனமாடிய சிறுமி ஒருவர் இங்கு சிட்னியில் வீட்டிலேயே குழாயின் மூலமாக நீரினைப் பெறக்கூடியதாக இருப்பது மகிழ்ச்சியான விடயம் என்று சொன்னார்.
500 வருடங்களுக்கு முன்பு ஈழத்தில் வயலில் இருந்தும் கடலில் மீன்பிடித்தும் மகிழ்ச்சியாக வாழ்ந்த இனம் தமிழினம். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியரின் வருகைக்குப் பிறகு தமிழினம் அடிமைப்பட்டு, தற்பொழுது சிங்கள இனத்தினால் அடிமைப்பட்டு இருக்கின்றது. சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்ட கலவரங்களினால் பல தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டன. தமிழர்களின் உடமைகள் அழிக்கப்பட்டன. தமிழர்களின் கல்வி மறுக்கப்பட்டது. இதனால் தமிழர்கள் போராட வெளிக்கிட்டார்கள். பல வெற்றிகளைப் பெற்றார்கள். ஆனால் உலக நாடுகளின் உதவியுடன் 2009ல் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் ஒரு சில நாட்களில் கொண்டு குவிக்கப்பட்டார்கள். இவற்றை ஈழத்து கலைஞர்கள் நடன நிகழ்வின் மூலம் வேற்று இன மக்களுக்கு வெளிக்கொண்டு வந்தார்கள்.
(வட) சூடான் நாட்டு அரசினால், தென் சூடான் நாட்டு மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளை தென் சூடான் நடனக்கலைஞர்கள் நடனம் ஆடி, எங்களுக்கு அவர்களின் அவலங்களைச் சொன்னார்கள். தென்சூடான் மக்களின் எழுச்சி கீதம் நடன நிகழ்வில் பாடப்பெற்றது.அண்மையில் தென் சூடான் சுதந்திர நாடாக விடுதலை அடைந்திருக்கிறது. ஈழத்தமிழர்களைப் போல 30 வருட போராட்ட அனுபவங்களை தென் சூடான் மக்களும் அனுபவித்திருக்கிறார்கள்.
நடுவர்களின் தீர்ப்பின் மூலமும், பார்வையாளர்களின் வாக்களிப்பின் மூலமும் ஈழத்து நடனம் முதல் இடத்தினை பெற்றது. 3 அமைப்புக்கும் பரிசுப்பணம் கிடைத்தது. பர்மா, தென் சூடான் கலைஞர்களுக்கு கிடைத்த 1000 வெள்ளிகளை தங்களது தாயக மக்களுக்கு உதவுவதற்காக செலவளிக்கப்போவதாகச் சொன்னார்கள். ஸ்கொட்லாந்தினைச் சேர்ந்த நடுவர் ஒருவர், ஸ்கொட்லாந்தின் விடுதலை பற்றியும் சொன்னார். ஈழத்துக்கலைஞர்களோடு, இந்தோனேசியா ,கானா போன்ற வேற்று நாட்டவர்களின் சிறப்பு நடனங்களும் நடைபெற்றது.
எங்களின் திறமைகளை கொண்டு எங்களின் அவலங்களை உலகுக்கு தொடர்ந்து சொல்லிவரும் தமிழர்களின் குரல் அமைப்பின் முயற்சியிக்கு தலை வணங்குகிறேன். இந்நிகழ்வில் சேகரிக்கப்பட்ட பணத்தினையும், போட்டியில் வெற்றி பெற்றதினால் கிடைக்கப்பட்ட பணத்தினையும் உலகத்தமிழர் பேரவை, அவுஸ்திரெலியா மருத்துவ நிதியம் போன்ற அமைப்புக்களுக்கு தமிழர்களின் குரல் அமைப்பினால் பகிர்ந்து வழங்கப்பட்டது.
![](http://1.bp.blogspot.com/-mlfLJMfDS0c/UFqnZqKOYYI/AAAAAAAAAH8/WiGMXBpv-QI/s320/399734_448497615193879_1953183098_n.jpg)
நன்றி :kanthapublogspot
No comments:
Post a Comment