கடைத்தேறும் வழிநடந்தால் காலமெமை வாழ்த்திநிற்கும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா 


           
          ஓடியோடி உழைத்தாலும் 
               ஒன்றைப்பத் தாக்கினாலும் 
          உறங்கி யெழுந்திடுதல்
                ஒருவருக்குந் தெரியாது 
          உறங்கினார் உறங்கிவிடின்
                  உழைத்தவைகள் வாராது
           விளங்காமல் வீண்கனவு 
                    மேலோங்கி எழுகிறதே   !


          கறந்தபால் மறுபடியும் 
              மடியேற  மாட்டாது 
        பிறந்திடலும் இறந்திடலும்
              பெரும் புதிராயாகிறது 
        வருந்தியே அழைத்தாலும்
               மரணம் வந்தமையாது
        வருகின்ற வேளைதனை
               மண்ணுலகில் யாரறிவார்   !


        நிரந்தரமாய் வாழுகின்றார்
             நீள்புவியில் யாருமுண்டோ 
       அறிந்திருந்தும் பலபேரும்
              அதையுணரா ஓடுகிறார் 
      கிடைக்கின்ற வாழ்நாளில்
              கீழ்த்தரமாய் எண்ணாமல்
      கடைத்தேறும் வழிநடந்தால்

            காலமெமை வாழ்த்திநிற்கும்    !  


No comments: