நிட்டூரம் வாராமல் நீகாப்பாய் முருகா ! [ கந்தசஷ்டி சிறப்புப் பிரார்த்தனை ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... ஆஸ்திரேலியா 



அருமறை போற்றிடும் அரனார் மைந்தா

அரக்கரை அழித்தாய் அருளையும் கொடுத்தாய் 
முரணுடைய மனத்தை பொரிதிடும் குணத்தை
கறையுடை வாழ்வினைக் களைந்திடச் செய்தாய் !

உருகிடும் அடியார் உளமுறை முருகா
மருளவே நோய்கள் மாநிலம் பெருகுது
மடிகிறார் பலபேர் மயங்கிறார் தினமும் 
கருணையின் உருவே கடைக்கண் காட்டு  !

நரபலி எடுத்திடும் நாடகம் நடத்திறார்
நயமுடன் நடப்பதை நாளுமே மறக்கிறார் 
பக்தியின் பக்கமே வந்திட மறுக்கிறார் 
பரமனின் புதல்வா  பாடத்தைப் புகட்டு  ! 

வேலெடுத்து நீயும் வினையோட்டி நின்றாய் 

விளையாட்டுப் பாலகனாய் பழமுதிர்த்தும் நின்றாய்
ஒளைக்குத் தத்துவத்தை அருமையாய் உரைத்தாய்
ஆறுபடை வீட்டைத் தேர்ந்தெடுத்தாய் முருகா !

மாறுபடு சூரர்தமை வழிக்குவரச் செய்தாய்
மயில்சேவ லாக்கியே மாற்றுவழி கண்டாய் 
மாறுபடு மனமுடையோர் வாழுகிறார் நிறைந்து
மனம்மாற்ற மயிலுகந்து வந்திடுவாய் முருகா ! 

கஷ்டமது போயகல கந்தசஷ்டி பிடிக்கின்றோம்

கர்மவினை அகன்றோட காலடியை நாடுகிறோம்
நித்தமுமே உன்வாசல் நாடியே வருகின்றோம் 
நிட்டூரம் வாராமல் நீகாப்பாய்  முருகா !  

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறார் உலகில்
கூடாத கூட்டமதைக் கூட்டுகிறார் நிதமும்
கோணாத மனமதனை கொடுத்தவர்க்கு முருகா
வாணாளில் நல்வழியைக் காட்டிடுவாய் மருகா !  

No comments: