உலகச் செய்திகள்


விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ஈரானில் கைது நடவடிக்கை

பிலிப்பைன்ஸ் ‘தால்’ எரிமலை அபாய நிலை தொடர்ந்து நீடிப்பு

சீனா மீதான குற்றச்சாட்டை கைவிட அமெரிக்கா முடிவு

பாக், ஆப்கானில் 110 பேர் உயிரிழப்பு

செனட்டில் அடுத்த வாரம் விசாரணைகள் ஆரம்பம்

புட்டின் ஆட்சியில் நீடிப்பதற்காக ரஷ்ய அரசு திடீர் இராஜினாமா

அமெரிக்கா–சீனா இடையிலான வர்த்தக உடன்பாடு கைச்சாத்து



விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ஈரானில் கைது நடவடிக்கை




டெஹ்ரானில் கடந்த வாரம் உக்ரைன் பயணிகள் விமானத்தை சுட்டுவீழ்த்தியது தொடர்பில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் நீதித்துறை அறிவித்துள்ளது.
“தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர்” என்று நீதித்துறை பேச்சாளர் கொலம்ஹொஸைன் இஸ்மைலி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார். டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த 176 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானம் தவறுதலாக சுடப்பட்டது என்பதை ஈரான் பின்னர் ஒப்புக்கொண்டது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி ஹசன் ரூஹானி நேற்று உத்தரவிட்டிருந்தார். “இது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல. முழு உலகமும் பார்த்திருக்கும் பிரச்சினை” என்று அவர் கூறினார்.ஈராக்கில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளங்கள் இரண்டின் மீது ஈரான் ஏவுகணை தாக்கதல்களை நடத்தி சில மணி நேரங்களிலேயே இந்த விமான வீழ்த்தப்பட்டிருந்தது. ஈரானிய குத்ஸ் படை தளபதி ஹாசெம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாகவே ஈரான் அந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
எனவே அமெரிக்காவின் பதில் தாக்குதல் பற்றிய எதிர்பார்ப்புடன் ஈரான் உஷார் நிலையில் இருந்தபோதே இந்த விமானம் சுட்டுவீழ்த்தக்கட்டது.   நன்றி தினகரன் 













பிலிப்பைன்ஸ் ‘தால்’ எரிமலை அபாய நிலை தொடர்ந்து நீடிப்பு




பிலிப்பைன்ஸில் உள்ள ‘தால்’ எரிமலை சில மணி நேரத்திலோ, சில நாட்களிலோ வெடிக்கும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அந்த எரிமலை தொடர்ந்து புகையையும் சாம்பலையும் கக்கி வருகிறது. அதனால் எரிமலை அபாய நிலைக் குறியீடு தொடர்ந்து உச்சத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பட்டன்காஸ் மாநிலத்தில் கரும்புகை சூழ்ந்திருப்பதால் அங்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால், எரிமலையிலிருந்து வெளியேறும் சாம்பல் தலைநகர் மனிலாவை நோக்கிப் பரவுகிறது.
பிலிப்பைன்ஸ் நேரப்படி நேற்று அதிகாலை சுமார் 2 மணிக்கு, தால் வட்டாரத்தில் 200க்கும் மேற்பட்ட முறை, எரிமலை அதிர்வுகள் உணரப்பட்டதாக நிலநடுக்க ஆய்வு நிலையம் தெரிவித்தது.
எரிமலைக் குமுறல் காரணமாக இதுவரை உயிருடற்சேதம் எதுவும் இல்லை. எனினும், சாம்பல் மூட்டம் காரணமாக ஏற்பட்ட வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்து, மூவர் காயமடைந்தனர்.
எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 16,000க்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறிவிட்டனர்.
மனிலா உட்பட பல்வேறு இடங்களில் பாடசாலைகளும் கடைகளும் மூடப்பட்டன.
மனிலா சர்வதேச விமான நிலையம், படிப்படியாக வழக்க நிலைக்குத் திரும்பி வரும் சூழலில், அங்கு இன்னமும் நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  நன்றி தினகரன் 













சீனா மீதான குற்றச்சாட்டை கைவிட அமெரிக்கா முடிவு




சீனா மீதான ‘நாணய மோசடி நாடு’ என்ற முத்திரையை அமெரிக்கா அகற்றிக்கொண்டுள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பூசலுக்குத் தீர்வுகாணும் முதற்கட்ட உடன்பாடு கையெழுத்தாகவிருக்கும் சில நாட்களுக்கு முன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்க நிதித் திணைக்களம் ஆண்டுக்கு இருமுறை வெளியிடும் நாணய அறிக்கையில் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அந்த முடிவு வெளியானது.
முதற்கட்ட வர்த்தக உடன்படிக்கையின் ஒருபகுதியாக நாணய மதிப்பை முறைகேடாகக் குறைக்கும் செயல்களில் இருந்து ஒதுங்கியிருக்கச் சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக, நிதித் திணைக்களம் குறிப்பிட்டது.
நியாயமற்ற வர்த்தக இலாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டு சீனா தனது யுவான் நாணய மதிப்பை வேண்டுமென்றே குறைத்து வைத்திருப்பதாக அமெரிக்கா குறைகூறிவந்தது.
இப்போது அந்தக் குற்றச்சாட்டை அமெரிக்கா விலக்கிக்கொள்வதன் மூலம் சீனா பெரிய பலன்களை அடையப்போவதில்லை. இருப்பினும் அது சீன அதிகாரிகளுக்கு அமெரிக்கா தெரிவிக்கும் முக்கியமான நல்லெண்ண அறிகுறியாகக் கருதப்படுகிறது.
2018 ஆம் ஆண்டு தொடக்கம் சீனா மற்றும் அமெரிக்கா வர்த்தகப் பூசலில் ஈடுபட்டு வருவதோடு இரு நாடுகளும் அடுத்த நாட்டின் பொருட்களுக்கு பரஸ்பரம் வரி விதித்து வருகின்றன.  நன்றி தினகரன் 











பாக், ஆப்கானில் 110 பேர் உயிரிழப்பு





பனிச்சரிவு, வெள்ளம், கடுங்குளிர் என மோசமான வானிலை காரணமாகக் கடந்த சில நாட்களில் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. கடுமையான பனிச்சரிவு காரணமாக பொதுமக்கள் தனியாக சிக்கிக் கொள்வதாகவும் அதனால் அவர்களை மீட்பது கடினமாய் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் குறைந்தது 75 பேர் உயிரிழந்ததாகவும், 64 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். பாகிஸ்தானின் காஷ்மீர் பகுதி பனியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 55 பேர் உயிரிழந்திருப்பதோடு 10 பேரைக் காணவில்லை. ஆப்கானிஸ்தானில் 39 பேர் உயிரிழந்தனர். வரும் நாட்களில் வானிலை மேலும் மோசமடையலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.  நன்றி தினகரன் 










செனட்டில் அடுத்த வாரம் விசாரணைகள் ஆரம்பம்





அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் பாராளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின் மீதான செனட் சபை விசாரணை இந்த மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தை, விசாரணை இல்லாமலேயே தள்ளுபடி செய்யும் அளவுக்கு ஆளும் குடியரசுக் கட்சிக்கு மேலவையான செனட் சபையில் பலம் உள்ளது.
எனினும், அந்த தீர்மானம் மீதான விசாரணைக்குப் பின்னர் அது தள்ளுபடி செய்யப்படும் என்று குடியரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட டிரம்ப் முடிவு செய்துள்ளார். அவரை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் போட்டிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜோ பைடனின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது மகன் உக்ரைனில் பணியாற்றியது தொடர்பாக அவர்கள் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டுமென்று அந்த நாட்டு அரசுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் டிரம்ப் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுப்பட்டதாகவும், இதுதொடர்பான விசாரணையில் பாராளுமன்றத்துக்கு இடையுூறு ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி, அவரை பதவி நீக்கம் செய்வதற்கான இரு தீர்மானங்களை பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சினர் கடந்த மாதம் நிறைவேற்றினர்.
அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது இது 3ஆவது முறையாகும்.    நன்றி தினகரன் 












புட்டின் ஆட்சியில் நீடிப்பதற்காக ரஷ்ய அரசு திடீர் இராஜினாமா





ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தொடர்ந்து அதிகாரத்தில் நீடிக்கும் சாத்தியம் கொண்டதாக அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவருவது குறித்த அறிவிப்பை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் பதவி விலகியுள்ளது.
பரிந்துரைக்கப்பட்டிருக்கும் புதிய அரசியலமைப்புக்கு பொதுமக்கள் ஆதரவு வழங்கினால் ஜனாதிபதியிடம் இருந்து அதிகாரம் பாராளுமன்றத்திற்கு மாற்றப்படும்.
புட்டின் தனது நான்காவது தவணைக் காலம் முடிவுறும் 2024 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பதவியில் இருந்து விடைபெறவுள்ளார். இந்நிலையில் அவர் அதிகாரத்தை நீடிக்கும் முயற்சியாகவே அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கான தனது ஆண்டு உரையிலேயே புட்டின் இந்தத் திட்டத்தை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து ஒரு எதிர்பாராத நகர்வாக இந்த மாற்றத்திற்கு உதவியாக அரசாங்கம் பதவி விலகுகிறது என்று பிரதமர் ட்மிட்ரி மெட்வெடேவ் அறிவித்தார்.
எனினும் அரசு பதவி விலகுவது பற்றி அமைச்சர்களுக்குக் கூட தெரிந்திருக்கவில்லை என்று அரச வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. “இது முழுமையாக அதிர்ச்சியை தந்தது” என்று ஒரு தரப்பு கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதியிடம் இருந்து பாராளுமன்றத்திற்கு அதிகாரத்த மாற்ற பாராளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் தேசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார். அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு அமைய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்கும் பொறும் பாராளுமன்ற கீழவைக்கு வழங்கப்படவுள்ளது.
மாநில சபை என்று அழைக்கப்படும் ஆலோசனைக் குழுவின் பொறுப்புகளை அதிகரிக்கவும் புட்டின் வலியுறுத்தியுள்ளார். இந்த மாநில சபையின் தலைவராக புட்டின் இருப்பதோடு இதில் ரஷ்ய பெடரல் பிராந்தியங்களின் தலைவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
சர்வதேச சட்டத்தின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துதல், வெளிநாட்டு குடியுரிமை அல்லது வெளிநாட்டில் இருந்து வந்து ரஷ்யாவில் வாழ அனுமதி பெற்றவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடைசெய்யும் சட்டங்களை வலிமைப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களும் அரசியலமைப்பு மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மேலும் ரஷ்யாவில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான திட்டங்களையும் ஜனாதிபதி வெளியிட்டார். 1990களில் ரஷ்யாவின் மக்கள் தொகையில் வியக்கத்தக்க அளவு சரிவு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புட்டின் அருகில் இருக்க பிரதமர் மெட்வெடெவ் அரசின் இராஜினாமா அறிவிப்பை தேசிய தொலைக்காட்சியில் வெளியிட்டார்.
“இந்த மாற்றம் அமுலுக்கு வரும்போது, அரசியலமைப்பில் ஒட்டுமொத்த சரத்துகள் மாத்திரம் மாறாது, நிறைவேற்று, சட்டவாக்கம் மற்றும் நீதித்துரையின் அதிகாரத்தில் சமநிலை ஏற்படும்” என்று புட்டினின் பரிந்துரை பற்றி மெட்வெடெவ் தெரிவித்தார்.
“இந்த சூழலில் அரசு அதன் தற்போதைய வடிவத்தில் இருந்து விலகிக்கொள்கிறது” என்று மெட்வெடெவ் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு கெளன்சிலின் துணைத் தலைவராக மெட்வெடெவ் நியமிக்கப்பட்டுள்ளதோடு புதிய பிரதமர் பதவிக்கு வரிச் சேவைத் தலைவர் மிகைல் மிசுஸ்டினின் பெயரை ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார்.
மெட்வெடெவ் கடந்த பல ஆண்டுகளாக பிரதமராக இருந்து வருகிறார். முன்னதாக அவர் 2008 தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்ததோடு தொடர்ந்து புட்டினிடம் பதவியை மாற்றிக்கொண்டார்.
ரஷ்ய அரசியல் அமைப்பின்படி தொடர்ச்சியாக இரு தவணைகளுக்கே ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும்.
வாழ்நாள் முழுவதும் தலைவராக இருப்பதே புட்டினின் நோக்கம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ரஷ்ய அரசின் முன்னணி எதிர்ப்பாளரான அலெக்சி நவல்கி சாடியுள்ளார்.
கடைசியாக 1993 ஆம் ஆண்டு புட்டினுக்கு முன்னர் பதவியில் இருந்த ஜனாதிபதி பொரிஸ் யெல்சினின் காலத்திலேயே சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
1999 ஆம் ஆண்டு யெல்சின் இராஜினாமா செய்ததை அடுத்து பதில் ஜனாதிபதியாக பதவி ஏற்ற புட்டி ஓர் ஆண்டுக்குப் பின்னர் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். அது தொடக்கம் அவர் ஜனாதிபதி அல்லது பிரதமராக தொடர்ந்து அதிகாரத்தில் உள்ளார்.   நன்றி தினகரன் 












அமெரிக்கா–சீனா இடையிலான வர்த்தக உடன்பாடு கைச்சாத்து





சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பூசலை தணிக்கும் வகையில் இரு நாடுகளும் வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
இதன்மூலம் உலக வர்த்தகத்தில் நிலவும் நெருக்கடி ஓரளவு மட்டுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வொஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்க மற்றும் சீன உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன துணை பிரதமர் லீயு ஹீ ஆகிய இருவரும் முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த வர்த்தக உடன்பாடு, அமெரிக்கப் பொருளாதாரத்தை உருமாற்றும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.
“இருநாடுகளும் சேர்ந்து கடந்த காலத்தில் செய்த தவறுகளை சரியாக்குகிறோம். மேலும் எதிர்காலத்திற்கான பொருளாதாரத்திற்கான பாதுகாப்பை இது வழங்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஒப்பந்தத்தால் உலக அமைதி மேம்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“தங்களின் நாட்டின் நிலைக்கு பொருந்தக் கூடிய ஒரு அரசியல் அமைப்பையும், பொருளாதார வளர்ச்சி மாதிரியையும் சீனா உருவாக்கியுள்ளது.
அதற்காக சீனா மற்றும் அமெரிக்கா ஒன்றாக பணியாற்ற முடியாது என்று அர்த்தமில்லை” என சீனாவின் துணை பிரதமர் லீயு ஹீ தெரிவித்துள்ளார்.அமெரிக்காவிலிருந்து இருநூறு பில்லியனுக்கும் அதிகமான இறக்குமதி செய்யவும், மதிநுட்பச் சொத்து தொடர்பான விதிகளை வலுப்படுத்தவும் சீனா உறுதியளித்துள்ளது.
பதிலுக்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் புதிய வரியைப் பாதியாகக் குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பில்லியன் டொலர் மதிப்பில் விதிக்கப்படும் வரி தொடர்ந்து நடப்பிலிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த வர்த்தகக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.
கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் மாறிமாறி வரிகளை விதித்து பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன.
இதன் விளைவாக பொருட்களின் மீது 450 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான இறக்குமதி வரி விதிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த பிரச்சினையால், இருநாடுகளுக்குமான வர்த்தக நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டதுடன், உலக பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. முதலீட்டாளர்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியது.
சீனா நெறிமுறையற்ற வர்த்தக முறைகளை கடைப்பிடிப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது. உள்ளுர் வர்த்தகங்களுக்கு மானியங்கள் வழங்குவது மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் செயல்படுவதை கடினமாக்குவது போன்ற நடவடிக்கையில் சீனா ஈடுபடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது.   நன்றி தினகரன் 









No comments: