வாரியார் சுவாமிகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் ! [ நவம்பர் ஏழாந்திகதி வாரியார் சுவாமிகள் நினைவுநாள். அதனைக் கருத்திருத்தி இக்கட்டுரை அமைகிறது ]]

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ---- அவுஸ்திரேலியா 

 

   வீணை படித்திருந்தால் வித்துவானாய் மேடைகளில் இசை

நிகழ்
 சிகள் செய்த படியேதான் இருந்திருக்க வேண்டி வந்திருக்கும். ஆனா ல் இறைவனின் ஆணை வேறாக இருந்ததால் பாதை மாறியது. பய ணமும் மாறியது.சைவமும் தமிழும் கைபிடித்து நின்றது. கலியுகத் தெய்வம் கந்தப் பெருமான் தன்னுடைய  கடைக்கண் பார்வையில் வைத்திருக்கும் நிலையும் உருவாகியது.இப்படி யெல்லாம் யாருக்கு நேர்ந்தது  என்று எண்ணிடத் தோன்றுகிறதல்லவா ! வேறு யாரு மல்ல ..... பேச்சாலும் ,
 எழுத்தாலும்,   கதைகளா லும்இசையாலும் எம் மையெல்லாம் தன்பக்கம் ஈர்த்து நின்ற வாரியார் சுவாமிகளே !
    கிருபானந்த வாரியார் என்னும் பெயரினை நாங்கள் சாதாரண மாகவே பார்க்கிறோம். அந்தப் பெயருடன் சுவாமிகள் என்பதையும் சேர்த்து அழைத்து விட்டு அத்துடன் நின்று விடுகிறோம். ஆனால் அந்தப் பெயரின் அர்த்தத்தை நாங்கள் எவருமே எண்ணியே பார்ப்ப தில்லை. 'கிருபை என்றால் 'கருணை ; ' ஆனந்தம்      இன்பம் ;  ' வாரி என்றால் பெருங்கடல் இப்பொழுது - "கிருபானந்த வாரியார் " என் னும் பெயரினை எண்ணிப் பாருங்கள். மலைப்பாக இருக்கிற தல்லவா ! இவருக்கு இப்பெயர் கருவிலேதான் உருவாகி இருக்க வேண் டும் என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது.கருணையே உருவமா கக் கொண்டே அவர் விளங்கி னார்.கருணை உருவில் இருந்தே பிரச ங்களை ஆற்றினார்.அனைவரையும் கட்டிப் போட்டார். கருத் துக்களை வழங்குவதில் கடலாகாவே இருந்தார்.அவரின் செய்கைகள் அத்த னைக்கும் ஏற்றதாக அவரின் பெயரும் அமைந்து வந்திருக்கிறத ல்லவா ! இதைத்தான் - நினையாது முன்வந்து நிற்கினும் நிற்கும் - எனையாளும் ஈசன் செயல் என்பதா !

   
 திருவருட்செல்வர்களாக இருந்தவர்களைப் போற்றி தெய்வத் தமிழ்ச் சேக்கிழார் பெருமானால் பெரியபுராணம் பாடப்பட்டது. அந்தப் புராணத்தின் நாயகர்கள் அறுபத்து மூவர் ஆவர். அனைவ ருமே ஆண்டவனுக்குப் பலவிதத்தில்  தொண்டாற்றியவர்களாகவே இருக்கிறார்கள்.அறுபத்து மூவருடன் நின்று விடாமல் அந்த எண்ணி க்கையில் வாரியார் சுவாமிகளுக்கும் இடம் இருக்கிறது என்னும் சிந் தனையைப் பலரும் சொல்லுவதைக் கேட்கக் கூடியதாக இருக்கிற து.ஆகையால் வாரியார் சுவாமிகளையும் சேர்த்து திருவருட் செல் வர்கள் அறுபத்து நான்கு என்று அழைப்போமா ! உடன் படுவீர்கள் என்று எண்ணு கிறேன்.பத்தொன்பது வயதில் இல்லறத்தினுள் இணைகின்றார். அவருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கவில்லை. இளமையில் இல்லறத்தில்

இணைந்தவர் - சிற்றின்பக் கடலினுள் மூழ்கிவிட நாட்டங் கொண்டவராய் இருக்கவில்லை. ஒரு குறிப் பிட்ட காலத்தின் பின் இல்லறத்தை நல்லறமாகவே கருதி - மனை வி இருந்த போதும் - சிற்றின்பம் என்பதை மறந்து - இல்லறத்திலே ஒரு துறவியாகவே வாழ்ந்தார் என்பதை மனமிருத்தல்
, அவசியமா கும்.இப்படி இருப்பதுதான் உண்மையான துறவாகும். பொருள்கள் வந்து குவிந்தாலும் - அருளின் வசமே அவரின் மனம் இருந்த கார ணத்தால் - இல்லற ஞானியாகவே வாரியார் சுவாமிகள் விளங் கினார் என்பதுதான் அவரின் தனித்துவத்தைக் காட்டி நிற்கிறது எனலாம்.
   இப்பொழுது - காணுமிடமெல்லாம் பல அமைப்புகள். ஒவ்வொரு

அமைப்புக்கும் ஒவ்வொரு தலை வர்.ஒவ்வொரு தலைவருமே தம்மைச் சாமியார் என்று முத்திரை குத்திக்கொண்டு - செய்யக்கூடாத அத்தனை இழிவான காரியங்களையும் செய்கிறார்கள். ஏமாற்றிப் பிழைக்கின்றார்கள். அவர்களுக்கு என்று தரகர் கூட்டமோ இன் னொரு பக்கம். பொருள் குவிகிறது. அருள் அறுகிறது. ஆடம்பரம் தலைவிரித்து ஆடுகிறது. அங்கு சென்று அகப்பட்டு அல்லல் படுகி றார்கள் அநேகம் பேர் ! இப்படி ஏமாற்றிப் பிழைப் பவர்களை சுவாமிகள் என்று அழைப்பது எத்தகைய மதியீனம் 
மனைவி இருந்தும் - இல்லறத்தை துறவறமாக்கி வாழ்ந்த வாரியாரைத்தான் சுவாமிகள் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாய் இருக்கிற தல்லவா ! " பசித்திரு,தனித்திருவிழித்திரு " என்பதை வாரியார் சுவாமிகள்

நன்கு உணர்ந்தவர். அதனால் அவர் எல்லா வற்றிலும் விழித்தே இருந்தார்.
     பள்ளிக்கூடத்தைத் தொட்டிராதவர் வாரியார். நிழலுக்கும் அந்தப் பக்கம் போகாதவர் வாரியார். அவரைப் பல்கலைக்கழகங்களும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் பாராட்டிக் கெளரவித்தார்கள். பல்கலை க்கழகங்கள் வாரியாரை வரவழைத்து அவரின் உரைகளை  - கற்றிடும் மாணவரையும்   பேராசிரியர்க ளையும் கேட்கவைத்த நிலையினை எண்ணிப் பார்க்கையில் யாவும் இறையின் திருவருள் என்றுதானே எண்ண வேண்டும்.பள்ளிக்குச் சென்று சாதாரண கல்வியினைக் கற்காதவர்   புராணங் களையும்,   இதி

காசங்களையும்
வேதக் கருத்துக்களையும்சைவசித்தாந்தக் கருத்துக்களையும்தமிழ் இலக்கிய   இலக் கண மரபுகளையும் எப்படித் துன்னுள் தேக்கி வைத்திருந்தார் என்று நினைத்துப் பார்க்கவே பெரும் வியப்பாக இருக்கிறத ல்லவா !
   மூன்று வயதில் வாரியாரின் வித்தியாரம்பம் ஆரம்பிக்கிறது. தந்தை தான்  அவரின் ஆத்மார்த்த குரு.ஐந்து வயதாக இருக்கும் பொழுதே ஏட்டினைப் படிக்கும் அளவுக்கு கற்றலில் முன்னிற்கிறார்.எட்டு வயதில் வெண்பா பாடும் அளவுக்கு துலங்கி நிற்கிறார். பாக்களிலே வெண்பா பாடுவது என்பது மிகவும் கடினமா னது. சட்ட  , திட்டங்க ளுடன் பாடப்பட வேண்டிய யாப்பினைக் கொண்டது தான் வெண்பா. அப்படியான " வெண்பாவினை " எட்டு வயதில் வாரியார் பாடினார் என்றால் " வாணி அவர் நாவில் அமர்ந்து விட்டாள் " என்று தானே எண்ணிட வைக்கிறதல்லவா ! அத்துடன் அவரின் ஆற்றல் நின்று விட

வில்லை. தன்னுடைய பனிரெண்டாவது வயதிலே பனி ரெண்
 டாயிரம் பாடல்களையே மனனம் செய்திருக்கிறார் என்றால் நம்புவீர்களா ஆம் .... இது வெறும் புகழ்ச்சி அல்ல ! இது உண்மை  ! இப்படி ஒரு பிள்ளை வளர்ந்து வந்ததென்றால் அதற்குப் பின்னால் அந்த ஆண்டவனும் கூடவே வந்திருக்கிறான். எந்த நேரமும் அந்தப் பிள்ளையை அரவணைத்த படியே இருந்திருக்கிறான் என்பதுதானே அர்த்தமாகும். இதைத்தான் " கருவிலே திருவுடையார் " என்றார்கள்.


" இவன் தந்தை என்நோற்றான் " என்னும் நிலையில் வாரியார் பிள்ளையாய் வாய்திருக்கிறார். " நோற்றான் " என்றால் நோன்பு இருந்தான் என்பதுதான் அர்த்தமாகும்.வாரியார் தந்தையார் மல் லையாதசர் அந்தப் பரம் பொருளை வேண்டி பக்தி சிரத்தையுடன் நோன்பு நோற்ற காரணத்தால்த்தான் - வாரியார் ஒளி விட்டுப் பிரகாசித்தார் என்பது பொருத்தமாய் இருக்கிறதல்லவா ! வள்ளுவம் காட்டுகின்ற ,

 

" தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

 முந்தி இருப்பச் செயல் "

 

" மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை

  என்னோற்றான் கொல்எனும் சொல் "

 

இந்த மொழி - வாரியாருக்கும் அவரின் தந்தையாருக்கும் எத்துணை பொருத்தமாய் அமைகிறது பாருங்கள் !   

  " வேத நெறி தளைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க " ஒரு பிள்ளை பிறந்தது. அந்தப்பிள்ளை ஞானப்பால் உண்ட பிள்ளை. அந்தப்பிள்ளை தன்னைநற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன் " என்றது. இன்னுமொரு பெரியவர் " தமிழோடு இசை பாட மறந்தறியேன் " என்றார். அப்பெரியார்தான் அப்பர். இந்தத் திருவடியார்கள் வழியில் பயணத்தை ஆரம்பிக்கிறார் எங்கள் வாரியார் சுவாமிகளும். அவரும் " தமிழையும் இசையயும் " துணையாகக் கொள்ளுகிறார். திருவடி யார்கள் ஊர்கள் தோறும் சென்று இறைவனைப் பாடிப் பரவி மக் களை ஆன்மீகத்துக்குள் வரச்செய்தார்கள் . எங்கள் வாரியார் சுவா மிகளும் ஊர் ஊராய்நாடு நாடாய் சென்று சன்மார்கத்தை நன் மார் க்கமாய் காட்டி நிற்கிறார். ஆதலால் அறுபத்து நான்காவது திருவடி யார் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாய் இருக்கிறது அல் லவா.  
      நல்லைநகர் தந்த நாவலர் பெருமான் சொன்னபடியே செய்தார். சொல்லிவிட்டு மட்டும் நின்று விடவில்லை.நாவலர் பெருமான் ஈழத்தின் ஞானவிளக்கு.தமிழையும், சைவத்தையும் தன்னுடைய இரு கண்களாகவே அவர் கருதிச் செயற்பட்டார். பொருளைவிட அரு ளையே அவர் பெரிதும் நம்பினார் -  துணையாக்கினார்.அவரும் எழுதினார். பேசினார். புராணங்களையெல்லாம் பக்தி சிரத்தையுடன் கையிலெடுத்தார். விளக்கினார்.அவரை இன்றும் நினைக்கிறோம். என்றுமே நினைத்துக் கொண்டே இருப்போம்.
   அவரின் வழியில் வாரியாரையும் பார்ப்பது பொருத்தமாய் இருக் கும் என்று கருதுகிறேன்.நாவலர் பெருமான் ஆசார அனுட்டானங் களைச் சொல்லி விட்டுப் போகாமல் தானும் அதன் வழி மிகவும் இறுக்கமாகவே நின்றார். வாரியாரும் தன் வாழ்நாள் எல்லாம் ஆசார அனுட்டானங்களைக் கைவிடாதவராகவே வாழ்ந்தார்." நீறில்லா நெற்றி பாழ் " என்னும் தமிழ் மூதாட்டியின் வார்த்தைகளை இருவருமே வாழ்வெல்லாம் போற்றி நின்றார்கள். நாவலர் பெருமானின் படங்கள் அத்தனையும் நெற்றியில் நிறைந்த திரு நீற்றின் மூன்று குறிகளுடனேயே காணப்படும். வாரியார் என்றதும் அவரின் திருநீறு நிறைந்த அகன்ற நெற்றியே ஒளி விட்டு மனத்தில் வந்து நிற்கும்.கூடாதது அத்தனையும் கூடாதது என்று எண்ணியே இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மனமிருத்துவது சாலப் பொருந்தும் என்று கருதுகிறேன்.
     நாவலர் பெருமான் சிவதீட்சை பெற்றிருந்தார். விபூதி உருத்தி ராக்கத்தை உயிராகப் போற்றிக் காத்துவந்தார்.வாரியாருக்கு ஐந்து வயிலே திருவண்ணாமலை பாணிபத்ர மடத்தில் "சிவலிங்க தாரணம்"  நடத்தப்பட்டது.அத்துடன் இவரின் தந்தையாரால் " சடாஷர மந்திரமும் " உபதேசிக்கப்பட்டது.தந்தையாரின் உபதேசத்துடன் மதுரை திருப்புகழ் சுவாமியினால் " சூட்சும சடாஷர" மந்திரமும் உப தேசிக்கப்பட்டது.அது மட்டு மன்றி வாரியாரின் கனவில் பாம்பன் சுவாமிகள் தோன்றி " சடாஷர மந்திரத்தை " திரும்பவும் உபதேசித் தார் என்றும் அறிய முடிகிறது. நாவலர் பெருமான் கால் பட்ட இடங் களெல்லாம் வாரியாரின் கால்களும் பட்டிருக்கின்றன. நாவலரின் சிந்தனைகள் பரவிய இடமெல்லாம் வாரியாரும் சென்று தன்னு டைய சிந்தனைகளைப் பரப்பினார் என்பதும் நோக்கத்தத் தது.நாவலர் பிரமச்சாரியத்தை மேற்கொண்டார். வாரியார் இல்லறத்தில் இருந்து கொண்டே பிரமச் சரியத்தை மேற்கொண்டு வந்தார் என்பதும் கருத் திருத்த வேண்டியதே. நாவலரை இலங்கை அரசாங்கம் கெளரவித்து முத்திரை வெளியிட்டது. வாரியாரை இந்திய அரசாங்கம் கெளர வித்து முத்திரை வெளி யிட்டதுசைவத்தையும் தமிழையும் காத்தவ ர்களை நாடும் போற்றியது. நாட்டு அரசாங்கங்களும் போற்றியது.
     நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களையும் ஐஞ்ஞூறுக்கு மேற் பட்ட கட்டுரைகளையும் வாரியார் சுவாமிகள் சமுதாயம் பயனுறும் வகையில் வழங்கி இருக்கிறார்.அவரின் நூல்கள் பல பதிப்புக்களைத் தொட்டு யாவர்மத்தியிலும் சென்று இன்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறது.எதனை எழுதினாலும் அதனை யாவரும் விளங்கும் படியே எழுதுவார்.இராமாயாணம் பற்றி எழுதினார்.பாரதம் பற்றி எழுதினார். கந்தபுராணம் பற்றி கற்றவரும் மற்றவரும் விளங்கும் வகையில் " கந்தவேல் கருணை " என்னும் மகுடத்தில் எழுதி னார்.பெரிய புராணத்தை யாவரது  மனதில் பதியும் வகையில் தனக்கே உரித்தான தமிழ் நடையில் " சிவனருட்செல்வர் " என்னும் பெயரில் வழங்கினார்.யாருமே தொட முடியாத ஒரு பெரும் எழுத்துப் பணியினை இவர் மேற்கொண்டார். அதுதான் வாக்குக்கு அருணகிரி என்று போற்றப்படும் அருணகிரியின் ஆன்மீகப் பனுவல் திருப்புககழ் தொடர்பான பணியாகும். வேலூர் மாவட்டத்தில் பிற ந்தததால்  வேலவன் வசமானார். காங்கேய நல்லூரில் பிறந்ததால் காங்கேயப் பெருமான் திருவடியைப் பற்றினார். அந்தக் காங்கேய னின் அருள் பெற்ற அருணகிரியின் திருப்புகழ் பாடல்கள் வாரி யாரை வசப்படுத்தின. " முத்தைத்தரு " என்று எம்பெருமான் கந்தப் பெருமானால் அடியெடுத்துக்கொடுத்த திருப்புகழ் என்னும் என்னும் அமுதத்தை தான் மட்டும் பருகினால் போதாது என்று கருதினார் வாரியார். அதனால் ஆயிரத்து தொழாயிரத்து முப்பத்து ஆறாம் ஆண்டில் " திருப்புகள் அமிர்தம் " என்னும் மாத இதழைத் தொட ங்கினார். அவரின் பல வேலைகளுக்கு மத்தியிலும் விட்டு விடாமல் முப்பத்து ஏழு ஆண்டுகள் அந்த மாத இதழை நடத்தி - எழுத்துப் பணியில் ஆன்மீக முத்திரையினைப் பதித்திட்டார் எங்களின் வாரி யார் சுவாமிகள்.பதவுரைபொழிப்புரைவிளக்கவுரை என்று அவரின் எழுத்து ஆளுமை அத்தனையும் திருப்புகழ் அமிர்தம் தாங்கிச் சிறப் புற்று நின்றது.தமிழிலே சந்தம் சிந்தும் பாடல்கள் என்றால் அது திருப்புகள் மட்டுமே.அந்தச் சிந்துகளில் தனது சிந்தனைகளை வெளி ப்படுத்திய வாரியாரும் ஒரு அருணகிரிதானே !
       பெண்களைப் பெரிதும் மதித்தார். குழந்தைகளைக் கொண்டாடியே மகிழ்ந்தார்.அவரின் ஒவ்வொரு பிரசங்கத்திலும் முன்னே இருப்பவ ர்கள் நிச்சயமாகக் குழந்தைகளாகவே இருப்பர்.இசையுடன் இணைந்த அவரின் பிரசங்கம் கேட்பவர்களை எங்குமே அசைய விடாமல் ஆக் கியேவிடும்.வளர்ந்து வருகின்ற குழந்தைகளிடம் நன்னெறியைப் புகு த்த வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார் வாரியார் எனலாம்.இதனால் தன்னுடைய பிரசங்க மேடையின் முன் அமர்ந் திருக்கும் - குழந்தைகளிடம் பல வினாக்களைக் கேட்டு - அதற்குப் பதில் அளித்த குழந்தைகளை மேடைக்கு வரவழைத்து நல்ல நூல் களை வழங்கி ஆசீர்வதித்தார்.இந்த அணுகு முறை மிகவும் சிறப்பா னது மட்டுமல்ல புதியதொரு அணுகு முறையாகவும் அமைந்தது  என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.குழந்தைகளையும், பெண் களையும் மதிப்பவர்களை சமூகமும் என்னாளும் மதித்துக் கொண் டே இருக்கும்.குழந்தை என்றாலே செல்வம்தான். பெண்கள் என்றா லும் செல்வம்தான். பெண்களை வீட்டின்  மகாலக்சுமி என்றுதானே பார்க்கின்றோம்.வாரியாருக்கு இந்த நுட்பம் மனதில் தோன்றிய படி யால்த்தான் அவர் தன் வாழ்வெல்லாம் - பெண்களை மதித்தார். குழ ந்தைகளைக் கொண்டானார் எனலாம்." இல்லாள் ' கருத்துடையது. " இல்லான் " எதுவுமே இல்லாதவன் என்று வாரியார் சுவாமிகளே சொல்லியிருக்கிறார்.
    வாரியார் சுவாமிகளின் பிரசங்க உத்தியைப் பாராட்டியே ஆக வேண்டும்.தத்துவங்களைச் சொல்லுவார்.ஆனால் அவற்றை யாவ ரும் விளங்கும் வகையில் நல்ல கதைகள் மூலமாய் சொல்லு வார்.அதாவது இனிப்புத் தடவிய மருந்து போல அவரின் கருத்து க்கள் வந்து அமையும்.கதையினையும் நாடகப் பாணியிலேதான் சொல்லுவார். சொல்லும் பொழுது இசையும் அங்கே இணைந்து நிற்கும். தேவார , திருவாசக, திருமுறைப் பாடல்கள்-  தாள , லயத் துடன், பக்கவாத்தியங்கள் இணைய வரும்பொழுது - கருத்துக்கள் பசுமரத்தாணி போல மனத்தில் சென்று பதிந்தேவிடும்.எந்த அள வுக்கு சைவசிந்தாந்த , வேதாந்த அறிவு நிரம்பி இருந்ததோ அந்த அளவுக்கு - இசைஞானமும் அவரகத்தில் நிறைந்தே இருந்தது. இளமையிலேயே பல பாடல்களை மனனம் செய்திருந்த காரண த்தால் - கதைக்குப் பொருத்தமான கருத்துக்கள் பொதிந்த பாடல்கள் அங்கு வந்து நிற்கும். அப்படி வரும் பாடல்களையும் தன்னுடைய கணீரென்று குரலில் அவர் இசைத்தும் பாடும் பொழுது அந்த சரஸ் வதி தேவியே அவரை விண்ணிருந்து வாழ்த்திடுவார் என்றுதான் சொல்ல வேண்டும்.

  இயலும் , இசையும் , நாடகமும் அவரின் பிரசங்கத்தின் முத்திரை எனலாம்.தமிழ் மொழியை மிகவும் நுட்பமாய் அவர் அறிந்திருந்தார் என்றுதான் பலபேருக்கும் தெரியும்.அவருக்கு சமஸ்கிருதமும் தெரி யும். பிரசங்கங்களில் அவர் காட்டுகின்ற நயத்தகு தமிழ் சொற்றொ டர்கள் போல - பொருத்தமான இடங்களில் பொருத்தமான சமஸ்கி ருதச் சுலோகங்களையும் காட்டி அதற்கான விளங்களையும் அவர் காட்டுவதும் சிறப்பாகவே இருக்கும்.

   பெண்கள் என்றாலே அவர்கள்தான் சமூகத்தின் கண்கள் என்று வாழ்வெல்லாம் எண்ணி வாழ்ந்தவர் வாரியார் சுவாமிகள். " பெற்றெ டுத்த தாயின் பெயரை  (இனிஷியலாய் ) பெயருக்கு முன்னால் போடலாமே " என்று எவருமே தமிழ்ச் சமூகத்தில் சிந்தியாததை சொல்லாததைச் சொன்னவர் வாரியார் சுவாமிகள்.அந்த அளவுக்கு பெண்மையைப் போற்றி நின்றார்.புரட்சி புரட்சி என்கிறார்களே ! இதுவல்லவா சிறப்பான புரட்சி !

  கிடைத்த பொருளையெல்லாம் தனது சொந்தச் சுகத்துக்காக அவர் பயன்படுத்தவே இல்லை. பொருளை அருளான வழியில் பயனாக் கினார். பள்ளிக் கூடத்துக்கே போகாதவர் - காங்கேய நல்லூரிலே துவக்கப்பள்ளிநடுநிலைப் பள்ளிபெண்கள் மேல்நிலைப் பள்ளிஆண் கள் மேல்நிலைப்பள்ளி என்று பள்ளிகளை நிறுவி வருங்காலச் சந்த திகளுக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

  வயலூரில் அருணகிரி அறச்சாலையினை நிறுவி உணவளித்து நிற்க உறு துணையானார். பசிப்பிணிக்கு மருந்தானார். பக்குவம் பெற கல்விக்கு கலங்கரை விளக்கமானார். வந்த பொருளையெல் லாம் இறைவனது ஆலயத் திருப்பணிக்கும் கொடுத்து ஆனந்தம் அடைந்தார். " தர்மம் செய்ய நினைத்தால் தாமதிக்கக் கூடாது " என் பதுதான் வாரியார் எண்ணமாக இருந்தது.

  தர்மத்தைத் தனது மனதில் இருத்தித் தேடிய பொருளையெல்லாம் பயனுறு வகையில் செய்த வாரியார் சுவாமிகள் - கொடுத்துச் சிவந் த கைகளை உடையவராய் விளங்கிய ஒருவரை வாழ்த்தி " பொன் மனச் செம்மல் " என்று விலைமதிப்பில்லாப் பட்டத்தை வழங்கி னார். பல பட்டங்களை அவர் பெற்ற பொழுதும் வாரியார் சுவாமி களால் வழங்கப்பட்ட இப்பட்டமே இன்றளவும் அவரை யாவரிடத் தும் அறியச் செய்து நிற்கிறது எனலாம். அவர்தான் மூன்று எழுத் தில் மக்கள் மனதில் பதிந்த தமிழ் நாட்டின் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள். வாரியார் சுவாமிகளின் வாழ்த்தின் பின் அந்த மூன்றெழுத்தாளர் மக்களின் திலகமாகவே ஆகிவிட்டார் வாழ்த் துவார் வாழ்த்தினால் அதுதான் பெரு வரமாகும்.வாரியார் வாழ்த்தும் அப்படியானதே !

  மண்ணுலகில் பிறப்பவர்கள் யாவருமே மண்ணை விட்டுப் பிரிவது என்பது தவிர்க்க முடியாததுதான். அப்படிப் பிரிந்தவர்களை " காலமா கிவிட்டார்" அமரராகிவிட்டார் "  " இறையடி சேர்ந்துவிட்டார் "  " தெய் வீகமானார் " என்றெல்லாம் சொல்லுவது மரபாகி விட்டது. இப்படிச் சொல்லுவது எல்லோருக்கும் பொருந்துமா என்று சிந்தித்திப் பாருங் கள்.

 

"  வையத்துள் வாழ்வாங்கு வாழ்வபவன் வானுறையும்

   தெய்வத்துள் வைக்கப் படும் "

 

இக்குறள் வழியில் சிந்தித்தால் யாரை வானுறையும் தெய்வ நிலைக்கு அதாவது -  காலமாகி விட்டார் அமரராகி விட்டார்இறையடி சேர்ந்து விட்டார்தெய்வீகமானார் - என்று சொல்லுவது பொருத்தமாய் இருக்கும் என்பது தெளிவாகிறதல்லவா !

  வள்ளுவத்தின் கருத்துப்படி " வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த வருக்கு " இப்படிச் சொல்லுவது தான் பொருத்தமாய் இருக்கிறது அல்லவா ! அந்தவகையில் வாரியார் சுவாமிகள் போன்றவர்களை யே - மண்ணுலகை விட்டுப் பிரியும் நிலையில் இப்படி அழைக்க லாம் என்பது பொருத்தமாய் இருக்கும் என்பதைக் கருத்திருத்த வேண்டியது அவசியமாகும் என்று கருதுகிறேன்.வாரியார் சுவாமிகள் நாத்திகர்களையும் ஆத்தீகத்தில்  நாட்டங் கொண்டிடச் செய்தார். சினப்போரையும் சிந்திக்க வைத்தார். சிரிப்பினை மருந்தாக்கிக் கொடுத்தார். வைதாரையும் வாழ்த்தினார். எதிர்த்தவர்களையும் இரக்கத்துடன் பார்த்தார்.

  சுவாமிகளின் ஆன்மீகத் தொண்டு.அவரின் அறப்பணிகள். அவரின் சிந்தனையால் வெளிவந்த படைப்புகள். அவரின் உரைகள் பதிந்த ஒலி ஒளிக் காட்சிகள் . வெள்ளித்திரையில் வந்தும் வேலவனைக் காட்டிய அவரின் பாங்கு.இவையனைத்துமே அவர் வாழ்ந்து கொண் டுதான் இருக்கிறார் என்றுதானே எண்ணத் தோன்றுகிறது. ஆகை யால் அவர் அமரரானாலும் எங்கள் மத்தியில் இன்னுமே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

 

No comments: