
பழந்தமிழர்கள் எண்ணற்ற பல இசைக்கருவிகளை பயன்படுத்தியுள்ளார்கள்.500க்கு ம் மேற்பட்ட தமிழர் இசைக்கருவிகள் இருந்துள்ளன.சிலப்பதிகாரமும் திருமுறை திவ்யப்ரபந்தங்களும் கந்தபுராணம் மற்ற தொல் தமிழர் நூல்கள் பலவும் பலவாறான இசைக்கருவிகளின் பெயர்களை நமக்கு காட்டுகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஒரு 50 கருவிகளை தான் நம்மால் இனம் காண இயலுகிறது.அதிலும் நாதஸ்வரம் தவில் பறை தவிர பல கருவிகளும் அழிவின் விளிம்பில் இருப்பவை. குறிப்பாக பழங்குடி மக்களின் இசை வடிவங்கள் தொலைக்காட்சி மோகத்தாலும் மற்ற காரணிகளாலும் முற்றாக அழிந்து வருகிறது.

அன்மையில் வென்வேர்த்வில் நூலகத்தில் வெ நீலகண்டன் ”வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்" என்ற நூலை கண்டேன்.படித்து பார்த்ததில் தமிழர் இசையின் தொன்மை அதன் பழமை அருமை என அனைத்தையும் அறிந்துக்கொண்டேன். அழிவின் விளிம்பில் இருக்கும் சுமார் 30 இசைக்கருவிகளை இந்த நூல் நமக்கு காட்டுகிறது. நான் சிறு வயதில் சிவ வாத்திய இசையில் பார்த்த பல கருவிகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.
தான் பயன்படுத்திய இசைக்கருவிகளை தமிழன் கடவுளுக்கு அர்ப்பணித்தான். தமிழரின் நாட்டார் தெய்வ வழிபாட்டில் இசைக்கருவிகள் முக்கிய இடம் பிடித்தன. நிறுவன சமய கோவில்களிலும் தமிழனின் இசை ஒலித்தது.ஆனால் அது நெடுநாள் நிலைக்கவில்லை. தமிழன் சாதிவாரியாக பிரிந்த நேரத்தில் தமிழர்களின் இசைக்கருவிகளும் சாதிய அடையாளம் பெற்றன.மனிதன் போலவே இசையும் தீட்டானது. நிறுவன சமய கோவில்களில் இருந்து பறை தப்பு போன்ற தமிழர் கருவிகள் வெளியேற்றப்பட்டன. பறையும் அதை இசைத்தவனும் தீட்டானான். நந்தனார் சேமித்த மாட்டுத்தோலும் கோரோசனமும் ஆலயத்தில் நுழைந்தன, ஆனால் அவரும் அவர் மக்களும் நுழைய முடியவில்லை.தமிழனின் இசை திருடுபோய் விட்டது என்பார் இசை அறிஞர் மம்மது அவர்கள்.

அன்மைகாலத்தில் பல சிவன் கோவில்களில் “சிவ வாத்திய குழுவினர்” என்பவர்கள் அழிய இருந்த பல தமிழர் இசைக்கருவிகளை மீட்டு ஆலயங்களில் இசைத்து வருகிறார்கள். இந்த அரிய முயற்சிக்கும் பல இடங்களில் சச்சரவுகள் உள்ளன.அதெல்லாம் இங்கே வாசிக்கபடாது என்று அடி தடி நீதிமன்ற வழக்கு வரை சென்ற கதை எல்லாம் தமிழ்நாட்டில் உண்டு.சில சிவன் கோவில் பள்ளியறை பூசைகளில் இந்த பாரம்பரிய இசைக்கருவிகள் சில இசைக்கபடுகிறது.சென்னை கோயம்பேட்டில் “கோசை நகரான்” என்ற அமைப்பினர் பல இசைக்கருவிகளை மீட்டு பாதுகாத்து இசைக்க பயிற்சியும் தருகிறார்கள்.
தமிழகத்தில் அழியும் நிலையில் உள்ள பல இசைக்கருவிகள் கேரளத்தில் ஓரளவு பிரபலமாக உள்ளது.கேரள சுற்றுலாத்துறை அவர்கள் மாநிலத்தில் உள்ள அணைத்து கலை வடிவங்களையும் இசைக்கருவிகளையும்(செய்முறை உட்பட) ஆவணப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சுற்றுலாத்துறை அப்படியெல்லாம் ஒரு நல்ல காரியத்தை செய்து விட்டால் பிறகு நமக்கு என்ன குறை?
வெ நீலகண்டன் எழுதியுள்ள நூல் விரிவானது. அனைவருக்கும் படிக்க நேரம் இல்லாமல் இருக்கும். வரும் வாரங்களில் இந்த நூலில் இடம்பெற்ற் இசைக்கருவிகளின் சில முக்கிய தகவல்களை சுருக்கமாகவும் மேலதிக படங்களுடனும் இயன்ற வேளைகளில் காணொளி காட்சிகள் சேர்த்தும் உங்களோடு பகிர உள்ளேன். இத்தொடர் தமிழரின் இசைக்கருவிகளை உங்களுக்கு அறுமுகப்படுத்தியும் ஏற்கனவே அறிந்தவர்கள் மீண்டும் நினைவு கூறவும் உதவும் என்று நம்புகிறேன். இவைகளை படித்து நமது இசைக்கருவிகளை நமது பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்வோம். மேலும் அடுத்த முறை நாம் இவை புழக்கத்தில் இருக்கும் கோவில்களுக்கும் ஊர்களுக்கும் செல்லும்பொழுது அக்கருவிகளை கண்டு வரவும் உதவும். மேலும் இக்கருவிகளை இசைக்கும் நலிவுற்ற கலைஞர்களை ஊக்கப்படுத்தி நம்மால் இயன்ற சன்மானம் அளிக்கலாம்.
அத்துடன் நில்லாமல் இந்த இசைக்கருவிகள் உங்கள் சொந்த ஊர்களில் புழக்கதில் இருந்தால் அல்லது அதை பற்றி உங்களிடம் வேறு தகவல் அல்லது தெளிவான படங்கள் அல்லது காணொளி காட்சிகள் இருந்தால் அவசியம் என்னுடன் பகிரவும்.
நன்றி,
சரவண பிரபு
2 comments:
ஐயா வணக்கம் என்ன விலை 9566970391
அருமையான தேடல் கொண்ட சிறந்த நூலிது
Post a Comment