.
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் குடியிருப்பாகக் காட்சியளிக்கும் வீட்டின் முகப்பில் ஒரு பக்கம் கருணாநிதியின் பெயரும், இன்னொரு பக்கம் அஞ்சுகம் அம்மாளின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
கோபாலபுரம் நான்காவது தெருவிருக்கும் இந்த வீட்டைத் தவிர்த்துவிட்டு இந்திய அரசியலை எழுதமுடியாது. தலைவர்கள், தொண்டர்கள், காவலர்கள், மீடியாக்கள் என எப்போதும் பரபரப்போடு இயங்கிக்கொண்டிருந்த கருணாநிதியின் வீடு, இப்போது ஆழ்ந்த அமைதியில் உறைந்திருக்கிறது.
தெருவின் இருபுறங்களிலும் பிறந்தநாள்களுக்காக கருணாநிதி நட்ட செடிகள் மரங்களாகி நிழல் பரப்பி நிற்கின்றன. எவ்விதப் பகட்டும் இல்லாமல் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் குடியிருப்பாகக் காட்சியளிக்கும் வீட்டின் முகப்பில் ஒரு பக்கம் கருணாநிதியின் பெயரும், இன்னொரு பக்கம் அஞ்சுகம் அம்மாளின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
முதல்தளத்தில் கருணாநிதியின் அறை. சாதாரணமான ஒரு படுக்கை... அறையெங்கும் புத்தகங்கள்... பேராசிரியர், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி போன்ற ஒரு சிலருக்குத்தான் அதற்குள் அனுமதி. இங்கிருந்தபடிதான் உடன்பிறப்புகளுக்கான கடிதங்கள் முதல் நெஞ்சுக்கு நீதி வரை எழுதிக் குவித்தார் கருணாநிதி. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்றும் மேலே இருக்கிறது.
6124 சதுர அடிகள் பரப்புகொண்ட இந்த வீட்டின் கீழ்தளத்தில் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, தயாளு அம்மாள் ஆகியோருக்காக நான்கு அறைகள் உண்டு.
புதையல் படத்துக்கு வசனம் எழுதிக் கிடைத்த 45 ஆயிரம் ரூபாயில் 1955-ல் சரபேஷ்வர அய்யர் என்பவரிடமிருந்து இந்த வீட்டை வாங்கினார் கருணாநிதி. தன் சகோதரிகளோடு இந்த வீட்டுக்கு குடிவந்த கருணாநிதி 2018 ஆகஸ்ட் 7ம் தேதி மறையும்வரை இந்த வீட்டோடு கலந்திருந்தார். முரசொலி மாறனின் திருமணம், கலைஞரின் நான்கு பிள்ளைகளின் திருமணம் என இந்த வீடு பல மங்கள நிகழ்வுகளைக் கண்டிருக்கிறது.
வாழ்ந்த காலம் முழுமையும் கோபாலபுரம் மக்களின் விருப்பத்துக்குரிய மனிதராகவே கருணாநிதி இருந்தார்.
கருணாநிதியின் வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறது, ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில். அந்தக் கோயிலின் அன்றாடச் செயல்பாடுகள் எதுவும் தன்னை நாடி வரும் உடன்பிறப்புகளால் பாதிக்கப்படக்கூடாது என்பதில் தனிக்கவனம் செலுத்தினார் கருணாநிதி. பண்டிகைக்காலங்களில் கருணாநிதியின் வீடு கடந்தும் வழிபாட்டுக்கான கூட்டம் நீளும். செல்வியும் தயாளு அம்மாளும் அந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவதுண்டு என்கிறார் அந்தக் கோயிலின் அர்ச்சகர் வேங்கட சுப்பிரமணியன்.
கருணாநிதியின் வீட்டையொட்டி கோயிலை நம்பி நான்கு பூக்கடைகள் இருக்கின்றன, கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் அருகிலிருந்த பூக்கடைகளை அகற்ற முனைந்திருக்கிறார்கள் அதிகாரிகள். பூக்கொடுக்க சென்ற தருணத்தில் தயாளு அம்மாளிடம் கண்ணீர் மல்க இதைத் தெரிவித்திருக்கிறார்கள் கடை நடத்தும் பெண்கள். உடனடியாக தன் கணவரின் கவனத்துக்குக் கொண்டு சென்று கடைகளை சற்று தள்ளி அமைத்துக்கொள்ள அனுமதி பெற்றுத்தந்த தயாளு அம்மாள், கடை நடத்தும் அத்தனை பேருக்கும் பள்ளிக்கரணையில் அரசு வீடும் பெற்றுத்தந்திருக்கிறார்.
இப்போது... தயாளு அம்மாள் மட்டும்தான் இந்த கோபாலபுரம் வீட்டில் இருக்கிறார். நெருக்கமானவர்களை மட்டும் அவருக்கு அடையாளம் தெரிகிறது. வசந்தி என்பவர் தயாளு அம்மாவை கூடவே இருந்து கவனித்துக்கொள்கிறார். மலர்க்கொடி, சரோஜா இருவரும் வீட்டுப்பணிகளைச் செய்கிறார்கள். கருணாநிதி காலத்திலிருந்து சமையல் செய்து தரும் பிரகாஷ், இப்போதும் தயாளு அம்மாளுக்காக வீட்டுக்கு வந்து சமைத்துத் தருகிறார். இளவரசி, சுகன்யா ஆகிய இரண்டு செவிலியர்கள் ஷிப்ட் முறையில் தயாளு அம்மாவின் மருத்துவத் தேவைகளைப் பார்த்துக்கொள்கிறார்கள். மோகன், வடிவேலு இருவரும் வீட்டைக் கவனித்துக்கொள்கிறார்கள்.
தினமும் காலையும் மாலையும் வந்து தன் தாயின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் செல்வி. முக தமிழரசுவும் அவரது மனைவியும் பேரன் மகிழனோடு அவ்வப்போது வந்து தயாளு அம்மாவைப் பார்த்துச் செல்கிறார்கள். கிடைக்கும் நேரத்தில் தன் மனைவியுடன் வந்து அம்மாவைப் பார்த்துச் செல்கிறார் ஸ்டாலின்.
நன்றி https://www.vikatan.com/
No comments:
Post a Comment