பேர்த் நகரத்தில் நடைபெறும் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு

.
பொதுநலவாய நாடுகளின் கட்டமைப்பிலிருந்து , சிறிலங்காவை நீக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் , சிறிலங்காவில் சனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரியும், பேர்த் நகரத்தில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளுக்கான கூட்டத்தொடரின் போது நடைபெறும் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு பற்றிய அறிவித்தல்

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தில் , எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரில் பங்குகொள்வதற்காக அதன் அங்கத்துவ நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்குகொள்ளவுள்ளனர்.




நாடுகள் , அமைப்புக்கள் , நிறுவனங்களுக்கு இடையிலான சனநாயக விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதற்காக , நிறுவப்பட்ட பொதுநலவாய நாடுகளுக்கான இக்கூட்டத்தொடர், எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதிவரை முக்கியமான அமர்வுகளைக் கொண்டிருக்கின்றது.

இக் கூட்டத்தொடரில் சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொள்ளவுள்ளார். சனநாயகப் பண்பாடுகளை பேணிப் பாதுகாப்பதற்காக நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரில், பாரிய போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்ப ட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர் பங்குகொள்வது பொதுநலவாயக் கட்டமைப்பையே அவமதிப்பதாகும்.

சனநாயகப் பண்புகள் மீறப்படுகின்றபோது குற்றம் சாட்டப்ப ட்டுள்ள நாடுகளைப் பொதுநலவாயக் கட்டமைப்பிலிருந்து விலக்குவதே , கடந்த காலங்களில் பொதுநலவாயநாடுகளின் தலைவர்கள் எடுத்துவரும் தீர்மானங்களாக இருந்து வந்திருக்கின்றன. தென்ஆபிரிக்கா , சிம்பாவே , பிஜி என இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

ஐக்கிய நாடுகள் சபை நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கை , பாரிய போர்க்குற்றங்களை சிறிலங்கா அரச படைகள் புரிந்துள்ளன எனவும் , அதற்குப் போதுமான சாட்சியங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அக்குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் தற்போது உள்ளடக்கப்படவுள்ளது.

இதேவேளை , ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கைக்கு , கனடா தொடர்ந்து ஆதரவளிக்குமென்று கனடியப் பிரதமர் ஸ்ரிபன் கார்பர் தெரிவித்துள்ளதுடன் சிறிலங்காவில் அடுத்த தடவை நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கனடா கலந்துகொள்ளப் போவதில்லையென்றும் , ஏனைய பொதுநலவாய நாடுகளும் இவ்வாறான நிலைப்பாட்டையே மேற்கொள்வார்களென்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே சனநாயகப் பண்புகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள பொதுநலவாய நாடுகளின் கட்டமைப்பிலிருந்து , சிறிலங்காவை நீக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் , சிறிலங்காவில் சனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரியும் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு பேர்த் நகரத்தில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள இக்கவனயீர்ப்பு நிகழ்வுகளில் அனைத்து உறவுகளையும் இணைந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மெல்பேணிலிருந்தும் சிட்னியிலிருந்தும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. நேரடியாகவே உங்கள் பயண ஒழுங்குகளை மேற்கொள்ள முடியாதவர்கள், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களைத் தொடர்புகொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு
சிட்னி - Jana 0469 089 883 Sribalan 0415 185 206
மெல்பேண் - Sabeshan 0421 373 654 Rajan - 0406 418 544
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா





No comments: