எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 16 எழுத்தாளர் சச்சரவுகளின் ரிஷிமூலம் ! மறைந்த படைப்பாளி மா.பாலசிங்கம் நினைவுகள் !! முருகபூபதி


நான் எழுதிவரும் இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரை படித்துவரும்  கனடாவில் வதியும் நண்பர் சட்டத்தரணி  முத்தையா பாலச்சந்திரன், எனக்கு எழுதிய மின்னஞ்சலில்,                  “ ஏன் எழுத்தாளர்கள் அடிக்கடி முரண்பட்டு சண்டை பிடிக்கிறார்கள்..?  “ எனக்கேட்டிருந்தார். அவரும் நான் வீரகேசரி பணியாற்றிய காலத்தில் அங்கு அலுவலக நிருபராக பணியாற்றிய பத்திரிகையாளர்.  சட்டக்கல்லூரியில் படித்துவிட்டு வந்து அங்கே இணைந்துகொண்டவர். பின்னாளில் அவரும் கனடாவுக்கு புலம்பெயர்ந்தார்.  

அவருக்கு நான் அனுப்பிய பதிலில்,  “ எழுத்தாளர்களுக்குள் முரண்பாடுகள், சச்சரவு, சண்டை வந்துகொண்டுதானிருக்கும்.  இந்த கலாசாரம் சிவபெருமான் – நக்கீரர் அதன்பின்னர் கம்பர் – ஒட்டக்கூத்தர் காலத்திலிருந்தே வளர்ந்திருக்கிறது. அதனால் ஆச்சரியப்படாதீர்கள் என்று எழுதியிருந்தேன். இந்த 16 ஆவது அங்கத்தை எழுதும்வேளையில் கொழும்பில் இலக்கிய நண்பர் மா பாலசிங்கம் அவர்களும் மறைந்துவிட்டார். 

2020 ஆம் ஆண்டு பிறந்ததுமுதல்,  உலகடங்கிலும் எனக்குத் தெரிந்த சில  கலை, இலக்கியவாதிகள் அடுத்தடுத்து மறைந்துவிட்டனர்.  அந்த வரிசையில் தற்போது  பாலசிங்கமும் இணைந்து விடைபெற்றுவிட்டார். பாலசிங்கம், கொழும்பில் தமிழ் கதைஞர் ( தகவம் )  வட்டத்தில் இணைந்திருந்தவர். அத்துடன் மல்லிகை கொழும்பிலிருந்து வெளிவரத்தொடங்கிய பின்னர் அதன் ஆசிரியர் மல்லிகைஜீவாவுக்கு பக்கத்துணையாக இருந்தவர்.   பாலசிங்கம் எழுதிய கதைகளின் தொகுப்பு இப்படியும் ஒருவன் மல்லிகைப்பந்தல் வெளியீடாக

வந்துள்ளது.  இலங்கையில் நடக்கும்  இலக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் இலக்கிய புதினங்களை தொடர்ந்து எழுதிய சிலரில் பாலசிங்கமும் ஒருவர். 

முன்னர் தமிழ்நாட்டிலிருந்து வெளியான நா. பார்த்தசாரதியின் தீபம் மாத இதழில்  யாழ்ப்பாணத்திலிருந்து எழுத்தாளர் சிற்பி சரவணபவன் (1933 – 2015 ) இலங்கை கடிதம் என்ற தலைப்பில் இலங்கை கலை, இலக்கிய புதினங்களை யாழ்வாசி என்ற புனைபெயரில் எழுதிவந்தார். 

பின்னாளில் எழுத்தாளர் நெல்லை . க. பேரன்  ( 1946 – 1991 ) தொடர்ந்து மல்லிகை இதழிலும் பத்திரிகைகளிலும் அந்தப்பணியை தொடர்ந்தார்.  அவரும் 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதி இலங்கை  வடபுலத்தில் நிலைகொண்டிருந்த ஆயுதப் படை ஏவிய  ஷெல்வீச்சில்  குடும்பத்துடன்  கொல்லப்பட்டார்.  நான் வீரகேசரியிலும் நண்பர் எஸ். திருச்செல்வம் ( எஸ்தி) தினகரனிலும் எஸ். டி. சிவநாயகம் சிந்தாமணியிலும் இலக்கிய புதினங்கள் எழுதிவந்தோம். 

சிந்தாமணியையடுத்து சிவநாயகமும் மறைந்தார். நான் அவுஸ்திரேலியாவுக்கும் எஸ். திருச்செல்வம் கனடாவுக்கும் புலம்பெயர்ந்தோம்.  நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் இங்கு நடக்கும் கலை, இலக்கிய நிகழ்வுகள் பற்றி அவ்வப்போது வீரகேசரியில் எழுதிவந்தேன். மா. பாலசிங்கம் கொழும்பிலிருந்து தினக்குரல் ஞாயிறு இதழில் தொடர்ந்து எழுதிவந்த பத்திகளிலிருந்து அங்கு நடக்கும் புதினங்களை வெளிநாட்டிலிருந்தும் நாம் வாசிக்கக்கூடியதாக இருந்தது. 

கொழும்பில் நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிக்கு  கையில் ஒரு குறிப்பு புத்தகத்தடன் அவர் வந்தால் , குனிந்த தலை நிமிராமல் எழுதிக்கொண்டே இருப்பார். அவரது கரம் எழுதிக்கொண்டிருக்கும், செவிகள் கூர்மையுடன் கேட்டுக்கொண்டிருக்கும்.  அந்த நிகழ்ச்சி  உரைகளுடன் வார  இறுதியில் விரிவாக தினக்குரலில் பதிவாகியிருக்கும்.    பத்திரிகை நிருபர்கள் செய்யவேண்டிய இந்த வேலையை இலக்கியத்தின் மீதிருந்த பற்றுதலினால் அயர்ச்சியின்றி தொடர்ந்து செய்துவந்தவர் பாலசிங்கம்.  அவ்வாறு அவர் எழுதிய பத்தி

எழுத்துக்கள் மா.பா  சி. கேட்டவை என்ற பெயரில் தொகுக்கப்பட்டு,  புதிய பண்பாட்டுத்தளம் என்ற இலக்கிய அமைப்பினால் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மா.பா. சி.  இடைக்கிடை அடக்கர் இடக்கராகவும் சில குறிப்புகளை எழுதியதனால்  சில எழுத்தாளர்களின் கோபத்துக்கும் ஆளாகியவர்.  

அதில் நானும் ஒருவன்.  அதுபற்றி இந்தப்பத்தியின் இறுதியில் சொல்கின்றேன்.  அதற்கு முன்னர், இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் சண்டை சச்சரவுகள் பற்றிய விடயத்திற்கு வருகின்றேன். பாலசிங்கம் அவர்களின் ஆத்ம நண்பர் எஸ். பொன்னுத்துரை இதுவிடயத்தில் கலகக்காரன் எனப்பெயர் எடுத்தவர்.  

நான் இலங்கை சென்றிருந்த சந்தர்ப்பத்தில் மல்லிகை கொழும்பு காரியாலயத்தில் மல்லிகை ஜீவாவுக்கும் பாலசிங்கத்துக்கும் எனக்கும் இடையில் தொடங்கிய உரையாடல் எழுத்தாளர்கள் மத்தியில் நடக்கும் சண்டை சச்சரவுகள் பக்கமும் திரும்பியது. அவ்வேளையில்  சுந்தரராமசாமி மறைந்துவிட்டார். 

அது குறித்து மல்லிகை கவலை தெரிவித்து அஞ்சலி குறிப்பு எழுதவில்லை என்று ஜீவாவுடன்  நான் சண்டை பிடித்தேன். உடனிருந்த செங்கை ஆழியான்,  ஜீவாவுக்கு வக்காலத்து வாங்கி,   “ எம்மை கவனத்தில் எடுக்காதவர்களை நாம் ஏன் கவனத்தில் கொள்ளவேண்டும்  “ என்றார். சிறிது நேரத்தில் அவர் விடைபெற்றதும், எழுத்தாளர்களின் சண்டை சச்சரவு இன்று நேற்று அல்ல சிவபெருமான் –

நக்கீரனிலிருந்து தொடங்கிவிட்டது என்றும்  பின்னாளில் கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும்  மத்தியில் நடந்தது பற்றியும் நாம் பேசிக்கொண்டோம். அந்த உரையாடல் சிவன் – நக்கீரன் பற்றியும் தொடர்ந்தது.  

பாண்டிய மன்னனின் சந்தேகத்தை போக்குவதற்கு ஏழைப்புலவன் தருமிக்கு  சிவபெருமான்  பாட்டு  எழுதிக்கொடுத்து அனுப்புவார். அதில் பொருட்குற்றம் இருக்கிறது ,  பரிசு வழங்கவேண்டாம் என்பார் நக்கீரன். புலவர் தருமி  எந்த ஆலயத்தில் சிவனிடமிருந்து அக்கவிதையை வாங்கிச்சென்றாரோ  ஏமாற்றத்துடன் அவ்விடம்  திரும்பி வந்து புலம்புவார். 

அது கேட்டு கோபமுற்ற சிவன், அரண்மனைக்கு விரைந்து  சென்று  பாட்டில் என்ன குற்றம் கண்டீர்..?  என்று வாதம் செய்வார். இவ்விடத்தில்  ஒரு வசனம் வரும் ஜீவா…    வந்திருக்கும் தான் சிவன்தான் என்று  மறைத்து,   “ சிவன் மனைவி உமையாள் கூந்தலின் மணமும் செயற்கையானதா..?  “  என்று நக்கீரனைப் பார்த்து கோபத்துடன் கேட்பார் பாருங்கள். 

உடனே, நக்கீரன் ,  “ அய்யா, நான் மாற்றன் மனைவியின் கூந்தலை முகர்ந்து பார்க்கும் பழக்கம் அற்றவன்  “ என்று சொல்லியிருந்தால், சிவன் தனது முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்திருப்பார்.  அந்தக் கதையே வேறுவிதமாகத்தான் எழுதப்பட்டிருக்கும். ஆனால், சிவனின் திருவிளையாடல்களில் அதுவும் ஒன்று என  ஏற்றுக்கொண்டு வந்திருக்கின்றோம். அன்று சிவபெருமான ஏழைப்புலவன் தருமிக்கு எழுதிக்கொடுத்ததுபோன்று இலங்கையில் எங்கள் எஸ். பொன்னுத்துரையும்  தான் சில எழுத்தாளர்களுக்கு எழுதிக்கொடுத்திருப்பதாக  எழுத்திலும் எழுதி ,  மேடைகளிலும் சொல்லிவந்திருக்கிறார்.  

“ அதனால், ஜீவா – நீங்களும் எழுத்தாளர் டானியலும் கூட அவருடன் சண்டைபிடித்து கோவித்துக்கொண்டிருந்தவர்கள்தானே…?   “ என்றேன். ஜீவாவும் பாலசிங்கமும் சிரித்தார்கள். அண்மையில் இதுபற்றிய உரையாடல் எனக்கும் கனடாவிலிருக்கும் நண்பர் எஸ். திருச்செல்வத்திற்கும் இடையில் வந்தது. அப்பொழுது அவர் சொன்னார்: ஒரு தடவை தான் தினகரனுக்காக எஸ்.பொ.வை பேட்டிகண்டபோது, அவர்,  “தான் டானியல், டொமினிக்ஜீவா முதலான

புனைபெயர்களிலும் எழுதியிருக்கிறேன் “ என்று சொன்னதை அப்படியே  மாற்றாமல் எழுதிவிட்டேன். 

அதனால், ஜீவா என்னுடன் சுமார் இரண்டுவருடங்கள் பேசாமல் இருந்தார். பின்னாளில் இந்தியப்படைகள் வடக்கில் நிலைகொண்டிருந்தபோது, என்னை விசாரணைக்காக அழைத்துச்சென்று தடுத்து வைத்தனர்.  

யாழ்ப்பாணம் கச்சேரியில்  இந்திய இராணுவ  அதிகாரிகள் மத்தியில் நடந்த கூட்டத்தில் என்னை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று தர்மாவேசத்துடன் குரல் கொடுத்தவரும் ஜீவாதான்  “ என்றார். எழுத்தாளர்கள் மத்தியில் வரும் சண்டை சச்சரவுகளை கணவன் – மனைவி – பிள்ளைகள் மத்தியில் வரும் பிணக்குகளைப்போன்று பார்க்கவேண்டும் என்ற முடிவுக்கு  நானும் வந்தது, சிவபெருமான் – நக்கீரன் சண்டையை திரையில் பார்த்த பிறகுதான். நெற்றிக்கண்ணைத்திறந்து நக்கீரனை எரித்த அதே சிவன்தான்,  அவரை உயிர்ப்பித்தார். 

தருமிக்கே பரிசுத்தொகையை வழங்கச்சொன்னார் நக்கீரன்.  ஜெயகாந்தனும் தான்,   எழுத்தாளர் கோவி. மணிசேகரனுடன் கைகலப்பில் ஈடுபட்ட கதையை எழுதியிருக்கிறார். அதே மணிசேகரனுக்கு சாகித்திய விருது கிடைத்தபோது, அதனை கண்டிக்குமாறு ஜெயகாந்தனை சுபமங்களா இதழின் ஆசிரியர்  கோமல் சாமிநாதன் தனது நிருபர்கள் ஊடாக தூது அனுப்பி  கேட்டபோது, வந்தவர்களை  “ யாரோ கொடுக்கிறான்… உனக்கென்ன வயிற்றெரிச்சல்  “ எனச்சொல்லி அடிக்காத குறையாக விரட்டி அடித்தவர்தான்  ஜெயகாந்தன். ஜெயகாந்தனுடன்  ஒரு சந்தர்ப்பத்தில் சச்சரவுபட்ட கோவி. மணிசேகரன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஜெயகாந்தனின் மணிவிழாவில் கலந்துகொண்டு  வாழ்த்தியதுடன் மணிவிழா மலரிலும் எழுதியிருந்தார். எஸ்.பொ.வுக்கும் ஜீவாவுக்கும் இடையில் ஒரு காலகட்டத்தில் பேச்சுவார்த்தை இருக்கவில்லை. அது நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதி. பின்னாளில் எஸ்.பொ.வுக்கு ஜீவா தேநீரும் சிகரட்டும் வாங்கிக்கொடுத்து உபசரித்த காட்சிகளையும் தரிசித்தேன். சென்னைக்கு ஜீவாவை அழைத்து தமது மித்ர பதிப்பக விழாவில் பாராட்டி கௌரவித்து விருதும் வழங்கினார் எஸ்.பொ. பாலசிங்கம் அவர்களும் எஸ்.பொ.வின் நெருங்கிய நண்பர். 

நாம் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்கு நாட்கள் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தியபோது எஸ்.பொ. அதற்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பினார். பாலசிங்கமும் அதனால், மாநாட்டுப்பக்கம் வரவில்லை. நானே அவருக்கு அழைப்பிதழும் ஜீவா ஊடாக கொடுத்தனுப்பினேன். ஆனால், அவர் அதற்கு வராமல், தினக்குரலில்  “ இலவசங்களால்

எழுத்தாளர்களை கட்டிப்போட்ட மாநாடு  “ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். உடனடியாகவே மாநாட்டின் அமைப்பாளர் என்ற ரீதியில் அவருக்கு  அந்த மாநாடு எவ்வாறு நடந்தது என்பதையும் விளக்கி கடிதம் எழுதியிருந்தேன். எனினும் அவரிடமிருந்து பதில் இல்லை.  மல்லிகை ஜீவாதான் அந்த மாநாட்டிற்கான எண்ணக்கருவை விதைத்தவர்.  

ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன்  மாநாட்டின் இணைப்பாளராக இயங்கி மாநாட்டின் வெற்றிக்கு உழைத்தவர். மாநாட்டை பகிஷ்கரித்த எங்கள் மா.பா. சி அவர்களை மல்லிகையும் அட்டைப்பட அதிதியாக கௌரவித்தது. 

ஞானம் இதழும் அவ்வாறு அவரை அட்டைப்பட அதிதியாக கௌரவித்ததோடு நில்லாமல், அன்னாரின் பவளவிழாவையும் கொழும்பில் சிறப்பாக நடத்தி அவருக்குரிய கௌரத்தை வழங்கியது. 

இதுதான் எழுத்தாளர்களின் உலகம்.  இதனால்தானோ என்னவோ   எழுத்தாளராகவும் கவிஞராகவும் திகழ்ந்த கவியரசு கண்ணதாசனும்  “ சேருவது இனம், மாறுவது குணம்  “ என்று ஒரு பாடலை இயற்றியிருக்கிறார். அவருக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இடையிலிருந்த பலத்த கோப தாபங்களை கண்ணதாசனின் வனவாசம், மனவாசம் சுயசரிதை  நூல்களில் நாம் காணமுடியும். 

ஜெயகாந்தனின் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள், அரசியல் அனுபவங்கள் ஆகிய நூல்களில்,  அவர் யார் யாருடன் மோதினார்..?  முதலான அரிய தகவல்களையும் பின்னர் எவ்வாறு சமரசமானார்  என்பது பற்றிய சுவாரசியங்களையும் அறியமுடியும்.  எஸ்.பொ. அவர்களை அவுஸ்திரேலியாவில் நான் மீண்டும்

1992 இல் சந்தித்தபோது, அவரை நேர்காணல் செய்து எழுதியிருந்தேன். அதில் நான் அவரிடம் கேட்ட கேள்வி ஒன்று இவ்வாறு அமைந்திருந்தது:  கருத்துக்கு மாற்றுக்கருத்தே பிரதானம். ஆனால், சில சந்தர்ப்பங்களில் நீங்கள் கருத்தை முதன்மைப்படுத்தாமல் உடல் – குண இயல்புகளையும் கூறி கொச்சையாக – தனிப்பட்ட ரீதியிலும்  தாக்குகிறீர்களே..? இவை யாவும் உங்களது  ‘பருவக்கோளாறு  ‘ என்றோ  ‘ பார்வைக்கோளாறு  ‘என்றோதான் நாம்  கருதுகின்றோம்.  சிலவேளை இன்று 60 வயதும் கடந்துவிட்ட நிலையில் பக்குவப்பட்டிருந்தால் – தங்களின் விமர்சனப்பார்வைகளும் ஆரோக்கியமாக மாறியிருக்கக்கூடும் என எதிர்பார்க்கின்றோம். 

எமது எதிர்பார்ப்பு சரியா..?  இக்கேள்விக்கு எஸ்.பொ. அளித்த பதில்:   “ நான் ஓரளவு Hitting over the belt  ஆக விமர்சிப்பதாக குற்றம் சுமத்துகிறீர்கள். உங்கள் கேள்வியில் அது தொனிக்கிறது. சொல்ல வந்த கருத்தை – கூர்மையாக சொல்வதற்கு  ‘அங்கதம் ‘ ஒரு உபாயம் என்று நான் நம்புகிறேன். இந்த அங்கதச்சுவை சில வேளைகளில் சம்பந்தப்பட்டவர்களை எழுத்து அதிகாரங்களுக்கு அப்பாற்பட புண்படுத்தியுள்ளது என்பதை இப்போது என்னால் நிதானிக்கமுடிகிறது. 

உண்மையில், விமர்சனம்  இத்தகைய மனநோவுகளை ஏற்படுத்தலாகாது என்பதையும் இப்பொழுது வெட்கப்படாமல் என்னால் ஒப்புக்கொள்ள முடிகிறது .   எஸ்.பொ. வுடனான  குறிப்பிட்ட நேர்காணல் பாரிஸ் ஈழநாடுவிலும் தினகரன் வாரமஞ்சரியிலும் எனது சந்திப்பு நூலிலும், பின்னாளில் எஸ்.பொ.வின் தீதும் நன்றும்   பிறர்தர வரா தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.  தற்போது எனது ஆக்கங்களும் எஸ்.பொ. ஸ்தாபித்த அக்கினிக்குஞ்சுவில் வெளிவருகிறது. இந்த அனுபவங்களுடன்தான்  நானும்  எழுத்துலகில் வாழ்ந்துவருகின்றேன். “  தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் ஒரு மனிதனின் மேன்மையை இனம் காண்பதில் தவறிழைத்துவிடலாகாது  “  என்பதும் இந்த அனுபவங்களில் பெற்ற புத்திக்கொள்முதல்தான்.  ஊடகங்களில் பணியாற்றுபவர்கள்

பின்பற்றவேண்டியதும் இந்தப்பண்பினைத்தான். எழுத்தாளர்கள் புடவைக்கடை வியாபாரிகளைப்போல் மாறிவிடும் காலத்தையும் அவதானிக்கின்றேன்.  

அது பற்றியும் இங்கே விளக்கிவிடுகின்றேன். எந்தவொரு புடவைக்கடை முதலாளியும் மற்றும் ஒரு புடவைக்கடை பற்றி விதந்து சொல்லி, அங்கே சென்று புடவை வாங்குங்கள் என்று சொல்லமாட்டார். அதுபோன்று சக எழுத்தாளனின் படைப்பினை வாங்கிப் படியுங்கள் என்று சொல்லும் எழுத்தாளர்களும் அரிதாகிவருகின்றனர்.  

அதனால்தானோ என்னவோ,  நடிகர்   கமல்ஹாசன்  சமகாலத்தில் பல எழுத்தாளர்களின் நூல்களை படித்துவிட்டு அறிமுகப்படுத்தத் தொடங்கியிருக்கிறார். சிவபெருமான், ஏழைப்புலவன்  தருமிக்கு எழுதிக்கொடுத்தார்.  அதனால் ஒரு புராணக்கதையே தோன்றியது.  நாம் எழுத்தாளர்களின் சச்சரவுகளையும் இந்த புராணத்தையே ரிஷிமூலமாகக்கொண்டு  பார்க்கலாம். ( தொடரும் )  letchumananm@gmail.com   

No comments: