அஞ்சலிக்குறிப்பு தேனீ – ஜெமினி கங்காதரன் விடைபெற்றார் ! மாற்றுச்சிந்தனைக்கு களம் வழங்கிய கர்மயோகி !! முருகபூபதி


டந்த 2020 ஆண்டு மலர்ந்தது முதல் அடுத்தடுத்து எனது நெஞ்சத்திற்கு நெருக்கமானவர்கள் நிரந்தரமாக விடைபெற்ற தருணங்களில் சோகத்தை அடக்கிக்கொள்ள சிரமப்பட்டேன்.

மீண்டும் இந்த 2021 மலர்ந்ததும், அந்தச்சிரமம் மேலும் உக்கிரமடையும் வகையில் மரணச்செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனோ தொடர்ந்தும் உலகடங்கிலும் உக்கிரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. அதன் தொற்றுக்கு ஆளாகியவர்கள், சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியிருந்தாலும் பக்கவிளைவுகளின் தாக்கத்தினால், மீண்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும், அனுமதிக்கப்படாமலும்  நிரந்தரமாக விடைபெற்றனர்.

உடல் உள்ளுறுப்புகளை மோசமாக பாதிக்கும் அந்த எதிரி


உடனிருந்து பலியெடுத்துவருகிறது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தத்தொற்றுக்கு ஆளாகியிருந்த எனது அருமைத் தோழரும் தேனீ இணைய இதழின் ஆசிரியருமான ஜெமினி கங்காதரனையும்  கடந்த 22 ஆம் திகதி   வெள்ளிக்கிழமை கொரோனோ காவுகொண்டுவிட்டது.

அச்செய்தி என்னை வந்தடைந்தபோது, அவரை நன்கு தெரிந்த ஒரு சில தோழர்களுடன் துயர்பகிர்ந்துகொண்டேன்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தோழர் ஜெமினி பற்றிய கட்டுரையை எழுதி, அவர் அயராமல் மேற்கொண்டுவந்த ஊடகப்பணியை வாசகர்களுடன் பகிர்ந்திருந்தேன். அந்தப்பதிவின் இறுதியில், அவர் விரைவில் குணமடையவேண்டும் என்றும் எழுதியிருந்தேன்.

எனினும்  அவரது உயிரைப்பறித்த அந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு எனதும் மற்றவர்களினதும்  உருக்கமான வேண்டுதல் எட்டவில்லை.

இலங்கை வடபுலத்தில் புங்குடுதீவில் 09.01.1965 ஆம் திகதி கணேஷ் – மங்கையற்கரசி தம்பதியரின் செல்வப்புதல்வனாகப்பிறந்த ஜெமினி கங்காதரன் யாழ். இந்துக்கல்லூரியில் படித்தவர்.

இளம்வயதிலேயே இனவிடுதலைப்போராட்டத்தில்


தன்னையும் இணைத்துக்கொண்டு ஈரோஸ் இயக்கத்தில் இயங்கியவர்.

தாயகத்தில் வாழமுடியாத சூழல்தோன்றியதும் அய்ரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து, அங்கும் இனவிடுதலை குறித்த செயற்பாடுகளிலேயே தன்னை அர்ப்பணித்திருந்தவர்.

ஈழவிடுதலைப்போரில் சகோதரப்படுகொலைகளை சகியாமல் மாற்றுச்சிந்தனையாளர்களுடன் இணைந்து  ஊடகத்துறையில் ஈடுபட்டார்.

1989 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தோழர்களுடன் இணைந்து தேனீ இதழை ஆரம்பித்தார்.  கலை, இலக்கிய, அரசியல், சமூக அக்கறை சார்ந்த படைப்புகளுக்கு தேனீ களம் வழங்கியது.

அதன்பின்னர் அக்கினி என்ற இதழையும் சிறிதுகாலம் நடத்தினார்.  அதன்பின்னர் தேனீ இணைய இதழை தொடங்கி தினமும் பதிவேற்றினார்.

மெல்பன் நண்பர் எழுத்தாளர் நடேசன், எனக்கு தேனீ இணைய


இதழை அறிமுகப்படுத்தினார்.  முதலில் அவர் ஊடாகவே எனது ஆக்கங்களை ஜெர்மனியிலிருந்து வெளிவந்த தேனீ இணைய இதழுக்கு அனுப்பினேன்.  அவற்றை ஏற்று தொடர்ச்சியாக பிரசுரித்த ஜெமினி கங்காதரன்,  என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தோழமை பூண்டார்.

அதன்பிறகு நானே நேரடியாக அவருக்கு எனது ஆக்கங்களை அனுப்பத்தொடங்கினேன்.  இவ்வாறு தொடங்கிய எமது தோழமையினால், எனது இலக்கிய மற்றும் அரசியல் ஆய்வாளர்களான நண்பர்களின் ஆக்கங்களையும் தேனீக்கு அறிமுகப்படுத்தினேன்.  அவற்றையும் மனமுவந்து ஏற்று பதிவேற்றினனார்.

தமிழ்நாட்டில் வெளியான யுகமாயினி இதழில் வெளியான எனது சொல்ல மறந்த கதைகள் தொடர்,  நடேசனின் வலைப்பூவிலும்,   அதேசமயம் , தேனீயிலும்  தொடர்ந்து வெளியானது.  அதற்கு நல்ல வரவேற்பிருந்தமையால், அதனை நூலாகத் தொகுத்து வெளியிடுமாறு கிளிநொச்சியிலிருந்து இலக்கிய நண்பர் கருணாகரன் தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.

பின்னர்  அவரது ஏற்பாட்டிலேயே சொல்லமறந்த கதைகள் தமிழ்நாடு மலைகள் பதிப்பகத்தினால்  2014 ஆம் ஆண்டில் வெளியானது.  அதன் வெளியீட்டு அரங்கு  மெல்பனில் நடந்தபோது,  தொலைபேசியில் என்னை வாழ்த்தியதோடு, அது போன்ற தொடர்களை தொடர்ந்தும் எழுதுமாறு தோழர் ஜெமினி கங்காதரன் உற்சாகமூட்டினார்.

அவரது ஊக்கமூட்டும் வார்த்தைகளினால்தான் எனது சொல்லவேண்டிய கதைகள், சொல்லத்தவறிய கதைகள் என்பனவும் அடுத்தடுத்து வெளியாகின.

இவ்வாறு எனக்கு பரவலான வாசகர்களை தேடித்தந்திருக்கும் தோழர் ஜெமினி,   நான் தேனீக்கு அனுப்பும் அரசியல் சார்ந்த ஆக்கங்களில் இடம்பெறும்  பெயர்களில் தவறுகள் நேர்ந்திருந்தால், தாமதிக்காமல் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு திருத்தங்களை பக்குவமாக எடுத்துச்சொல்லி, திருத்தியபின்னரே வெளியிடுவார்.

இவ்வாறு சகோதர வாஞ்சையுடன் பழகியவருக்கு  கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனோ தொற்று வந்ததையடுத்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  சிகிச்சையின் பின்னர்  வீடு திரும்பி தொலைபேசி ஊடாக இரண்டு தடவைகள் உரையாடினார்.  

அவரது குரலில் சோர்வு இழையோடியது. முற்றாகத்தேறியபின்னர் (2020 ) ஜூன்மாதம் முதல் மீண்டும் தேனீயை இயக்கவிருப்பதாகவும் சொன்னார்.

கொரோனோ தொற்றின் அறிகுறிபற்றி நான் கேட்டபோது,                    “  அனைவரும் சொல்வதுபோன்று, தனக்கு தடிமன், காய்ச்சல், இருமல் வரவில்லை என்றும்,  உடலில் நடுக்கமும் பலவீனமும் இருந்தது,  அத்துடன் என்னையறியாமல் வாய்பிதற்றினேன்.  தாமதியாமல் சிகிச்சைக்கு சென்றபோதுதான், தனக்கும் கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சொன்னார்கள் எனவும்,  தனியறையில் வைத்து தன்னை மிகுந்த அக்கறையுடன் கவனித்தார்கள்  “ என்றும் சொன்னார்.

தான் இந்தத்  தொற்றிலிருந்து முற்றாக நீங்கி தேறிவந்துவிடுவேன் என்ற நம்பிக்கை அவரது வார்த்தைகளில் புலப்பட்டது. 

எனினும் அடுத்துவந்த மாதங்களில் அவருடனான தொடர்பாடல் துண்டிக்கப்பட்டுவிட்டது. அவரது தொலைபேசி இலக்கங்களுக்கு பல தடவை தொடர்புகொண்டபோதிலும் இணைப்பு கிடைக்கவில்லை.  அவருக்கு நெருக்கமான தோழர்கள் இலங்கையில் கருணாகரன், பிரான்ஸில் ராயப்பு அழகிரி, அவுஸ்திரேலியாவில் நடேசன் ஆகியோருடன் உரையாடி மேலதிக தகவல்களை பெறுவதற்கு முயற்சித்தபோதிலும் பலிதமாகவில்லை.

ஜெமினியுடன் நெருக்கமான உறவைப்பேணிய தோழர்கள் அண்மையில் நடத்திய இணையவழி காணொளி கலந்துரையாடலில் ஜெமினியின் சிறப்பியல்புகள், அவரது மாற்றுச்சிந்தனை தொடர்பான கலகக்குரல் பற்றியெல்லாம் விதந்துரைத்தனர்.

அவர் எத்தகைய நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் மத்தியிலிருந்து இயங்கியிருக்கிறார் என்பதையும் அவர்களின் உரைகளிலிருந்து தெரிந்துகொள்ளமுடிந்தது.

 நான் தேனீயீல் எழுதத்தொடங்கிய காலப்பகுதியில் தேனீ தினமும் சுமார் நாற்பதினாயிரம்பேர் பார்த்து வாசிக்கும் ஊடகமாக அது விளங்கியதையும் அறிவேன்.

2009 மே மாதம் ஈழவிடுதலைப்போர் முடிவுக்கு வருவதற்கு முன்னர் தேனீ பரவலாக வாசகர்களை சென்றடைவதை கண்டுகொண்ட புகலிடதேசத்து விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர்களும் தேனீயை தங்களிடம் தந்துவிடுமாறு கோரியிருந்ததாகவும்,  அதற்காக அதிக விலை கொடுப்பதற்கு தயாராகியிருந்ததாகவும்  எனினும் தான் அந்த சமரசத்திற்கு உடன்படவில்லை என்றும் சொல்லியிருந்தார்.

தேனீ இணைய இதழை நீண்டகாலமாக தனிமனிதராக ஓர்மத்துடன் நடத்தி, மாற்றுச்சிந்தனைகளுக்கு  சிறந்த  களம் வழங்கினார். அரசியல் ஆய்வுத் தொடர்களுக்கும் கலை, இலக்கிய படைப்புகளுக்கும் பயனுள்ள நேர்காணல்களுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் களம் வழங்கி,  வாசகர்களிடம் சேர்ப்பித்தவர். அதற்காக எந்த ஊதியமும் பெறாமல் கருத்துக்களையும் எதிர்வினைகளையும் விமர்சனங்களையும் மாத்திரமே பெற்றுக்கொண்டவர்.

எனினும்,  தேனீயில் வரும் ஆக்கங்களுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பு என்ற ஊடக தர்மத்தை பின்பற்றி,  பாரதூரமான விமர்சனங்கள்  அதற்கு வரும் பட்சத்தில், அவற்றை உரியவர்களுக்கே சேர்ப்பித்து கவனத்திற்குட்படுத்தி ஊடக தர்மத்தின் கண்ணியத்தையும் காப்பாற்றினார்.

ஆங்கில ஊடகங்களில் ஏதேனும் சிறந்த அரசியல் ஆய்வுகள் வெளிவரும் பட்சத்தில் அவற்றை தெரிவுசெய்து இலங்கைக்கு அனுப்பி அங்கிருந்து குமார் என்ற  மொழிபெயர்ப்பாளரிடமிருந்து மொழிமாற்றம் செய்து தருவித்து, தானே கணினியில் பதிவுசெய்து வெளியிட்டார்.

 மணியம் என்பவர் தொடர்ச்சியாக எழுதிய  ஈழப்போராட்டத்தின் உறைபொருளும் மறைபொருளும் தொனித்த நீண்ட கட்டுரைத் தொடரை தோழர் ஜெமினி கங்காதரனே தினமும் கண்விழித்திருந்து பதிவுசெய்து தேனீயில் வெளியிட்டார்.  கணினியில் தமிழில் பதிவு செய்யத் தெரியாத பலரதும் ஆக்கங்களையும்  கையெழுத்துப்பிரதியில் பெற்றும் பதிவுசெய்து வெளியிட்டார்.

தனது குடும்பத்திற்காக இரவுநேர வேலைக்குச்சென்று,  அதிகாலை வீடு திரும்பி, உறங்காமல் விழித்திருந்து தேனீயை பதிவேற்றிவிட்டே  ஓய்வெடுத்துவந்தவர்.

புகலிட தேசத்தில் அவர் இணையத்தின் ஊடாக தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் சேவையாற்றி  அறிவார்ந்த  தேடலையும் அமைதியாக  விதைத்தவர்.

உலகடங்கிலும் வாழும் பலரைப்பற்றிய ஆக்கங்களும் தேனீயில் வெளியாகியிருக்கின்றன. நானே பல கலை, இலக்கிய, ஊடகத்துறை, சார்ந்த ஆளுமைகள் பற்றி தேனீயில் தொடர்ச்சியாக எழுதியிருக்கின்றேன்.

எனினும் அதற்கெல்லாம் அடிப்படைக்காரணமாக விளங்கிய தேனீ ஆசிரியர் தோழர் ஜெமினி கங்காதரன் பற்றி இதுவரையில் எங்கும் எதிலும் எழுதவில்லை என்ற மனக்குறையும் நீண்டகாலமாக  எனது மனதை உறுத்திக்கொண்டிருந்தது.  அதனால் அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டதையடுத்து கடந்த நவம்பர் மாதம் அவர்பற்றிய விரிவான பதிவை எழுதினேன். அதனை அவர் பார்த்தாரா..? படித்தாரா..? என்பதும் தெரியாமல் இந்த அஞ்சலிக்குறிப்பினை அவரது மறைவுக்குப்பின்னர் எழுதுகின்றேன்.

கடந்த  2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில்  நான் பிரான்ஸிற்கு செல்லநேரிட்டது.  எனது   குழந்தைப்பருவத்தில் வித்தியாரம்பம் செய்வித்து ஏடு துவக்கிய ஆசான் ( அமரர் ) பண்டிதர் க. மயில்வாகனன் அவர்களின் நூற்றாண்டு விழாவுக்காக என்னை அழைத்திருந்தார்கள்.

எனது வருகை பற்றி தோழர் ஜெமினிக்கு தெரிவித்தேன். அந்தப்பயணத்தில் என்னை ஜேர்மனிக்கும் வருமாறு அழைத்தார். எனது பயண ஒழுங்குகள் பாரிஸ், லண்டன், தமிழ்நாடு, இலங்கை என்று தீர்மானிக்கப்பட்டிருந்தமையால் ஜேர்மனிக்கு இம்முறை வரமுடியாது, அடுத்த தடவை பார்ப்போம் என்றேன்.

 “ அதனால் என்ன…,   நானே உங்களைப்பார்க்க பாரிஸுக்கு வருகிறேன்  “ என்றார். சொன்னபடி ஜெர்மனியிலிருந்து ஒருநாள் அதிகாலையே ரயிலில் புறப்பட்டு என்னைத்தேடி வந்தார்.

தேனீயில் எனது எழுத்துக்களைப்படித்து  என்னுடன் தோழமை பூண்டவரான ராயப்பு அழகிரி அவர்களும் நான் பாரிஸில் தங்கியிருந்த இடம்தேடிவந்து அழைத்துச்சென்றார்.

எமக்கான சந்திப்பு ஒன்றுகூடலுக்கான ஏற்பாட்டை ,  எனது நீண்ட கால நண்பரும் யாழ்ப்பாணம் ஈழநாடு இதழின் ஆசிரியரும் டான் தொலைக்காட்சி இயக்குநருமான எஸ். எஸ். குகநாதனின் துணைவியார் றஜனி குகநாதன்  அவர்கள் பாரிஸில் தமது இல்லத்தில் செய்திருந்தார்.

தோழர் அழகிரியும் நானும் மற்றும் ஒரு தோழர் உதயகுமாரும் ரயில் நிலையம் சென்று தோழர் ஜெமினியை அழைத்துச்சென்றோம். அன்றைய தினத்தை மறக்கமுடியாது.  யாழ். ஈழநாடு இதழில் முன்னர் பணியாற்றிய பத்திரிகையாளர் துரைசிங்கமும் வந்திருந்தார்.

அன்றைய பொழுது மிகவும் இனிமையாக கழிந்தது. மெல்பனில் எனது நண்பர்கள் எனது வாழ்வையும் பணிகளையும் சித்திரித்து  எடுத்த ரஸஞானி ஆவணப்படத்தையும் பார்த்தனர்.

தேனீயில் தொடர்ந்து வெளிவந்து நூலுருப்பெற்ற எனது படைப்புகளையும் அன்று  ஜெமினிக்கு வழங்கினேன். 

மாலையானதும் மீண்டும் தோழர் ஜெமினியை  பாரிஸ்  ரயில் நிலையத்திற்கு  சற்றுத் தொலைவில் விட நேர்ந்தமைக்கு   குறிப்பிட்ட பாரிஸ் வீதியில்  அன்று  ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்தான் காரணம். 

ஜெர்மனிக்கான ரயிலுக்கு ஒரு சில நிமிடம்தான்  இருந்தது. ஜெமினி ஓட்டமும் நடையுமாக சென்று ரயிலைப்பிடித்தார்.  ஒரு நிமிடம் தாமதித்திருந்தால், அன்று அவர் பாரிஸில்தான் நிற்கநேர்ந்திருக்கும்.

என்னைத்தேடி வந்த அந்த நல்லுள்ளத்தை அன்று  அந்த எதிர்பாராத போக்குவரத்து நெருக்கடி கடுமையாக சோதித்துவிட்டது.

அவர் ஜெர்மனிக்கு சென்று சேரும் வரையில் பதட்டத்துடன் இருந்தேன்.

அந்தப்பதட்டம் மீண்டும் அவர் கொரோனோ தொற்றின் பாதிப்பின் பக்கவிளைவுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வந்தது.

  “ தொடர்ந்தும் பதட்டப்படாதீர்கள் தோழரே… நான் மேலும் மேலும் பதட்டம் தரமாட்டேன் விடைபெறுகின்றேன்… நினைவுகள்தான் சாசுவதமாக எஞ்சியிருக்கும்  “ என்று சொல்லாமல் சொல்லிவிட்டு போய்விட்டார்.

தோழர் ஜெமினி கங்காதரனின் ஈடு செய்யமுடியாத இழப்பினால் ஆழ்ந்த துயரத்திலிருக்கும் அன்னாரது அருமைத்துணைவியார் அமுதாவுக்கும்  மற்றும் உறவுகளுக்கும் அவர்மீது நேசம் பாராட்டிய தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்.

நூற்றுக்கணக்கான  மாற்றுச்சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்களுக்கு தோழர் ஜெமினியின்  தேனீ இணைய இதழ் உரிய களம் வழங்கியது.   

அவரது இழப்பு ஈடுசெய்யப்படவேண்டியது.

Letchumananm@gmail.com

---0---

 

 

No comments: