எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 85 வேறுபாடு - முரண்பாடு ! உறைபொருளும் மறைபொருளும் ! ! முருகபூபதி


என்கொல்லைப்புறத்துக்காதலிகள், கந்தசாமியும் கலக்சியும், சமாதானத்தின் கதை ஆகிய நூல்களை எழுதியிருப்பவரும், அடுத்த மாதம் வெள்ளி என்ற நாவலை வெளியிடவிருப்பவரும்,  எம்மத்தியில்  ‘ ஜேகே ‘  என அழைக்கப்படுபவருமான இளம் தலைமுறை எழுத்தாளர் ஜெயக்குமாரன் சந்திரசேகரம், மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின் வெளியீடான இளவேனில் இதழுக்காக ( தை 2023 ) என்னை பேட்டி கண்டிருந்தார்.

 அதில் ஒரு கேள்வி இவ்வாறு அமைந்திருந்தது.

நீங்கள் எல்லோருடனும் நட்பாக இருக்கிறீர்கள். எதிரிகள்                  உங்களுக்கில்லை. உங்களுக்குக் கீழ்மை புரிந்தவர்களையும் நட்புப் 


பாராட்டும் குணம் உங்களுக்கு உண்டு.                                           உங்கள் தொடர்பு வட்டாரம் பெரிது. அதற்காக சில                              சமரசங்களையும் நீங்கள் செய்வதாக நான் உணர்கிறேன்? ஒரு இலக்கியவாதி தான் வரையறுத்த                      அறத்தின்கண் மாறு ஏற்படும்போது அதனை ஓங்கி                             ஒலிக்காமல்,  நட்புக்காகக் கடந்துபோவது சரியா?

 அநீதிக்காகக் குரல்கொடுக்கும் தார்மீக அறத்தை அப்போதே அவர் இழந்துவிடுகிறார் அல்லவா? இதனைக் குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை. அடுத்த தலைமுறை                  இலக்கியவாதியாக உங்கள் அறிவுரையைத்தான் கேட்கிறேன். 

 இக்கேள்விக்கு எனது பதில் பின்வருமாறு அமைந்திருந்தது.

 “ நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். அவ்வாறுதான் எதிரிகளும். ஒரு கால கட்டத்தில்  நட்பாக இருந்தவர்கள், பிறிதொரு காலகட்டத்தில் ஏதேனும் காரணங்களினால் எதிரியாகலாம். அவ்வாறே எதிரிகளும் பிறிதொரு காலகட்டத்தில் நட்பாகலாம்.

பொதுவாழ்வில் இது சகஜம்.

 எதிரிக்கும் துரோகிக்கும் அர்த்தம் வேறு வேறு.

எதிரிக்கு எதிரி நண்பனாகவும் மாறும் சமூகம்தான் இது.

 எதிரியிடத்திலும் சில மேன்மையான குணவியல்புகள் இருக்கும். நான் எப்போதும் மேன்மையான பக்கங்களைத்தான் பார்க்கின்றேன்.   என்னிடத்திலும் அறச்சீற்றங்கள், தார்மீகக் கோபங்கள் இருக்கின்றன.

 அவை பொது நோக்கு என வரும்போது மாறலாம்.  தனிப்பட்ட  எனது


தேவைக்காக - நலன்களுக்காக எவருடனும் நான் சமரசம் செய்துகொண்டதில்லை. ஆனால், பொதுப்பணிகளில் சில விட்டுக்கொடுப்புகளை பொதுநோக்கத்துடன் செய்திருக்கலாம். 

 இந்தக்கேள்வியையும் பதிலையும்  மீண்டும் மீண்டும் நான் இளவேனில் இதழில் படித்தேன். அதன் மூலம் என்னை நானே சுயவிமர்சனமும் செய்துகொண்டேன்.

 அவுஸ்திரேலியா மெல்பனில் சுமார் 36 ஆண்டு காலமாக வாழ்ந்து வருகின்றேன்.  பலர் எனது நண்பர்கள் வட்டத்தில் இணைந்தனர். சிலர் ஒதுங்கிச்சென்றனர். சிலர் என்னால் ஒதுக்கப்பட்டனர்.

 நான் வதியும் விக்ரோரியா மாநிலத்தில்  தோன்றிய தமிழ் அகதிகள்


கழகம், அவுஸ்திரேலியத் தமிழர் ஒன்றியம், ஆகியனவற்றின் உருவாக்கத்திற்கு எனது நேரத்தையும் உழைப்பினையும் வழங்கிய காலத்திலும் கசப்பான அனுபவங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.  காலப்போக்கில் இந்த இரண்டு அமைப்புகளும் செயல் இழந்துபோயிற்று.

 நண்பர் நடேசன் ஆரம்பித்த உதயம் மாத இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து, கலை இலக்கிய பக்கங்களை கவனித்தவாறு அதிலும் தொடர்ந்து எழுதினேன். இவ்விதழும் சோதனைகளை சந்தித்து, காலப்போக்கில் நின்றுவிட்டது. 

 1988 ஆம் ஆண்டு நான் முனைப்போடு தொடங்கிய இலங்கை மாணவர் கல்வி நிதியம்  ( Ceylon Students Educational Fund ) இன்றளவும் இயங்கிவரும் தன்னார்வத்தொண்டு நிறுவனமாகும்.

 அவ்வாறே 2001 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உருவாக்கிய தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்தையும், 2004 ஆம் ஆண்டளவில் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கமாக உருவாக்குவதற்கு முனைந்து செயற்பட்டபோது சிலர் இணைந்தனர்.  எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான திரு. நல்லைக்குமரன் குமாரசாமி அவர்கள்தான் இந்த அமைப்பிற்கான அமைப்பு விதிகளையும் தயாரித்து தந்ததுடன்,  இதனை பதிவுசெய்வதற்காக என்னுடன் வந்தவர்.


 
Australian Tamil Literary & Arts Society ( ATLAS ) எனப்பெயர் சூட்டியவரும் அவர்தான்.

 மேற்குறிப்பிட்ட இரண்டு அமைப்புகளும் தொடர்ந்தும் இயங்கிவருகின்றன.   இவற்றில் இணைந்தவர்கள் சிலர் தத்தமக்கு சரியெனப்பட்ட நியாயங்களுடன் விலகியும் சென்றிருக்கின்றனர். 

 ஜனநாயக அமைப்புகளில் இந்த நிலைமை சாதாரணம்.

ஆனால், அவ்வாறு விலகிச்சென்றவர்கள் அரசியல்வாதிகள் அல்ல!  கலை, இலக்கியவாதிகள், தன்னார்வத் தொண்டர்கள்.

 அதனால், மாற்று அமைப்புகளை அவர்கள் தோற்றுவிக்கவில்லை.

 குறிப்பிட்ட இரண்டு அமைப்புகள் தொடர்பான செய்திகளை ஊடகங்களுக்கு அனுப்புவது முதல் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

இவ்வாறு அமைப்புகளில் இணைந்து இயங்குவதனாலும்,  ஊடகங்களுக்கு செய்திகளையும் தகவல்களையும் அனுப்பவேண்டியிருப்பதனாலும்,  ஊடகங்களை நடத்தும் ஆசிரியர்களுடன்  முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் வந்தாலும்  அவர்களுடன் நான் பகைத்துக்கொள்வதில்லை.

 கருத்து வேறுபாட்டிற்கும் முரண்பாட்டிற்குமிடையே இருக்கும் வித்தியாசம் பற்றி கலைஞர் கருணாநிதி ஒரு சந்தர்ப்பத்தில் சொன்ன கருத்தைப்பற்றி, அண்மையில் சென்னையில் நடந்த நடேசனின் தாத்தாவின் வீடு நாவல் அறிமுக அரங்கில் ஒரு பேச்சாளர் சொன்னதுதான் இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.

 கலைஞர் சொல்லியிருக்கிறார்:

 பாலையும் தண்ணீரையும் கலந்தால்,  அவை இணைந்தாலும் தெரிவதில்லை.

 தண்ணீரையும் எண்ணையையும் கலந்தால் தெரியும்.

 ஒன்று வேறுபாடு, மற்றது முரண்பாடு.

 பொது வாழ்க்கையும் இப்படித்தான் என்பதை புரிந்துகொள்வோம்.

 நான் அனுப்பும் செய்திகளை அல்லது எனது படைப்புகளை அந்த ஊடகங்கள் வெளியிடாது போனாலும்கூட,  அதற்காக நான்  ஏமாற்றமடைவதில்லை. கோபித்து,  பகைமை பாராட்டுவதுமில்லை.

 எனது பொது வாழ்வில் நான் சந்தித்த சிலரது நாக்கில் சனி குடியிருக்கிறது. சிலரது எழுத்திலும் சனி குடியிருக்கிறது.  அவ்வாறு  “ சனி  “ குடியிருப்பவர்களை விட்டு முடிந்தவரையில் தொலைவில் இருப்பதையே நான் விரும்புகின்றேன்.

 கடந்திருக்கும் 36 ஆண்டுகளில் ( 1987 – 2023 ) அவுஸ்திரேலியா கண்டத்தில் நான் சந்தித்துப்  பழகிய பலர் மறைந்துவிட்டனர். அவர்களில் சிலர் எழுத்தாளர்கள்,  சிலர் கலைஞர்கள். சிலர் தன்னார்வத் தொண்டர்கள், சிலர் ஓவியர்கள்.

 அத்தகையோர் பற்றியும் எழுதியிருக்கின்றேன்.  வாழ்ந்துகொண்டிருக்கும் பலரைப்பற்றியும் எழுதிவருகின்றேன். இவர்களிலும் எழுத்தாளர்கள், கலைஞர்கள்,  தன்னார்வத் தொண்டர்கள், ஓவியர்கள், தேர்ந்த வாசகர்கள் இருக்கிறார்கள்.

 இதுவரையில் நான்  யார், யாரைப்பற்றி எழுதியிருக்கின்றேன்  என்ற விபரத்தை  அவர்களின் பெயர்ப்பட்டியலின் ஊடாக பதிவுசெய்கின்றேன்.

 அவுஸ்திரேலியாவில் மறைந்தவர்கள்

 1.    கி. இலக்‌ஷ்மண ஐயர்

2.    ஓவியர் கே. ரி. செல்வத்துரை

3.    தில்லை.  ஜெயக்குமார்

4.     ‘ சோமா ‘ சோமசுந்தரம்

5.    துரைராஜா  ஸ்கந்தகுமார்

6.    நாகராஜா மாஸ்டர்

7.    மருத்துவர் பொன். சத்தியநாதன்.

8.    இராஜநாயகம் இராஜேந்திரா.

9.     “ சாம்  “ ஆறுமுகசாமி.

10.  எழுத்தாளர் சண்முகம் சபேசன்.

11.  கலைஞர் கண்ணன்.

12. தன்னார்வத் தொண்டர் சதானந்தவேல்.

13.  எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை.

14.   “ அப்பல்லோ  “ சுந்தா  “ சுந்தரலிங்கம்.

15. எழுத்தாளர் காவலூர் இராஜதுரை.

16. எழுத்தாளர் அருண். விஜயராணி.

17. சிட்னி பத்மநாதன்.

18. குவின்ஸ்லாந்து பரமநாதன்.

19. குவின்ஸ்லாந்து வானொலி ஊடகர் சண்முகநாதன் வாசுதேவன்.

20.  ‘ தர்மா  ‘ தர்மசேகரம்.

21.   ‘ கலைவளன்  ‘ சிசு. நாகேந்திரன்.

22. எழுத்தாளர் கே. நித்தியகீர்த்தி.

23.    ஞானம் இரத்தினம்.  

24.  ஆசிரியை மகேஸ்வரி சொக்கநாதர்.

25.  தன்னார்வத் தொண்டர் மகாதேவி ஜெயமணி முருகையா

26. தன்னார்வத்தொண்டர் தியாகராஜா ஶ்ரீஸ்கந்தராஜா

 

வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.

 

1.     சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன்

2.    அண்ணாவியார் இளைய பத்மநாதன்

3.    எழுத்தாளர்  நொயல் நடேசன்

4.    கலைஞர் மாவை நித்தியானந்தன்.

5.    எஸ். கொர்னேலியஸ்

6.    நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

7.    நவநீதராஜா

8.    எழுத்தாளர்  ‘ பாடும் மீன் ‘ சு. ஶ்ரீகந்தராசா

9.    பாடகர் நித்தி கனகரத்தினம்.

10. எழுத்தாளர் மெல்பன் மணி

11. எழுத்தாளர் சட்டத்தரணி சந்திரிக்கா சுப்பிரமணியன்.

12.  தேர்ந்த வாசகி திருமதி பராசக்தி சுந்தரலிங்கம்.

13. எழுத்தாளர் சகுந்தலா கணநாதன்.

14. எழுத்தாளர் வி. எஸ். கணநாதன்.

15. வாசகி சாந்தி சிவக்குமார்

16. எழுத்தாளர் தாமரைச்செல்வி.

17. எழுத்தாளர் சியாமளா யோகேஸ்வரன்.

18. வாசகர் வீடியோ கிருஷ்ணமூர்த்தி

19. தன்னார்வத் தொண்டர் அருணாசலம் ஶ்ரீதரன்.

20. வாசகர் இரகுமத்துல்லா

21. வாசகர் கருப்பையா ராஜா.

22. வாசகர்  சுபாஷினி சிகன்

23. வாசகர் பாலன் சுதன்.

24. வாசகர் அசோக்

25.  வாசகர் வசுந்தரா பகீரதன்

26. எழுத்தாளர் மணியன் சங்கரன்.

27. வாசகர் திருமதி நிர்மலா அல்போன்ஸ்

28. எழுத்தாளர்  ராணி தங்கராஜா.

29. தோழர் லயனல் போப்பகே.

30.  சமூகப்பணியாளர்  ‘ ரஞ்சன்  ‘ வைத்தியநாதன்

31. சமூகப்பணியாளர்  ‘ சுந்தர்  ‘ சுந்தரமூர்த்தி

32. பேராசிரியர் அமீர் அலி.

இனி மீண்டும்,  இந்தத் தொடர்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஜேகே ஜெயக்குமாரனின் கேள்வியையும் எனது பதிலையும் பார்க்கவும்.

( தொடரும் )

letchumananm@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: