இலங்கைச் செய்திகள்

 தொல்பொருள் திணைக்களம் மீது தமிழ் கட்சிகள் குற்றச்சாட்டு

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கரையோர பாதுகாப்பில் ஆஸி. முதலீடு

இலங்கை - இந்திய உறவு மேலும் பலப்படுத்தப்படும்

சுப்ரமணியன் சுவாமி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்திப்பு

இலங்கையில் முதலீடு செய்ய தயாராகிறது அதானி நிறுவனம்


தொல்பொருள் திணைக்களம் மீது தமிழ் கட்சிகள் குற்றச்சாட்டு

திருமலை நீதிமன்றில் திணைக்களத்துக்கு எதிராக வழக்கு

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுடைய காணிகளை அபகரிக்கும் செயற்பாடு நீண்ட காலமாக இடம் பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடி , திரியாய் போன்ற பகுதிகளில் தமிழ் விவசாயிகளின் பூர்வீக காணிகளில் விவசாயத்தில் ஈடுபட தொல் பொருள் திணைக்களம் தடுப்பதற்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஆஜராகிய பின் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து இவ் விடயம் தெர்டரபாக கருத்து தெரிவிக்கும் போது,

தொல் பொருள் திணைக்களம் வடக்கிலும் கிழக்கிலுமுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயல் அரங்கேற்றி வருகின்றது.

அதன் ஒரு பிரதிபலிப்புத் தான் திருகோணமலை மாவட்டம் திரியாய் மற்றும் தென்னமரவாடி கிராமத்தில் தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளில் அவர்கள் விவசாயம் செய்வதற்கு தடுத்த ஒரு சம்பவம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம் பெற்றது.

அந்த வேளையில் நிலத்திற்கு உரித்தான விவசாயிகள் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து ஒரு இடைக்கால தடை உத்தரவைப் பெற்றிருந்தனர்.

அந்த வழக்கை ஆதரித்து வாதாடியவர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் இடைக்கால உத்தரவை மேல் நீதிமன்றம் வழங்கி தொல்பொருள் திணைக்களம் விவாயிகளுக்கு இடையூறு கொடுக்க கூடாது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்ய உரித்துடையவர்கள் என கட்டளை பிறப்பித்திருந்தது.

அந்த வருடம் விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களில் செய்கையை மேற் கொண்டு அறுவடை செய்யக் கூடியதாக இருந்தது.ஆனால் அதற்கு பிறகு தொடர்ச்சியாக விவசாயிகள் தடுக்கப்பட்டனர்.வேறு பல அச்சுறுத்தல்களுக்கும் விவசாயம் செய்வதற்கான தடுப்புக்களும் மேற் கொள்ளப்பட்டு தங்களுடைய விவசாய நடவடிக்கைகளை இவ்வருடமும் மேற் கொள்ள முடியாதவர்களாக காணப்படுகின்றனர்.

இந்த பின்னனியிலே இறுதி விவாதத்திற்கு இன்று 30ஆம் திகதி மேல் நீதி மன்றத்திலே இந்த வழக்கு எடுக்கப்பட்டது.

100 வருடங்களுக்கு முற்பட்ட காணி உறுதிகளை காணி உரிமையாளர்கள் வசம் உள்ளது.அவற்றை நாம் வழக்கிலே காட்சிப் படுத்தி இருக்கின்றோம்.

ஆகையால் இது அரச காணி அல்ல தனியார் காணி இந்த காணியிலே தங்களுடைய விவசாயத்தை செய்வதற்கு அவர்களுக்கு உரித்துண்டு அதை தடுப்பதற்கு எவருக்கும் உரிதில்லை என்ற வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.

வழக்கினுடைய இறுதித் தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் (மார்கழி) 02ஆம் திகதி என திகதியிடப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக நவம்பர் மாதத்திலே இரு தரப்பினரும் எங்களுடைய வாதங்களுக்கு சார்பான எழுத்து மூல சமர்ப்பணங்களை செய்யலாமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதென்றும் இந்த வழக்கின் தீர்ப்பு ஒரு முக்கியமான தீர்பாக அமையுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அன்புவழிபுரம் தினகரன் நிருபர் - நன்றி தினகரன் 






இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கரையோர பாதுகாப்பில் ஆஸி. முதலீடு

05 இலட்சம் டொலர் வழங்கியது

இலங்கை கடல் எல்லையில், கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காக, கடல்சார் எதிர்வுகூறல் கட்டமைப்பை அமைக்க 05 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான முதலீடுகளை அவுஸ்திரேலியா செய்துள்ளது.

மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் தலைமையில், நாட்டின் சில நிறுவனங்களுடன் இணைந்து, இந்த கடல்சார் எதிர்வுகூறல் கட்டமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, மீன்பிடி, கடல் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட சமுத்திரவியல் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தின் பிரதிபலிப்பாக இத் திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நன்றி தினகரன் 






இலங்கை - இந்திய உறவு மேலும் பலப்படுத்தப்படும்

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் தெரிவிப்பு

இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டங்கள் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான பங்காளித்துவத்தை மாற்றுவதற்கான இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்காக நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதனைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையில் கல்வி, திறன் பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்ய நம்புவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.

 நன்றி தினகரன் 






சுப்ரமணியன் சுவாமி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்திப்பு

இந்திய அரசியல் பிரமுகரும், பாரதீய ஜனதா கட்சி (BJP) உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று (28) கொழும்பில் வைத்து சந்தித்தார்.

இச்சந்திப்பில் சுப்ரமணியன் சுவாமியுடன் இந்திய சட்டத்தரணிகள் மற்றும் தொழிலதிபர்கள் குழுவும் சென்றிருந்தது.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) ஏற்பாடு செய்துள்ள 15ஆவது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுப்பரமணியன் சுவாமி இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரதீய ஜனதா கட்சி (BJP) உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி நாளையதினம் (30), பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நேற்றிரவு இடம்பெற்ற நவராத்திரி பூஜையில், சுப்ரமணியன் சுவாமி விசேட அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினகரன் 






இலங்கையில் முதலீடு செய்ய தயாராகிறது அதானி நிறுவனம்

இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வலுசக்தி துறைக்கே அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதானி குழுமம் எதிர்பார்த்துள்ளதாக அதானி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார். அதானி நிறுவனம் கடந்த 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது பல்வேறு நாடுகளிலும் அதானி குழுமம் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

நன்றி தினகரன் 




No comments: