சினிமா - நாடோடிகள் 2 திரைவிமர்சனம்

.


ஒருவரியில் சொன்னால் தமிழ்நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய கௌசல்யா-ஷங்கர் ஆகியோரின் உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது தான் இந்த படம்.
சமுதாயத்தில் தவறாக இருக்கும் சில விஷயங்கள், குறிப்பாக ஜாதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் சசிகுமார். அவரது கூட்டத்தில் முக்கியமான ஒருவராக இருக்கிறார் அஞ்சலி.
தினமும் வீதியில் போராட்டம், வாங்கும் சம்பளத்தை கூட வீட்டில் கொடுப்பதில்லை சமூகத்திற்காக நல்ல விஷயங்கள் செய்ய செலவு செய்து விடுகிறார் என சசிக்குமார் பொதுநலத்துடன் செய்யும் விஷயங்கள் பார்த்து
அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. அவரது சொந்த மாமா கூட இவருக்கு பெண் தர முன்வராத நிலையில் ஒருநாள் இவருக்கு பெண் தருவதாக அதுல்யாவின் பெற்றோர் கூறுகின்றனர்.


அனைவர் முன்னிலையில் திருமணமும் நடந்து முடிகிறது. அதன் பிறகு அன்று இரவு தான் சசிகுமாருக்கு காத்திருக்கிறது ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அதுல்யா யார் என்பதும் அவருக்கு ஜாதி வெறி பிடித்த குடும்பத்தினரால் நடந்த விஷயங்கள் பற்றி தெரிய வருகிறது.
அப்போது சசிகுமார் ஒரு அதிரடி முடிவு எடுக்கிறார். அதனால் வரும் பிரச்சனைகள் மற்றும் ஜாதி வெறி பிடித்தவர்களால் வரும் சிக்கல்களை அவர் எப்படி சமாளித்தார் என்பது தான் மீதி படம்.
படத்தை பற்றிய அலசல்:
"நாளைக்கே மாற்றம் வரணும்னு அவசியம் இல்லை, அடுத்த தலைமுறையாகவது மாறட்டும்" என ஜாதிக்கு எதிராக கருத்து கூறி முதல்படியை எடுத்துவைத்துள்ளது இந்த படம். படத்தில் ஆங்காங்கே வரும் ஜாதி வெறிக்கு எதிரான சமுத்திரக்கனியின் வசனங்கள் நச்.
சசிக்குமார் தனது பாணியில் அதே வழக்கமான நடிப்பை கொடுத்துள்ளார். அஞ்சலி, அதுல்யா ஆகியோரின் நடிப்பு கச்சிதம். அஞ்சலியின் கதாபாத்திரம் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிடிக்காத பெண் கூட ****றது பொணத்து கூட இருக்குறதுக்கு சமம் என அவர் பேசும் சில வசனங்கள் க்ளாப்ஸ் அள்ளும்.
மிக எதார்த்தமாக வடிவமைக்கப்பட்டிருந்த பரணியின் ரோலுக்காக சமுத்திரக்கனியை பாராட்டலாம். ஒரு சராசரி மனிதன் எப்படி எல்லாம் யோசிப்பான் என்பதை திரையில் அப்படியே கொண்டுவந்திருந்தது அவரது ரோல்.
மாமா ரோலில் நடித்த ஞானசம்பந்தம், அதே காமெடியான வேடத்தில் நமோ நாராயணன், அம்மாவாக நடிகை துளசி, சில காட்சிகளில் மட்டுமே வரும் சமுத்திரக்கனி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் நடிப்பும் குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாகவே இருந்தது.
கிளாப்ஸ்:
- ஜாதி வெறி மற்றும் கௌரவ கொலைகளுக்கு எதிராக பதிவு செய்துள்ள கருத்து.
- சமுத்திரக்கனியின் திரைக்கதை. குறிப்பாக இரண்டாம் பாதியில் நம்மை பரபரப்பாகவே வைத்திருந்தது.
- ஒளிப்பதிவு மற்றும் ஜஸ்டின் பிரபாகரனின் இசை.
நெகடிவ்:
தியேட்டரில் நம் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு இருந்த முதல் அரை மணி நேர காட்சிகளை நெகடிவ்வாக கூறலாம். புரட்சி என்கிற பெயரில் காட்டும் இந்த காட்சிகளை இன்னும் சிறப்பாகவே எடுத்திருக்கலாம்.
ஜாதி பற்றிய பேசியது போக டாஸ்மாக் தொடங்கி, நீட் தேர்வு வரை நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்கள் பற்றியும் பேசியுள்ளது படம். ஒரு கட்டத்துக்கு மேல் சில விஷயங்கள் அயர்ச்சியையே தந்தன.
மொத்தத்தில் சமுத்திரகனி+சசிகுமார் கூட்டணி சிறப்பான படத்தை கொடுத்துள்ளனர்.

No comments: