புல்லாங்குழல் அரங்கேற்றம்

.


"புல்லாங்குழல் அரங்கேற்றம்.... கட்டாயமாக வாருங்கள்!" என்று பிரதீஷன் பெற்றோரும்குருநாதர் சுதந்திரராஜூம் 
அன்புக்கட்டளை விடுத்திருந்தார்கள்.... "என்ன..இன்னுமொரு அரங்கேற்றம்...!" என்று அரை குறை மனத்துடன் சென்ற எனக்கு ஒரு எதிர்பாராத இசை விருந்து ஆச்சரியமாகக் கிடைத்தது.

செல்வன் பிரதீஷன் மிகவும் நேர்த்தியான ஒரு புல்லாங்குழல் இசைக் கச்சேரியை எல்லோர் மனமும் குளிரும்படி சமர்ப்பித்தார்.
இது தான் ஆஸ்திரேலியாவில் முதல் புல்லாங்குழல் அரங்கேற்றம் என்று சொன்னார்கள்.

புல்லாங்குழலில் கர்நாடக இசையை வாசிப்பது ஒன்றும் இலகுவான விடயமல்ல. வாசித்து அவஸ்தைப் பட்டவர்களுக்கு தான் அது தெரியும். சுருதியோடு பலமணி நேரம், காற்றுச் சத்தம் வராமல் வாசிப்பது மிகவும் கடினம்.




வருடக்கணக்கில் பயிற்சி வேண்டும். ப்ரதீஷின் புல்லாங்குழல் சுருதி சுத்தமாக எந்தவித காற்றுச் சத்தமுமின்றி
துல்லியமாக வேணு கான இசையை அள்ளித் தெளித்தது. மிகவும் திடகாத்திரமாக நேர்த்தியாக, பிசிறில்லாமல் வாசித்தார்.
மல்லாரியில் இருந்து தொடங்கி வசந்தா வீரணம், வாதாபி கணபதி, எந்தரோ மஹானுபாவுலு, ஹம்சத்வனி, ஸ்ரீ, லதாங்கி, மோகனம், ஷன்முகபிரியா, ரவிச்சந்திரிகா, நவரசகன்னடா, கானடா இப்படி பல ராகங்கள் அந்த மூங்கில் குழலின் துளைகளினூடாக பவனி வந்தன.
குருநாதர் மிருதங்க வித்துவானும் கூட பிறகு ஜதிகளுக்கும், ஸ்வரக்கட்டுக்களுக்கும், கோர்வைகளுக்கும் கேட்கவா வேண்டும்? இடக்கு முடக்கான பல கோர்வைகள் ஸ்வரங்களாக பரிமணித்தன. மிகவும் துணிச்சலோடு அந்த கஷ்டமான கோர்வைகளையெல்லாம் வெற்றிகரமாக தாளம் தவறாமல் வாசித்தார் பிரதீஷ். கைதட்டிப் பாராட்ட வேண்டும்.




வெளி நாடுகளில் பிறந்து வளர்ந்த பிரதீஷ் எங்கள் கலாச்சாரத்தை விட்டுவிடாமல், இந்த அளவுக்கு கர்நாடக இசையில் நாட்டம் காட்டி, புல்லாங்குழலை திறம்பட வாசிப்பது மிகவும் பாராட்ட வேண்டிய விடயம்.

முக்கியமாக இவருடைய பெற்றோர் குருநாதன், நிரூபா தம்பதியினரை மனமார பாராட்டி வாழ்த்த வேண்டும். பல பெற்றோர்கள் பிள்ளைகளை இசை வகுப்புகளுக்கு கொண்டு போவதோடு சரி. பிறகு பிள்ளைகள் அரங்கில் ஏறி பாடவேண்டுமென்று வீடியோ கமராக்களோடு ஆயத்தமாக இருக்கிறார்கள். வகுப்புகளுக்கு சென்றால் மட்டும் போதாது மணித்தியாலக் கணக்கில் அப்பியாசம் செய்யவேண்டும், எந்த நேரமும் கர்நாடக இசை காதுகளில் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பதை ஏனோ பெற்றோர்கள் மறந்து விடுகிறார்கள். அரங்கேற்றத்தின் ஆரம்பத்தில் குரு   சுதந்திரராஜா இதைத்தான் கச்சிதமாகச் சொல்லியிருந்தார்.



பிரதீஷ், ராகங்கள் வாசித்தபோது பயிற்சிக்குறைவு சற்று தெரிந்தது. லதாங்கி, ஷண்முகப்பிரியா இரண்டும் புல்லாங்குழலில் வாசிப்பதற்கு கடுமையான பிரதிமத்திம ராகங்கள். அப்பிடியிருந்தும் அவற்றை வாசிக்க முயன்று ஓரளவு வெற்றியும் கண்டது பாராட்டப்பட வேண்டிய விடயம். பிரதீஷுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இதோடு குழலை தூக்கியெறிந்து விடாமல் (விடமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு கட்டியமாக உண்டு) இந்த அரங்கப் பிரவீசத்தை ஒரு முதற்படியாக எடுத்து இன்னும் பயிற்சி பெறவேண்டும். பல மணித்தியாலங்கள் கர்நாடக இசைக் கச்சேரிகளை கேட்பதில் செலவழிக்க வேண்டும். கேள்விஞானம் என்பது கர்நாடக இசைக்கு மிகவும் முக்கியமானதொன்று. ஒரு திறனுள்ள புல்லாங்குழல் வித்துவானாக சிட்னி அரங்குகளில் அவர் மிளிரவேண்டும் என்பது என்னுடைய  பிரார்த்தனை.

குருநாதர் சுதந்திரராஜைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. சிட்னியில் எத்தனையோ கலைஞர்களுக்கு மிருதங்கம், புல்லாங்குழல் என்பவற்றை கற்பித்து பல அரங்கேற்றங்களை செய்திருக்கிறார். பிரதீஷன் இந்த வெற்றிக்கு அவர் பெரிய கருவியாக இருந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை





அத்தோடு மேலதிக கற்கைக்காக இந்தியா சென்று கலைமாமணி திருவாரூர் சுவாமிநாதன் அவர்களிடம் புல்லாங்குழலில் பல நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டதும் இல்லாமல் அரங்கேற்றத்திற்கு அவரையும் அழைத்திருந்தது அவர் இசையில் கொண்டிருந்த ஆர்வத்தைக் காட்டியது 


கூட வாசித்த பக்கவாத்திய கலைஞர்கள் அருமையாக தங்கள் பங்கினைத் தெரிந்து அடக்கமாக வாசித்தார்கள். வயலின் வாசித்த தியாகராஜன் ஆகட்டும், மிருதங்கம் வாசித்த பாலாஜி ஆகட்டும் கனகச்சிதமாக  பிரதீஷை ஆதரித்து வாசித்தார்கள். எங்களுடைய இரண்டு சிட்னி இளம் கலைஞர்களைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். கஞ்சிராவில் ஜனகனும், கடத்தில் கிருஷ்ணாவும் மிகவும் ஆர்வமாக அழகாக வாசித்தார்கள். நானும் ஒரு ஈழவன் என்ற முறையில் இந்த இளைஞர்களை பார்க்கும்  போது பெருமையாக இருக்கின்றது.


நேரத்தை சற்று குறைத்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. அரங்கேற்றங்களில் உணவு பரிமாறுவது இப்போது வழக்கமாகி விட்டது. இந்த உணவுப் பரிமாறல் முடியவே 45 -50  நிமிடங்கள் சென்று விட்டுகின்றன. என்ன செய்வது? இந்த பழக்கத்தை எம்மால் இனி மாற்ற முடியாது. நேரம் சென்றமைக்கு இது பெரிய காரணமாக இருந்திருக்கலாம்





அல்நூர் எமது நிகழ்ச்சிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்த அரங்கேற்றத்தின் பெரிய வெற்றிக்கு அவருடைய ஒலிப்பதிவு ஒரு பெரிய காரணமாக  இருந்தது. மொத்தமாக நல்லதொரு இசை நிகழ்வை பார்த்த சந்தோஷத்தில் அரங்கத்தை விட்டு வெளியேறினேன். இந்த வாய்ப்பை எமக்கு அளித்த பிரதீஷுக்கும் அவர் பெற்றோர் குருநாதருக்கும் எம் நன்றிகள்.

ஒரு இசைப் பிரியன்


3 comments:

kalai said...

சிட்னி இசை விழா 2011யினை நடாத்துபவர்கள் சிட்னியில் உள்ள இப்படி திறமையான ஈழத்துக் கலைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்.

அது சரி கடைசிப் படம் ஏன் கறுப்பு வெள்ளைப் படமாக இருக்கின்றது?

Ramesh said...

கிறுக்கன் புல்லாங்குழல் கலைஞர் பல சாகசங்களைச் செய்கின்றாரே என்று புகைப்பட கலைஞரும் சாகசம் புரிந்திருக்கிறார் ஒரு முறை நம்மவர்களை அந்த நாட்களுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார் அவ்வளவுதான். போலும். இல்லாத பொருள் மீது எல்லோர்கும் ஆசைவரும்.

Bhavithra said...

நான் இசை பயிலவில்லை ஆனாலும் நல்ல ரகிகை. அன்று அரங்கேற்ரம் மிக நன்றாக இருந்தது. ஒரு அரங்கேற்றம் போலல்லாது ஒரு கச்சேரியை ரசித்ததுபோல் ரசிக்கக் கூடியதாக இருந்தது. இதை எழுதியவர் நல்ல இசை அறிவுள்ளவர் போல் தெரிகிறது. ஏன் பெயர் போடாமல்எழுதியுள்ளீர்கள் . நல்ல விமர்சகர்களை நாமும் அடையாளம் காணலாம் அல்லவா. முரசே எழுதியவரின் பெயரை பிரசுரிப்பீர்களா?

குருவிற்கும் திறமையாக பக்கவாத்தியத்தால் மகிழ்வித்த இசை வித்தகர்களுக்கும் நன்றி. இப்படியான உள்ளுர் நிகழ்வுகளை உடனுக்குடன் தரும் தமிழ் முரசிற்கும் மனமார்ந்த நன்றிகள்.

பவித்ரா ராஜ்