அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 8 - ஐமுகமுழவு/குடமுழா


அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 8 - ஐமுகமுழவு/குடமுழா
ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
அமைப்பு
மிகப் பெரிய பானை வடிவில் உள்ள ஐந்து முகங்கள் கொண்ட இசைக்கருவி ஐமுகமுழவு அல்லது குடமுழா. அடிப்பக்கம் செம்பு (தாமிரம்) அல்லது வெண்கலத்தால் உருவாக்கப்பட்டிருக்கும். மேற்பாகம் தோல் பயன்படுத்தி இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். மான் தோலே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஐமுகமுழவு சக்கரம் இணைக்கப்பட்டு இரும்புச் சட்டங்களினுள் அமைக்கப்பட்டிருக்கும். இடம் விட்டு இடம் நகர்த்திச் செல்ல ஏதுவாக இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு
குடமுக்கு கும்பகோணம் ஆனது போல் ஐமுகமுழவு அல்லது குடமுழவு இன்று பஞ்சமுக வாத்தியம் என்றே பரவலாக அழைக்கப்படுகிறது. சில ஆய்வு கட்டுரைகள் புத்தகங்களை படிக்கும் பொழுது நாம் கவனமாக இருக்க வேண்டும். ”இசைஎன்ற சொல்லே வடமொழியில் இருந்து வந்தது என்று ஒரு முனைவர் ஆய்வு கட்டுரை கூறுகிறதுமேலும் சாம வேதமே நமது தமிழ் இசைக்கு முன்னோடி என்றும் கூறுகிறார்கள். எந்த ஆதாரம் இல்லாததும்  பல உள்நோக்கங்களை கொண்டதுமான இது போன்ற குப்பைகளை நாம் தெளிவுடன் புறந்தள்ள வேண்டும். பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான நமது தமிழ் இசை இன்று திருடுபோய்விட்டது. பஞ்சமுக வாத்தியம் என்று அழைப்பதை தவிர்த்து குடமுழா என்று நாம் அழைக்க வேண்டும்.

சைவர்களின் நம்பிக்கைப்படி  வாணாசுரன் திரிபுர அசுரர்களில் ஒருவன். தனது புன்னகையால் திரிபுரங்களை எரித்த சிவபெருமான் இரக்கம் மேலிட்டு இரு அசுரரை தன் வாயிற்காவலராகவும் கடைசி தம்பியான வாணாசுரனை தன் ஆடலுக்கு முழவு இசைக்கும் கலைஞனாகவும் மாற்றி விடுகிறார். இதனை சுந்தரரின் திருப்புன்கூர் திருப்பதிகத்தில் காணலாம்.


மூஎயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர் என்று ஏவிய பின்னை, ஒருவன்-நீ கரிகாடு அரங்கு ஆக,
மானை நோக்கி ஓர் மாநடம் மகிழ மணி முழா முழக்க(வ்) அருள் செய்த
தேவ தேவ! நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில் திருப் புன்கூர் உளானே!


வரலாற்று ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் குடமுழா என்ற நூலில் இக்கருவி பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார்கள். அதிலிருந்து சில குறிப்புகள் - ஐந்திணைகளில் மருத நிலத்துக்குரிய கருவியாக குடமுழா உள்ளது. முழவு என்கிற தொல்தமிழர் கருவியின் பிற்கால வடிவமே இந்த குடமுழா. கோயில்களில் சிவபெருமானின் நிருத்த கற்சிற்பங்களுக்கு கீழ் அமர்ந்திருக்கும் பூத கணங்களில் ஒன்று குடமுழா வாசித்துக் கொண்டிருக்கும் - உதாரனம் கங்கைக்கொண்டசோழபுரம் கோவில். மேலும் திருப்புன்கூர், மேலப் பெரும்பள்ளம், கீழ்க்காட்டூர், திருப்பைஞ்ஞீலி, சீர்காழி, தென்திருவாலங்காடு ஆகிய தலங்களில் ஆடல்வல்லான் செப்புப் படிமங்களில் குடமுழவம் இசைக்கும் நந்தி அல்லது பூதகனத்தை நாம் காணலாம். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில் மாதவியின் நடனத்தின் போது யாழ், குடமுழா, மத்தளம் ஆகியவை இசைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திருவாரூரில் மாலை பூசையில் குடமுழவம் ஒலிக்கும். மேலும் விபூதி சாத்தும் போதும், சோடச உபசாரங்களான கண்ணாடி, கொடை, சாமரம், திருவாலவட்டம் போன்ற நான்கின் போது மட்டும் தனித்தனியான தாள பேதங்களுடன் குடமுழவத்தை ஒலிக்கச் செய்வர். “த, தீம், தொம், நம்” என்ற சொற்கட்டோடு தியாகர் முன்பு குடமுழவம் ஒலிப்பது “எல்லாம் தாங்கள் தான்” என்று அந்த ஈசனை நோக்கி குறிப்பிடும் தாளச் சொல்லாகக் குறிப்பிடுகின்றனர்” என்றும் குடமுழாவின் வாசிப்பு முறையினைப் பதிவு செய்துள்ளார். 1914 ஆம் ஆண்டு பிறந்த பாரசைவர் சங்கரமூர்த்தி முட்டுக்காரர் பஞ்சமுகவாத்தியத்தினை வாசித்ததாக திரு பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதியுள்ளார்கள். அதற்கு முன்னதாக சங்கரமூர்த்தி முட்டுக்காரரின் தந்தையான தம்பியப்ப முட்டுக்காரரும், தாத்தா சங்கரமூர்த்தி முட்டுக்காரரும் வாசித்துள்ளனர். இப்பொழுது இவர்களின் வழியில் வந்த சுமதி என்ற அம்மையார் குடமுழவத்தை வாசித்து வருகின்றார். தன் பரம்பரையின் வாசிப்பு முறையினை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதற்காகவும் இக்கலை அழிந்துவிடக்கூடாது என்பதற்காகவும் தினமும் வாசித்து வருகின்றார்.

திருவாரூர் கோவிலில் உள்ள குடமுழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதன் அமைப்பு: ஒரு முகம் பாம்பு சுற்றியது போல் உள்ளது. மற்றொன்று ஸ்வஸதிக போன்ற வடிவில் அமைந்துள்ளது. வேறொரு முகம் தாமரைப்பூ வடிவிலுள்ளது. பிரிதொன்று எவ்வித அடையாளமின்றி உள்ளது. நடுவில் உள்ள ஐந்தாவது முகம் பறை போன்று பெரியதாக இருக்கிறது. பஞ்ச முகங்கள் மான் தோலால் கட்டப்பட்டுள்ளன. இந்த இசைக்கருவியில் ஒவ்வொரு முகத்திலும் தனித்தனியாக அடிக்கப்படும்போது ஏழு முறையும் ஐந்திலும் சேர்ந்து அடிக்கும் போது முகத்திற்கு ஒன்றாக ஐந்து முறையும் அடிக்கப்படும். ஒலி வேறுபாடுகளை உருவாக்க ஏதுவாக இவை ஒன்றுக்கொன்று அளவு வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். இந்த இசைக்கருவி அளவில் பெரியதாக இருப்பதால் நான்குபேர் சேர்ந்தாலும் தூக்க இயலாது அதனால் நான்கு சக்கர வண்டியில் வைத்து தள்ளி வருகின்றனர்.

திருநெல்வேலியை சேர்ந்த நண்பர் திரு சங்கரநயினார் அவர்கள் திருவாரூரில் தியாகேசர் கோவிலில் இசைக்கப்படும் ஐமுகமுழவின் காணொலியை கொடுத்தார்கள். தேவமங்கை(சுமதி) என்கிற அம்மையார் இசைக்கும் காட்சியை காணொளி பகுதியில் நீங்கள் காணலாம்.

சோழ மன்னர்கள் பல கோவில்களிலும் இந்தக் கருவியை நிறுவியுள்ளார்கள். ஆனால் அவை இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. பல குடமுழாக்கள் அருங்காட்சியகங்களில் உறங்குகின்றன. சில களவாடபட்டு வெளிநாடுகளுக்கு சென்று விட்டன. பல உருக்கி பழைய பித்தளை கடைக்கு சென்று இருக்கலாம்.  தமிழகத்தில் சில வருடங்கள் முன்பு வரை 30 குடமுழாக்கள் இருந்தாக சொல்கிறார்கள். இன்றைய நிலையில் 5 மட்டுமே கணக்கில் உள்ளது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி தவிர திருவாருர் தியாகராஜ சுவாமிகள் நினைவு இல்லம், சென்னை அரசு அருங்காட்சியகம் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்இசைச்சங்கம் (ராஜா அண்ணாமலை மன்றத்தின் இரண்டாவது மாடியில்) காட்சி பொருளாக மூன்று குடமுழாக்கள் உள்ளன. இவையன்றி தமிழ்கத்தில் ஒரு கோவிலில் குடமுழா இசைக்கும் ஒரு காணொளி இணையத்தில் உள்ளது. இது எந்த இடம்/கோவில் என்று எனக்கு தெரியவில்லை.
திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் கோவிலிலும் இக்கருவி உள்ளது. ஆண்டுதோறும் சித்திரைமாதம் நிகழும் பெருவிழா காலத்திலும், இளமுருகு உடனுறையும் அம்மையப்பர் (சோமாஸ்கந்தர்) வசந்த மண்டபம் எழுந்தருளும் போதும் மட்டுமே இவ்வாத்தியம் வாசிக்கப்படுகின்றது. இக்குடமுழவை 'சீகாருடையார் மல்லாண்டான் சோழகோனார்' என்பவர் தானமாக வழங்கிய செய்தி அந்த இசைக்கருவியிலேயே பொறிக்கப்பட்டுள்ளது.

ஐமுகமுழவின் ஆரம்ப வடிவமான முழவு தமிழகத்தில் வழக்கொழிந்து விட்டது. நாம் நமது அலட்சியத்தால் தொலைத்த இக்கருவி கேரளத்தில்மிழவுஎன்கிற பெயரில் வழக்கில் உள்ளது. ஒருமுக கருவியான மிழவு எப்படி உருவாக்கப்படுகிறது, எப்படி இசைக்கப்படுகிறது என்பதன் முழு விபரங்களை கேரள அரசு ஆவணப்படுத்தியுள்ளது. காணொளி பகுதியில் நீங்கள் அவற்றை காணலாம். முழவின் ஆரம்ப வடிவம் மண்ணால் செய்யப்பட்டது என்பதற்கு ஆதாரமாக கேரள மாநிலம் வைக்கமொலி என்கிற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மண் மிழவு உள்ளது. திருச்சூர் மற்றும் இரிஞாலக்குடி கோவில்களில் மிழவு இசைக்கப்படுகிறது. குடியாட்டம் என்கிற கேரளக் கலை வடிவத்திலும் மிழவு இசைக்கப்படுகிறது.

புழக்கத்தில் உள்ள இடங்கள்  
திருவாரூர் தியாகேசர் திருக்கோவில்
திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் கோவில் (திருவாரூரில் இசைப்பவரே இங்கேயும் சித்திரை பெருவிழா நாட்களில் இசைக்கிறார்)

பாடல்
குடமுழா பற்றிய குறிப்புகள் 1,6,7,11 ஆகிய திருமுறைகளில் உள்ளன.
திருமுறை 1 - திருவெங்குரு - சம்பந்தர்
 வண்டணைகொன்றை வன்னியுமத்த மருவியகூவிள மெருக்கொடுமிக்க
கொண்டணிசடையர் விடையினர்பூதங் கொடுகொட்டிகுடமுழாக் கூடியுமுழவப்
பண்டிகழ்வாகப்பாடியொர்வேதம் பயில்வர்முன்பாய்புனற் கங்கையைச்சடைமேல்
வெண்பிறைசூடி யுமையவளோடும் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

திருமுறை 7 - திருமுருகன்பூண்டி சுந்தரர்
விட்டி சைப்பன கொக்க ரைகொடு
    கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
    குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு
    கன்பூண்டி மாநகர்வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
    எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே

திருமுறை 7 - திருப்பைஞ்ஞீலிசுந்தரர்
தக்கை தண்ணுமை தாளம் வீணை
    தகுணிச் சங்கிணை சல்லரி
கொக்க ரைகுட முழவி னோடிசை
    கூடிப் பாடிநின் றாடுவீர்
பக்க மேகுயில் பாடுஞ் சோலைப்பைஞ்
    ஞீலி யேனென்று நிற்றிரால்
அக்கும் ஆமையும் பூண்டி ரோசொலும்
    ஆர ணீய விடங்கரே
திருமுறை 11 - திருக்கைலாய ஞானஉலா
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
இடமாம் தடாரி படகம் இடவிய

திருமுறை 11 - மூத்த திருப்பதிகம்  - காரைக்காலம்மையார்           
துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம்,
    உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,
    தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
    தமருகம், குடமுழா, மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும் எங்கள்
    அப்ப னிடம்திரு ஆலங் காடே

கந்தபுராணம் - தெய்வயானையம்மை திருமணப் படலம் - கச்சியப்பர்
கொக்கரை படகம் பேரி குடமுழாக் கொம்பு காளந்
தக்கைதண் ணுமைத டாரி சல்லரி நிசாளந் தாளம்
மெய்க்குழல் துடியே பம்பை வேறுபல் லியமுந் தாங்கி
மைக்கடல் வாய்விட் டென்ன வரம்பிலோர் இயம்பிப் போனார்

காணொளி

கேரளம்

-சரவண பிரபு ராமமூர்த்தி
(வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள் குடமுழாகுடவாயில் பாலசுப்ரமணியன், தமிழ் இசைக் கருவியும் தற்கால நிலையும் - ச. யோகேஸ்வரி)

-->



































2 comments:

M. Arjunamani said...

அருமையான கட்டுரை. இது போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடுங்கள்.

அன்பன்
மா. அருச்சுனமணி

M. Arjunamani said...

அருமையான கட்டுரை. இது போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடுங்கள்.

அன்பன்
மா. அருச்சுனமணி